Saturday, December 03, 2011

‘பித்அத்’களை எதிர்ப்பது பயங்கரவாதமா?


- கான் பாகவி
முஸ்லிம்கள் பிறந்தநாள் கொண்டாடுவது, திருமணநாள் கொண்டாடுவது, நினைவுநாள் அனுசரிப்பது, முஹர்ரம் மாதத்தில் தீ மிதிப்பது, பஞ்சா எடுப்பது, இறைச்சி கூடாது என நம்புவது, தர்ஹாக்களில் சந்தனக்கூடு தூக்குவது, சமாதிகளைச் சுற்றிவருவது, அங்கு குழந்தைகளை உருட்டிவிடுவது, சமாதிகளுக்கு சஜ்தா (சிரவணக்கம்) செய்வது, குழந்தைவரம் கேட்பது, திருமண வரன் கேட்பது, குழந்தைகளின் பிறந்தமுடி எடுத்து காணிக்கை செலுத்துவது, ஷைகுகள் மற்றும் பெரியவர்களின் கால்களைத் தொட்டு, அல்லது கால்களில் விழுந்து ஆசி கேட்பது, சிலவேளைகளில் அவர்களையே வணங்குவது, பெண்கள் ஷைகுகளின் கரம் பற்றி நல்லாசி பெறுவது, கத்னா (சுன்னத்) ஊர்வலம் நடத்துவது, திருமணத்தில் பந்தல்கால் நடும் வைபவம், காதுகுத்து விழா, மஞ்சள் நீராட்டு விழா, இறந்தவர்கள் பெயராலும் திருமணத்தை முன்னிட்டும் நடத்தப்படும் சில சடங்குகள்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவையெல்லாம் என்ன? இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு? இவையெல்லாம் நபிவழிகளா? குறைந்தபட்சம் மார்க்கம் இவற்றை அனுமதிக்கின்றதா? ‘பரக்கத்’ (வளம்) வேண்டி செய்யப்படும் இவற்றால் இறையருள் கிட்டுமா? அப்படி கிட்டும் என்றால், இறைவனோ இறைத்தூதரோ இறைத்தூதரின் அன்புத் தோழர்களோ சான்றோர்களோ யாராவது இவற்றைச் சொல்லியிருப்பார்களா? இல்லையா?
இதுபோன்ற கூத்துகளுக்கு மார்க்கத்தில் ஏதேனும் முன்மாதிரி இருக்க வேண்டுமா? இல்லையா? இவற்றைச் சொந்த விருப்பத்திற்காக -வாழையடி வாழையான ஒரு சம்பிரதாயத்திற்காக- பெண்கள் அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காகச் செய்கிறோம்; மார்க்கத்தின் பெயரால் அல்ல என்கிறீர்களா?
இந்தச் சடங்குகளால் நன்மை கிடைக்கும்; அல்லது ஆபத்து அகலும் என்று நம்புகிறீர்களா? இல்லையா? இந்த நம்பிக்கை, உங்களது ஏகஇறை நம்பிக்கைக்கு, இறைத்தூதர்மீது கொண்ட நம்பிக்கைக்கு, குர்ஆன்மீது கொண்ட நம்பிக்கைக்கு முரண்படுகிறதே! என்ன செய்வீர்கள்? அந்த நம்பிக்கையே இல்லை என்றாலும், சடங்குகளுக்காகச் செலவழிக்கப்படும் பணம், நேரம், உழைப்பு எல்லாம் வீண்தானே! இதற்கு மறுமையில் என்ன பதில் சொல்வீர்கள்?
ஆக, மார்க்கம் சொல்லாத, அல்லது மார்க்கத்தில் முன்மாதிரி இல்லாத ஒன்றை மார்க்கத்தின் பெயரால், அல்லது நன்மையைக் கருதி உருவாக்குவதும் அதைக் கடைப்பிடிப்பதும்தான் பித்அத்’ (அநாசாரம்) எனப்படுகிறது.
பித்அத் என்றால் என்ன?
பித்அத்எனும் அரபிச் சொல்லுக்கு, ‘முன்மாதிரியின்றி ஆரம்பிக்கப்பட்ட செயல்என்பது சொற்பொருளாகும். இஸ்லாமிய வழக்கில், மார்க்க ஆதாரமோ அடிப்படையோ இல்லாத செயலுக்கு பித்அத்என்பர். வணக்கவழிபாடுகள், மார்க்க அடையாளங்கள், மார்க்க விதிமுறைகள் ஆகியவற்றில் மக்களாக உருவாக்கும் நடைமுறைதான் பித்அத் எனப்படுகிறது.
புதிதாக உருவாக்கப்படும் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள், சமாதிகளில் நடக்கும் அநாசாரங்கள், புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் தொழுகைகள் மற்றும் நோன்புகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால், அது நிராகரிக்கப்படும். (புகாரீ)
மற்றொரு ஹதீஸ் இவ்வாறு எச்சரிக்கின்றது: உரைகளில் சிறந்தது இறைமறை; நடத்தைகளில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டிய நடைமுறை; செயல்களிலேயே தீயது புதிதாக உருவாக்கப்படுவதுதான். புதிதாக உருவாக்கப்படும் (பித்அத்) ஒவ்வொன்றும் தவறான வழியாகும்; தவறான ஒவ்வொரு வழியும் நரகத்திற்குச் செல்லும். (முஸ்லிம், நஸயீ)
ஆக, ‘பித்அத்எனும் சொல்லுக்கு அநாசாரம், குருட்டு நம்பிக்கை, நவீன சித்தாந்தம் என்றெல்லாம் பொருள் செய்யலாம். இது எவ்வளவு பெரிய கேடானது என்பதற்கு நபிமொழிகளும் சான்றோரின் சொற்களும் ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ், ஒவ்வொரு பித்அத்வாதியிடமிருந்தும் பாவமன்னிப்பை (தவ்பா) தடுத்துவிடுகிறான். (தப்ரானீ, ஷுஅபுல் ஈமான்)
ஹஸ்ஸான் பின் அத்திய்யா (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: ஒரு கூட்டம் தம் மார்க்க விஷயங்களில் அநாசாரம் ஒன்றை உருவாக்கினால், அதன் இடத்தை வகிக்கும் நபிவழியான சுன்னத்தை அல்லாஹ் அகற்றாமல் இருப்பதில்லை. பிறகு மறுமை நாள்வரை அந்த நபிவழி அவர்களிடம் திரும்பிவருவதே இல்லை. (தாரிமீ)
கப்றுகளில் சஜ்தா
அநாசாரங்களிலேயே மிகவும் கேடானது அல்லாஹ் அல்லாத பொருட்களுக்கு -மனிதருக்கோ சின்னத்திற்கோ கட்டடத்திற்கோ- சஜ்தாஎனும் சிரவணக்கம் செய்வதுதான்.
அல்லாஹ் ஆணையிடுகின்றான்: அல்லாஹ்வுக்கே சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள்; (அவனையே) வழிபடுங்கள். (53:62)
அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். (4:36)
கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (இராக்கிலுள்ள) அல்ஹீராஎனும் ஊருக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள மக்கள், தங்களிடையே இருந்த ஒரு மாவீரனுக்கு சஜ்தா செய்வதைக் கண்டேன். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தா செய்யப்படுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்’’ என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டேன்.
நான் மதீனா திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நான் அந்த ஊரில் கண்டதைச் சொல்லிவிட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சஜ்தா செய்வதற்கு நீங்கள் மிகவும் தகுதியானவர்களாயிற்றே?’’ என்றேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(நான் இறந்து அடக்கம் செய்யப்பட்டபின்) என் அடக்கத்தலம் அருகில் நீங்கள் செல்ல நேர்ந்தால், அதற்கு நீங்கள் சஜ்தா செய்துவிடுவீர்களா?’’ என்று வினவினார்கள். நான் இல்லைஎன்றேன்.
அப்போது நபியவர்கள், ‘‘அப்படிச் செய்துவிடாதீர்கள். (அதாவது நான் உயிரோடு இருக்கும்போதும் இறந்தபிறகும் எனக்கு சஜ்தா செய்ய வேண்டாம்.) ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு சஜ்தா செய்ய நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவனுக்கு அதைச் செய்யுமாறு மனைவிக்கு உத்தரவிட்டிருப்பேன். பெண்கள் தம் கணவன்மார்களுக்கு அந்த அளவுக்குக் கடமைப்பட்டுள்ளார்கள்’’ என்று விளக்கினார்கள். (அபூதாவூத், ஹாகிம், தாரிமீ, தாரகுத்னீ, ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
சஜ்தா செய்த ஒட்டகம்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒரு குடும்பத்தாருக்கு ஓர் ஒட்டகம் இருந்தது. அதுதான் அவர்களின் தோட்டத்தில் நீர் இறைக்கும். ஒரு தடவை அந்த ஒட்டகம் முரண்டு பிடித்தது. நீர் இறைக்க மறுத்தது.
அந்த அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். நபியவர்கள் தம் தோழர்களிடம் எழுந்திருங்கள்என்று சொல்லிவிட்டு, தோட்டம் வந்துசேர்ந்தார்கள். ஒட்டகம் ஓர் ஓரத்தில் நின்றிருக்க, அதை நோக்கி நபியவர்கள் நடந்தார்கள். தோட்ட உரிமையாளர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அது வெறிபிடித்த நாயாக மாறியிருக்கிறது. உங்கள்மீது பாய்ந்துவிடும் எனப் பயப்படுகிறோம்’’ என்று தடுத்தார்கள்.
ஆனால் நபியவர்கள், அதனால் எனக்கு எந்தத் தீங்கும் நேராது என்று சொல்லிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒட்டகம் கூர்ந்து பார்த்துவிட்டு, அவர்களை நோக்கி நேராக வந்து, அவர்களுக்கு முன்னால் அப்படியே சரிந்து சஜ்தா செய்தது. பின்னர் அதன் நெற்றியில் வருடிக்கொடுத்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அது அடங்கிவிட்டது. தன் பணியைத் தொடங்கியது.
இக்காட்சியைக் கண்ட தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ இந்த அறிவற்ற விலங்கு உங்களுக்கு சஜ்தா செய்கிறது. நாங்கள் ஆறறிவு உள்ளவர்கள். உங்களுக்கு சஜ்தா செய்ய நாங்களே பொருத்தமானவர்கள்’’ என்றார்கள்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசினார்கள்: எந்த மனிதரும் எந்த மனிதருக்கும் சஜ்தா செய்வது தகாது. அப்படித் தகும் என்றிருந்தால், பெண் தன் கணவனுக்கு சஜ்தா செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருப்பேன். அவனுக்கு அவள் அந்த அளவுக்குக் கடமைப்பட்டிருக்கிறாள்.
என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீதாணையாக! கணவனின் பாதத்திலிருந்து தலைவரை கொப்புளம் இருந்து, அதில் சீழும் சலமும் வடிந்துகொண்டிருக்க, மனைவி வந்து அதைத் தன் நாக்கால் சுத்தம் செய்தாலும், கணவனுக்கு அவள் செய்ய வேண்டிய கடமை தீராது. (முஸ்னது அஹ்மத்)
என்ன செய்ய வேண்டும்?
அநாசாரங்களைத் தடுப்பதும், அநாசாரங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்வதும் கற்றறிந்தவர்களின் தலையாய கடமையாகும். அதை விட்டுவிட்டு, சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கின்ற குருட்டு நம்பிக்கைகளுக்கும் தவறான செயல்முறைகளுக்கும் பரிந்துபேசுவதும் வக்காலத்து வாங்குவதும் கடுமையான குற்றமாகும்; பெரும்பாவமாகும். கற்றவர்கள் இவ்வாறு ஆதரவு தெரிவிப்பது சாமானியர்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துவிடும்; அவர்கள் அநாசாரங்களிலிருந்து மீள வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
ஒரு செயல் சரியா, தவறா என்ற சர்ச்சை எழுந்துவிட்டால் நாம் செய்ய வேண்டியது என்ன? இதோ அல்லாஹ்வே கூறுகின்றான்:
ஒரு விஷயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புகிறவர்களாயின், அதை அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் விட்டுவிடுங்கள். இதுவே சிறந்ததும் நல்ல முடிவும் ஆகும். (4:59)
அதாவது இறைமறையிடமும் இறைத்தூதரின் வழியிடமும் விட்டுவிட வேண்டும். அல்லாஹ்வோ அவன் தூதரோ என்ன சொல்கிறார்களோ அதையே தீர்வாக ஏற்க வேண்டும்.
மற்றொரு வசனம், ‘‘நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டாலும் அதன் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது’’ (42:10) என்று கூறுகின்றது.
இவ்வாறிருக்க, இறைவசனத்திற்கும் நபிமொழிகளுக்கும் மனவிருப்பத்திற்கேற்ப விளக்கமளிப்பதும், அவற்றை வளைத்து ஒடிப்பதும் எவ்வாறு தகும்?
இது பயங்கரவாதமா?
தாருல் உலூம் தேவ்பந்த் அரபிக் கல்லூரி
எல்லாவற்றையும்விட பெரிய கொடுமை என்னவென்றால், குருட்டு நம்பிக்கைகளையும் அநாசாரங்களையும் யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களையெல்லாம் பயங்கரவாதிகள்என்று முத்திரை குத்த ஒரு கூட்டம் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதுதான்.
இதற்கு இவர்கள் கையாளும் தந்திரம் என்னவென்றால், அநாசாரங்களைச் சாடுபவர்கள் வஹ்ஹாபிகள்; வஹ்ஹாபிகள் பயங்கரவாதிகள் என்ற சொத்தை வாதம்தான். அநாசாரங்களை எதிர்ப்பவர்கள் எல்லாரும் வஹ்ஹாபிகள் என்பது பொய்; வஹ்ஹாபிகள் எல்லாரும் பயங்கரவாதிகள் என்பதும் பொய்.
கடந்த மாதம் உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் நகரில் ஒரு மாநாடு நடந்தது. மாநாட்டின் பெயர்: சூஃபி மகா பஞ்சாயத்துக் கூட்டம். முக்கியப் பேச்சாளர்: மஷாயிக் வாரியத்தின் தலைவர். அவர் பேசியதுடன் மாநாட்டின் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்ட சில வரிகள்:
  • தேவ்பந்த் மதரசா, ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு, வஹ்ஹாபிஸம் எல்லாம் பயங்கரவாத இயக்கங்கள்.
  • இவர்களின் பிடியில் சிக்கியுள்ள பள்ளிவாசல்களையும் மதராசக்களையும் கைப்பற்ற வேண்டும்.
  • வக்ஃப் சொத்துகளை அவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது.
  • காங்கிரஸ் கட்சியை நம்பக் கூடாது; தோற்கடிக்க வேண்டும். இதற்காக மஷாயிக் வாரியம் அரசியலில் குதிக்க வேண்டும்.

அகில இந்திய மஷாயிக் வாரியம், பத்திரிகையாளர் சந்திப்பு
இந்தக் கூட்டத்தின் கோஷங்களும் தீர்மானங்களும் இந்துத்துவா சக்திகளுக்கு நல்ல ஊட்டச் சத்தாகும். இவ்வாறு ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு, ஒருவர்மீது ஒருவர் தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டு, இன்னும் சொல்லப்போனால், ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தால், இரு பக்கமும் அழியப்போவது கலிமாசொன்ன முஸ்லிம்கள்தான்.
இது ஏன் இவர்களுக்குப் புரியவில்லை? அநாசாரங்களை எதிர்ப்பவர்கள் சமூக சீர்திருத்தவாதிகள் அல்லவா? மூடநம்பிக்கை, சமூகத்தீமை ஆகியவற்றைக் களைய பாடுபடுவோர் நாலு பேர் இருப்பதால்தான், சமுதாயம் சிறிதளவாவது மார்க்க வழியிலும் பகுத்தறிவு பாதையிலும் நடைபோட முடிகிறது.
உங்களுக்கு அநாசாரங்கள் பிடிக்கும் என்றால், அறிவால், வாதத்திறமையால், உண்மையால், ஆதாரங்களால் நிரூபியுங்கள். அது முடியவில்லை என்பதற்காக பயங்கரவாத முத்திரை குத்துவதும் அபாண்டங்களைச் சுமத்துவதும்தான் நாகரிகமாக? அல்லது நீங்கள் சொல்லும் ஆன்மிகமா?
வெளியேற்றாதீர்கள்!
அதே நேரத்தில், பித்அத்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நிதானமிழந்து செயல்படுவோர் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பித்அத்களை எதிர்க்கும் சாக்கில் சமுதாயத்தில் பிளவை உண்டாக்குவதையும் முஸ்லிம்களையே இஸ்லாத்திலிருந்து வெளியேற்றுவதையும் இவர்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி நியாயமாகும்?
ஈமான்என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். பித்அத் செய்யும் ஒருவர், ஓரிறைக்கொள்கை, இணை கற்பிக்காமை, முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதான நம்பிக்கை முதலான அடிப்படைக் கோட்பாடுகளில் உறுதியாக இருந்தால், அவரை எப்படி இஸ்லாத்திலிருந்து வெளியேற்ற முடியும்? இந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால், அவ்விருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். (புகாரீ)
அதாவது காஃபிர் என்ற சொல்லுக்கு உண்மையிலேயே அவர் தகுதிபெற்றவராக இல்லை என்றால், அச்சொல் சொன்னவரையே திருப்பித் தாக்கும்.
எனவே, பரப்புரை (தஃவா) வெறுப்பேற்றக்கூடியதாக இருக்கலாகாது; சிந்திக்கத் தூண்டக்கூடிய வகையில் நளினமானதாகப் பிரசாரம் அமையம் வேண்டும். புரிந்துகொள்வார்களா...?
 https://www.facebook.com/khanbaqavi?sk=wall

Thursday, November 17, 2011

உலக மக்கள்தொகை ஓர் அச்சுறுத்தலா?


உலக மக்கள்தொகை ஓர் அச்சுறுத்தலா?
 கான் பாகவி
2011 நவம்பரில் உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியது. இதில் 20 விழுக்காடு (அதாவது 140 கோடி மக்கள்) சீனாவில் உள்ளனர். இதில் 17.28 விழுக்காடு (அதாவது 121.1 கோடி மக்கள்) இந்தியர்கள். அமெரிக்கர்களின் மக்கள் தொகை வெறும் 35 கோடி (அதாவது 5 விழுக்காடு)தான்.
2025ல் இந்திய மக்கள் தொகை 150 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2001ல் 15.8 கோடியாக இருந்த ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2011ல் 50 லட்சம் (அதாவது 31 விழுக்காடு) குறைந்துபோயிருக்கிறது. இருந்தாலும், 2001ல் 103 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை 20011ல் 121 கோடியாக உயர்ந்துள்ளது.
அதாவது 18 கோடி அதிகம். எண்ணிக்கையைப் பொருத்த வரை இது கூடுதலாக இருந்தாலும், வளர்ச்சி விகித்தைப் பொறுத்த வரை குறைவாகும். கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது வளர்ச்சி விகிதம் 176 விழுக்காடு குறைந்துள்ளதாம்!
குடும்பக் கட்டுப்பாடு
மக்கள் தொகை அதிகரிப்பதால்தான் நாட்டில் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஏற்படுகிறது என்று மேற்கத்திய உலகம் தீவிரமாகப் பிரசாரம் செய்த்து. இதை நம்பிய சீனாவும் இந்தியாவும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தீவிரமாக்க் கடைப்பிடித்தன.
இந்த விஷயத்தில் இந்தியாவைவிட சீனாவே தீவிரம் காட்டியது. சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை எனும் திட்டம் செயலில் உள்ளது. அரசின் கடுமையான விதியாக இது உள்ளதால், விதியை மீறினால் படிப்பு முதல் வேலைவாய்ப்பு வரையிலான அரசின் எந்தச் சலுகையும் அந்தக் கூடுதல் குழந்தைக்குக் கிடைக்காது. இதனால் அங்கு மக்கள் தொகை வெகுவாக்க் குறைந்துவருகிறது.
இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு நெருக்கடி காலத்தில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 1975ல் மட்டும் 70 லட்சம் பேருக்குக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது. சஞ்சய் காந்தியின் இந்த அட்டூழியத்தால், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த்து. பிறகு அரசு நிர்வாகம் சற்று நிதானம் காட்டிவருகிறது.
இருந்தாலும், நாம் இருவர்; நமக்கு இருவர் என்ற கோஷத்தை எழுப்பிவந்த அரசு இப்போது, வீட்டுக்கு ஒரு குழந்தைத் திட்டத்தைச் செயல்படுத்த முனைகிறது;  திட்டத்தைத் தீவிரப்படுத்த அஞ்சுகிறது.
உலக நிலப்பரப்பில் இந்திய நாட்டின் அளவு வெறும் 2.4 விழுக்காடுதான்; ஆனால் உலக மக்கள் தொகையில் இந்தியர்களின் அளவு 18 விழுக்காடு என்றால், நாட்டில் எப்படி வளம் கொழிக்கும் என்று கேட்போரும் உள்ளனர்.
அமெரிக்காவைப் பார்த்து...
அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கும் வளத்திற்கும் குறைந்த மக்கள் தொகையே காரணம் என்ற கருத்து உலகமெங்கும் பரப்பப்பட்டது. இதை நம்பியே, மூன்றாம் உலக நாடுகள் தம் மக்கள் தொகையைக் கடுமையாகக் குறைத்தன.
ஆனால், என்ன ஆனது? அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகமாகியுள்ளது. அங்கு மக்கள் தொகையில் ஐந்து விழுக்காடு உள்ள பெரும் பணக்காரர்களின் வருவாய் பெருகியது. நடுத்தர மற்றும் அடித்தட்டு வர்க்கத்தின் வருமானம் தேக்கம் கண்டுவிட்டது. நாட்டின் மொத்த வருவாயில் 8 விழுக்காடாக இருந்த மேல்தட்டு வர்க்கத்தின் பங்கு இப்போது 20 விழுக்காடாக உயந்திருக்கிறது.
நிகாராகுவா, கானா, துருக்மேனிஸ்தான் போன்ற பஞ்ச நாடுகளில் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வு இன்று அமெரிக்கர்களிடையே காணப்படுகிறது. ஆண்டுதோறும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யும் அமெரிக்க அரசு நிதி நெருக்கடியைச் சமாளிக்க கூடுதல் வரி விதிக்கிறது. வரி உயர்வால் நுகர்வு குறைகிறது. இது உற்பத்தியையும் பாதிக்கும்; பங்குச் சந்தையில் முதலீடும் குறையும்.
ஐரோப்பிய நாடுகளையும் பொருளாதார நெருக்கடி விட்டுவைக்கவில்லை. கிரேக்கத்தில் தொடங்கிய இந்நெருக்கடி, போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி என வேகமாக மற்ற நாடுகளுக்கும் பரவிவருகிறது. பொருளாதார நெருக்கடியால் ஐரோப்பாவே கலகலத்துப் போயிருக்கிறது.
முதலாளித்துவ கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ‘வால்ஸ்ட்ரீட்எனும் இடத்தில் 2011 அக்டோபர் 15ல் போராட்டம் வெடித்த்து. இப்போராட்டம் 82 மேலை நாடுகளில் உள்ள 951 நகரங்களுக்குப் பரவியது. இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெய்ன், போர்ச்சுகல் என எல்லா ஐரோப்பிய நாடுகளும் இப்போராட்டத்தைச் சந்தித்தன.
பெரிய நிறுவனங்களுக்கும் முதலாளித்துவக் கோட்பாடுகளுக்கும் நிதிநிறுவனங்களின் நசிவுக்கும் எதிராகப் போராட்டக்காரர்கள் குரலெழுப்பினர். வால்ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்; முதலாளித்துவத்தின் மேலாதிக்கம் ஒழிக; ஜனநாயகத்தை விற்காதீர்கள் என்பதே அவர்களின் கோஷமாக இருந்தது.
மக்கள் தொகை குறைந்ததால் அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ தேனாறும் பாலாறும் ஓடவில்லை. ஊரை அடித்து உலையில் போட்டு வயிறு வளர்க்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், கல்விக்கும் சுகாதாரத்துக்குமான மானியங்களைக் குறைத்ததுதான் மக்களைத் தெருவுக்கு அழைத்துவந்துவிட்டது.
1999ல் 17 ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து ‘யூரோவை தங்களின் பொது நாணயமாகப் பிரகடனப்படுத்தின. ஆனால், அமெரிக்க டாலரைப் போலவே ஐரோப்பாவின் யூரோவும் அடிவாங்க ஆரம்பித்துவிட்டது.
யூரோ மண்டலங்களிலும் பல பெரிய வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பங்குச் சந்தைகளில் ஐரோப்பிய பங்குகள் சரிவைச் சந்தித்துவருகின்றன. எல்லா ஐரோப்பிய நாடுகளும் கடனில் மூழ்கி த்ததளிக்கின்றன. 
சீனாவின் பரிதாபம்
இந்தியாவைவிடக் கூடுதல் மக்கள் தொகை கொண்ட சீனா, வறுமையைப் பயந்து குடும்பக் கட்டுப்பாட்டைக் கடுமையாகச் செயல்படுத்தியது; அடுத்த தலைமுறையை உருவாக்கத் தவறியது; உழைக்கும் இளம் கரங்களைக் கருவிலேயே அழித்தது.
இதனால் சீனாவில் சிறியவர்களைவிட முதியோரும் நடுத்தர வயதினருமே அதிகமாக உள்ளனர். அங்கே 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் மொத்த தொகையும் 50 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் மொத்த தொகையும் சமமாக உள்ளன.
எனவே, நாளைய சீனாவை உருவாக்கும் இளந்ததளிர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து மனித ஆற்றல் குறைந்துபோய் சீனா விழிபிதுங்கிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் இரண்டுங்கெட்டான் நிலை
இந்தியாவில் படித்து நல்ல வேலையில் அமர்ந்து கைநிறைய சம்பாதிக்கும் ஒரு வர்க்கம் உருவாகிவிட்டது. தான், தன் சிறிய குடும்பம், தன் வேலை, தன் தேவைகள் என்ற குறுகிய வட்டத்திலேயே வாழ்ந்து பழகிவிட்ட இந்த இளம் தம்பதியினர், தங்களைத் தவிர வேறு யாரைப் பற்றியும் சிந்திப்பதே இல்லை. பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர் எல்லாம் இவர்களுக்குக் கசப்பான சுமைகள்.
இவர்கள் எண்ணி, எண்ணி ஆளுக்கொரு பிள்ளை என ஆண் ஒன்று; பெண் ஒன்று பெற்றுக்கொள்கின்றனர். இரண்டோடு கர்ப்பத் தடை செய்துகொள்வோரே அதிகம். மிகச் சிலர், கர்ப்பத் தடை செய்துகொள்ளாமலேயே பிள்ளைப் பேற்றைத் தவிர்த்துவிடுகின்றனர். இவர்களுக்கெல்லாம் தங்கள் சுகம் மட்டுமே குறிக்கோள். கூடுதல் குழந்தைகள் சுகத்தைப் பங்குபோட்டுவிடும் என அஞ்சுகின்றனர். அதிக எண்ணிக்கையில் படித்த தலைமுறையை உருவாக்குகின்ற அரிய வாய்ப்பை இந்த வர்க்கம் திட்டமிட்டே வீணாக்கிவிடுகிறது.
இவர்களுக்கும் வறுமை பற்றிய பயம்தான் மேலோங்கி நிற்கிறது. பெரும் செல்வந்தர்கள்கூட, நான்கைந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் சொத்து பிரிந்து, வாரிசுகள் சிறிய செல்வந்தர்களாகிவிடுவார்கள் என்றே அஞ்சுகின்றனர். இவர்களும் ஒரு வகையில் அஞ்சுவது வறுமையைத்தான்.
இவர்களே இப்படியென்றால், நடுத்தரக் குடும்பத்தினரைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் த்ததளிக்கும் அவர்களின் குடும்பங்களில் வாரிசுகளின் எண்ணிக்கை குறைவுதான். சிலர் மட்டுமே எதற்காகவும் அலட்டிக்கொள்ளாமல் நான்கைந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
வறுமை கோட்டிற்குக் கீழே சாலைகளிலும் சேரிகளிலும் வசிப்பவர்களின் நிலை வித்தியாசமானது. அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை; நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அவர்கள் அஞ்சுவதில்லை. பெற்றால் மட்டும் போதுமா? பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா? என்ற இலக்கணமெல்லாம் இவர்களுக்குத் தெரியாது. படிக்க வைத்தல், வேலை வாங்கித் தருதல், பண்பாடுகளைப் பழக்குதல், ஒழுக்கம் கற்பித்தல் போன்ற சுமைகளை இவர்கள் ஏற்பதில்லை. பிறந்தவன், தன் போக்கில் வளர்வான் என்பது இவர்களின் சித்தாந்தம்போலும்!
ஆனால், அவர்களின் நிலையிலும் இன்று நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன. நாம்தான், படிக்காமல் போனதால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டோம்; நம் குழந்தைகளை அப்படி விட்டுவிடக் கூடாது என்ற விழிப்புணர்வு சாமானிய மக்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. இதனால், கஷ்டப்பட்டு பிள்ளைகளைப் படிக்கவைக்கிறார்கள். அரசு வழங்கும் பல்வேறு உதவிகள் அவர்களை ஊக்கப்படுத்துகின்றன.
இதனால், தாழ்த்தப்பட்டோரிலும் உயர் அதிகாரிகள், பட்டதாரிகள், உயர்பதவி வகிப்போர் ஆகியோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. வளர்ச்சி அடைந்தவுடன், அவர்களும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்குள் வந்துவிடுகின்றனர்.
உண்மை என்ன?
ஆக, ஒரு நாட்டின் மக்கள் தொகை அதிகமாவது அந்நாட்டின் வறுமைக்கு வழிவகுக்கும்; மக்கள் தொகை குறைவது அந்நாட்டின் வளமைக்கு வழிகாட்டும் என்பதே இன்றைய உலகத்தின் மதிப்பீடு. ஆனால், அது உண்மையன்று. படித்த, பண்பாடுள்ள, உழைக்கவும் உயரவும் தயாராக உள்ள மக்கள்தான் ஒரு நாட்டின் பலமே. அத்தகைய மக்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு உயர்கிறதோ, அந்த அளவுக்கு நாடும் உயரும்.
படிப்பறிவில்லாத, படித்தாலும் பண்பாடில்லாத, உழைக்க வேண்டும் என்ற எண்ணமில்லாத, அந்த எண்ணம் இருந்தாலும் உயர வேண்டும் என்ற துடிப்பு இல்லாத மக்கள் ஒரு நாட்டில் இருந்தால், மக்கள் தொகை குறைவாக இருந்தாலும்  அந்நாடு முன்னேறப்போவதில்லை. இதுதான் உண்மை.
பூமி தாங்கும்
மனிதனைப் படைத்து, வாழ்வதற்காக பூமிக்கு அவனை அனுப்புவதற்கு முன்பே, பூமியை அவனது சிறந்த வசிப்பிடமாக இறைவன் அமைத்துவிட்டான். இந்த பூமி எத்தனை கோடி மக்களையும் தாங்கும் ஆற்றல் உள்ளது. இங்குள்ள காற்று, நீர், நெருப்பு உள்ளிட்ட எல்லா இயற்கை வளங்களும் பூமியில் பிறக்கும் எல்லா உயிரினங்களுக்கும் தேவையைவிடக் கூடுதலாகவே உள்ளன.
இயற்கை வளங்களை மனிதன் பாழ்படுத்தாமலும் ஒரு நாட்டின் வளத்தை மற்றொரு நாடு கொள்ளையடிக்காமலும் இருந்தாலே போதும். அவ்வாறே, மனிதகுலத்திற்கு இறைவன் வழங்கியுள்ள மனித ஆற்றல் வளம் வற்றாத ஒரு நீரூற்று. அதை மனிதன் வளர்க்காமல் வீணடித்தாலோ, தவறாகப் பயன்படுத்தினாலோதான் சிக்கலே பிறக்கும்.
அதற்கு அல்லாஹ், “நீங்கள் (சொர்க்கத்திலிருந்து) கீழிறங்கிச் சென்றுவிடுங்கள்; உங்களில் சிலர் சிலருக்குப் பகைவர்களாக இருப்பீர்கள். ஒரு காலம்வரை உங்களுக்குப் பூமியில் வசிப்பிடமும் வாழ்வாதாரமும் உண்டுஎன்று கூறினான். (7:24)
பிறக்கும் அத்தனை பேருக்கும் பூமியில் வசிப்பிடம் உண்டு; வாழ்வதற்கு வாழ்வாதாரமும் உண்டு என்பதை இத்திருவசனம் தெளிவுபடுத்துகிறது.
மற்றொரு வசனம், “பூமியில் உள்ள எந்த உயிரினமானாலும், அதற்கு உணவைத் தருவது –அதாவது உணவைப் பெறும் வழியைக் காட்டுவது- அல்லாஹ்வின் பொறுப்பாகவே உள்ளது. அதன் இடத்தையும் உறைவிடத்தையும் அவன் அறிவான்” (11:6) என்று விவரிக்கிறது.
அதாவது பூமியில் வசிக்கின்ற சிறிய மற்றும் பெரிய உயிரினங்கள் உட்பட அனைத்துப் படைப்புகளுக்கும் உணவளிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டுள்ளான். பூமியில் ஊர்வன, வானில் பறப்பன, நீரில் நீந்துவன என ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதனதன் இயல்புக்கேற்ப இறைவன் உணவளிக்கின்றான்.
உயிரினங்களில் சில தன் கொடுக்காலும், வேறுசில அலகாலும், இன்னும் சில நகங்களாலும், இன்னும் சில கோரப் பற்களாலும் தம் உணவைத் தேடிக்கொள்கின்றன. இவ்வாறு ஒன்றை உண்டு மற்றொன்று வாழாவிட்டால், பூமியில் உயிரினங்கள் பெருகி நெருக்கடி ஏற்படும்; அல்லது இயற்கையாகச் செத்து பூமியே நாறும். (தஃப்சீர் அல்மனார்)
 மனிதத் தவறுகளே காரணம்
உலக நாடுகளில் இன்று காணப்படும் பொருளாதார தேக்கம், உணவுப் பற்றாக்குறை, சுற்றுச் சூழல் பாதிப்பு முதலான இழப்புகளுக்கு மனிதத் தவறுகளே காரணம். இருப்பதை இழந்து இல்லாத்தைத் தேடும் உலகம் இது. இயற்கை வளங்களை முறையாகப் பாதுகாத்து, அவற்றை வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதும் இயலாதவனை இயன்றவன் சுரண்டுவதைக் கைவிட்டு, உரிமைகளைப் பாதுகாப்பதும் மனிதகுலத்தின் தலையாய பொறுப்பாகும்.
ஒரு வசனத்தில், “மனிதர்களின் கரங்கள் தேடிக்கொண்ட விளைவின் காரணத்தாலேயே தரையிலும் கடலிலும் சீரழிவு தென்படுகிறது” (30:41) என்று உயர்ந்தோன் அல்லாஹ் சாடுகின்றான்.
ஒரு நாட்டின் நிலப்பரப்பை மட்டும் வைத்து, உணவோ உறைவிடமோ கிடைக்காது என்ற வாதம் சரியன்று. எல்லா மக்களுக்கும் உணவும் காற்றும் போதுமான அளவுக்கு உலகில் உண்டு. சரியான நிர்வாகம், திட்டமிடல், ஊழலற்ற நேர்மையான ஆட்சி, இயற்கையைக் கொல்லாமை, சரியான பகிர்வு ஆகியவை தேவை.
இந்தியாவில் சமத்துவமின்மையால் 28 விழுக்காடு மனிதவளம் வீணடிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள ஆய்வு தெரிவிக்கிறது.
பொதுவாகக் கடின உழைப்பும் மனித ஆற்றலைப் பெருக்குவதும் ஆராய்ச்சியில் முனைப்புக் காட்டுவதும்தான் ஒரு நாட்டின் வளத்திற்கு அச்சாணியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலமற்ற இறைநம்பிக்கையாளரைவிட, பலமிக்க இறைநம்பிக்கையாளரே சிறந்தவரும் இறைவனின் அன்புக்குரியவரும் ஆவார். இருவரிலும் (இறைநம்பிக்கை எனும்) நன்மை உண்டு. உனக்குப் பயன் தருவதன்மீது பேராவர் கொள்! அல்லாஹ்விடம் உதவி கேள்! இயலாதவனாகிவிடாதே! (முஸ்லிம்)
மற்றொரு நபிமொழி இவ்வாறு கூறுகிறது: மக்களே! அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள். (வாழ்வாதாரத்தைத்) தேடுவதில் அழகிய வழியைப் பின்பற்றுங்கள். தாமதமானாலும் எந்த உயிரும் தனக்குரிய உணவை முழுமையாகப் பெறாமல் இறக்கப்போவதில்லை. (இப்னுமாஜா)
எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதனிடம் கடின உழைப்புடன் இறைவன்மீது உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அதுவும் ஆழ்மனத்தில் ஆழமாகப் பதிய வேண்டும்.
“இறைவன்மீது முறைப்படி நம்பிக்கை வைத்தால், பறவைக்கு உணவளிக்கப்படுவதைப் போன்று உங்களுக்கும் உணவளிக்கப்படும். பறவை ஒட்டிய வயிற்றுடன் காலையில் செல்கிறது; நிரம்பிய வயிற்றுடன் மாலையில் திரும்புகிறது” (திர்மிதீ) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆறறிவு இல்லாத பறவை, படைத்தவனை நம்பி கூட்டைவிட்டுப் புறப்படுகிறது. கிடைத்த ஆகாரத்தை உட்கொண்டுவிட்டு, குஞ்சுக்கும் இரையை எடுத்துக்கொண்டு கூடு திரும்புகிறது. ஆக, பறவைகூட நம்பிக்கொண்டு கூட்டிலேயே இருந்துவிடாமல், தீனியைத் தேடி வெளியே செல்கிறது கடினமகப் போராடுகிறது.
பறவைக்குக் கூடு என்றால், மனிதனுக்கு வீடு.

Tuesday, November 01, 2011

முஅம்மர் கதாஃபியின் மறுபக்கம்

- கான் பாகவி
கடந்த 21.10.2011 அன்று லிபியா அதிபர் முஅம்மர் கதாஃபி சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி கல் நெஞ்சையும் கரைத்துவிடும். உயிருக்குப் பயந்து ராட்சச நீர் குழாய்க்குள் ஒளிந்துகொண்டிருந்த கதாஃபியை, நேட்டோ படைகளும் லிபிய புரட்சிப் படைகளும் சேர்ந்து வெளியே இழுத்துப் போட்டுக் குண்டுகளுக்கு இரையாக்கியதை அல்ஜஸீரா தொலைக்காட்சியின் இணையதள ஒளிபரப்பில் கண்டபோது நாமும் துடித்துப்போனோம் என்பது உண்மைதான்.
கடந்த 42 ஆண்டுகாலமாக எதிர்ப்பே இல்லாமல், அல்லது எதிர்ப்பு இருந்தாலும் அதை எளிதாக முறியடித்துவிட்டு, தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி புரிந்தார் கதாஃபி. ஐக்கிய ஆப்ரிக்காவின் சிற்பிஎன அவருடைய ஆதரவாளர்களால் புகழ்ந்துரைக்கப்படும் கதாஃபியின் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சம் கோடி.
கதாஃபி தன்னை எப்போதும் ஏழைகளின் பங்காளிஎன்று வர்ணித்துக்கொள்வதில் புளகாங்கிதம் அடைவார். சாதாரண நிலையிலிருந்து பெரிய பதவிக்கு வந்த அவர், ‘ஆப்பிரிக்க அரபி முஸ்லிம்என்று வெளி உலகுக்கு அறிமுகமானவர். ஆப்ரிக்கர் என்பது உண்மை; அரபியர் என்பதும் உண்மை. அவர் ஒரு முஸ்லிம் என்பதுதான் சர்ச்சைக்குரியது என்கிறது குவைத் இஸ்லாமிய வார இதழ் அல்முஜ்தமா’.
வாழ்க்கைக் குறிப்பு
1942ஆம் ஆண்டு வட ஆப்ரிக்கா நாடான லிபியாவில் சரத்மாவட்டத்தில் ஜஹ்னம் எனும் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் முஅம்மர் கதாஃபி பிறந்தார். லிபிய ராணுவத்தில் இடைநிலை ஆசிரியராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கினார்.
தமது 27ஆவது வயதில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்ட கதாஃபி தனிப்பட்ட முறையில் திறமைசாலிதான் என்பதில் ஐயமில்லை. ஐக்கிய ஆப்பிரிக்காவை உருவாக்குவதுதான் அவரது முதல் கனவுத் திட்டமாக இருந்தது. இதையடுத்து எகிப்து, சூடான், லிபியா, சிரியா ஆகிய நாடுகளை ஆப்பிரிக்கக் கூட்டணியில் கதாஃபி இணைத்தார்.
எகிப்து முன்னாள் அதிபர் கமால் அப்துந் நாசிரின் ஆசி கதாஃபிக்குக் கிடைத்தது. நாசர் இறந்தபிறகு அவருடைய வாரிசாக இருந்து அல்ஜீரியா, துனூசியா, மெராக்கோ ஆகிய நாடுகளையும் இக்ககூட்டணியில் இணைத்தார்.
இதையடுத்து ஆப்பிரிக்காவின் ராஜாதி ராஜன்என்று தமக்குத் தாமே அவர் பட்டம் சூட்டிக்கொண்டர். அரசியல் மற்றும் சமூகநீதி என்பது, ‘மக்கள் ஜனநாயம்என்ற மூன்றாவது தூணால் மட்டுமே சாத்தியமாகும் என்று கதாஃபி வாதிட்டார்.
லிபியா நாட்டின் அரசியல் சாசனம் என்று சொல்லி, அவரே தயாரித்ததுதான் பச்சைப் புத்தகம்[Green Book] எனும் ஒரு நூல். இதில் தமது நாட்டுக்கு ஒரு நீண்ட பெயரைச் சூட்டினார். மக்கள் பொதுவுடைமை ஜனநாயக லிபிய அரபிக் குடியரசுஎன்பதே அப்பெயர்.
ஜனநாயகத்தின் எதிரி
மூச்சுக்கு மூச்சு மக்கள் ஜனநாயகம் பற்றி வாய்கிழிய கதாஃபி பேசினாரே தவிர, செயலில் ஜனநாயகத்தின் விரோதியாகவே விளங்கினார்.
கதாஃபி தமது ஆட்சியில் புரிந்த குற்றங்களின் பட்டியல் நீளமானது. 1978ஆம் ஆண்டு இமாம் மூசா ஸத்ர் அவர்களைக் கொலை செய்தார். சாட் நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டார். 1984ல் லண்டனில் லிபியா தூதரகத்தில் பணியாற்றிய பிரிட்டன் பெண்மணியைக் கொன்றார்.
1992ல் லிபிய விமானத்தில் குண்டுவைத்து 150 லிபியர்களைக் கொன்றார். 1996ல் தலைநகர் திரிபோலியில் உள்ள பூசலீம் சிறையில் 1170 கைதிகளைக் கொன்றார். 2003ல் சஊதி அரபியா மன்னர் அப்துல்லாஹ்வைக் கொல்ல முயன்றார்.
இக்வானுல் முஸ்லிமீன் நண்பர்கள் மதம் மாறியவர்கள் என்று தீர்ப்பளித்தார். இக்வான்களைச் சிறையிலடைத்துக் கொடுமைகள் புரிந்தார்... இப்படி நீள்கிறது கதாஃபியின் ஜனநாயகப் படுகொலைகள் பட்டியல்.
குர்ஆனின் எதிரி
எல்லாவற்றுக்கும் மேலாக, முஅம்மர் ஒரு நல்ல முஸ்லிமே அல்ல. தாம் எழுதிய பச்சைப் புத்தகத்தை நவீன பைபிள்என வர்ணித்த அவர், இஸ்லாத்தைப் பற்றியும் குர்ஆனைப் பற்றியும் மனம்போன போக்கில் கிறுக்கிவைத்துள்ளார் என்பதுதான் பெரிய கொடுமை.
இஸ்லாமிய ஷரீஅத் சட்டம், மற்ற எல்லாச் சட்டங்களையும்போல மாற்றத்திற்குரியதுதான்; இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு தபால்காரர்[Postman] என்பதற்கு மேலாக வேறொன்றுமில்லை. நபியவர்களின் பரப்புரை எல்லாம் அரபுகளுக்கு மட்டுமே உரியவை.
திருக்குர்ஆனில் எங்கெல்லாம் குல்’ (நபியே, கூறுவீராக) என்று வருகிறதோ அங்கெல்லாம் அச்சொல்லை அகற்றிவிட வேண்டும். நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சொல்லப்பட்ட இதுபோன்ற சொற்கள், நபியவர்களின் மறைவுக்குப் பிறகு அவசியமற்றவை -இதுவெல்லாம் கதாஃபியின் உளறல்களில் அடங்கும்.
இஸ்லாத்தின் எதிரி
உங்களைப் போன்று நான் வெளிப்படையாகத் தொழுகையை நிறைவேற்றமாட்டேன் என்று சொன்ன கதாஃபி, முழங்கால்களை இதைவிட அதிகமாகத் தாழ்த்தக் கூடாது என்று மருத்துவர்கள் என்னை அறிவுறுத்தியுள்ளார்கள் என்றார்.
அஸ்ர் தொழுகையை மாற்ற வேண்டும்; மஃக்ரிப் மற்றும் இஷா தொழுகைகளில் சப்தமிட்டு குர்ஆன் ஓதமாட்டேன். உங்களுடன் அதிக நேரம் பேசுவதால், அத்தொழுகைகளில் குரலெழுப்பி என்னால் ஓத முடியாது.
பகல் முழுக்க நோன்பு நோற்பது பேரிழப்பாகும். அது ஒரு வேதனை. இதில் சந்தேகமே இல்லை. நோன்பு சுகமான ஒன்று என யார் கூறுவார்? நோன்பு நோற்க வேண்டிய தேவை என்ன? சிரமமான, பிடிக்காத ஒரு தேவையே நோன்பு.
புனித கஅபா ஆலயம் இறுதிக் காலம்வரை இருக்கும் கடைசி விக்கிரகம். கஅபாவையும் ஸஃபா - மர்வாவையும் சுற்றிவருவதும் அரஃபாத் மலைமீது ஏறுவதும் சாதாரணமான ஒரு உடற்பயிற்சி அவ்வளவுதான்! இதுபோன்ற வழிபாடுகளையெல்லாம் அல்லாஹ் விரும்புவதில்லை.
ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு நீங்கள் கல் எறிகிறீர்கள். முறைப்படி பார்த்தால் பாலஸ்தீனில் யூதர்களை நோக்கியே கல் எறிய வேண்டும். நம்மில் ஒவ்வொருவரும் ஏழு கற்களை எடுத்துக்கொண்டு, பாலஸ்தீனம் செல்வதுதான் உண்மையான அறப்போர்; கல்லெறிதல். ஒரு சிலைமீது கல் எறிவதால் என்ன சாதிக்கப்போகிறீர்கள்? (பிற்காலத்தில் இஸ்ரேலின் நண்பராக கதாஃபி மாறியது தனிக் கதை.)
மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கு எந்தப் புனிதத்துவமும் கிடையாது. பெண்கள் ஹிஜாப் (பர்தா) அணிவது கடமையல்ல; முதல் பெண்மணி ஹவ்வாவை எப்படிப் படைத்தான் இறைவன்? அவரிடம் என்ன ஆடை இருந்தது? இதுதான் இயற்கை. இவ்வாறுதான் அல்லாஹ் நம்மை ஆரம்பத்தில் படைத்தான். ஷைத்தானால்தான் மனிதன் ஆடை அணிந்தான். ஹிஜாபே ஷைத்தானால் வந்ததுதான்.
பலதாரமணத்திற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவே இல்லை. இரண்டு அல்லது நான்கு திருமணம் செய்துகொள்வது குர்ஆனில் இல்லவே இல்லை.
இப்படி குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் எதிராக ஏராளமான புரட்டுகளை எழுதியவரும் பிரசாரம் செய்தவரும்தான் கதாஃபி.
நபிமார்களையும் தோழர்களையும் திட்டியவர்
நபி யஅகூப் (அலை) அவர்கள் குறித்து கதாஃபி எழுதும்போது, ‘‘அவரும் அவர் குடும்பத்தாரும் மிகவும் மட்டமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்’’ என்று அபாண்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நபித்தோழர்கள், குறிப்பாக நேர்வழி கலீஃபாக்களை ஏசுகின்ற கதாஃபி, நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் வந்த கலீஃபாக்களைவிட்டு விலகியவர்கள் என்று புளுகுகிறார். அலீ (ரலி) அவர்கள், இறைத்தூதரின் கலீஃபா என்றால், அவரது காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் பாதிப்பேர் அவரை ஏன் எதிர்த்தனர்? அவருக்குப்பின் அவருடைய மக்களை ஏன் கொன்றனர்?
உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சி புரியவே தகுதியில்லாதவர்; அவர் அரிஸ்டாட்டில் கொள்கையைப் பின்பற்றியவர்; உறவினர்களுக்குப் பொறுப்புகளைக் கொடுத்து இடைத்தரகர்களை உருவாக்கினார். இறுதியில் அவர்களாலேயே அவர் கொல்லப்பட்டார் என்று கடுமையாக விமர்சிக்கிறார் கதாஃபி.
மிஅராஜ்என்று ஒன்று நடக்கவே இல்லை; இதுவெல்லாம் கற்பனை; குர்ஆனில் இதற்கு இடமில்லை. குறிப்பாக, ‘புராக்என்பது சுத்தப் பொய்; அப்படி ஒன்று இல்லவே இல்லை. மிஅராஜ் நடந்திருந்தால், ‘அப்பெயர்நிச்சயம் குர்ஆனில் இடம்பெற்றிருக்கும்.
ஷெய்க் அப்துல்லாஹ் பின் பாஸ்
இக்வானுல் முஸ்லிமீன் பெரியவர்களை மதம் மாறியவர்கள்; பேன் பிடித்த தாடிக்காரர்கள் என்றெல்லாம் கதாஃபி ஏசுகிறார்.
மேற்சொன்ன வரிகள் கதாஃபியின் பச்சைப் புத்தகத்திலும் அவருடைய உரைகளிலும் வெளிப்பட்ட, இஸ்லாத்திற்கு விரோதமான கருத்துகளாகும்.
கதாஃபியின் இத்தகு கருத்துகள் இஸ்லாத்திற்குப் புறம்பானவை என மறைந்த முஃப்தி ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ் முன்பே தீர்ப்பளித்துள்ளார்கள். சஊதி உலமாக்கள் அமைப்பும் கதாஃபியைக் கண்டித்துள்ளது.
உலக இஸ்லாமிய மையம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) 27 ஆண்டுகளுக்கு முன்பே கதாஃபிக்கு எதிராக ஒரு நூலை வெளியிட்டது. கதாஃபியின் அவதூறுகளும் தக்க பதில்களும்என்பது நூலின் பெயர். ‘‘முஅம்மர் கதாஃபி எல்லைகள் அனைத்தையும் மீறிவிட்டார்; இஸ்லாத்தின் கொள்கை, நம்பிக்கை, சட்டம், வாழ்க்கை நெறி அனைத்தின் மீதும் தாக்குதல் தொடுத்துவிட்டார்’’ என்பதே நூலின் முதல் பக்க வாசகமாகும்.

இஸ்ரேலின் நண்பர்
ஹிஜ்ரீ காலண்டரை நீக்கிவிட்டு, லிபியாவுக்கென புதியதொரு காலண்டரை கதாஃபி உருவாக்கினார். அது நபி (ஸல்) அவர்களின் இறப்பிலிருந்து தொடங்குகிறது. பெண்கள் இல்லங்களில்தான் இருக்க வேண்டும் என்று பச்சைப் புத்தகத்தில் எழுதிவிட்டு, ஆண்களைவிடப் பெண்களையே எப்போதும் தம்முடன் வைத்திருப்பார் கதாஃபி. கடந்த ஆண்டு இத்தாலி சென்றிருந்தபோது அழகிகளுடன் தங்கிய அவர், அழகிகளுக்கு இஸ்லாமியப் பிரசாரம் செய்கிறேன் என்றார்.
எகிப்தின் ஹசனீ முபாரக்கைப் போன்றே லிபியாவின் முஅம்மர் கதாஃபியும் இஸ்ரேலின் இனிய நண்பர்களில் ஒருவராவார். இதனால்தான் இஸ்ரேலையும் ஃபாலஸ்தீனையும் இணைத்து இஸ்ராதீனம்எனும் புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று கதாஃபி கருத்துத் தெரிவித்தார்.
கடந்த 42 ஆண்டுகளாக கதாஃபியின் கொடுங்கோல் ஆட்சியைப் பொறுத்துப் பொறுத்து பொறுமை இழந்துவிட்ட லிபிய மக்கள், குறிப்பாக இளைஞர்கள் கதாஃபிக்கெதிராகப் போர் முரசு கொட்டத் தொடங்கி, இறுதியாகச் சுட்டுக்கொன்றுவிட்டனர். அல்லாஹ்வே மிகப் பெரியவன்.

நன்றி: அல்முஜ்தமா, (குவைத் அரபி வார இதழ்)
http://magmj.com/index.jsp?version=107&archive=true