Tuesday, December 13, 2016

பாகப்பிரிவினையில் பெண்களுக்குப் பாதகமா?

சொத்துப் பாகப்பிரிவினையில் முஸ்லிம் பெண்களுக்குப் பாதகம் இழைக்கப்படுகிறது என்று பொத்தாம்பொதுவாகப் போகிறபோக்கில் சிலர் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசிவிட்டுச் செல்கிறார்கள். இதை, இஸ்லாமிய சமயத்தின் மீதான குற்றமாகவும் குறையாகவும் பரப்புரை செய்வதுதான் வேதனை அளிக்கும் விபரீதமாகும்.

ஒரு சமுதாயத்தைப் பற்றி, அல்லது சமயத்தைப் பற்றிக் குறைகூறுவதற்கு முன்பாக, அதைச் சற்று ஆழமாகப் படித்தோ கற்றறிந்த அறிஞர்களிடம் கேட்டோ வாய் திறக்க வேண்டும். யாரோ சொன்னார்கள்! யாரோ எழுதினார்கள்! அல்லது கோஷம் எழுப்பினார்கள் என்பதற்காகவெல்லாம் விமர்சிப்பதென்பது, கண்ணியவான்களுக்கு அழகல்ல. இப்படி, மேம்போக்காகத் தாக்கிப்பேசத் தொடங்கினால், அதற்கு முடிவே இருக்காது; ஆரோக்கியமான விவாதமாகவும் அது அமையாது.

அறியாமைக் காலம்

இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் பெண்களைக் கொத்தடிமைகள்போல் நடத்திவந்தனர் அரபியர். திருமணம், மணவிலக்கு, சொத்துரிமை... என எதை எடுத்துக்கொண்டாலும் பெண்களை மனுஷிகளாகவே அவர்கள் மதித்ததில்லை. பெண் சிசு கொலை, பெண்ணைப் பெற்றவன் அவமானம் தாங்காமல் தலைமறைவாக வாழ்வது, கணவனை இழந்த கைம்பெண் மாதக்கணக்கில் அழுக்கோடும் அசிங்கத்தோடும் வாழ வேண்டிய பரிதாபம், கணவன் குடும்பத்தாரே அவளுக்குச் சொந்தம் கொண்டாடி அவளது வாழ்க்கையைச் சூனியமாக்குவது... எனப் பெண்ணினக் கொடுமைகளுக்கு அன்று பஞ்சமே இல்லை.

மொத்தத்தில், பெண் இனத்தையே ஓர் அவமானச் சின்னமாகக் கருதிய இருண்ட காலத்தில்தான், நபிகள் நாயகம் (ஸல்) என்ற அற்புதமான இறைத்தூதர், இஸ்லாமிய மார்க்கத்தை அம்மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அன்னாருக்கு இறைவன் குர்ஆன் எனும் மாமறையை அருளினான். அதன் வழியில் புத்துலகிற்கு மக்களை அழைத்துச் சென்றார்கள் நபிகளார்.

அப்புத்துலகில் பெண்மைக்கு மரியாதை இருந்தது. கற்புக்குப் பாதுகாப்பு இருந்தது. தாய்மைக்கு முதலிடம் இருந்தது. பெண்ணைப் பெற்றவன், இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் இறைக் கருணைக்கு உரியவன் என்று போதித்தார்கள். ‘தாயின் காலடியில் சொர்க்கம்’ என்று சொல்லி, அன்னையரின் அந்தஸ்தை வானளவிற்கு உயர்த்தினார்கள். (அஹ்மத்)

சொத்துரிமை

அறியாமைக்கால அரபியர், சொத்து என்பதே ஆண்களுக்கு மட்டும்தான்; ஆண்களிலும் பெரியவர்களுக்கு மட்டும்தான் என்ற தீர்க்கமான முடிவில் இருந்தார்கள். இதற்கு அவர்கள் கற்பித்த காரணம்தான் வேடிக்கையானது. ஆண்களில் பெரியவர்களாலேயே போரில் கலந்துகொள்ள முடியும்; வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட முடியும்; பிறர் உடைமைகளைப் பறிக்க முடியும். இப்படி விநோதமான காரணங்களைப் பட்டியலிட்டார்கள். இதனால் பெண்களுக்குச் சொத்துரிமையை மறுத்தனர்; குழந்தைகள், பலவீனர்கள் ஆகியோருக்கும் சொத்தில் பங்கு கிடையாது என்று அறிவித்தனர்.

இந்நிலையில்தான், திருக்குர்ஆன் வாயிலாக இஸ்லாம் பாகப்பிரிவினை விதிகளை மிகத் துல்லியமாகவும் விரிவாகவும் வழங்கியது. இறந்துபோன ஒருவரின் சொத்தில், அவருடைய உறவினர்களில் யார், யாருக்கு உரிமையுண்டு; எவ்வளவு பாகம் உரிமையுண்டு; எப்போது உரிமையுண்டு என்ற விவரங்களை விலாவாரியாக எடுத்துரைத்து, அதைக் குடிமைச் சட்டமாக ஆக்கியது திருக்குர்ஆன். இது நடந்தது கி.பி. 625 வாக்கில். ஆனால், இந்தியாவில் இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956இலும் கிறிஸ்தவ வாரிசுரிமைச் சட்டம் 1925இலும்தான் இயற்றப்பட்டது; அதுவும் மனிதர்களால்.

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில், பொதுவானதொரு அடிப்படைக் கூறு உண்டு. இறந்துபோனவரின் சொத்தில் பங்கு பெற வேண்டுமானால், இறந்தவரின் உறவினராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதில் இரத்த சொந்தமும் முத்த சொந்தமும் அடங்கும். (திருமணத்தால் வரும் சொந்தமே முத்த சொந்தமாகும்.) உறவின் நெருக்கம், அந்த உறவிலும் பொருளாதாரத் தேவையின் அளவு, வாழ்க்கைச் செலவினத்தை எதிர்நோக்கியுள்ள இளைய தலைமுறையா; வாழ்க்கையின் எல்லையைத் தொட்டுவிட்ட மூத்த தலைமுறையா என்ற கண்ணோட்டம் ஆகிய அடிப்படைகளைக் கொண்டே பாகப் பிரிவினை அமையும்.

ஆக, உறவினருக்கு வாரிசுரிமை உண்டு. ஆனால், வாரிசுகளுக்குக் கிடைக்கும் பங்குகள், அவரவரின் தகுதி நிலைக்கேற்ப கூடலாம்; அல்லது குறையலாம். எல்லாருக்கும் சமமான பாகம் கிடைக்காது. தர்க்கரீதியாக அதை ஏற்கவும் முடியாது. சொத்துக்காரரின் சொந்த மகளும் தம்பியும் சமமாக முடியுமா? மகன் இல்லாதபோது தம்பிக்குச் சொத்தில் பங்கு கிடைக்கலாம். ஆனால், மகளுக்குக் கிடைக்கும் சமமான பங்கு கிடைக்காது.

அவ்வாறே, உறவுகளில் மிக நெருங்கிய உறவினர் இருக்கையில், தூரத்து உறவினருக்குச் சொத்தில் பங்கு கிடைக்காது. சொந்த மகன் இருக்கும்போது, சகோதரனுக்கோ சகோதரிக்கோ சொத்தில் பங்கு கேட்பது முறையாகாது. சகோதரன், உறவில் சற்றுத் தள்ளிப்போய்விடுகிறான் அல்லவா? அவ்வாறே, இறந்தவருக்குத் தந்தை இருக்கையில், தந்தையின் தந்தைக்கோ தந்தையின் உடன்புறப்புகளுக்கோ பாகம் கேட்பது எந்த வகையில் நியாயம்?

மகளுக்காக வாதாடிய தாய்

அன்சாரியான உம்மு குஜ்ஜா (ரலி) என்ற தாய், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களின் தந்தை (என் கணவர்) இறந்துபோய்விட்டார். (அவருக்குச் சொத்து உள்ளது. ஆனால்,) மகள்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை” என முறையிட்டார். அப்போதுதான் பின்வரும் வாரிசுரிமை வசனம் அருளப்பெற்றது (இப்னு மர்தவைஹி):

தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பங்கு உண்டு. (அவ்வாறே,) தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அ(ந்தச் சொத்)து, குறைவாகவோ அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இது (அல்லாஹ்வால்) விதிக்கப்பட்ட பங்காகும். (4:7)

இவ்வசனம் ஆண்களைப் போன்றே, பெண்களுக்கும் அடிப்படை சொத்துரிமை வழங்குகிறது; அதைக் கட்டாயமாக்குகிறது. சொத்து சிறியதோ பெரியதோ தாய், தந்தை, உறவுக்காரர் விட்டுச்சென்ற சொத்தில் ஆண் வாரிசுக்கும் பங்கு உண்டு; பெண் வாரிசுக்கும் பங்கு உண்டு. சொத்தை விட்டுவிட்டு இறந்தவருக்கும் வாரிசுகளுக்கும் இடையே உள்ள இரத்த சொந்தம், திருமண பந்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கிடைக்கும் பங்குகளில் வித்தியாசம் இருந்தாலும் அடிப்படைச் சொத்துரிமையில் ஆணும் பெண்ணும் சமமே! (இப்னு கஸீர்)

பெண்ணுக்கான சொத்துரிமையைக் குறிப்பாகச் சொல்லும் ஒரு வசனத்தின் பின்னணி பாருங்கள்:

நபித்தோழர் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களின் துணைவியார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இப்படி முறையிட்டார்: அல்லாஹ்வின் தூதரே! இவ்விரு பெண் குழந்தைகளும் சஅத் பின் அர்ரபீஉ உடைய புதல்வியர். தங்களுடன் ‘உஹுத்’ போரில் கலந்துகொண்ட இவர்களின் தந்தை (சஅத்), வீரமரணம் அடைந்துவிட்டார். இவர்களின் செல்வம் முழுவதையும் சஅதின் சகோதரர் எடுத்துக்கொண்டார். இவர்களுக்கு எதையும் அவர் விட்டுவைக்கவில்லை. இவர்களுக்குச் செல்வம் இருந்தால்தான் திருமணம் நடக்கும்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இதற்கு ஒரு தீர்வை அளிப்பான்” என்று கூறினார்கள். அப்போதுதான் பின்வரும் வசனம் அருளப்பெற்றது:

ஓர் ஆணுக்கு இரு பெண்களின் பாகத்திற்குச் சமமான (சொத்)து கிடைக்கும் என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்துகின்றான். (இரண்டு, அல்லது) இரண்டுக்குமேற்பட்ட மகள்கள் இருந்தால், (பெற்றோர்) விட்டுச்சென்ற சொத்தில் மூன்றில் இரு பாகங்கள் அவர்களுக்குக் கிடைக்கும். ஒரே ஒரு மகள் (மட்டும்) இருந்தால் (சொத்தில்) பாதி கிடைக்கும். (4:11)

இவ்வசனம் இறங்கிய உடனேயே அவ்விருவரின் தந்தையுடைய சகோதரரை அழைத்துவரும்படி நபியவர்கள் ஆளனுப்பினார்கள். அவர் வந்ததும் அவரிடம் நபியவர்கள், ‘‘சஅதுடைய மகள்கள் இருவருக்கும் மூன்றில் இரு பாகங்களும் அவர்களின் தாய்க்கு (சஅதின் மனைவிக்கு) எட்டில் ஒரு பாகமும் கொடுத்துவிடுங்கள். மீதி உங்களுக்குரியது” என்று கூறினார்கள். (திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்)

அதாவது இறந்தவரின் மனைவிக்கும் அவருடைய மகள்களுக்கும் சொத்துரிமை மறுத்த ஆணிடம், அவர்களுக்குச் சொத்துரிமை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். (வரைபடம் காண்க!)



பெண்ணின் ஆறு பருவங்கள்

பெண்கள் அடையும் ஆறு பருவங்களிலும் அந்தந்தப் பருவங்களில் உள்ள உறவினர்களிடமிருந்து பெண்களுக்குச் சொத்துரிமை கிடைக்கும் என்கிறது இஸ்லாமிய ஷரீஆ குடிமைச் சட்டம்.

1. மகள்: தாய், அல்லது தந்தை இறந்துவிட்டால், அவர்களின் சொத்தில் மகளுக்குப் பங்கு உண்டு. (மகன் இல்லாமல்) ஒரு மகள் இருந்தால், மொத்த சொத்தில் பாதி (50%) அவளுக்குச் சொந்தம். இரு மகள்களோ அதற்கு மேலோ இருந்தால், சொத்தில் மூன்றில் இரு பாகம் (66.66%) கிடைக்கும். அதை அவர்கள் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.

மகனும் இருந்தால், அவனுக்கு இரு பங்கும் மகளுக்கு ஒரு பங்கும் கிடைக்கும்.

2. பேத்தி: சொத்துப் பிரிவினையின்போது மகன் இறந்துபோயிருந்தால், மகனின் மகனுக்கும் (பேரன்) மகனின் மகளுக்கும் (பேத்தி) சொத்துரிமை உண்டு. பாகப் பிரிவினை செய்யும்போது மகள் இறந்துபோயிருந்தால், மகளின் மகனுக்கும் (பேரன்) மகளின் மகளுக்கும் (பேத்தி) பங்கு கிடைக்கும். மகன் அல்லது மகளின் இடத்தை பேரனும் பேத்தியும் அடைவர்.

3. மனைவி: கணவனின் சொத்தில் மனைவிக்குப் பங்கு கிடைக்கும். குழந்தை இருந்தால், மொத்த சொத்தில் எட்டில் ஒரு பாகமும் (12.50%) குழந்தை இல்லாவிட்டால் நான்கில் ஒரு பாகமும் (25%) மனைவிக்கு உரியதாகும்.

4. தாய்: மகனோ மகளோ இறந்துபோனால், அவர்களின் சொத்தில் பெற்ற தாய்க்குப் பங்கு உண்டு. இறந்தவருக்குக் குழந்தை இருந்தால், தாய்க்கு மொத்த சொத்தில் ஆறில் ஒரு பாகமும் (16.66%) இறந்தவருக்குக் குழந்தை இல்லாவிட்டால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகமும் (33.33%) கிடைக்கும்.

5. சகோதரி: சகோதரன் இறந்துபோனால், அவன் விட்டுச்செல்லும் சொத்தில் சகோதரிக்கு ஒரு கட்டத்தில் பங்கு உண்டு. இறந்துபோனவருக்கு மூலவாரிசான பெற்றோரோ பெற்றோரின் பெற்றோரோ கிளைவாரிசான மக்களோ மக்களின் மக்களோ இல்லாத சந்தர்ப்பத்தில் சகோதரிக்குப் பங்கு கிடைக்கும். சகோதரி ஒருத்தி இருந்தால், மொத்த சொத்தில் பாதியும் (50%) ஒருவருக்குமேல் இருந்தால் மூன்றில் இரு பாகங்களும் (66.66%) சொத்துக் கிடைக்கும். (குர்ஆன் 4:176)

6. பாட்டி: பேரன், அல்லது பேத்தியின் சொத்தில் பாட்டிக்கும் பங்கு உண்டு. ஆனால், இறந்தவருக்குத் தாய் இல்லாதபோதுதான், தாயின் இடத்தைத் தாயின் தாய் அடைவார். (பாட்டி விவகாரத்தில் பQலத்த கருத்துவேறுபாடு காணப்படுகிறது.)

ஆண் - பெண் வித்தியாசம் ஏன்?

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாம் கூறும் பாகப்பிரிவினைச் சட்டத்தில், ஆணுக்கு இரு பங்கு; பெண்ணுக்கு ஒரு பங்கு என்பது நான்கு கட்டங்களில் மட்டுமே.

1. தாய், அல்லது தந்தையின் சொத்தில் மகன் மற்றும் மகளுக்குப் பங்கு பிரிக்கும்போது.

2. பாட்டி, அல்லது தாத்தாவின் சொத்தில் பேரன்-பேத்திக்குப் பங்கு கொடுக்கும்போது.

3. கணவன் சொத்தில் மனைவிக்கும் மனைவி சொத்தில் கணவனுக்கும் பங்கு கொடுக்கும்போது.

4. இறந்தவரின் சகோதரன் மற்றும் சகோதரிக்குப் பங்கு கிடைக்கும் கட்டத்தில்.

சில சமயங்களில் ஆண்-பெண் உறவுகளுக்குச் சமமான பங்கு அளிக்கப்படும். உதாரணமாக, இறந்துபோனவருக்கு மூலவாரிசுகளோ கிளைவாரிசுகளோ இல்லாத நிலையில் தாய்வழிச் சகோதர-சகோதரிகளுக்கு (தாய் ஒன்று; தந்தை வேறு) சொத்தில் பங்கு கிடைக்கும்.

இந்தச் சகோதர-சகோதரிகள் பலர் இருந்தால், மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பாகம் (33.33%) கிடைக்கும். அதை அவர்கள் (ஆண்-பெண் வித்தியாசமின்றி) சமமாகத் தங்களிடையே பிரித்துக்கொள்ள வேண்டும். (குர்ஆன், 4:12)

இன்னொரு தகவல்: சில உறவுகளில் ஆணைவிடப் பெண்ணுக்குக் கூடுதல் பங்கும் கிடைப்பதுண்டு. உம்: ஒருவரின் சொத்தில் அவருடைய தந்தையைவிட மகள் கூடுதல் பங்கு பெறுகிறார்.

இன்னும் சில கட்டங்களில் பெண்ணுக்கு மட்டுமே பாகப்பிரிவினையில் பங்கு உண்டு; நிகரிலுள்ள ஆணுக்கு பங்கே கிடைக்காது. உம்: வரைபடம் காண்க:



கூடுதல் சுமை ஆணுக்கே!

பொதுவாக, இஸ்லாமியக் குடும்ப வாழ்க்கை அமைப்பில் ஆணுக்கே எல்லாவிதப் பொருளாதாரச் சுமையும் கடமையும் உண்டு; அல்லது கூடுதல் சுமை உண்டு. குடும்பத்தைக் கட்டிக்காத்தல், தொழில் மற்றும் வணிகத்தில் முதலீடு செய்தல், குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், தன் தேவையையும் பார்த்துக்கொண்டே, தன்னை நம்பியுள்ள மனைவி, மக்கள், பெற்றோர், சில நேரங்களில் சகோதரிகள் முதலான உறவுகளின் தேவைகளையும் கவனிக்க வேண்டிய பொருளாதார நெருக்கடியில் ஆண்மகன் உள்ளான். பெண்ணுக்கு இச்சுமைகள் இல்லை –கட்டாயக் கடமை இல்லை.

பிறந்த வீட்டில் இருக்கும்வரை, பெண்ணின் எல்லாத் தேவைகளையும் தந்தை கவனித்துக்கொள்கிறார். அது அவரது கடமையும்கூட. தந்தை இல்லாத கட்டத்தில் சகோதரர்களோ நெருங்கிய வேறு உறவினர்களோ கவனித்தாக வேண்டும். புகுந்த வீட்டில், அவளுக்கு வேண்டிய நியாயமான தேவைகள் கணவனால் நிறைவேற்றப்பட வேண்டும். அது அவனது பொறுப்பு. கணவன் இல்லாத நிலையில் கணவன் குடும்பத்தாரோ அவளுடைய பிள்ளைகளோ அப்பெண்ணுக்குப் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் உண்டு.

அப்படி ஒருவருமே உதவ முன்வராவிட்டால் இஸ்லாமிய அரசு, ஆதரவற்றோருக்கான நிதியிலிருந்து நிதியுதவி அளித்தாக வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில், முஸ்லிம் ஜமாஅத் ஸகாத், ஸதகா போன்ற நிதிகளிலிருந்து அவளுடைய தேவைகளை நிவர்த்திக்க முன்வர வேண்டும்.

ஆக, ஒரு பெண் தன் சொந்த தேவைக்காகட்டும்! பிறர் தேவைகளுக்காகட்டும்! பொறுப்பேற்கும் கட்டாயம் இஸ்லாத்தில் இல்லை. ஆதலால், ஆணுக்கும் பெண்ணுக்கும் – சகோதரனுக்கும் சகோதரிக்கும் ஒரேயளவிலான பொருளாதாரத் தேவை இல்லை என்பது தெளிவு. எனவேதான், ஆணுக்கு இரு பாகம்; பெண்ணுக்கு ஒரு பாகம் என்ற கணக்கு சில கட்டங்களில் விதியாக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு பாகத்தின் வாயிலாகப் பெண், தெம்போடும் சமூக அந்தஸ்தோடும் வாழ முடியும் என்ற நிலையை அடையலாம்.

நடைமுறையில் உள்ளதா?

எல்லாம் சரி! குர்ஆனின் இக்கட்டளை நடைமுறைப்படுத்தப்படுகிறதா? முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கு ஷரீஆ குடிமைச் சட்டப்படி சொத்துரிமை வழங்கப்படுகிறதா? முறைப்படி பாகப்பிரிவினை வழங்கப்படுகிறதா? இக்கேள்விக்கு சமுதாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்; தட்டிக்கழிக்க முடியாது.

மார்க்கச் சட்டப்படி நடக்கும் இறையச்சமுள்ள குடும்பங்களில் இது முறையாகச் செயல்படுத்தப்படுவதை நாம் மறுக்கவில்லை. ஆனால், இந்தியாவில் –குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்களின் நிலை என்ன?

திருமணத்தின்போது, பெண்ணுக்கு வழங்கப்படும் சீர்வரிசை, வரதட்சிணை போன்ற –மார்க்கத்தில் இல்லாத- சடங்குகளைத் தவிர, பிறந்த வீட்டிலிருந்து வேறு என்ன சொத்துக் கிடைக்கிறது? கேட்டால், கல்யாணத்திலேயே 50 சவரன், நூறு சவரன் போட்டுவிட்டோம். மாப்பிள்ளைக்கு கார், அல்லது பைக் வாங்கிக் கொடுத்தோம். மிகச் சிலர், வீடு வாங்கிக் கொடுத்தோம். இதற்குமேல் பாகப்பிரிவினை என்ன கிடக்கிறது? என்று ஆண் வாரிசுகள் முகத்தில் அடித்தாற்போல் பதில் சொல்கிறார்கள்.

ஆரம்பமாக இதைப் புரிந்துகொள்ளுங்கள்! வரதட்சிணை என்பது இஸ்லாத்தில் இல்லாத, வேறு கலாசாரம். இதைக் காரணம் காட்டி, மார்க்கம் கட்டாயமாக்கியுள்ள பாகப்பிரிவினையை எப்படி மறுக்கலாம்? திருமணத்தின்போது பெண்ணுக்குத் தரப்படும் பொருள் அன்பளிப்பு என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டால், அன்பளிப்பைப் பேரம் பேசியோ முன்நிபந்தனை விதித்தோ வாங்கலாமா? அதற்கு அன்பளிப்பு என்று சொல்ல முடியுமா? அவ்வாறே, அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதைப் பாகப்பிரிவினையில் கணக்கிடலாமா? தயைகூர்ந்து யோசியுங்கள்!

ஆகவே, அதற்கும் பாகப்பிரிவினைக்கும் சம்பந்தமில்லை. பாகப்பிரிவினைக்கு முன்பாகக் கோடியே கொடுத்திருந்தாலும், பெண்ணுக்காகச் செலவிட்டிருந்தாலும் பாகப்பிரிவினை பங்கில் அது சேராது; சேர்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், ஆணுக்குச் செலவழிப்பதில்லையா? படிப்பு, வேலை, திருமணம், தனிவீடு... என இலட்சக்கணக்கில் செலவழித்தும்விட்டு, பாகப்பிரிவினையின்போது சண்டைபோட்டுத் தன் பங்கை ஆண் வாரிசு வாங்குகிறானா இல்லையா? பதில் சொல்லுங்கள்!

நபித்தோழர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உம்முடைய வாரிசுகளை, மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச்செல்வதைவிடத் தன்னிறைவு உடையவர்களாக விட்டுச்செல்வதே சிறந்தது. (புகாரீ – 1295)

Thursday, November 03, 2016

இந்தியாவில் ‘தலாக்’ சர்ச்சை - உண்மை என்ன?

இந்தியாவில் ‘தலாக்’ சர்ச்சை - உண்மை என்ன?

மணவிலக்கு (தலாக்) என்பது இஸ்லாமிய சமுதாயத்தில் மட்டுமல்ல; நுகர்வு கலாசாரத்திற்குக் கிடைத்த வெற்றியின் விளைவால் எல்லா சமுதாயங்களையும் ஆட்டுவித்துவருகிறது. விழுக்காடு அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம் சமுதாயத்தில் மணமுறிவு குறைவே. ஆனாலும் அந்த விழுக்காடைக்கூட, சமூக ஆர்வலர்களால் வரவேற்கவோ சீரணிக்கவா இயலவில்லை என்பது உண்மையே!

மார்க்க அறிஞர்கள், பள்ளிவாசல் இமாம்கள் மணவிலக்கைக் குறைப்பதற்காக, உள்ளே இருந்துகொண்டு போராடிவருகிறார்கள். அதற்காக மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைமுறையில் இருப்பதைப் போன்று இங்கும் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள் செய்துவருகிறோம். இன்றைய இளைஞர்கள் படித்துமுடித்து, வேலையில் அமர்ந்து, நாலு காசு சம்பாதிக்கத் தொடங்கிய கையோடு மணமேடையில் வந்து அமர்ந்துவிடுகிறார்கள்.

மணவாழ்க்கை என்றால் என்ன? அதை எப்படிக் கையாள வேண்டும்? இல்லறத்தில் பிரச்சினை ஏற்படின் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? கணவன் - மனைவி இருவரின் கடமைகள் என்ன? உரிமைகள் என்ன? குழந்தையை வளர்ப்பது எப்படி? இரு பக்க உறவுகளை எப்படிப் பேணி பராமரிக்க வேண்டும்... என்பதையெல்லாம் அறியாத அப்பாவிகளாகத்தான் மணவாழ்வில் அடியெடுத்துவைக்கிறார்கள். இவர்களுக்குத் திருமணத்திற்கு முன்பே ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவது சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமையல்லவா! அதற்காகவே இந்த கவுன்சிலிங் ஏற்பாடு. இது ஒரு தாமதமான முயற்சி என்பதில் ஐயமில்லை. இன்னும் பரவலாக்கப்படவில்லை என்பதும் உண்மைதான்!

இந்த முயற்சி வெற்றிபெற்றாலே, மணவிலக்கின் வேகத்தைக் கட்டுப்படுத்திவிடலாம். மணவிலக்கு ஒரு சங்கடமான முடிவு என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்தி போன்றதுதான் தலாக். அதை எடுத்த எடுப்பிலேயே ஆள்வது அறியாமை மட்டுமல்ல; கொடுமையும்கூட. இதனாலேயே, இறைவனால் அனுமதிக்கப்பட்டுள்ளதும் அதே நேரத்தில், அவனது கடும் கோபத்திற்கு உரியதும் ‘தலாக்’தான் என்றுரைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: அபூதாவூத்)

கடைசி ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டியதை முதல் தீர்வாக எடுத்துக்கொண்டுவிடுகிறார்கள். கணவன் -தான் ஒரு ஆண் என்ற வீராப்பிலும் மனைவி -தன்னிடம் பட்டமும் வேலைவாய்ப்பும் உள்ளது என்ற மிதப்பிலும் அழகான வாழ்க்கையைக் கிழித்தெறிந்துவிடுகிறார்கள். அவன் ‘தலாக்’ எனும் கத்தரியால் கிழித்தால், அவள் ‘குலா’ எனும் சவரக்கத்தியால் கிழிக்கிறாள். இதைக் கண்டு நொந்துபோன அறிவுஜீவிகள் விழித்துக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

சரி! அந்த ‘தலாக்’கையும் எப்படி பிரயோகிக்க வேண்டும் என்பதும் இன்றைய இளசுகளுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் முன்கோபமும் தன்முனைப்பும் அவர்களை – இல்லற தற்கொலைக்குத் தூண்டிவிடுகின்றன. அந்தக் கொதிப்பில், திருக்குர்ஆனின் வழிகாட்டலோ நபிகளாரின் அறவுரையோ அவர்களின் கண்களுக்குப் படுவதில்லை.

திருக்குர்ஆனின் வழிகாட்டல் (2:229) இதோ: தம்பதியரிடையே பிணக்கு ஏற்பட்டால், பேசித் தீர்க்க வேண்டும். இணங்க மறுப்பவரை வழிக்குக் கொண்டுவர சில வழிகளைக் கையாள வேண்டும். எதிலும் சமரசம் ஏற்படாதபோது, இறுதிக் கட்டமாக ஒருமுறை ‘தலாக்’ சொல்ல வேண்டும். அதற்கும் சில நிபந்தனைகள் உண்டு. ‘தலாக்’ சொன்னபிறகு கணவனின் பராமரிப்பிலேயே மனைவி இருக்க வேண்டும். மூன்று மாதங்கள் கணவனின் வீட்டிலேயே, மறுமணம் செய்துகொள்ளாமல் (‘இத்தா’) காத்திருக்க வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் இருவரும் மனம்மாறி, மணவாழ்க்கையைத் தொடர வாய்ப்பு உண்டு. 3 மாதக் கெடு முடிந்துவிட்டாலும், மண ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொண்டு இல்லறத்தைத் தொடரலாம். அப்படிச் சேர்ந்து, வாழ்ந்துவரும்போது மீண்டும் பிணக்கு ஏற்படின் சமாதானத்திற்கான வழிகளைத் தேட வேண்டும். இணைப்புக்கு வழியே இல்லாத நிலையில், இரண்டாவதாக ஒருமுறை ‘தலாக்’ சொல்ல வேண்டும்.

இதன் பிறகும் மனைவி 3 மாதங்கள் கணவன் வீட்டிலேயே காத்திருப்பாள். இந்நாட்களில் சினம் தணிந்து மனம் மாறக்கூடும். அப்போதும் சேர்ந்து வாழ முடியும். கெடுவே முடிந்துவிட்டாலும் மணஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொண்டு சேர்ந்து வாழ முடியும்.

இங்கே சேர்ந்து வாழ்வதற்கு 6 மாத அவகாசம் கிடைக்கிறது. ஆனால், இக்காலகட்டத்தில் பெண் வீட்டார் மகளை கணவன் வீட்டில் வாழ அனுமதிப்பதில்லை. இது, தம்பதியரிடையே இணக்கம் காண்பதற்கான வாயிலை அடைந்துவிடுகிறது. இதற்குப் பின்பும் சச்சரவு எழுந்தால், மூன்றாவது முறையாக ‘தலாக்’கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, ஒன்றுக்குப் பலமுறை யோசிக்க வேண்டும்; அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், மறுபடியும் இனி சேர்ந்து வாழ வேண்டுமென்றால், கடுமையான பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

மூன்றாவது முறையாக மும்மாதம் மனைவி காத்திருந்து, கணவனிடமிருந்து பிரிந்து, மற்றோர் ஆணை மணந்து, அவனுடன் இல்லறம் நடத்தி, அவ்விருவரிடையே இயல்பாகப் பிரிவினை உண்டாகி, அதற்கான ‘இத்தா’ பருவமும் முடிந்தபின்பே அப்பெண்மணியை முதல் கணவன் மணந்துகொள்ள முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில், ருகானா (ரலி) என்ற நபித்தோழர், தம் மனைவியை ஒரே அவையில் மூன்று முறை ‘தலாக்’ சொல்லிவிட்டார். பின்னர் அதை எண்ணிப் பெரிதும் வருந்தினார். நபிகளாரிடம் வந்து விவரம் சொன்ன அவரிடம், எப்படி தலாக் செய்தீர்? என்று வினவினார்கள். ‘மூன்று முறை’ என்றார். ஒரே இடத்திலா? என்று வினவியதற்கு ‘ஆம்!’ எனப் பதிலளித்தார். அப்படியானால், அது ஒருமுறை சொன்ன ‘தலாக்’தான். விரும்பினால் அவரோடு சேர்ந்து வாழலாம் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (நூல்: அஹ்மத்)

ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் செய்து, உறவை முற்றாக முறித்துக்கொள்ளும் நடைமுறை அப்போது இல்லாத காரணத்தால்தான், ஒருவர் அப்படிச் செய்துவிட்டார் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, கடுமையாகக் கோபமடைந்தார்கள். அத்துடன், “நான் உங்களிடையே இருக்கும்போதே, அவர் இறைமறையுடன் விளையாடுகிறாரா?” எனக் காட்டமாகக் கேட்டார்கள். (நூல்: நஸயீ)

இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில், யாரேனும் மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால், முதுகு வலிக்குமளவுக்குச் சாட்டையால் அடிப்பார்களாம்! (நூல்: சுனன் சயீத் பின் மன்சூர்)

ஆனால், அவர்களது ஆட்சியில் இது தொடர்கதையானபோது –அதாவது மூன்று முறை தலாக் செய்துவிட்டு ஒன்றுதான் எனது எண்ணமாக இருந்தது என ஆண்கள் தொடர்ந்து சொல்லிவந்தபோது- இனிமேல் யாரேனும் அவ்வாறு சொன்னால் மூன்றே நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள். இனி சேர்ந்து வாழ்வது பிரச்சினையாகிவிடும் என்பதால், அவ்வாறு யாரும் செய்யக் கூடாது என எச்சரிக்கும் முகமாகவே இந்த அறிவிப்பை கலீஃபா வெளியிட்டார்கள்.

இதன் அடிப்படையிலேயே, முஸ்லிம் சட்ட அறிஞர்கள் இவ்வாறு கூறுவார்கள்: திருக்குர்ஆனின் அறிவுறுத்தலின்படி, இடைவெளிவிட்டு ஒன்று ஒன்றாக ‘தலாக்’ சொல்வதே சிறந்த, உன்னதமான, நபிவழியின்படி அமைந்த ‘தலாக்’ முறையாகும். ஒரே மூச்சில் மூன்று முறை தலாக் செய்து, எடுத்த எடுப்பிலேயே மணவாழ்வை அழித்துக்கொள்வதும் பெண்கள் வாழ்க்கையில் விளையாடுவதும் பாவகரமான, மிக அருவருப்பான, அனாசாரம் (பித்அத்) ஆகும்.

உணர்ச்சிவசப்பட்டு, தொலைநோக்கு இல்லாமல் இவ்வாறு செய்வதற்கு எதிரான பரப்புரையை, மார்க்க அறிஞர்களும் (உலமா) சமூக மற்றும் பெண்ணுரிமை ஆர்வலர்களும் முனைப்போடு மேற்கொண்டுள்ளனர். விவரம் தெரியாமலும் பொறுப்புணர்வு இல்லாமலும் சிலர் செய்துவிடும் குற்றத்திற்காக, ஒட்டுமொத்த சமூகத்தையும் சமயச் சட்டங்களையும் குறைகூறுவது எப்படி தகும்? அதைவிட, சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று சொல்லி பதற்றத்தை உருவாக்குவதும் சமயச்சார்பற்ற ஒரு நாட்டில், ஒரு வகுப்பார்மீது வேறு குடிமைச் சட்டங்களைத் திணிக்க முனைவதும் எப்படி ஜனநாயகமாகும்?

முஸ்லிம்களின் சமய நம்பிக்கையை, காலங்காலமாக அவர்கள் பின்பற்றிவரும் தனியார் குடிமைச் சட்டங்களை மாற்றவோ திருத்தவோ முயல்வதென்பது, அரசியல் சாசனத்தையே மிதிப்பதற்குச் சமம்!

Wednesday, November 02, 2016

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! (5)




அரபிக் கல்லூரி மாணவக் கண்மணிகளே!

இதுவரை குர்ஆன் மற்றும் ஹதீஸைப் படித்தறிவதற்கு அடிப்படைத் தேவையான கலைகள் பற்றி அறிந்தோம். சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், பொருள் இலக்கியம், சொல்லணிக் கலை, பேச்சுக் கலை, அணியிலக்கணம், நவீன அரபிமொழி, அவற்றுக்கான கலைச்சொற்கள் பட்டியல் (10) ஆகியவற்றைப் பார்த்திருப்பீர்கள்; பாடங்களைப் பத்திரப்படுத்தியும் இருப்பீர்கள் என்று கருதுகிறேன்.

மாணவ - மாணவிகளுக்காக நடத்தப்படும் இந்த வலைதள வகுப்பு அவர்களை எட்டியதா? படிக்கிறார்களா என்பதை அறிய முடியவில்லை. எனினும், ஆசிரியர்கள், பெரியவர்கள் படித்துவிட்டு வரவேற்று கருத்துகள் எழுதியுள்ளனர்; பலருக்கு ஷேரும் செய்துள்ளனர். குறிப்பாக, கலைச்சொற்கள் பட்டியலுக்கு நல்ல வரவேற்பு. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இனி குர்ஆனிய கலைகளைப் பார்ப்போம்.

குர்ஆனிய கலைகள்

நம்மைப் பொறுத்த வரை குர்ஆனிய கலைகள் என்று ஐந்தைக் கூறலாம். 1. சீராக ஓதுதல், அல்லது இராகமாக ஓதுதல் (தஜ்வீத் – Intonation). ஆரம்பப் பாடசாலையிலேயே (மக்தப்) திருக்குர்ஆனைப் பார்த்து ஓதக் கற்றிருப்பீர்கள். அரபி அட்சரங்கள்,ஒலிக்குறியீடுகள், வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசித்தல், ஒரு வசனத்தின் அரபி வாசகத்தை வேகமாக ஓதுதல் போன்ற பயிற்சிகள் எல்லாம் அங்கே அளிக்கப்பட்டிருக்கும். இது வெறும் ‘ஓதல்’ (திலாவா) மட்டுமே!

‘தஜ்வீத்’ என்பது, அந்த ஓதலை அழுத்தம் திருத்தமாகவும் நீட்டி நெளித்து சீராகவும் இராகத்தோடும் ஓதக் கற்பதே! எழுத்துகளைச் சரியாகவும் சீராகவும் உச்சரித்தல், குறில்-நெடில் அறிந்து குறுக்கியும் நீட்டியும் ஓதுதல், நெடிலில் (மத்து) எத்தனை ஸ்டெப், எந்த இடத்தில் என்பதைக் கவனத்தில் கொண்டு நீட்டியும் குறிலில் எந்த அளவிற்குச் சுருக்க வேண்டும் என்பதை அறிந்து குறுக்கியும் ஓதுதல், மூச்சுவிட வேண்டிய இடத்தில் விட்டு, நிறுத்த வேண்டிய கட்டத்தில் நிறுத்தி, நிறுத்தக் கூடாதஇடத்தில் சேர்த்து ஓதுதல்... என ஓதுதலுக்கான நெறிமுறைகளை அறிந்து ஓதுவதே ‘தஜ்வீத்’ ஆகும்.

மிகவும் கவனம் தேவை

இவற்றில், மிகமிக எச்சரிக்கையோடு அணுகவேண்டியது ஒன்று இருக்கிறதென்றால், அட்சரங்களின் உச்சரிப்புதான். எடுத்துக்காட்டாக, தொண்டைப் பகுதியிலிருந்து ஒலிப்பதே ‘ஹா’ (ح). இன்னொரு எழுத்து சற்று அதிர்வோடு ஒலிப்பது ‘ஹா’ (ه).மற்றொரு எழுத்து சற்றுக் காறலுடன் ஒலிப்பது ‘கா’ (خ). இம்மூன்றில் முதல் எழுத்து (ح) இடம்பெறுகிற சொல்: حَلَقَ (ஹலக). பொருள் (தலைமுடி) வழித்தான். இரண்டாம் எழுத்து (ه) இடம்பெறும் சொல்: هَلَكَ (ஹலக). பொருள்: அழிந்தான்.மூன்றாம் எழுத்து இடம்பெறும் சொல்: خَلَقَ (கலக). பொருள்: படைத்தான்.

இன்னொரு உதாரணம்: ت (தா); د (தால்); ط (தோ). இந்த மூன்று எழுத்துகளும் உச்சரிப்பில் நெருக்கமானவை. உச்சரிப்பு தவறினால், பொருளில் விபரீதம் ஏற்பட்டுவிடும். تِيْن (தீன்-அத்திப்பழம்), دِيْن (தீன்-மார்க்கம்); طِيْن (தீன்-களிமண்).

பொருளில் எவ்வளவு பெரிய வித்தியாசம்! எப்படி வேறுபடுத்துவது? எழுத்தில் சரி! மொழியில் உச்சரிப்பு ஒன்றே வழி. அவ்வாறே, அரபி அச்சரங்களில்

ت - ث - د - ذ - ط / ز - ج / ص - ش - س / ل - ظ - ض / ف - ب / ك - ق / ع - غ
ஆகிய ஏழு அணிகள் நெருக்கமான –சற்றே வேறுபடக்கூடிய- ஒலிகளை எழுப்பும் எழுத்துகளாகும். ஒவ்வொன்றுக்கும் இடையிலான உச்சரிப்பு வித்தியாசம் நாசூக்கானது. முறையாக ‘தஜ்வீது’ கற்று,பயிற்சியும் எடுத்தால்தான் பிசிறின்றி அட்சரங்கள் ஒலிக்கும். கொஞ்சம் தவறினாலும் சருக்கிவிடும்; பொருள் வழுக்கிவிடும்; குற்றம் நெருக்கிவிடும்.

அதுவும் திருக்குர்ஆன் வசனங்கள் எனும்போது, எவ்வளவு பிரயாசித்தமும் எச்சரிக்கை உணர்வும் தேவை என்பதைச் சிறிது சிந்தித்துப்பாருங்கள். நம் தொழுகை மட்டுமல்ல; பின்தொடர்ந்து தொழும் அப்பாவி மக்களின் தொழுகையும் சிறு பிழைகூடஇல்லாமல் நிறைவாக அமைய வேண்டுமா? இல்லையா?

திருக்குர்ஆனில் அல்லாஹ் தன் தூதருக்கு ஆணையிடுவதைப் பாருங்கள்: (நபியே!) குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! (73:4) அதாவது நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! அப்போதுதான் பொருள் விளங்கி, சிந்திக்க முடியும்.

நான்கு நிலைகள்

‘தஜ்வீத்’ கலையில் நான்கு நிலை உச்சரிப்புகளும் ஒலிப்புகளும் உள்ளன. 1. குரல் நாள அதிர்வொலி (இழ்ஹார் – Voice). ஒவ்வொரு எழுத்தையும் அதனதன் பிறப்பிடத்திலிருந்து மூக்கொலிப்பின்றி வெளியிடல். எகா: مِنْ عَمَلٍ (மின் அமல்). இதில் ن எனும் எழுத்துஅதன் இயல்பாக ஒலிக்க வேண்டும்.

2. ஈர் உயிரொலி ஒன்றிய உச்சரிப்பு (இத்ஃகாம் – Synizesis). அசைவற்ற ஒலிக்குறியீடு (சுகூன்) உள்ள ஓர் எழுத்து, அசைவுள்ள ஒலிக்குறியீடு (ஹரகத்) உள்ள ஓர் எழுத்துடன் இணைந்து, ஈரெழுத்துகளும் ஓரெழுத்தாக அழுத்தத்துடன் ஒலிப்பது. எகா: مِنْ رَّبِّهِما (மிர்ரப்பிஹிமா). இதிலுள்ள ‘நூன்’ எனும் எழுத்து, அசைவற்ற ஒலிக்குறியீடு பெற்றது. இதை, அடுத்த எழுத்தான ‘ரா’ (ر) உடன் இணைத்து அழுத்தம் கொடுத்து உச்சரிக்க வேண்டும். நூனும் ‘ரா’வும் சேர்ந்து உச்சரிப்பில் ‘ரா’ எனும் ஒரே எழுத்தாகிவிடும்.

3. உருமாறிய ஒலி (இக்லாப் – Transposition). அசைவற்ற ஒலிக்குறியீடு (சுகூன்) உள்ள ‘நூன்’ (ن) எனும் எழுத்தை ‘மீம்’ (م) எனும் எழுத்தாக உருமாற்றி, ‘பா’ (ب) மற்றும் மூக்கொலிப்புடன் ஒலிப்பது. எகா: அம் பூரிக (أن بُورِك) இதிலுள்ள சுகூன் உள்ள ‘நூன்’ எனும்எழுத்தை ‘மீம்’ எழுத்தாக மாற்றி, அன் பூரிக என்பதை, ‘அம் பூரிக’ என உச்சரிக்க வேண்டும்.

4. கம்மு குரல் ஒலிப்பு (இக்ஃபா – Veiling). முதலிரண்டு வகைகளுக்கும் இடையிலான தன்மையில் அழுத்தக் குறியின்றி ஓர் எழுத்தை மொழியுதல். எகா: மின் குல்லின் (مِنْ كُلٍّ). இதிலுள்ள ‘நூன்’ (ن) எழுத்துக்கும் சரி! அடுத்த எழுத்தான ‘காஃப்’ (ك) எனும்எழுத்துக்கும் சரி! தனித்தனி உச்சரிப்பு உண்டு. எனினும், ‘நூனை’ அழுத்தாமல் உச்சரித்து ‘காஃப்’ உடன் சேர்த்து ஒலிக்க வேண்டும்.

இனிய குரலில் இராகமாக...

திருக்குர்ஆன் வசனங்களை, நாளிதழ் வாசிப்பதைப் போன்று உரைநடையில் வாசிக்காமல், ஓசை நயத்துடன் இராகமிட்டு ஓத வேண்டும். அதையும் இனிய குரலில் ஓதும்போது, செவிகளைக் கவர்ந்திழுத்து, கேட்போரை குர்ஆனுடன் ஒன்றச் செய்யும்அற்புதம் அங்கு நடக்கும். கேட்பவர், பொருள் புரிந்தவராக இருந்து, வசனத்தின் காட்சியைக் கண்ணில் கொண்டுவர முடிந்தவராகவும் இருந்துவிட்டால், அதைப் போன்ற பரவசம் வேறு இருக்க முடியாது. அனுபவித்தால்தான் தெரியும். இமாம், அதற்குள் ஏன் குனிந்துவிட்டார் என எண்ணத் தோன்றும்.

இன்றைக்கெல்லாம் சிறுவர், சிறுமியர், இளைஞர், பெரியவர் எனப் பலரும் பல்வேறு நாடுகளில் இனிய குரலில் ஓதி, மயக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பெருமைப்படும் உண்மை. குரலுக்காக மயங்குபவர்களே அதிகம். அத்துடன் பொருளுக்காகவும சேர்த்து கண்மூடி ரசிப்பவர்கள் சிலரே. இவர்களைப் பொருளின்பால் இழுக்கும் காந்தம் ‘காரி’யின் குரலே!

நபி (ஸல்) அவர்கள் ‘தர்ஜீஉ’ எனும் ஓசை நயத்துடன் ஓதுவார்கள். (புகாரீ – 5047); ஒரே எழுத்தைத் திரும்பத் திரும்ப தொண்டைக்குக் கொண்டுவந்து ஓசை எழுப்பி ஓதுவதே ‘தர்ஜீஉ’ (மீட்டல்) எனப்படுகிறது. எகா: அலிஃப் (ألِف) எனும் எழுத்தை ஆ... ஆ... ஆ... எனஇழுத்து ஓதும்போது ஒரே அட்சரத்தின் ஒலி நீண்டு ஒலிக்கும். இவ்விதம் ஓசை நயத்துடன் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதியுள்ளார்கள். (ஃபத்ஹுல் பாரீ)

நபித்தோழர் அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) நபி (ஸல்) அவர்கள், “அபூமூசா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும்வழங்கப்பட்டுள்ளது என என்னிடம் கூறினார்கள். (புகாரீ – 5048)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் வழக்கம் நீட்டி ஓதுவதுதான். ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதில் பிஸ்மில்லா...ஹ் என நீட்டுவார்கள். அர்ரஹ்மா...ன் என்றும் நீட்டுவார்கள். அர்ரஹீ...ம் என்றும் நீட்டுவார்கள். (இதற்கு மத்துல் கிராஅத் – என்று பெயர்.) (புகாரீ – 5045)

மாணவச் செல்வங்களே!

குர்ஆனை ஆசையோடும் ஆர்வத்தோடும் ஓதிப் பழகுங்கள்! தஜ்வீதுடனும் இனிய குரலுடனும் ஓதுகின்ற இந்த உயர்ந்த கலையை இப்போதே –மத்ரஸாவிலேயே- கற்று, பயிற்சி பெற்று, தரமாக வெளியே வாருங்கள்! அல்லாஹ்விடம் நன்மையும் மக்களிடம் வரவேற்பும் இக்கலைத் திறனுக்கு உண்டு.







(சந்திப்போம்)

Thursday, October 20, 2016

இளம் ஆலிம்களே உங்களைத்தான்...! (4A இணைப்பு)

அரபி இலக்கியக் கலைச்சொற்கள் பட்டியல்
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
 
மாணவக் கண்மணிகளே...!
 
சென்ற தொடரில் அரபி இலக்கியம் தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தேன். அரபி இலக்கியம், நவீன அரபி ஆகியவற்றின் கலைச்சொற்கள் மற்றும் எழுத்துச் சொற்கள் பட்டியலை இங்கு வரைபடமாக (Chart) வழங்கியுள்ளேன். இதை நகல் எடுத்து பாதுகாத்து வாருங்கள்! நிச்சயம் உதவும்.
 
வரைபடம் - Chart (07)
 

வரைபடம் - Chart (08)
 
 
வரைபடம் - Chart (09)
 
வரைபடம் - Chart (10)
 

Friday, October 07, 2016

அரபி இலக்கியம் (இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! - 4)




அரபி இலக்கியம்

லக்கியம் (LITERATURE) என்றால் என்ன என்பதை முதலில் காண்போம். கலை நயத்தோடு ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படுத்தும் படைப்பு. அது கவிதையாக, வசனமாக, சிறுகதையாக, நாவலாக எந்த வடிவத்திலும் அமையலாம். அரபி இலக்கியம் என்பதை அல்அதபுல் அரபிய்யு என்பர்.

ஒரு செய்தியைச் சாதாரண நடையில் சொல்வதற்கும் ஈர்ப்புடன் கலைநயத்தோடு வெளியிடுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. “துணி தைத்துக்கொண்டிருக்கிறாள்என்பதையே, “துள்ளும் ஊசிக்கு வேலை தரும் துணி அவள் கையில் – என்று சொன்னால் ஒரு மயக்கம் தொற்றிக்கொள்கிறதல்லவா?

2010இல் புனித ஹஜ் சென்றிருந்தபோது, புனித நகரங்களின் வீதிகளில் கண்ணில் பட்ட வாசகங்கள் என்னை ஈர்த்தன. ஒரு கண்ணாடிக் கடை விளம்பரத்தில், “உனக்காக என் கண்கள் (عيوني لك) என எழுதப்பட்டிருந்தது. வாடகைக் கார் ஒன்றின் கண்ணாடியில், “கண்ணாடியில் தெரிவதைவிட உடலே உன்னுடன்தானே இருக்கிறது (الاجسام اقرب مما تبدو في المرآة) எனப் பொறிக்கப்பட்டிருந்தது.

நம்மூர் போக்குவரத்து அதிகாரிகள், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட வேண்டாம் – என்பதை நயமாக இப்படி எழுதி வைத்திருந்தார்கள்: செல்போன் பேசியவாறு வண்டி ஓட்டாதீர்! எதிர்முனையில் அழைப்பது எமனாக இருக்கலாம்!

கலைநயத்தில் ஓர் இனிப்பு உண்டு. சொல்லாடலில் இந்த இனிப்பிற்கு ஒரு சுவை உண்டு. சொல்லில் சுவையேற்றி, செவியை விலைக்கு வாங்குவதுதான் இலக்கியத்தில் இலாபம்.

இலக்கியத்தின் சிகரம்

திருக்குர்ஆனின் நடை இதில் கைதேர்ந்தது; அற்புதமானது; மனித ஆற்றலுக்கு சவால் விடுக்கக்கூடியது. இதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு ஒன்றை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

எகிப்து இஸ்லாமிய அறிஞரும் திருக்குர்ஆன் விரிவுரையாளருமான ஷைகு தன்தாவீ அவர்கள், தமது அல்ஜவாஹிர் எனும் விரிவுரையில் குறிப்பிடுகிறார்: எகிப்து எழுத்தாளரும் இலக்கியவாதியுமான பேராசிரியர் ஷைகு கைலானி அவர்களை 13.06.1932இல் சந்தித்தேன். அவர் தமக்கேற்பட்ட அனுபவம் ஒன்றை என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

அமெரிக்கரும் கிழக்கத்திய சிந்தனையாளருமான வெங்கால் என் நண்பர். எங்களிடையே இலக்கிய உறவு பலப்பட்டிருந்த நேரம். ஒருநாள் அவர் விளையாட்டாக என்னிடம் அந்தக் கேள்வியைத் தொடுத்தார். “குர்ஆன் ஓர் (இலக்கிய) அற்புதம் என்று நீங்களுமா நம்புகிறீர்கள்? உடனே நான், “திருக்குர்ஆனின் இலக்கியத் தரத்தை முடிவு செய்ய நாமே முயலலாமே! என்றேன். வெங்காலுக்கு அரபி, ஆங்கிலம், ஜெர்மனி, ஹீப்ரு ஆகிய மொழிகள் நன்கு தெரியும் என்பது மட்டுமல்ல; மொழி ஆராய்ச்சியிலேயே வாழ்நாளைக் கழித்தவர்.

எனவே, ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்போம். அதற்கு நாமே வாக்கியம் அமைப்போம். பின்னர் அதே பொருளைத் திருக்குர்ஆனில் தேடுவோம். அதன் சொல்லாக்கத்தோடு ஒப்பிடுவோம். தெரிந்துவிடும் உண்மை- என்றேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

நாங்கள் தேர்ந்தெடுத்தது “நரகம் மிகவும் பெரியது என்ற மிக எளிதான பொருள்தான். இப்பொருளுக்கு இருவரும் சேர்ந்து சொல்லாக்கம் தர இயன்றவரை முயன்று, எங்களது மொழியாற்றல், இலக்கிய ஆற்றல் என எல்லா ஆற்றல்களையும் பயன்படுத்திப் பார்த்தோம்.

 நிச்சயமாக நரகம் மிகப் பெரியது; நாம் நினைப்பதைவிட மிகவும் விசாலமானது; நரகத்தின் அளவு மனித அறிவுக்கே எட்டாதது; நரகத்தில் முழு உலகையே அடைக்கலாம்... இப்படி 20 வாக்கியங்களை அரபி மொழியில் இருவரும் இணைந்து வார்த்தோம். இதற்குமேல் என்ன இருக்கப்போகிறது என்ற பார்வை வெங்காலிடம். இனி நீங்கள் குர்ஆனின் இலக்கிய நயத்தைக் காட்டலாம் என்றார்.

திருக்குர்ஆனுக்குமுன் நாம் மழலைகள் என்பது உறுதியாகிவிட்டது என்றேன். எப்படி என்று வியப்போடு கேட்டார் மொழி ஆராய்ச்சியாளர்.

அன்று நரகத்திடம் கேட்போம் - يَوْمَ نَقُوْلُ لِجَهنَّمَ

உன் வயிறு நிரம்பிவிட்டதா...? - هَلِ امْتَلَئْتِ

அது சொல்லும் - وَتَقُوْلُ

இன்னும் இருக்கிறதா? (50:30) - هَلْ مِنْ مَزِيْد

அதிர்ந்து போனார் வெங்கால். முகம் மலர்ந்தது. குர்ஆனின் இலக்கியத் தேன்மழையில் நனைந்தார்; நாணிப்போனார். நீங்கள் சொன்னது உண்மை! திறந்த மனத்துடன் ஏற்கிறேன்- என்றார் அமெரிக்கரான வெங்கால். இது புதுக்கவிதை அல்ல; புனித மறையின் உயர்நடை. திருக்குர்ஆனின் இலக்கிய அற்புதத்திற்கு, போதும் இந்த ஒரு சான்று.

பாடப் புத்தகங்கள்

அரபி இலக்கியம் கற்பிப்பதற்காக மத்ரஸா பாடத்திட்டத்தில் மூன்று வகையான பாடப் புத்தகங்கள் உண்டு. 1. சொல்லணிக் கலை (இல்முல் மஆனி) 2. சொல்லாட்சிக்கலை (இல்முல் பயான், அல்லது இல்முல் பலாஃகா) 3. அணியிலக்கணம் (இல்முல் பதீஉ)

இல்முன் மஆனீ: கேட்போரின் தகுதிக்கும் நிலைக்கும் ஏற்ப அமைகின்ற வகையில் அரபி மொழிச் சொல்லை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கும் கலை. வாக்கியத்தில் ஒரு சொல்லை விட்டுவிடுவது, முந்தி அல்லது பிந்திச் சொல்வது, உறுதிப்படுத்திக் கூறுவது அல்லது சாதாரணமாகக் குறிப்பிடுவது.. போன்ற நிலைகள் உதாரணம்.

இல்முல் பயான்: ஒரு செய்தியை விவரிக்கும்போது பல்வேறு வழிகளைக் கையாளும் முறைகளை விவரிக்கும் கலை. நேர்பொருள் அல்லது சொற்பொருள் (ஹகீகத் - PROPERSENSE), மாற்றுப் பொருள் (மஜாஸ் - TROPE), ஆகுபெயர் (கிநாயா-METONYMY), சிலேடை (தவ்ரியா - EQUIVOKE), செம்மொழிச் சிலேடை (ஜினாஸ் - PARONOMASIA), முரணிசைவு நயம் (திபாக் - ANTITHESIS)... போன்ற இலக்கியக் கூறுகளை இதன் மூலம் அறியலாம்.

இல்முல் பதீஉ: முதலிரண்டு கலைகளின் விதிகளோடு, சொல் அலங்காரத்திற்கான வழிகளைக் கற்பிக்கும் கலை. எடுத்தது விடுத்து அடுத்தது விரித்தல் (இஸ்தித்ராது - EXCURSION), சுருட்டி பின்பு விரித்தல் (லஃப்பு நஷ்ர் - INVOLUTION AND EVOLUTION)... போன்ற இலக்கிய நடைகளை இது எடுத்துரைக்கும்.

இக்கலைகளைக் கற்றுத் தேறியிருந்தால்தான் குர்ஆனிலும் ஹதீஸிலும் புதைந்திருக்கும் இலக்கியச் சுவையை ரசிக்கவும் அசைபோடவும் உட்பொருளைக் கண்டறியவும் முடியும். மார்க்கக் கல்விக்கு இலக்கியம் எதற்கு என்று எண்ணிவிடாதீர்கள்! மார்க்கத்தையும் நயமாகத்தானே சொல்ல வேண்டியதிருக்கிறது! எனவே, ஆசையோடு பயிலுங்கள். இலக்கிய நதியில் நீந்துங்கள். இதுதான் சரியான தருணம்! வாய்ப்பை நழுவவிடாதீர்கள். இப்பாடம்  நான்கு மற்றும் ஐந்தாவது ஆண்டுகளில் நடத்துவது வழக்கம்.

நவீன அரபி

அரபிக் கல்லூரி மாணவர்கள், மத்ரஸாவில் இருக்கும் காலத்திலேயே நவீன அரபி மொழியையும் (MODERN ARABIC) எப்பாடுபட்டாவது கற்றுக்கொண்டுதான் வெளியேற வேண்டும். நடப்பில் உள்ள அரபி மத்ரஸா பாடப் புத்தகங்கள் வாயிலாகவோ கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதைப் போல் பேசிப்பேசிப் பழகுவதற்கு வாய்ப்போ இல்லாததால் அதன் மூலமோ நவீன அரபியைக் கற்க இயலாத சூழ்நிலையே பெரும்பாலோருக்கு உண்டு.
நவீன அரபியைக் கற்கச் சொல்வதற்குக் காரணம், அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு தேடுவதற்காக அல்ல. இன்றைக்கு அரபு நாடுகளிலிருந்து அரபி அறிஞர்கள் எழுதுகின்ற அற்புதமான மார்க்க நூல்கள் நாள்தோறும் வெளிவந்தவண்ணமுள்ளன. அவர்கள் பெரும்பாலும் இன்றைய நவீன அரபிமொழியிலேயே நூல்களை எழுதி வருகிறார்கள்.

திருக்குர்ஆனின் ஒரு வசனத்தையோ நபிமொழி ஒன்றையோ சான்றோரின் அமுதமொழி ஒன்றையோ எடுத்துக்கொண்டால், நமது பார்வை கடிவாளமிடப்பட்ட குதிரையின் பார்வைபோல், மத்ரஸாவில் கேட்ட ஒரே திசையை நோக்கியே செல்கிறது. வசனத்திலுள்ள இலக்கண இலக்கியக் கூறுகள், ஏதேனும் சட்டங்கள், வரலாற்றுக் குறிப்புகள் மீறிமீறிப் போனால் வசனம் அருளப்பெற்ற பின்னணி-இத்தோடு நின்றுவிடுகிறது நம் தேடல்.

ஆனால், அரபி அறிஞர்களின் பார்வை விசாலமானது. இறைமொழியிலும் நபிமொழியிலும் பொதிந்துள்ள அரசியல், அறிவியல், இலக்கியம், குடும்பவியல், சமூகவியல், பொருளியல், வணிகவியல், வேளாண்மை, தொழில்... என இன்றைய உலகுக்கு வழிகாட்டும் எல்லா இயல்களையும் அவர்களின் எழுத்துத் தொட்டுச் செல்வதைக் காண முடியும்.

அவ்வாறே, அரபுலகிலிருந்து வெளிவரும் தினசரிகள், வார-மாத இதழ்கள், ஆய்வுக் கட்டுரைகள், புதிய பிரச்சினைகளுக்கான மார்க்கத் தீர்ப்புகள் முதலானவற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள இந்த நவீன அரபிதான் கைகொடுக்கும். இவற்றை வாசிக்க எங்கோ போக வேண்டியதில்லை. எல்லாம் இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

பழையதும் புதியதும்

நவீன அரபியில் பழைய சொல்லைப் புதிய பொருளில் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, முபாஷரத் (مباشرة) – மேற்கொள்ளல்; தஸ்வீத் (تصويت) – வாக்கு (வோட்டு) அளித்தல்; முஃகாதரா(مغادرة) - புறப்படுதல்; தத்பீக் (تطبيق) - செயல்படுத்துதல்; முஅவ்வகூன் (المعوقون) – மாற்றுத்திறனாளிகள்; ஷிர்கத் (الشركة) – நிறுவனம் (கம்பெனி)... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அவ்வாறே, புதிய சொல்லைப் பழைய பொருளுக்குப் பயன்படுத்துவர். நடிகன்- முமஸ்ஸில் (ممثل); கொண்டுவந்தான்-ஜாப (جاب); குறைத்தல் – தக்ஃபீப் (تخفيف); பங்கெடுத்தல் - முசாஹமத் (مساهمة); அர்ப்பணித்தல்-தக்ரீஸ் (تكريس); எட்டுதல் – தராவுஹ் (تراوح) ... இப்படி நிறைய!

பேச்சு வழக்கைப் பார்த்தோமென்றால், நமக்கு ஒன்றுமே புரியாது. நத்திர் (ندر) – வெளியே எடு; இத்லஉ (اطلع) - புறப்படு; ஷுஃப் (شف) - பார்; ஃபக்கில் பாப் (فك الباب) – கதவைத் திற; சுக்கல் பாப் (سك الباب) – கதவை மூடு; மூயா (مو يا) - தண்ணீர்; கல்லி அஸ்ஃபல் (خل اسفل) – கீழேயே இருக்கட்டும்; ஃபில்லி இப்ரீக் (فل ابريق) – பானையை நிரப்பு; கீஸ் தய்யிப் (قيس طيب) – சரியாக அள!

நல்ல வாக்கிய அமைப்பில்கூட வித்தியாசம் உண்டு. “அவர் நீண்ட சுற்றுப் பயணம் செய்திருந்தாலும் - (رغم جولته الطويلة); மேலும் சொன்னார்: (كما قال); நாம் முஸ்லிம்கள் என்ற முறையில் - (نحن كمسلمين); இந்தப் பிரச்சினை குறித்து - (حول هذه القضية); இதையொட்டி - (بهذه المناسبة); இதற்குப் பொருளல்ல - (هذا لا يعني); அல்லாஹ்வின் உதவியால் - (بحول الله); அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் - (لا سمح الله); மீண்டும் சொன்னார் - (اضاف من جديد)... இவ்வாறு ஏராளமான வழக்குகள் உண்டு.
(சந்திப்போம்)