Wednesday, February 25, 2015

பேச்சே உயிர் மூச்சு

உங்களுடன் நான் மனம் விட்டு... - 10


லக்கியத்தில் பேச்சுக்கு முக்கியத்துவம் உண்டு. உரையில்லாத கலையோ இலக்கியமோ இருக்க வாய்ப்பில்லை. ஆயிரம்தான் உடல்மொழி பேசினாலும் வாய்மொழி இன்றி எக்கலையும் நிறைவடையாது. ‘பேசும் ஜீவன்’ (ஹயவான் நாதிக்) என்பதுதான், மற்ற உயிரினங்களிடமிருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் தனிச்சிறப்பாகும்.அதாவது நிலைமையைப் புரிந்து பேசுவது என்பதே இங்கு பொருள். இதற்குப் பகுத்தறிவு வேண்டும். எனவே, ‘பகுத்தறிவுள்ள உயிரினம்’ என்றுகூட மனிதனைச் சொல்லலாம்.

பேச்சின் அருமை, வாய்பேச முடியாதவர்களிடம் கேட்டால் தெரியும். சாடையால் புரியவைக்க முடிகிறது என்றாலும் மனத்தில் உள்ளதைத் துல்லியமாகத் தெரிவிக்க‘நாமொழி’தான் சிறந்த கருவி என்பதை மறுக்கவியலாது. நா சுவையைச் சொல்லிக்கொடுப்பதைப் போன்றே பாடமும் சொல்லித்தரும். இதனால்தான், “பல் போனால் சொல்போகும்” என்பார்கள். சொற்களை நா உச்சரிக்க, பல்லும் உதவுகிறது என்பதாலா? அல்லது பல் போனால், அதாவது முதுமை முற்றிவிட்டால் பேச்சு போய்விடும் என்பதாலா?எப்படியோ முதுமையின் தள்ளாட்டங்களில் குழறலும் ஒன்று. முதியவர் தானும் குழறி, பிறரையும் குழப்பும்போது பேச்சின் இன்றியமையாமை புரியும்.

சிந்தனை முதலில். இது மூளையின் வேலை. இரண்டாவது அச்சிந்தனைக்குச் சொல்வடிவம். இது நாவின் பணி. மூன்றாவது செயல் வடிவம். இது, உறுப்புகளின் ஆற்றல். ‘கலிமா’கூட அப்படித்தான். உள்ளத்தால் உறுதி; வாயால் விண்ணப்பம்; உழைப்பால் உரைகல். இவற்றில் ஒன்று பழுதடைந்தாலும் ஈமானும பழுதடையும். ஆக,ஒருவரின்பேச்சு அவரது சிந்தனையின் வெளிப்பாடு. நற்சிந்தனை இருந்தால் நற்சொல்லும் இருக்கும். எண்ணம் தவறான வழியில் பிறந்தது என்றால், சத்தமும் அப்படியே இருக்கும்.

சாதாரணமாக உறவுகளுடன் உரையாடுவதும் நண்பர்களுடன் நகைப்பதும் கள்வருடன் கதைப்பதும் –இதுவெல்லாம் வேறு. ஒரு நூறு பேருக்கு முன்னால் எழுந்து நின்று, ஒரு மையக் கருவை ஒட்டி, பிசகாமல் உரையாற்றி, விஷயத்தைப் புரியவைக்கும் பேச்சாற்றல் என்பது வேறு. அதிலும் கேட்போரின் மனதைத் தொட்டு,கண்ணைக் கசியவைத்து, கடந்த காலத்தைச் சிந்திக்கத் தூண்டி, நிகழ்காலத்தைத் திருத்துகின்ற சொல்லாற்றல் இருக்கிறதே அது மிகப் பெரிய கொடையாகும்.

சில உரைகளைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல் தோன்றும். சுற்றுப்புறங்களை மறந்து, நேரம் போவதே தெரியாமல், இமை கொட்டாமல், காதுகளைத் தீட்டிக்கொண்டு கேட்கவைக்கும் ‘கட்டிப்போடுகின்ற’ பேச்சு உண்மையிலேயே வரம்தான். இதனாலேயே, “பேச்சில் சூனியம் (ஈர்ப்பு) உண்டு” என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (புகாரீ)

சிலருடைய பேச்சில் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். வயிறு வலிக்கச் சிரித்துவிட்டு மக்கள் போய்விடுவார்கள். சிலர் அடுக்குமொழியில் எதுகைமோனையோடு அசத்துவார்கள். காதுக்கு இனிக்கும்; அதிலும் வெகுசிலருக்கு. சிலரது உரையில் மொழி வளம் இருக்கும்; தமிழ் விளையாடும். சிலர் உப்புசப்பு இல்லாத கதைகளைச் சொல்லி நேரத்தை நிரப்புவார்கள். அக்கதைகளில் என்ன பாடம் என்பதைக்கூட சுட்டிக்காட்டுவதில்லை. இவர்கள் காதைக் கவரலாம். மிகச் சிலரே கருத்தைக் கவர்வார்கள். தத்துவங்கள், எதார்த்தங்கள், நடப்புகள், ஆழ்ந்த கருத்துகள், சிந்தனையைத் தூண்டும் வினாக்கள் ஆகியவை அவர்களது உரையில் கிடைக்கும். ஆனால், இத்தகைய உரைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

மார்க்க அறிஞர்களான உலமாக்களுக்குப் பேச்சு என்பது உயிர்மூச்சு. அவர்களின் பணியே எடுத்துச்சொல்லிப் புரியவைப்பதுதான். இதற்குப் பேச்சாற்றல்தான் அடிப்படை. நிறைய கற்று, மாணவர்களுக்குக் கற்பிக்கவோ மக்களுக்குப் பிரசாரம் செய்யவோ தெரியாவிட்டால், கற்ற கல்வி குடத்திலிட்ட விளக்காக அல்லவா போய்விடும்?

“என்னிடமிருந்து ஒரு (சிறு) தகவலானாலும் (அதைப் பிறருக்கு) எடுத்துரைத்துவிடுங்கள்” என்பது நபிமொழி. (புகாரீ)

இந்தக் கட்டளை, மற்றெவரையும்விட ஆலிம்களுக்கு மிகவும் பொருந்தும். அரபி மத்ரசாக்களில் சொற்பயிற்சி மன்றங்கள் வழக்கத்தில் வருவதற்குமுன்பு வெளிவந்த முந்தைய உலமாக்கள் சொந்த முயற்சியில் பேசக் கற்றுக்கொண்டவர்கள்தான். முறையாகத் தமிழ் கற்றவர்களோ பயிற்சிபெற்றவர்களோ அல்லர். அப்படியிருந்தும் அவர்களில் சிலரது உரை, கேட்போரை மெய்சிலிர்க்கவைக்கும்; கண்ணீர் வழிந்தோடும்; தேம்பி அழுவர் மக்கள்.

வேறுசிலரோ தூய தமிழில் தேனருவிபோல் சொற்களைக் கொட்டுவார்கள். கேட்க இனிமையாக இருக்கும். பெரியகுளம் மௌலானா, ஷரபுத்தீன் பாகவி அவர்கள், திருக்குர்ஆனை இனிய குரலில் ஓதும் நல்ல காரீ; அதே நேரத்தில், சுவையான தமிழில் இனிக்கும் குரலில் பேசும் சொற்பொழிவாளர். அவ்வாறே சித்தையன்கோட்டை ‘ஸஃகீர் ஹள்ரத்’ எனப்படும் மௌலானா, முஹம்மது ஹுசைன் பாகவி அவர்கள் ஆற்றும் செந்தமிழ் உரை உள்ளத்தைக் கவர்ந்திழுக்கும் ஆற்றலுடையது. கடையநல்லூர்மௌலானா, யூசுஃப் அன்ஸாரி மிஸ்பாஹி அவர்களின் ஆற்றொழுக்கான பேச்சு மறக்க முடியாத ஒன்று.

இளம்வயதிலேயே மறைந்துவிட்ட மௌலவி P.S. அலாவுத்தீன் மன்பஈ, மௌலானா கலந்தர் மஸ்தான் மஹ்ளரி, ஆவூர் மௌலவி அப்துஷ் ஷகூர் மன்பஈ, கீழக்கரை கதீப் மௌலவி அஸ்மத் ஹுசைன் மன்பஈ போன்றோரும் நினைவில் நிற்கும் பேச்சாளர்கள் ஆவர்.

அரபிக் கல்லூரிகளில் சொற்பயிற்சி மன்றங்கள் அநேகமாக 1920களில் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். சுமார் கடந்த 90 ஆண்டு காலமாக இம்மன்றங்கள் (லஜ்னா)நடைபெற்றுவருகின்றன. இவற்றில் வாரம்தோறும் வியாழன் பின்னேரம், ஒதுக்கப்படும் தலைப்புகளில் 15 அல்லது 20 நிமிடங்கள், தங்கள் கன்னிப் பேச்சைத் தொடங்கி,படிப்படியாகப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வார்கள் மாணவர்கள்.

நாங்கள் வேலூர் பாகியாத்தில் 1972இல் பட்ட வகுப்பில் கற்றபோது, நாகை மாவட்டம் கூத்தூர் அப்துல் வாஹித் பாகவி மன்றச் செயலாளராக இருந்தார். அவர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மதரசாவில் சேர்ந்தவர். தமிழ், ஆங்கிலம் முறையாக கற்றவர். எனவே, வேலூரில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நடக்கும் பட்டிமன்றம்,கவியரங்கம், வழக்காடு மன்றம் போன்ற கூட்டங்களுக்குப் போய்வருவார். அந்தப் பழக்கத்தில், பாகியாத் தமிழ் மன்றத்தில் பட்டிமன்றமும் கவியரங்கும் எங்கள் காலத்தில் முதன்முதலாகத் தொடங்கப்பட்டன. அன்றுமுதல் பாகியாத் தமிழ் மாணவர்கள் இந்த அரங்குகளிலும் பயிற்சிபெறுகிறார்கள்.

அன்றைக்கே, என் வகுப்புத் தோழர் கம்பம் பீர் முஹம்மது பாகவி சிம்மக்குரலில் கர்ஜிப்பார். தமிழும் அவருக்குக் கைவந்த கலை. தங்கு தடையின்றி சொற்போர் புரிவார்.இன்றைக்கும் அவர் பேச்சு எடுபடுகிறது. மலேசியா வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் ஆகியவற்றில் நன்கு அறிமுகமானவர். சென்னை ஜமாலியா பேராசிரியர் பழனி அப்துர் ரஹ்மான் ஃபாஸில் பாகவியின் தமிழ்உரை நன்றாக இருக்கும்.

நான் பாக்கியாத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய 1980 மற்றும் 90களில் தமிழ் மாணவர்களிடையே பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வதில் ஆரோக்கியமான போட்டி நிலவியது. பட்டிமன்றங்களில் சூடான விவாதங்கள், கவியரங்குகளில் செறிவான கவிதைகள், நவீன தலைப்புகளில் கவர்ச்சியான உரைகள் எல்லாம் மன்றத்தைக் களைகட்டவைக்கும். இளம் ஆலிம்களால் இவ்வாறெல்லாம் கலக்க முடியுமா என்று வியப்பாக இருக்கும். மொத்தத்தில் திறமையான மாணவர்கள்.

இந்த மாணவர்கள் இன்று வெளிஉலகில் –பல்வேறு மேடைகளில்- மிளிர்கிறார்கள்; வெள்ளிமேடைகளை அலங்கரிக்கிறார்கள்; உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அவர்களின் குரல் ஒலிக்கிறது. எடுத்துக்காட்டுக்காகச் சொல்வதென்றால்கூடப் பட்டியல் நீளும். ஒருவரைச் சொல்லி, ஒருவரைச் சொல்லாவிட்டாலும் ஆரோக்கியமாக இருக்காது. சென்னையிலும் சரி; வெளியிலும் சரி! நல்ல பேச்சாளர்களான இளம் ஆலிம்கள் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் – என்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது.

பெயர் குறிப்பிட்டுப் பாராட்டும்போது எதிர்மறையான விளைவு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படித்தான், மாணவ மன்றத்தில் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மாணவர்கள் சிலரது பேச்சு, எழுத்து மற்றும் கவிதைப் புலமையைப் பாராட்டப்போக, மதரசாவிலேயே தன்னைப் போன்ற திறமைசாலி எவரும் இல்லை என்று சிலர் பெருமை பேசத் தொடங்கிவிட்டனர். இது மற்ற மாணவர்களை வெகுவாகப் பாதித்துவிட்டது.

நானெல்லாம் ஆசிரியரான பிறகும்கூட 15 அல்லது 20 நிமிடங்களுக்குமேல் பேசிப் பழக்கமில்லாதவனாகத்தான் இருந்தேன். பேச்சும் சுமார்தான். எங்கள் ஆசிரியப் பெருந்தகைP.S.P. ஹள்ரத் அவர்கள்தான் ஊக்கம் கொடுத்து தொடர் சொற்பொழிவுகளுக்கு அனுப்பிவைத்து வழிகாட்டியதை என்னால் எப்போதும் மறக்க முடியாது.

பொதுவில் மார்க்கப் பரப்புரை எப்படி அமைய வேண்டும்? மக்கள் இன்று எத்தகைய உரைகளை எதிர்பார்க்கிறார்கள்? குறிப்பாக, வெள்ளி மேடைகளை அர்த்தமுள்ள வகையில் அலங்கரிப்பது எப்படி? சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் பயன்தரும் விதத்தில் உரைகளை அமைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? இதுதான்,சொல்ல வேண்டிய முக்கிய தகவலாக இருக்கும் என எண்ணுகிறேன்.

முதலில் உரைக்கான தலைப்பு. தலைப்பைத் தேர்ந்தெடுப்பதுதான் பேச்சாளருக்குள்ள முதல் தலைவலி. மாநாடு, கருத்தரங்கு, குறிப்பிட்ட பொருளில் நடத்தப்படும் கூட்டம், பட்டிமன்றம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஏற்பாட்டாளர்களே நமக்குத் தலைப்பை ஒதுக்கிவிடுவார்கள். திருமணம், மதரசா விழா, பட்டமளிப்பு விழா, சிறப்பு இரவு... போன்ற கூட்டங்களில், அந்தப் பொதுப் பொருளில் அன்றைய காலச் சூழலுக்கும் பகுதி மக்களின் தேவைக்கும் பொருத்தமான கிளைத் தலைப்பை நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து பொதுப் பொருளில் இங்கும் அங்கும் அலைபாயக் கூடாது.

எடுத்துக்காட்டாக, மதரசா விழாவில் மார்க்கக் கல்வியின் அவசியம், மார்க்கக் கல்வியின் சிறப்பு, தனிமனித ஒழுக்கம், வழிபாட்டில் ஆர்வம், மனித உரிமை மீறல்,பெற்றோரை மதித்தல்… முதலான தலைப்புகளில் பேசலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சூழலுக்கேற்பத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதை ஒட்டி மட்டுமே உரையைத் தயார் செய்துகொண்டு வர வேண்டும். அப்படியில்லாமல், ஒவ்வொன்றையும் தொட்டுப்பேசி, எதையுமே உருப்படியாகச் சொல்லாமல் போவதால் மக்களுக்கு என்ன பயன்? அல்லது முன்தயாரிப்பே இல்லாமல் வந்து, ஒப்புக்கு எதையாவது கொட்டிவிட்டுப் போவதால் யாருக்கு என்ன நன்மை?

அடுத்தது முன்தயாரிப்பு. முன்கூட்டியே உரையைத் தயாரித்து, குறிப்புகளுடன் மேடைக்கு வரும் பேச்சாளர்கள் மிகவும் குறைவு. அப்படியே வந்தாலும் தலைப்புக்கு வெளியே தாவாமல், உள்ளுக்குள் நின்று பேசுவோர் அதைவிடக் குறைவு. முன்தயாரிப்போ குறிப்போ ஏதுமின்றி பேசுவோர் பெரும்பாலும் என்ன செய்கிறார்கள்? முந்திய கூட்டத்தில் பேசியதை, அல்லது முன்எப்போதோ பேசியதை, அல்லது எதிலேயோ படித்த, யாரிடமோ கேட்டதை தன் பாணியில் பேசிவிட்டுப்போவார்கள். இதனால் பேச்சாளருக்கு வளர்ச்சியும் இல்லை; கேட்போருக்குப் புதிய தகவலும் இல்லை.

முன்தயாரிப்பில் இறங்குவோருக்குக் கிடைக்கும் முதல் பலன் தேடல். ஒன்றைக் கண்டறிவதற்காக ஆத்மார்த்தமாகத் தொடர்ந்து மேற்கொள்ளும் தீவிர முயற்சியே ‘தேடல்’(Pursuit) எனப்படுகிறது. இது ஒரு வகையில் பேச்சாளர் மேற்கொள்ளும் ஆராய்ச்சியாகும். எடுத்துக்காட்டாக, ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ என்ற தலைப்பை எடுத்துக்கொள்வோம். இது ‘கலாசாரம்’ என்ற பொதுத் தலைப்பின்கீழ் வரலாம்.

‘சமய நல்லிணக்கம்’ என்றால் என்ன? என்பதில் தேடல் தொடங்க வேண்டும். இது தரவாகப் புரியாமல் தலைப்புக்குள் நுழைந்து கருத்துத் தெரிவிப்பது அதிகப்பிரசங்கித்தனம் ஆகிவிடும். இதற்காகக் கலைச் சொற்களைத் தேட சொல் அகராதிகள், மரபுச்சொல் அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் ஆகியவற்றைத் தமிழிலோ அரபியிலோ மேய வேண்டும். அடுத்து சமய நல்லிணக்கம் குறித்துப் பிற சமூகங்களின் நிலைப்பாடு என்ன? ஐ.நா. சபையின் தீர்மானம் என்ன? இந்திய அரசியல் சாசனம் சொல்லும் விதி என்ன? என்பதையெல்லாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

டுத்து சமய நல்லிணக்கம் தொடர்பாக இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை ஆராய வேண்டும். இஸ்லாத்தின் நிலைப்பாட்டை எந்த விஷயத்தில் அறிய விரும்பினாலும் முதலில் நீங்கள் புரட்டுவது திருக்குர்ஆனாகவே இருக்கும். சமய நல்லிணக்கம் தொடர்பான வசனங்களை, அதன் எண்களோடு சேர்த்துக் குறித்துக்கொள்ளுங்கள். பொருளையும் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். வசனம் அருளப்பெற்றதற்கான பின்னணி (சபபுந் நுஸூல்) கிடைத்தால் அதையும் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து சமய நல்லிணக்கம் தொடர்பான நபிமொழிகளைத் தேட வேண்டும். சமய நல்லிணக்கத்தின் உட்பிரிவுகளைக் கண்டறிந்து, அவற்றுக்கேற்ற குறுந்தலைப்பு கொடுத்து, ஒவ்வொரு தலைப்புக்கும் ஏற்ற வசனங்களையும் நபிமொழிகளையும் திரட்டி, குறிப்பெடுத்துக்காள்ள வேண்டும். நபிமொழிகளின் (அரபி) வாசகங்களோடு, ஆதார நூல்கள்;ஹதீஸின் எண் ஆகியவற்றையும் குறித்துக்கொள்ளுங்கள். ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரை (ஸனத்) ஆராய்ந்து, சரியான ஹதீஸ்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

அடுத்து வேற்று மதத்தாருடன் இணக்கமாக நடந்துகொண்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள், சான்றோர்கள் ஆகியோர் காலத்தில் நடந்த ஆதாரபூர்வமான நிகழ்ச்சிகளைக் குறித்துக்கொள்ளுங்கள். இஸ்லாம் வரவேற்றுப் பின்பற்றும் சமய நல்லிணக்கம் குறித்து பிற சமய, அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளையும் சான்றுகளாகக் காட்டலாம். அதே நேரத்தில், சமய நல்லிணக்கத்தின் எல்லை என்ன என்பதையும் வரையறுத்து மக்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

இறுதியாக, நம் நாட்டின் நடப்பைச் சுட்டிக்காட்டுங்கள். இந்நாட்டின் சூழலில் முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டுங்கள்.

ஆக, நீங்கள் உரையாற்றப்போவது அரை மணி நேரம்; அல்லது ஒரு மணி நேரம்தான். ஆனால், அதற்கான முன்தயாரிப்புக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள்கூடப் பிடிக்கலாம். அந்த அளவுக்கு உழைத்தால்தான், ஓரளவுக்கேனும் திருப்தியான, ஆக்கபூர்வமான, பயனுள்ள உரையை வழங்க முடியும். இல்லையேல், பத்தோடு பதினொன்று;அத்தோடு இதுவும் ஒன்று – என்றாகிவிடும்.

நான் இவ்வாறு சுமார் 20 பொதுத் தலைப்புகளில் 150க்கும் அதிகமான உரைக் குறிப்புகளை தயார் செய்துள்ளேன். இப்பணி என்னைப் பொறுத்தவரை இன்னும் தொடர்கிறது.

டுத்து உரையின் நடை. நடை விஷயத்தில் யாரையும் காப்பியடிக்காதீர்கள். உங்களுக்கென ஒரு நடை இயற்கையாகவே இருக்கும். அது புதுமையாகவும் எளிமையாகவும் இருக்கும். அடுத்தவர் நடையைப் பின்பற்றி அவருக்குப் புகழ் சேர்ப்பது வேண்டாத வேலை; உங்களின் தனி அடையாளத்தை இழக்காதீர்கள். ‘இவர் நடை இன்னது’ என உங்களைப் பற்றி மற்றவர்கள் பேசும் நிலை உருவாக வேண்டும்.

அவ்வாறே, மொழிக்காக ரொம்பவும் மெனக்கெட வேண்டாம். இலக்கணப் பிழை இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதும். மக்கள் புரிய வேண்டும். அதுதான் தேவை. இன்று கல்வியறிவு பரவலாகிவிட்டது. மக்கள் எதிர்பார்ப்பது விஷயத்தை –கருத்தைத்-தான். வார்த்தை அலங்காரம் இயல்பாக இருப்பின் சரி! செயற்கையாகச் சிரமப்பட்டு அதைத் தேடித் தேடி அலைய வேண்டியதில்லை.

அறிவியல் செல்வாக்குப் பெற்றுவரும் இன்றைய சூழலில், அறிவியல் உண்மைகளை நம் வாதத்திற்குச் சான்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்! அவ்வாறுதான் புள்ளிவிவரங்கள் அறிவியலில் ஒரு பிரிவு. முடிந்தால் பயன்படுத்தலாம்!

எல்லாவற்றையும்விட மார்க்கப் பேச்சாளர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானதோர் அம்சம் உண்டு. அதுதான் ‘இக்லாஸ்’ எனும் தூய்மையான எண்ணம். மக்களின் பாராட்டு, பரிசு, விளம்பரம், புகழ் ஆகிய உலகாதய நோக்கம் ஒரு ‘தாஇ’யிடம் இருக்கலாகாது. அல்லாஹ்வுக்காக, அவன் மார்க்கம் செழித்தோங்குவதற்காக, மக்கள் திருந்தி நல்வழி பெறுவதற்காக, அநீதியும் அநாசாரமும் ஒழிவதற்காக; உலகில் தர்மமும் நேர்மையும் பிழைப்பதற்காக, இதை முன்னிட்டு மறுமையில் எனக்கு நன்மை கிடைப்பதற்காக என்ற குறிக்கோள் மட்டுமே இஸ்லாமியப் பரப்புரையாளரிடம் இருக்க வேண்டும்.

இந்நோக்கத்தோடு நீங்கள் எளிமையாகப் பேசினாலும் கேட்பவரின் மனத்தை அது சுடும்; உணர்வுகளைத் தட்டியெழுப்பும்; அவரது வாழ்வில் திருத்தம் ஏற்படும். உரையாற்றும் முன் இதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துகொள்வது நல்லது.

“உன்னைக் கொண்டு ஒருவரை அல்லாஹ் நல்வழியில் சேர்ப்பதுதான், உயர்ந்த செல்வங்களைக்காட்டிலும் மேலானது” என அலீ (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)

Tuesday, February 17, 2015

பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?


தமிழில்: கான் பாகவி

டெ
ய்லி போஸ்ட் எனும் லண்டன் நாளேட்டில் தியான் உபைதுல்லாஹ் ஒரு கட்டுரை வரைந்துள்ளார். ‘பயங்கரவாதிகள் அனைவரும் முஸ்லிம்களா?’ என்பதே கட்டுரையின் தலைப்பு. “எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் இல்லைஎன்ற சுலோகத்தைக் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது. இதையேபயங்கரவாதிகள் எல்லாரும் முஸ்லிம்களா?’ என்று மாற்றி யோசித்தால், உண்மைகள் பல வெளிச்சத்திற்கு வரும் என்கிறார் தியான்.


இஸ்லாத்தின் பெயரால் பயங்கரவாதச் செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள் என்றால், கிறிஸ்தவ பயங்கரவாதிகள், யூத பயங்கரவாதிகள், பௌத்த பயங்கரவாதிகள் இல்லையா? (இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.) முஸ்லிம் பயங்கரவாதிகளின் செயலுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு உண்டா? என விவாதிக்க உலக முஸ்லிம்கள் தயார். உண்மையில் இவர்கள் அரசியல் பயங்கரவாதிகள்; ஆனால், முஸ்லிம்களாக இருக்கின்றனர். அவ்வளவுதான்!

அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் பயங்கரவாத மோதல்களில் பெரும்பாலானவற்றுக்கும் முஸ்லிம்களுக்கம் தொடர்பில்லை. இது நமக்குத் தெரிவதில்லையே என்று அப்பாவித்தனமாகக் கேட்காதீர்கள்! எல்லாம் செய்தி ஊடகங்களின் உபயம்!

ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களால் நடந்ததாகச் சொல்லப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள், மொத்த பயங்கரவாதத் தாக்குதல்களில் வெறும் 2 சதவீதமே! ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்டஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பிலுள்ள ஐரோப்பிய இன்டர்போல் வெளியிட்டுள்ள கடந்த ஆண்டுக்கான அறிக்கையைப் பாருங்கள்:

ஐரோப்பாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் பெரும்பாலானவை பிரிவினைவாதக் குழுக்களால் நிகழ்ந்தவைதான். எடுத்துக்காட்டாக 2013ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் மொத்த எண்ணிக்கை – 152. இவற்றில் 2 மட்டுமே மத ரீதியிலானவை. 84 சம்பவங்கள் இன மற்றும் பிரிவினைவாத தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டவை ஆகும்.

ஃபிரான்சில் இயங்கும் FLNC எனும் பிரிவினைவாத இயக்கம்கோர்ஸிகாதீவைத் தனிநாடாகப் பிரிக்கச் சொல்கிறது. 2013 டிசம்பரில் FLNC தீவிரவாதிகள், ஃபிரான்சில் உள்ள இரு நகரங்களின் காவல் நிலையங்கள்மீது ராக்கெட் தாக்குதல் தொடுத்தனர். ஜெர்மனியில் 2013 இறுதியில், வலதுசாரி அரசியல் கட்சி உறுப்பினர்கள் இருவரை, இடதுசாரி மக்கள் புரட்சிப் படையினர் கொன்றனர். இத்தாலியில் FAI குழு பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டது. ஒரு பத்திரிகையாளர்மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் அவற்றில் அடங்கும்.

பட்டியல் நீள்கிறது. ஆனால், யாரும் இதைகிறிஸ்தவ அடிப்படை பயங்கரவாதம்என்று சொன்னதுண்டா? இந்த்த் தாக்குதல்களை முஸ்லிம்கள் யாராவது செய்திருந்தால், இந்த அளவுக்கு ஊடகங்கள் மூடி மறைத்திருக்குமா? 2011ல் ஐரோப்பாவில் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடந்த்து. ‘கிறிஸ்தவ ஐரோப்பாஎன்ற அமைப்புக்கு ஆதரவாக இன்டர்ஸ் பிரிஃபேக் எனும் பயங்கரவாத அமைப்பு நார்வேயில் 77 பேரின் கழுத்தை அறுத்துக் கொன்றது. முஸ்லிம்களுக்கும் குடியேறிகளுக்கும் எதிரான படைகளுக்கு உதவும் வகையில் நடந்த்தே இப்படுகொலைகளாகும்.

அமெரிக்க ஏடுகள் இந்த விவகாரத்தை ஒரேயடியாக மூடி மறைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், ஒரு வகையில் மறைக்கும் வேலை நடக்கவே செய்தது. ஒரு முஸ்லிம் பயங்கரவாதியாக இருந்தால் எப்படியெல்லாம் கற்பனைகளைக் கலந்து வெளிச்சம் போட்டுக்காட்டுவார்களோ, அப்படி இதை வெளியிட்டார்களா? பயங்கரவாதச் செயல்கள் பற்றிய தகவல்களைத் தரும் செய்தியாளர்கள் ஒளிபரப்பு நேரத்தில் எங்கே போனார்கள்? எதிர்காலத்தில் கிறிஸ்தவப் பயங்கரவாதிகளை எப்படி ஒடுக்குவது என்று கேள்வி கேட்க அங்கு யாரும் இல்லையே! ஏன்?

பௌத்த, யூத பயங்கரவாதம்

புத்த பயங்கரவாதிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? புத்தமத தீவிரவாதிகள் பர்மாவில் (மியான்மர்) ஆயிரக்கணக்கான முஸ்லிம் சிவிலியன்களைப் படுகொலை செய்தனர். சில மாதங்களுக்குமுன் இலங்கையில் 4 முஸ்லிம்களைக் கொன்றதுடன் முஸ்லிம்களின் வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் தீவைத்துக் கொளுத்தினார்கள். அப்போதெல்லாம் புத்த பயங்கரவாதிகள் என்று யாரும் சொன்னார்களா?

ஏன், யூத பயங்கரவாதிகள் மட்டும் என்ன? 2013ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட பயங்கரவாதம் குறித்த அறிக்கையைப் பாருங்கள்: இஸ்ரேல் குடிமக்களால் நடத்தப்பட்ட பயங்கரவாதச் சம்பவங்கள் 399. இந்த யூத பயங்கரவாதிகள் பாலஸ்தீன சிவிலியன்கள்மீது தொடுத்த பயங்கரவாதத் தாக்குதலில் 93பேர் படுகாயம் அடைந்தனர். பல பள்ளிவாசல்களும் கிறித்தவ தேவாலயங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அப்போதெல்லாம் யூத பயங்கரவாதிகள் என்று யாரும் குறிப்பிட்டதுண்டா?

சுதந்திரம், ஜனநாயகம் என்று எப்போது பார்த்தாலும் குரலெழுப்பும் அமெரிக்காவில் மட்டும் என்ன வாழ்கிறது? அமெரிக்காவில் முஸ்லிம்கள் நடத்திய தீவிரவாத்த் தாக்குதல்கள்ஐரோப்பாவைப் போன்றேமிக மிக்க் குறைவு. 1980 – 2005 ஆகிய ஆண்டுகளுக்கிடையே அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து கூட்டாய்வு அலுவலகம் (FBI) நடத்திய ஆய்வின் முடிவு என்ன தெரியுமா?

அமெரிக்க நிலத்தில் நடந்த பயங்கரவாதச் சம்பவங்களில் 94 விழுக்காடு முஸ்லிம் அல்லாதவர்களால் நடத்தப்பட்டதாகும். லத்தீன்களோடு தொடர்புள்ள குழுக்களால் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் 42 சதவீதமாகும். அவற்றில் 24 சதவீதம் தீவிரவாத இடதுசாரிக் குழுக்களால் நடத்தப்பட்டதாகும்.

2014ல் வடக்கு கரோலினா மாநிலத்தின் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் காணப்படுவதாவது: செப்டம்பர் 11 தாக்குதல் உள்பட முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டதாக்க் கூறப்பட்ட தாக்குதல்களில் 37 அமெரிக்கர்கள் மட்டுமே பலியானார்கள். அதே காலகட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 1,90,000 அமெரிக்கள் கொல்லப்பட்டனர்.

2013ஆம் ஆண்டு முடிவில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்கர்களில் கணிசமானோர் சிறுவர்கள் கரத்தால் கொல்லப்பட்டவர்களே!

புள்ளிவிவரம்


 

  

ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு விவரங்கள் 

அடங்கிய பட்டியல்




 (அல்முஜ்தமா)

http://mugtama.com/translations/item/14478

Tuesday, February 10, 2015

வெளிநாட்டு வேலை

உங்களுடன் நான் மனம்விட்டு... வாழ்வியல் தொடர் – 09



ந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் வெளிவேலை வாய்ப்புகள்தான் ஓரளவு ஏழைகளுக்குக் கை கொடுத்திருக்கிறது. கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடிபெயர்ந்தோ, வெளிநாடுகள் சென்றோ வேலைகளைத் தேடிக்கொண்டு, தாமும் பிழைத்து, தம்மை நம்பியுள்ள குடும்பத்தையும் பிழைக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் லட்சக்கணக்கானோர்.

ஒரு இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விவசாயக் கூலி வேலை செய்வோர்தான் நம் பகுதியில் அதிகம். ஏர் உழுவது, மாட்டு வண்டிகளில் பாரம் ஏற்றிச் செல்வது, வயக்காட்டு களங்களில் சூடு அடிப்பது, நெல் தூற்றுவது, சில வேளைகளில் நாற்று நடுவது, களை பிடுங்குவது, கதிர் அறுப்பது போன்ற கைவேலைகளில்தான் நம்மவரில் பெரும்பாலோர் ஈடுபட்டிருந்தனர். ஆடு, மாடு மேய்ப்பவர்களும் இருந்தனர்.

மிகச் சிலர் நெல் வியாபாரம், பெட்டிக் கடை, காய்கறி வியாபாரம் என்று சிறு, குறு வியாபாரிகளாக இருந்தனர். படிப்பு என்று எடுத்துக்கொண்டால் தொடக்கப் பள்ளி முடித்தவர்களே அதிகம். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிப் படிப்பெல்லாம் சிலருக்கு மட்டுமே வாய்த்த வரமாக இருந்தது. கல்லூரி பட்டப்படிப்பு பற்றிக் கேட்கவே வேண்டாம். கைவிட்டு எண்ணிவிடலாம். அரசாங்கப் பணியில் இருந்தவர்களோ அரிதிலும் அரிது.

பெரிய நிலக்கிழார் குடும்பங்கள், தோட்டந் துரவுகள் வைத்து பண்ணைத் தொழில் செய்த குடும்பங்கள், ஏல மலைத் தோட்ட முதலாளிகளின் குடும்பங்கள் மட்டுமே அந்தக் காலத்தில் சிலாக்கியமாக வாழ்ந்தார்கள். அக்குடும்ப ஆண் பிள்ளைகள் கொஞ்சம் படிக்கவும் செய்தார்கள். இந்த மேட்டுக்குடிகள் வைத்ததே ஊரில் சட்டம். சாலையோரத் திண்ணைகளில் அமர்ந்திருக்கும் சாமானியர் இவர்களைக் கண்டவுடன் எழுந்து நின்று மரியாதை செய்யும் சமூக நிலை.

குடும்பச் சண்டைகள், அடிதடி வழக்குகள், வரப்பு வாய்க்கால் தகராறுகள்... என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சம்சாரிகள் அணுகுவது இந்த நிலக்கிழார்களைத்தான். அவர்கள் அளிப்பதே தீர்ப்பு; அதற்கு இல்லை அப்பீல். நீதியோ அநீதியோ வாய்பொத்தி ஏற்பதைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. எதிர்த்துப் பேசும் திறனற்ற அப்பாவிகளே பெரும்பான்மை.

சுருங்கக்கூறின், கல்வித் தகுதியோ, பொருளாதார வளமோ, சமூக அந்தஸ்தோ, குடும்பப் பின்பலமோ ஏதுமின்றி வாயில்லாப் பூச்சிகளாக வாழ்ந்தனர் பெரும்பான்மை மக்கள். ஒன்று படிப்பு இருந்திருக்க வேண்டும்; அல்லது சொத்து சுகம், நிலபுலம் இருக்க வேண்டும்; அல்லது வெளியேறிச் சென்று தொழில்களைக் கற்று முன்னேற வழி தேடியிருக்க வேண்டும். முன்னேற்றத்திற்கான எந்த வழியும் இல்லாதபோது, அல்லது வழி இருந்தும் அதைப் பயன்படுத்தத் தெரியாதபோது என்ன செய்ய முடியும்?

ந்த நிலையில்தான், தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களுக்கும் வெளிநாட்டுக் கதவுகுறிப்பாக வளைகுடா நாடுகளின் கதவுதிறந்தது. மக்கள் படையெடுத்தனர். கிடைத்ததெரிந்த வேலைகளில் அமர்ந்தனர். விசா ஏற்பாட்டிற்காகவும் பயணச் செலவிற்காகவும் காடு கழனி, காணி வயல் ஆகியவற்றை விற்றோ, அல்லது அடைமானம் வைத்துக் கடன் பெற்றோ விமானம் ஏறினார்கள். இவர்களில் அநேகருக்கு விமானப் பயணம் என்பது முதல் தடவை.


சில ஆண்டுகள் என்ற கனவில் புறப்பட்ட இவர்களால் இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாகியும் வேலையைக் கைகழுவிவிட்டு சொந்த மண்ணில் செட்டிலாக முடியவில்லை; கால்பதிக்க இயலவில்லை. வெளிநாட்டு வாழ்க்கை அட்டைபோல் ஒட்டிக்கொண்டுவிட்டது. இளமை மட்டுமன்றி முதுமையின் முற்பகுதியும் வெளியேதான் கழிகிறது. சிலர் வாரிசுகளை அனுப்பிவிட்டு, ஊரிலே பேரன், பேத்திகளைக் கவனித்துக்கொண்டு காலத்தைக் கழிக்கிறார்கள்.

ன்று மட்டும் உண்மை. இவர்கள் பிறந்த மண்ணைத் துறந்து வெளியே சென்றிருக்காவிட்டால் நாலு காசு பார்த்திருக்க முடியாது; வீடு வாசல் கண்டிருக்க முடியாது; தோட்டம் துரவுகள் வாங்கியிருக்க முடியாது. ஆம்மண் அல்லது காரை வீடுகளெல்லாம் பல லட்சம் மதிப்புள்ள மாடி வீடுகளாகி இருக்க முடியாது. பிள்ளைகளை எம்.பி.., பி..; பி.காம்; எம்.காம் எனப் படிக்கவைத்துப் பட்டதாரிகளாக்கியிருக்கவோ பெண்குழந்தைகளை பி.; பி.எஸ்.ஸி; பி.காம் வரைக்குமோ குறைந்தபட்சம் 10 அல்லது +2 வரைக்குமோகூடப் படிக்கவைத்திருக்கவோ முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

இதையெல்லாம்விட, மகளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்துவைத்திருக்க முடியாது. ஊர் வழக்கங்களில் பெண்பேசத் தொடங்கியதிலிருந்து, பெண் பார்த்தல், திருமணம், அதன் பின்சேர்க்கைகள், பெண்ணின் மகனுக்குசுன்னத்செய்தல், மகளுக்குக் காதுகுத்து, பெண்ணின் மகள் வயதுக்கு வந்துவிட்டால் செய்யப்படும் சடங்கு என குரங்குவால்போல், பெண்ணைப் பெற்றவர்களுக்குச் செலவுகள் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவற்றையெல்லாம் மனம் விரும்பியபடி, ஊர் மெச்சும்படி செய்து முடித்திருக்க முடியாது.

அவ்வாறே பையனின் படிப்பு, படிப்பிற்குப்பின் வேலை வாய்ப்பு, அதையடுத்து பெண்தேடும் படலம், கல்யாணம்எனச் சுமைகளும் செலவுகளும் ஏராளம். “நாங்கள் வெளிநாட்டுக்குச் செல்லாமல் இருந்திருந்தால் இதையெல்லாம் எப்படிச் சமாளித்திருப்போம்? சொல்லுங்கள்என்று இவர்கள் கேட்பதை அடியோடு மறுக்க முடியாது.

(எளிய திருமணம்விரலுக்கேற்ற வீக்கம்என்பதுபோல் சிக்கனமான வாழ்க்கை முறை; சடங்குகளை ஒழித்தல்; தகுதிக்கேற்ற வரன்என்பன போன்ற இயல்பான வாழ்க்கையே போதும் என்ற மனம் இருப்பின் வெளிநாடு போய்த்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று சொன்னாலும் கேட்பதற்குக் காதுகள்தான் இல்லை.)

ங்கே உலக வங்கியின் அறிக்கை ஒன்றைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்:

வேலை தேடியும் வேறு காரணங்களுக்காகவும் ஊர் விட்டு ஊர் செல்லும் தொழிலாளர்களின் வாழ்வில் வருவாய், நுகர்வு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் குறைந்துவருகின்றன. ஏற்றத்தாழ்வு என்பது வெறும் பணம் அடிப்படையில் மட்டுமல்லாது, சமூகரீதியாகவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

(இன்று யார் வீட்டில் ஃபிரிட்ஜ், ஏசி, இரு சக்கர வாகனம், நவீன சாதனங்கள் இல்லை? யாருடைய பிள்ளைகள் பட்டப்படிப்பு படிக்காமல் இருக்கிறார்கள்? யாருடைய பெயரில் வங்கியில் இருப்பு இல்லாமல் இருக்கிறது? இதைத்தான் இங்கு அறிக்கை கோடிட்டுக்காட்டுகிறது போலும். அறிக்கை முடியவில்லை…)

காலங்காலமாக சமூக அடுக்கில் கீழ்நிலையில் அழுத்திவைக்கப்பட்டிருந்த சமூகத்தினர் தொடர் வேலை, நல்ல ஊதியத்துக்காக நகர்ப்புறங்களை நோக்கி நகர்ந்ததால் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் இழிவிலிருந்தும்கூட விடுபட முடிந்திருக்கிறது. (இது அநேகமாக தலித் மற்றும் மலைசாதி மக்களைக் கருத்தில் கொண்ட தீர்மானம் என நினைக்கிறேன்.) சிறுபான்மையினருக்கு எல்லா அரசுகளும் (?) சட்டரீதியாக அளிக்கும் பாதுகாப்பு காரணமாக அவர்கள் முன்னேற முடிகிறது.

கிராமங்களில் ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்பட்டு, பொருளாதார வளர்ச்சியும் சமூக அந்தஸ்தும் இல்லாமலிருந்த மக்கள், வேலைக்காக நகரங்களுக்கும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களுக்கும் இடம்பெயரும்போது, முன்பு பெற்றதைவிட அதிக ஊதியத்தையும் சுதந்திரத்தையும் பெற முடிகிறது. (தி இந்து)

ல்லாம் சரிதான். உள்ளூரைவிட்டு நகரங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ வேலைதேடிச் சென்றதால் பொருளாதார வளம் சற்றே பெருகியுள்ளது; வசதிகள் வந்துள்ளன; சமூக அந்தஸ்தும் கூடியுள்ளதுஇல்லை என்று சொல்லவில்லை.

ஆனால், ரியால்களுக்காக, திர்ஹம் தீனார்களுக்காக நம் இளைஞர்கள் கொடுத்த விலை ஈடு செய்ய இயலாதது என்பதையும் மறைக்க முடியவில்லை. ஆம்! படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு வெளிநாடு சென்றவர்கள் பலர். அந்தப் படிப்பு இருந்திருந்தால் உள்நாட்டிலேயே வேலை கிடைத்திருக்கலாம்! அல்லது பட்டத்தோடு வெளிநாடு சென்றிருந்தால், கூடுதல் சம்பளத்துடன் அந்தஸ்தான வேலை கிடைத்திருக்கக்கூடும். எதிர்காலத்திலும் அதை வைத்து ஏதேனும் வேலையில் உட்கார முடியும்.

திருமணம் முடித்த கையோடுலீவு முடிந்தபின்இளம் மனைவியைவிட்டுப் பிரிந்துசெல்லும் சோகம் இருக்கிறதே! வார்த்தையில் வடிக்க இயலாதது. வாடும் இரு உள்ளங்களைத் தேற்ற சொற்கள் கிடையாது. இதற்கு ஈடாக்க் கோடி கொடுத்தாலும் அது ஈடாகாது.

குழந்தை பிறந்துவிட்டாலோ மழலை மொழி கேட்க, பிஞ்சுக் கரங்களைத் தொட, ஆவலோடு தூக்கி நெஞ்சோடு அணைக்க, தந்தைக்கும் பிள்ளைக்குமான அந்த மானசீக இதயத் துடிப்பை அனுபவிக்க முடியாத அவலம் கொடியது. தாயை, தந்தையை, அண்ணனை, தம்பியை, அக்காளை, தங்கையை, தாத்தாவை, பாட்டியை அருகில் இருந்து பார்க்க, பேச, சந்திக்கவியலாத துரதிருஷ்டம்!

ஊரில்உறவில் நடக்கும் நன்மை தீமைகளில் கலந்துகொள்ளவோ பங்கெடுக்கவோ முடியாமல் அந்தக் காட்சிகளை மனத்திரையில் அல்லது வீடியோவில் பார்த்துப் புழுங்கும் தருணங்கள் வருத்தமானவை. சில வேளைகளில், சொந்த மகள் அல்லது மகன் திருமணத்திலேயே கலந்துகொள்ள முடியாத மனவலி! அங்கே யாரிடம் சொல்லி அழுவது! இலவு காத்த கிளியாக இளமை காத்துக்கிடக்கும் துயரம்!

ரி! அப்படியே எல்லா இழப்புகளையும் தாங்கிக்கொண்டு, சின்ன வயசு ஆசாபாசங்களைத் தியாம் செய்து சம்பாதிக்கும் பணத்தை முறையாகக் கையாளும் நிதி ஆளுமை நம் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் இருக்கிறதா என்றால், அதுவும் பூஜ்யம்தான்; அவர்கள் வரைமுறையின்றி டாம்பீகமாகச் செலவழிக்க வேண்டியது; சிறு தலைவலி என்றால்கூட, கார் பிடித்து டவுணுக்குப் போய் வைத்தியம் பார்க்க வேண்டியது; சிக்கனமோ சேமிப்போ இல்லாமல்கணக்குப் பார்க்காமல்செலவு செய்ய வேண்டியது; இறுதியில் ஓய்வெடுக்க வேண்டிய வயதில் பணத்திற்கு அல்லாட வேண்டியது! இது தேவைதானா?

ஏன் பணம் அனுப்பும்போதே, தேவை இவ்வளவு எனக் கணக்கிட்டு, பட்ஜெட் போட்டுக் குறிப்பிட்ட தொகையை மட்டும் அனுப்பக் கூடாதா? மீதியைச் சேமிக்கக் கூடாதா? பெண்களும் பணத்தின் அருமை புரிந்து, சிக்கனமாகச் செலவழிக்கக் கூடாதா? வீடே கட்டுகிறோம் என்றால், அளவான பட்ஜெட்டில் தேவைக்கேற்ற வகையில் கட்டி முடிக்கலாமே! பல லட்சங்களை வீட்டில் முடக்க வேண்டுமா? பெருநாள், திருமணம் போன்ற விசேஷங்களுக்கும் கணக்கோடு செலவு செய்தாலென்ன?

மார்க்கத்தில் இல்லாத பிறந்த நாள், திருமண நாள், நண்பர்களின் பிறந்த நாளுக்கு அன்பளிப்பு, பெண்கள் நாள், புத்தாண்டுபோன்ற விரயங்கள் தேவைதானா? நம் முன்னோர்கள் யாரும் இந்நாட்களைக் கொண்டாடினார்களா? அப்படிக் கொண்டாடாததால் அவர்கள் மேன்மை இழந்துவிட்டார்களா?

சிக்கனமும் சேமிப்பும் இல்லாத குடும்பம் ஒரு கட்டத்தில் சிக்கலையும் சோதனைகளையும் சந்தித்தே தீரும் என்பதை யாரும் மறந்துவிடலாகாது. அனுமதிக்கப்பட்ட தேவைக்குமேல் செலவழிப்பதே விரயம். இந்த விரயம் அல்லாஹ்வுக்குக் கோபத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

நிச்சயமாக விரயம் செய்வோர் ஷைத்தான்களின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். ஷைத்தான், தன் இறைவனுக்கு நன்றி கொன்றவனாக இருக்கின்றான்” (17:27) என்று அல்லாஹ் கண்டிக்கின்றான்.



நல்லடியார்கள் யார்? அவர்களின் பண்புகள் என்ன என்று பட்டியலிடும்போது 12 உயர்பண்புகளை அல்லாஹ் வரிசைப்படுத்துகின்றான். அவற்றில் ஐந்தாவதாக அல்லாஹ் குறிப்பிடுவது நடுநிலையான நுகர்வு:

அவர்கள் செலவு செய்தால், விரயம் செய்யமாட்டார்கள்; (கையை) இறுக்கவுமாட்டார்கள். (வர்களின் செலவான)து, அதற்கிடையே நடுநிலையானதாகவே இருக்கும். (25:67)

அவ்வாறே, சேமிப்பை வலியுறுத்தும்போது நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:
எந்த வீட்டாரிடம் பேரீச்சம்பழம் (சேமித்து) வைக்கப்பட்டுள்ளதோ அவர்கள் பசியோடு இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்)

ஆயிஷா! பேரீச்சம்பழம் (சேமித்துவைக்கப்பட்டு) இல்லாத வீட்டுக்கார்ர்கள் பட்டினி கிடப்பார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ் கொடுத்த அருட்கொடையை மதிக்காத செயலே விரயமாகும். சிக்கனம் அருட்கொடையை மதிக்கும் செயலாகும். இது நன்றியைக் காட்டும்; அது துரோகத்தைக் காட்டும்.

திட்டமிட்டு சேமித்து, சேமிப்பை அனுமதிக்கப்பட்ட தொழிலில் முதலீடு செய்தால் இலாபத்திற்கு இலாபம்; இயலாமைக் காலத்தில் உதவிக்கு உதவி; உழைப்புக்கு மரியாதை. சிலர், சேமிப்பை வட்டிக்கு விட்டு ஹராமான வழியில் இலாபம் பார்க்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆயுளின் இறுதிக் கட்டத்தில் இந்தப் பாவத்தைச் சுமந்துகொண்டு கப்றுக்குப் போக வேண்டுமா யோசியுங்கள்!

ஹலாலான வழியில் முதலீடு செய்யவும் இலாபம் ஈட்டவும் எத்தனையோ வழிகள் உள்ளன. இல்லையா? நீங்களே ஒரு தொழிலைத் தொடங்கி, சேமிப்பை அதில் முதலீடு செய்யலாம். அப்படிச் செய்யும்போது, ஊரில் நமக்கும் ஒரு வேலை கிடைத்துவிடும்; பொழுது போகவில்லை என்ற புலம்பல் இருக்காது. இலாபமும் கிடைக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம்! வெளிநாடு சென்றோம்; சம்பாதித்தோம்; குடும்பத்தைத் தூக்கி நிறுத்தினோம். ஆனால், ஊருக்கும் சமூகத்திற்கும் என்ன செய்தோம்? உறவுகளில், சமூகத்தில் எத்தனையோ ஏழைக் குழந்தைகள் கல்வி கற்க வசதியின்றி, குழந்தைத் தொழிலாளர்களாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்களே! இளம்பெண்கள் கரையேற முடியாமல் தத்தளிக்கிறார்களே! முதியவர்கள் பலர் ஆதரவின்றி நொடிந்து ஒடிந்துபோயிருக்கிறார்களே!


விழுந்து கிடக்கும் இவர்களுக்குக் கை கொடுப்பதில் நமது பங்கு என்ன என்று யோசித்தீர்களா? உறவும் அறிமுகமும் உள்ள நாமே இவர்களுக்கு உதவாவிட்டால், வேறு யார் உதவப்போகிறார்கள்? தனிப்பட்ட முறையிலோ கூட்டுச் சேர்ந்தோ அவரவர் தம் ஊருக்குக் கருணை காட்ட முன்வர வேண்டும்! ஊரில் இருக்கும் பள்ளிவாசல், அரபி மதரசா, குர்ஆன் மதரசா (மக்தப்), அநாதை இல்லம், ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றுக்கு உதவி, சந்தா, நன்கொடை என்று தேனும் செய்து, அடுத்த தலைமுறையின் இம்மைமறுமை வளர்ச்சியில் ஒவ்வொருவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டுமல்லவா? இதுதான் மறுமையின் நெருக்கடியில் நமக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்!