Monday, November 30, 2015

திருமண கவுன்சிலிங் – தேவை பயிற்றுநர்கள்


டந்த 28.11.2015 சனிக்கிழமை காலை சென்னையில், ‘குடும்ப மாண்பு காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து, திருமண கவுன்சிலிங் பாடத்திட்ட நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கல்வியாளர் கேப்டன் அமீர் அலீ அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ், எம்.என். புகாரீ திருமறை ஓதித் தொடங்கிவைத்தார்.

திருமண கவுன்சிலிங் பாடத்திட்டக் குழு உறுப்பினர்களான மௌலவிகள், அ. முஹம்மது கான் பாகவி, கா.மு. இல்யாஸ் ரியாஜி, எம். முஹம்மது மன்சூர் காஷிபி, எம். முஜீபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். உருது மொழியில், மௌலவி, ஃபய்யாஸ் ஆலம் உமரி உரையாற்றினார். மௌலவி, சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி வரவேற்புரை நிகழ்த்தினார்.

புரஃபஷனல் கூரியர் எஸ். அஹ்மத் மீரான் பாடத்திட்ட நூலை வெளியிட, முஸ்லிம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ முஹம்மது ஹனீஃபா உள்ளிட்ட சமுதாயப் பிரமுகர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர். பொறியாளர், பி.கே. ஷப்பீர் அஹ்மத் நன்றியுரை ஆற்றி, தீர்மானங்கள் வாசித்தார். மௌலவி, எம். முஜீபுர் ரஹ்மான் பாகவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.


ஆல் இண்டியா மில்லி கவுன்சில் (தமிழ்நாடு), பைத்துல் மால் – தமிழ்நாடு, இஸ்லாமியர் விழிப்புணர்வுக் கழகம் ஆகிய அமைப்புகள் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. மார்க்க அறிஞர்கள், இமாம்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், சமுதாய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் என சுமார் 350 பேர் கலந்துகொண்டனர்.

மதுரை, புதுச்சேரி, கடலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளிலிருந்தும் முகநூல் அழைப்பைப் பார்த்துவிட்டு விழாவில் கலந்துகொண்டவர்களும் உளர். பிரச்சினையின் ஆழத்தை அறிந்து, தகவல் கேள்விப்பட்டு வந்த நண்பர்கள் பலரும் உள்ளனர்.

கவுன்சிலிங் பாடநூல்

இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட திருமண கவுன்சிலிங் பாடப் புத்தகம் மூன்று பிரிவுகளைக் கொண்டனது. திருமணத்திற்குமுன், திருமணத்தின்போது, திருமணத்திற்குப்பின் ஆகியவையே அப்பிரிவுகள். இவற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் ஆணும் பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள், சந்திக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும், உளவியல் ரீதியான எதிர்பார்ப்புகளும் அவற்றை அடைகின்ற சுமுகமான நடைமுறைகளும், மணவிலக்கை இயன்றவரைத் தவிர்ப்பதும் வேறு வழியில்லாதபோது சுன்னத்தான முறையில் மணவிலக்குச் செய்வதும்... எனப் பல அறிவுரைகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு நடத்த வேண்டிய கவுன்சிலிங் பாடத்திட்டம் தனியாக வழங்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும். பாட வகுப்பு நடத்துவதற்கான மேட்டருடன், அந்த மேட்டருக்கு உதவும் நூல்களின் (தமிழ், அரபி) பட்டியலும் தரப்பட்டிருக்கிறது. இந்தப் பாடத்திட்டத்தை ஏழு ஆலிம்கள் கொண்ட குழு தயாரித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

கவுன்சிலிங் நடத்துநர்

உண்மையில் இந்த நூல், கவுன்சிலிங் வகுப்பு எடுக்கும் நடத்துநர்களுக்கு ஒரு வழிகாட்டிதான். இந்நூலை அடிப்படையாக வைத்துக்கொண்டு, ‘காதல்என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்கள், இனக் கவர்ச்சியால் விளையும் விபரீதங்கள், சமூக விரோதிகளின் வலையில் சிக்கி, குடும்பத்தைத் துறந்து ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்ளல், பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் படலம், கணவன் – மனைவி இடையிலான புரிந்துணர்வும் விட்டுக்கொடுத்தலும், உறவுகளை மதித்தல், பெரியவர்களைக் கலங்காமல் பார்த்துக்கொள்ளல், சண்டை சச்சரவுகளைத் தீர்க்கும் முறைகள்... என இன்றைய குடும்பங்களின் அவலங்களை அகற்றும் நல்லிணக்க நடைமுறைகளைப் பயிற்றுநர் சொல்லிக்கொடுப்பார்.

தேவை – பயிற்றுநர்கள்

குறிப்பிட்ட சிலபேரை மட்டும் வைத்து தமிழகம் முழுவதும் கவுன்சிலிங் முறையைச் செயல்படுத்துவது சாத்தியமில்லாத காரியம். எனவே, முதலில் பயிற்றுநர்களை உருவாக்குவது அவசியம். அதற்காகத்தான், இந்தக் கூட்டத்தின் அழைப்பிதழுடன் ஒரு படிவமும் சேர்த்து அனுப்பப்பட்டது.

ஒவ்வொரு மஹல்லாவிலும் சமூக ஆர்வமும் அறச்சீற்றமும் கொண்ட தகுதிவாய்ந்த இருவர், அல்லது மூவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை, அந்தந்த மஹல்லா ஜமாஅத் நிர்வாகம் எங்களிடம் வழங்கிட வேண்டும் எனக் கோரியிருந்தோம். ஒரு தேதியை நிர்ணயித்து, அவர்களையெல்லாம் அழைத்து ஓரிரு நாட்கள் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் திட்டமும் உண்டு. பயிற்சி முடித்தவர்கள் தங்களின் பகுதிகளில் கவுன்சிலிங் நடத்துவார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், திருமண வயதை அடைந்தவர்கள், பள்ளி – கல்லூரி மாணவ – மாணவியர், புதுமணத் தம்பதியர் எனப் பல்வேறு நிலையிலிருப்பவர்களுக்கு கவுன்சிலிங் வகுப்பு நடத்தலாம்.

இதுவரை, பலர் படிவங்களை நிரப்பிக் கொடுத்துள்ளனர். கொடுக்காதவர்கள் விரைவில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வலைதளத்தில் கண்போர் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்திற்கு நகல் எடுத்து, நிரப்பி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி படிவத்திலேயே உண்டு.

ஆர்வமுள்ள ஆலிம்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், ‘தாஇகள், சமூக ஆர்வலர்கள் என யாரும் இப்படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பலாம். பயிற்சியாளர்களுக்குத் தேவை: சமுதாய கவலை; சீர்திருத்தத்தின் மீதான அக்கறை; அடிப்படை மார்க்க அறிவு; சரளமாகப் பேசும் திறன்; சூழ்நிலை அறிந்து பேசும் பக்குவம். இவை இருந்தால் போதும்.

நம்மைக் கொண்டு, இரண்டு இளம் உள்ளங்கள் திருந்த வேண்டும்; மனஸ்தாபத்தில் இருக்கும் ஒரு தம்பதியாவது சமாதானம் அடைந்து சுமுகமாக வாழ வேண்டும்; ‘தலாக்முடிவுக்கு வந்தவர்கள் மறுபரிசீலனை செய்து, அவ்வெண்ணத்தைக் கைவிட வேண்டும்; தந்தை – மகன், மாமியார் – மருமகள், அண்ணன் – தம்பி போன்ற உறவுகள் சீர்பெற வேண்டும். இதைச் செய்யும் உங்களுக்கு அல்லாஹ்விடம் சன்மானம் உண்டு.


நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றின் தகுதியைவிடச் சிறந்த செயல் ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கவா? அதுதான், இருவரிடையே சமாதானம் செய்துவைப்பது. (நபிமொழி, திர்மிதீ)

Tuesday, November 10, 2015

பீகார் ஒரு முன்னுதாரணம்



பீ
கார் மாநிலத்தின் 16ஆவது சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் முடிந்து, தெளிவான முடிவுகளும் வெளிவந்துவிட்டன. தேர்தலில் மதச்சார்பற்ற மகா கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியிருப்பது, இந்தியாவின் மதச் சகிப்புத்தன்மைக்குக் கிடைத்த ஆதரவுதான் என்பதில் துளியளவும் ஐயமில்லை. யார் என்ன கண்ணோட்டத்தில் பார்த்தாலும் மறுக்க முடியாத அப்பட்டமான யதார்த்தம் இதுதான்.

ஆளும் ஐக்கிய ஜனதாதள கூட்டணி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 178 இடங்களைக் கைப்பற்றி வாகை சூடியுள்ளது. இதில் ஐக்கிய ஜனதா தளம் – 71; ராஷ்ட்ரீய ஜனதா தளம் - 80; காங்கிரஸ் – 27 இடங்களைப் பெற்றுள்ளன. இது, பதிவான வாக்குகளில் 41.9 விழுக்காடு ஆகும்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டனி 58 இடங்களைப் பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. அவர்களின் ஆர்ப்பரிப்பையும் திமிரான பேச்சுகளையும் கருத்தில் கொண்டால், ‘படுதோல்விஎன்றே சொல்ல வேண்டும். இந்த மதவெறி கூட்டணி 33.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது என்று சொல்லி ஆறுதல் அடைவது, தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் தந்திரமே தவிர வேறல்ல.

இதில் பரிதாபத்திற்குரியவர் ராம் விலாஸ் பாஸ்வான்தான். தலித்களின் பரம விரோதி என்று தெரிந்தும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, இவரது கட்சியான லோக் ஜனசக்தி 40 இடங்களில் போட்டியிட்டது. 2 இடங்களை மட்டுமே வென்றது. பா.ஜ.க. 160 இடங்களில் களத்தில் நின்றது. கிடைத்ததோ 53 இடங்கள் மட்டுமே. இது, 2010இல் பெற்ற இடங்களைவிட 38 இடங்கள் குறைவு. அத்தேர்தலில் பா.ஜ.க. 91 இடங்களைப் பெற்றது, நிதீஷ்குமாரின் பெருந்தன்மையால்தான் என்பது நிரூபணமாகிவிட்டது.

பா.ஜ.க.வின் பயங்கரவாதம்

ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது என்பதைக்கூட மறந்து பா.ஜ.க.வும் அதன் உதிரிகளும் போட்ட ஆட்டம் கொஞ்சமா? மதவெறி தலைக்கேறி, எழுத்தாளர்களைப் படுகொலை செய்தது; நாட்டின் அறிவுஜீவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டது; மாட்டிறைச்சி பிரச்சினையைக் கையிலெடுத்துக்கொண்டு, அப்பாவிகளைக் கொன்றது, மதச் சகிப்பித்தன்மை பற்றி யார் உபதேசித்தாலும் மை ஊற்றி அவமானப்படுத்தியது, விருதுகளைத் திருப்பிக் கொடுத்த சாதனையாளர்களின் அறச் சீற்றத்திற்கு உள்நோக்கம் கற்பித்த்து, சினிமா நடிகர்களைக்கூட விட்டுவைக்காமல் பாகிஸ்தானுக்கு ஓடிவிடுமாறு மிரட்டியது என இந்தக் காட்டுமிராண்டித்தனங்கள் சொல்லிமாளாது.

தேர்தல் கூட்டங்களில் பேசிய பேச்சுகளிலும் அதே காட்டுமிராண்டித்தனம். ‘மூன்று முட்டாள்கள்என்று நிதீஷ் கூட்டணியை நரேந்திரமேடியே விமர்சித்தார். அந்த ‘முட்டாள்கள்தான் இன்று அறிவாளிகளாக ஜொலிக்கிறார்கள். பா.ஜ.க. கூட்டணி தோற்றால், பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள் என்று பொறுப்புள்ள பதவி வகிக்கும் ஒருவர் உளறினார். இப்போது பட்டாசு கொளுத்தி பா.ஜ.க.வின் தோல்வியைக் கொண்டாடிய பீகாரிகள் பாகிஸ்தானிகளா...?

சிறுபான்மையினர் பங்கு

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கணிப்பின்படி, முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் மகா கூட்டணிக்குக் கிடைத்ததே அதன் வெற்றிக்குக் காரணம் என்றால் அது மிகையாகாது. பீகார் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் முதலான சிறுபான்மை வாக்காளர்கள் தங்களின் சமய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்; பீகார் தேர்தல் இந்தியா முழுமைக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்; மதவெறி சக்திகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று யோசித்து, திட்டமிட்டு பா.ஜ.க.வைத் தோற்கடித்துள்ளார்கள்.

பீகாரில் முஸ்லிம் மக்கட்தொகை 15 விழுக்காடு. மொத்தம் 23 முஸ்லிம்கள் நிதீஷ் கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பின் – 12 பேர்; ஐ.ஜ.த. சார்பில் – 5 பேர்; காங்கிரஸ் சார்பில் – 6 பேர்; சி.பி.எம். சார்பில் வென்ற ஒருவரையும் சேர்த்து 24 முஸ்லிம்கள் சட்டப் பேரவை உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளனர். இது மொத்த உறுப்பினர்களில் 10 விழுக்காடு ஆகும்.

பீகாரில் மகா கூட்டணி அமைத்த சூட்சுமதாரர்கள் பாராட்டுக்குரியவர்கள். இதில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பங்கு உண்டு. ஒரு தேசிய கட்சி; முன்னாள் ஆளும் கட்சி மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா? அதுவும் 41 இடங்களை வாங்கிக்கொண்டு – என ஈகோ பார்த்திருந்தால், இப்போது கிடைத்த 27 இடங்கள்கூட நிச்சயமாகக் கிடைத்திருக்காது. அவ்வாறே லாலுவையும் சும்மா சொல்லக் கூடாது. கூடுதல் இடங்களைப் பெற்றும் நிதீஷ்தான் முதல்வர் என்று தன்முனைப்பு காட்டாமல் அறிவித்தார்.

ஆக, தீய சக்தியை அடக்கிவைக்க, நல்ல சக்திகள் தங்களிடையே விட்டுக்கொடுத்து, கௌரவம் பார்க்காமல் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதுதான் பீகார் சொல்லும் பாடம்.

தமிழ்நாடு – 2016

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால் நன்றாக இருக்கும். முஸ்லிம் கட்சிகள் என்ன வியூகம் அமைக்கப்போகின்றன என்று தெரியவில்லை. வாக்குச் சிதறல் இருக்கும்போல் தெரிகிறது. அ.தி.மு.க. தனியாகவோ, சிறு கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிடலாம். தி.மு.க. இரண்டாவது அணியாகக் களத்தில் நிற்கிறது. மக்கள் நலக் கூட்டணி என்ற மூன்றாவது ஓர் அணியும் உண்டு. இதில் தே.மு.தி.க. எந்தப் பக்கம் சாயப்போகிறது என்று தெரியவில்லை.

இதற்கிடையில், பா.ஜ.க.வுடன் இணக்கமான அணுகுமுறையை மேற்கொண்டால்தான், இந்தியாவில் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ முடியும் என்ற சிந்தனைப்போக்கு அண்மைக்காலத்தில் முளைக்கத் தொடங்கியுள்ளது. குஜராத் போறா முஸ்லிம்கள், வடநாட்டிலுள்ள சில முஸ்லிம் அமைப்புகள் இவ்வாறு கிளம்பியுள்ளன.

இப்போக்கு, கேரளா வரை வந்து, தமிழ்நாட்டையும் எட்டியிருப்பதுதான் அச்சமூட்டும் செய்தியாகும். கேரளாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் இந்துத்துவா சக்திகளுடன் சேர்ந்து, தாமரைச் சின்னத்தில் முஸ்லிம் பெண் உள்படச் சிலர் போட்டியிட்டுள்ளனர். ஆலிம் தோற்றத்திலுள்ள சிலரும் போட்டியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலும் அதற்கான விதை தூவப்படுவதாக அஞ்சப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கமே இந்த அச்சத்திற்குக் காரணம். ஆலிம்கள், சமூகப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே கலந்துகொண்ட அக்கூட்டத்தில் வந்திருந்த முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறியவர் யார் தெரியுமா? ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கர்னல் ஹரிஹரன், பாதுகாப்புத் துறை நிபுணர் நிரஞ்சன்.

கர்னல் ஹரிஹரன் பேசியதாவது: அல்காயிதா, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகிய அமைப்புகளில் இந்திய முஸ்லிம்கள் யாரும் இல்லை என்று பிரதமர் மோடியே கூறுகிறார். எனவே, இந்திய முஸ்லிம்கள் எல்லாரும் நல்லவர்கள். எனினும், வெளியிலிருந்து வரும் பயங்கரவாதிகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அடுத்துப் பேசிய நிரஞ்சன் கூறியதாவது: முஸ்லிம்களாக இருப்பவர்களால் பிரச்சினை இல்லை. மதம் மாறி வருபவர்கள்தான் தீவிரவாதிகளாக வருகிறார்கள். இந்தியாவில் தேவ்பந்த் மதரசாதான் 1930களிலேயே தீவிரவாதிகளை தயார் செய்தது. தப்லீக் ஜமாஅத்தும் தீவிரவாதத்தைப் பரப்பும் அமைப்புதான். சஊதியின் இப்னு சஊத், சீனாவின் ஸ்டாலின் மற்றும் மாவோ ஆகியோர் ஒரே மாதிரியானவர்கள். பயங்கரவாதத்தின் மூலம் தங்கள் மேலாண்மையை நிலைநிறுத்த முயன்றவர்கள்.


ஆக, பரேலவி – தேவ்பந்தி இடையே பிரிவினையை அதிகமாக்கி, ஒன்றோடு ஒன்று மோதவிட்டு, குளிர்காய மோடி அரசு போட்ட சதிக்கு இங்குள்ளோரும் அறிந்தோ அறியாமலோ பலியாகிவருகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. இல்லாவிட்டால், பா.ஜ.க. காரர்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பார்களா? இராணுவம் மற்றும் உளவுத்துறை என்று மேல்மட்டத்தில் உள்ளவர்கள் வந்து வகுப்பு எடுப்பார்களா? யார், யாரிடம் பாடம் படிப்பது என்பதற்கு ஒரு முறை வேண்டாமா? அல்லாஹ்தான் காக்க வேண்டும்.