Tuesday, January 24, 2012

சமூக மாற்றத்தில் பள்ளிவாசலின் பங்கு


ggபள்ளிவாசல் என்பது ஓரிறைவனான அல்லாஹ்வைத் தொழுது வழிபடுவதற்கான இறையில்லம் ஆகும். அரபியில் மஸ்ஜித்என்பர். இதற்கு சிரவணக்கம்’ (சஜ்தா) செய்யும் இடம் என்று பொருள்.

தமிழில் பள்ளிஎனும் சொல்லுக்குப் பல பொருள்கள் அகராதியில் காணப்படுகின்றன. கடவுள், வழிபாட்டுத்தலம், அறச்சாலை, ஆசிரமம், பள்ளிக்கூடம் ஆகிய பொருள்கள் அவற்றில் அடங்கும்.

பள்ளிஎன்பதுடன் வாசல்என்பதையும் சேர்த்து, இறைவனை அடைவதற்கான நுழைவாயில் என்ற கருத்தில் மஸ்ஜித்என்பதற்கு பள்ளிவாசல்என்கிறோம். தொழுகை, குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல், வேண்டுதல், நீதிபோதனை ஆகிய நல்லறங்கள் நடைபெறும் அறச்சாலையாகவும் பள்ளிவாசல் திகழ்கிறது.

சிறுவர்கள் திருமறை ஓதவும் வழிபாடுகள் செய்யவும் கற்பிக்கின்ற சமய வகுப்பு நடப்பதால் பள்ளிவாசல் ஒரு பள்ளிக்கூடமாகவும் விளங்குகிறது. ஆன்மிக நெறியில் ஈடுபட்டோர் அதிகமாகத் தங்கும் இடமாக இருப்பதால் ஆசிரமம்என்ற பொருள்கூடப் பொருந்தும் என்பர் சிலர்.

ஆனால், நம்மில் பலர் எண்ணியிருப்பதைப் போன்று, பள்ளிவாசல் என்பது ஐவேளைத் தொழுகைகள் நடக்கும் இடமாக மட்டும் முற்காலத்தில் இருக்கவில்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில், பள்ளிவாசல்தான் முஸ்லிம் சமுதாயத்தின் முக்கியக் கேந்திரமாக விளங்கியது; மாற்றத்திற்கு வித்திட்ட சமூக மையமாகத் திகழ்ந்தது.

வழிபாடு முதல் வீரவிளையாட்டுவரை
இறையுணர்வு, இறைவழிபாடு, கல்வி கேள்வி, வழக்கு விசாரணை, தூதுக்குழுவினர் சந்திப்பு, வீரவிளையாட்டு எனச் சமூகத்தின் பல்துறை நடவடிக்கைகளும் நபி (ஸல்) அவர்களது காலத்தில் பள்ளிவாசலில் - மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவியில்தான் மேற்கொள்ளப்பட்டன.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே -அதாவது அல்லாஹ்வை வழிபடுவதற்கே- உரியவை. எனவே, அல்லாஹ்வுடன் வேறுயாரையும் அழைக்காதீர்கள் (72:18) என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.
இங்கு பள்ளிவாசல்கள் ஓரிறை உணர்வை ஊட்டக்கூடியவை என்பது உறுதிசெய்யப்படுகிறது. எனவே, பள்ளிவாசல்களில் ஓரிறை உணர்வு மட்டுமே மேலோங்கியிருக்க வேண்டும். அதற்குப் பங்கம் நேரக்கூடிய வகையில் எந்தப் பிரசாரமோ நிகழ்வுகளோ நடக்க இடமளித்துவிடக் கூடாது.

இறைவழிபாடு
பள்ளிவாசல்களில் தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதல், துஆ போன்ற வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். பள்ளிவாசல்களில் வழிபாடுகள் நடப்பதற்குத் தடை ஏற்படுத்துவதோ பூட்டிவைத்து வழிபாடுகளைத் தடுப்பதோ கூடாது. பாதுகாப்புக் கருதி குறிப்பிட்ட நேரங்களில் பூட்டுவது வேறு விஷயம்.

தொழுமிடம் ஒவ்வொன்றிலும் உங்கள் முகங்களை (அல்லாஹ்வை நோக்கியே) திருப்புங்கள். அவனை மட்டுமே உளத்தூய்மையோடு வழிபட்டு அவனிடமே பிரார்த்தியுங்கள் (7:29) என்கிறது திருமறை.
மதீனா பள்ளிவாசலில் தொழுமிடத்தில் சிறுநீர் கழித்துவிட்ட ஒரு நண்பரிடம் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் சாந்தமாக எடுத்துரைத்தார்கள்:

இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆன் ஓதுவதற்கும் உரியவையாகும். (ஸஹீஹ் முஸ்லிம் - 480)

பள்ளிவாசலின் தூய்மை எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்ற அதே வேளையில், பள்ளிவாசலால் நோக்கம் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வை நினைவுகூர்வதால் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன (13:28) எனும் இறைவசனம் திக்ரின் அவசியத்தையும்,
என்னை அழையுங்கள்; உங்களுக்கு நான் பதிலளிக்கிறேன் (40:60) எனும் வசனம் துஆவின் முக்கியத்துவத்தையும் எடுத்தியம்புகின்றன.
பள்ளிவாசல்களில் நிறைவேற்றப்படும் கூட்டுத் தொழுகையின் (ஜமாஅத்) சிறப்பு குறித்தும் மகிமை குறித்தும் பல நபிமொழிகள் வந்துள்ளன. ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும் தமது கடைத்தெருவில் தொழுவதைவிடவும் ஜமாஅத்துடன் தொழுவது மதிப்பில் இருபத்து ஐந்து(மடங்கு தொழுகைகள்) கூடுதலாகும்.

ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கத்தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மையாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஒரு தகுதியை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகிறான்; ஒரு பாவத்தை அவரைவிட்டு நீக்குகிறான்.

அவர் பள்ளிவாசலில் நுழைந்துவிட்டால், அவர் (கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்து தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும்வரை அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். அவர் தொழும் இடத்தில் இருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ‘‘இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்குக் கருணை புரிவாயாக!’’ என்று பிரார்த்திக்கிறார்கள்; அவருக்குச் சிறுதுடக்கு ஏற்படாமல் இருக்கும்வரை இது நீடிக்கும். (ஸஹீஹுல் புகாரீ - 477)

கல்விகேள்வி
கல்விகேள்வியின் மையமாகவும் பள்ளிவாசல் விளங்கியது. மதீனா பள்ளிவாசலில், தாம் கற்ற கல்வியை நபித்தோழர்கள், குறிப்பாகத் திண்ணைத் தோழர்கள் மற்றவர்களுக்குக் கற்பித்ததன் பலனாகவே இஸ்லாம் பரவியது.

நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகளில் ஓதுநர்கள்’ (அல்குர்ரா) என அழைக்கப்பட்டுவந்த திண்ணைத் தோழர்கள் எழுபதுபேர் இருந்துவந்தனர். இவர்கள் இளைஞர்கள். இவர்கள் மாலைவரை பள்ளிவாசலில் இருப்பார்கள். (நபி (ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆன் வசனங்கள், நபிமொழிகளைக் கேட்டறிவார்கள்.)

மாலையில் மதீனாவின் ஓர் ஒதுக்குப்புறத்தில் ஒன்றுகூடி, தாங்கள் கற்றதை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வார்கள்; தொழுகையிலும் ஈடுபடுவார்கள்.

இதனால் அவர்களின் குடும்பத்தார், இவர்கள் பள்ளிவாசலில்தான் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வார்கள்; பள்ளிவாசலில் இருப்போர், இவர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள் என நினைத்துக்கொள்வார்கள். அதிகாலையில், இவர்கள் சுவைநீரைத் தேடிக் கொண்டுவருவார்கள்; விறகு வெட்டிக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்களின் வீட்டுச் சுவரில் சாத்திவைப்பார்கள். (முஸ்னது அஹ்மத்)

ஒரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

யார் நம்முடைய இந்தப் பள்ளிவாசலில் நல்ல விஷயம் ஒன்றைக் கற்றுக்கொள்ள, அல்லது கற்றுக்கொடுக்க வருகிறாரோ அவர், இறைவழியில் அறப்போர் புரிந்தவர் போன்றவர் ஆவார். இதன்றி வேறு நோக்கத்திற்காக யார் பள்ளிவாசலுக்குள் நுழைகிறாரோ அவர், தமக்கு உரிமையில்லாத ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பவர் போன்றவர் ஆவார். (முஸ்னது அஹ்மத்)

கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் ஏற்ற இடம் இறையில்லம் என்பது தெளிவாகிறது; அத்துடன் அதற்கு மாபெரும் நன்மையும் கிடைக்கிறது என்கிறது இந்த ஹதீஸ்.

வழக்கு விசாரணை
நபி (ஸல்) அவர்களது காலத்தில் வழக்கு விசாரணைகளும் தீர்ப்பு வழங்கப்படுவதும் கைதிகள் கட்டிவைக்கப்பட்டதும் பள்ளிவாசலில்தான் நடந்துள்ளன.

நபித்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்தபோது, ‘அஸ்லம்குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, ‘‘நான் விபசாரம் செய்துவிட்டேன் என்று சொன்னார். இவ்வாறு நான்கு தடவை அந்த மனிதர் வாக்குமூலம் அளித்தார்.

அவர் புத்திசுவாதீனத்துடன்தான் பேசுகிறார் என்பதையும் திருமணமானவர் என்பதையும் உறுதி செய்துகொண்ட நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தண்டனை நிறைவேற்றுமாறு ஆணையிட்டார்கள்.

அவ்வாறே தொழுகை திடலுக்கு (முஸல்லா) அழைத்துச்செல்லப்பட்ட அந்த மனிதருக்கு அங்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. (ஸஹீஹுல் புகாரீ - 5270)

நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் ஸுமாமா பின் உஸால். அவரைப் பள்ளிவாசலின் தூணில் கட்டிப்போட்டார்கள். அவரிடம் வந்த நபி (ஸல்) அவர்கள், ‘‘(நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) என்ன கருதுகிறீர் ஸுமாமாவே!’’ என்று கேட்டார்கள்.

அவர் சொன்னார்: நல்லதே கருதுகிறேன், முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால், பழிக்குப் பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள்; (மன்னித்து) உபகாரம் செய்தால், நன்றி செய்யக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்; நீங்கள் செல்வத்தை விரும்பினால், விரும்புவதைக் கேளுங்கள்.

அவர் அப்படியே விடப்பட்டார். அடுத்தடுத்த நாட்களிலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே வினவ, ஸுமாமாவும் அதே பதிலைச் சொன்னார். மூன்றாவது நாள், ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள் என நபியவர்கள் உத்தரவிட்டார்கள்.

உடனே அவர் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த தோட்டத்தில் குளித்துவிட்டு வந்து கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார். (ஸஹீஹுல் புகாரீ - 4372)

தூதுக்குழு, வீரவிளையாட்டு
நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வெளிநாடுகளிலிருந்து தூதுக்குழுவினர் வருவதுண்டு. பெரும்பாலும் அவர்கள் மதீனா பள்ளிவாசலிலேயே தங்கவைக்கப்பட்டனர்.

இவ்வாறு ஒருமுறை யமன் நாட்டின் நஜ்ரான் பகுதி கிறித்தவர்கள் குழுவொன்று மதீனா வந்தது. அவர்களில் பேராயர்கள், மதத் தலைவர்கள் எனப் பிரமுகர்களும் இருந்தனர். பலநாட்கள் தங்கியிருந்து நபி ஈசா (அலை) அவர்கள் (இயேசு) குறித்து நபி (ஸல்) அவர்களின் கருத்து என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

நஜ்ரான் கிறித்தவர்கள் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் தமது வழிபாட்டை நிறைவேற்ற முனைந்தார்கள். அப்போது முஸ்லிம்கள் தடுக்கப்போனார்கள். தடுக்க வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களைத் தடுத்துவிட்டார்கள். கிறித்தவர்கள் கிழக்கு நோக்கி தொழுதார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்)

இவ்வாறே பள்ளிவாசலில் வீரவிளையாட்டுகள் நடைபெற்றதற்கும் சான்று உள்ளது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(ஒரு பெருநாளன்று) பள்ளிவாசலில் அபிசீனியர் (ஈட்டியெறிந்து) விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான், (பள்ளிவாசலை ஒட்டியிருந்த) என் அறையிலிருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல்துண்டால் மறைத்துக்கொண்டிருந்தார்கள்.

நானாகச் சடைவடையும்வரை இவ்வாறு பார்த்துக்கொண்டிருந்தேன். விளையாட்டுமீது ஆவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். (ஸஹீஹுல் புகாரீ - 5236)

இதுவெல்லாம், சில எடுத்துக்காட்டுகள்தான்! முஸ்லிம்களின் மகிழ்ச்சி-கவலை, உயர்வு-தாழ்வு, அறிவு-அறியாமை எல்லாம் வெளிப்பட்டது பள்ளிவாசலில்தான். தனிமனித ஒழுக்கம், சமூகக் கட்டுப்பாடு, குடும்ப அமைதி, நாட்டுப் பொருளாதாரம், பாதுகாப்பு, வெளியுறவு என எல்லாத் துறைகளும் அலசப்பட்டது பள்ளிவாசலில்தான்.

உயிரோட்டம் திரும்ப வேண்டும்
காலப்போக்கில் பள்ளிவாசலின் முக்கியத்துவம் குறைந்துபோய், சமூக மாற்றத்தில் அதற்கான பங்கு பெரிய அளவில் சுருங்கிவிட்டது. இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமன்றி முஸ்லிம் நாடுகளிலும் இதுதான் நிலை. இந்தியாவில்கூட, பள்ளிவாசல்கள் சுதந்திரமாக இயங்க முடிகிறது. முஸ்லிம் நாடுகளில் அரசாங்கத்தின் இரும்புப் பிடியில்தான் பள்ளிவாசல்கள் சிக்கித் தவிக்கின்றன.

நாம் இங்குள்ள சூழ்நிலையில் என்ன செய்யலாம்? பள்ளிவாசலின் உள்ளும் புறமும் கட்டமைப்பு சீராக்கப்பட வேண்டும்; தூய்மை பேணப்பட வேண்டும். வக்ஃப் சொத்துகள் நேர்மையோடு பாதுகாக்கப்பட வேண்டும்; பராமரிக்கப்பட வேண்டும்.

அல்லாஹ்வை மட்டுமே அஞ்சுகின்ற நல்லவர்கள் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளாக இருக்க வேண்டும். ஒரு மஹல்லாவின் நன்மை-தீமைக்கு அந்த நிர்வாகமே பொறுப்பு என்பதால், ஆக்கபூர்வமான பணிகள் நடைபெற ஆவன செய்ய வேண்டும்.

பள்ளிவாசல் இமாம் தரமான அறிஞராக, சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளையும் நாட்டு நடப்புகளையும் நன்கறிந்தவராக இருக்க வேண்டும்; சமுதாயப் பிரச்சினைகளுக்கு மார்க்க அடிப்படையில் தீர்வுகாணும் ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டும்.

ஆரம்ப குர்ஆன் மதரசா எனப்படும மக்தப்மதரசா சீரும் சிறப்போடும் நடக்க எல்லா ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். மார்க்கப் படிப்புடன் சேர்த்து உலகப் படிப்புகளைக் கற்பிக்கும் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளை ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தொடங்க வேண்டும். அடிக்கடி மகளிர் பயான் நடக்க வேண்டும்.

மஹல்லாவில் வசிக்கும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்தில் பள்ளிவாசல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். மஹல்லாவில் நடக்கும் சமூகத் தீமைகளைக் களைய பாடுபட வேண்டும். குறிப்பாக வரதட்சிணை, வட்டி, மணமுறிவு, இளைஞர்களின் ஒழுக்கச் சீர்கேடு ஆகியவற்றை இயன்றவரை தடுக்க முயல வேண்டும்.

சொத்து மற்றும் குடும்பப் பிரச்சினைகளை மார்க்க அடிப்படையில் தீர்த்துவைக்க ஷரீஆ சமரச மையங்களை உருவாக்க வேண்டும். மாணவ-மாணவியரின் கல்விக்கு முன்னுரிமை அளித்து உதவிடவும் வட்டியில்லா கடன் அளிக்கவும் பைத்துல் மால் அமைப்பை உருவாக்க வேண்டும்.

இவ்வாறெல்லாம் செய்தால் சமூக மாற்றத்தில் பள்ளிவாசலுக்கிருந்த பங்கு புத்துயிர் பெற்று, மீண்டும் அந்தப் பொற்காலம் பிறக்கும்.