Sunday, May 20, 2018

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!
12
அ. முஹம்மது கான் பாகவி
அதுவென்ன சுன்னத் வல்ஜமாஅத்?
அறிவும் ஆர்வமும் மிக்க மாணவக் கண்மணிகளே! ‘அகீதா’ எனும் கொள்கைவியலைப் பயில்கையில் முக்கியமாக நீங்கள் அறிந்து அசைபோட வேண்டிய விஷயம், மாறுபட்ட சிந்தனைக் குழுக்கள் பற்றியும் சரியான சிந்தனை எது என்பது பற்றியும் ஆய்வு செய்வதுதான்.
அதுவும் மேலோட்டமாக இல்லாமல், சற்று ஆழமாகவே அறிந்துகொண்டால்தான், பாதை மாறாமல் சரியான பாதையில் செல்ல ஏதுவாயிருக்கும்; மக்களை நல்வழிப்படுத்தவும் உதவியாயிருக்கும்.
ஒரு நெடிய வரலாற்றை உடைய இஸ்லாம் போன்ற ஒரு தத்துவத்தில் -உலகளாவிய அளவில் பல மொழி, பல நிற, பல பிராந்திய மக்கள் தமது வாழ்க்கை நெறியாகக் கொண்டுள்ள ஒரு மார்க்கத்தில்- கருத்து வேறுபாடுகளும் சிந்தனை மாற்றங்களும் இருப்பது இயல்பான ஒன்றே!
இந்த வேறுபாடுகளும் வித்தியாசங்களும் பழக்கவழக்கங்களில் தொடங்கி, நம்பிக்கைகள்வரை விரவி காணப்படுவதும் சகஜமான ஒன்றுதான்.
இதைத் தத்துவப் பிழையாகக் கொள்வதைவிட, அணுகுமுறையிலும் பார்வையிலும் ஏற்பட்ட கண்ணோட்ட வேறுபாடாக எடுத்துக்கொள்வதே எதார்த்தத்திற்கு நெருக்கமான ஒரு முடிவாக இருக்கும்.
இதைவிடுத்து, ஒட்டுமொத்தக் கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளுவதோ, சிஸ்டத்தின் கோளாறு என்று சொல்லி மார்க்க அமைப்பையே குறைசொல்வதோ, ஒருவரை ஒருவர் வசைபாடியே எதிரியை வாழவைப்பதோ அறிவுடைமை ஆகாது.
ஆனால், ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மார்க்கத்தின் மூலாதாரங்களையும் முடிவெடுப்பதற்கான அளவுகோலாக விளங்கும் தரவுகளையும் ஆராய்ந்து பார்த்து, நடுநிலையோடு நின்று சீர்தூக்கிப் பார்த்து, எந்தக் கருத்துச் சரியானது; அல்லது உகந்தது என்ற ஆய்வை மேற்கொள்வது ஒவ்வொரு குழுவினரின் கடப்பாடு ஆகும்.
நபிகளாரின் முன்னறிவிப்பு
“இஸ்ரவேலர்கள் எழுபத்து இரண்டு பிரிவினராகப் பிரிந்துபோயினர். என் சமுதாயம் எழுபத்து மூன்று பிரிவினராகப் பிரிந்துபோவர். அவர்களில் ஒரு பிரிவினர் தவிர, மற்ற அனைவரும் நரகம் செல்வர்” என்று நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை அறிவித்தார்கள்.
அப்போது தோழர்கள், “அந்த ஒரு பிரிவினர் யார், அல்லாஹ்வின் தூதரே?” என வினவினர். அதற்கு நபியவர்கள், “நானும் என் தோழர்களும் எவ்வழியில் உள்ளோமோ அவ்வழி செல்பவர்கள்” என விடையளித்தார்கள். (திர்மிதீ - ஹசன் ஃகரீப்)
மற்றோர் அறிவிப்பில் காணப்படுவதாவது: இன்று நானும் என் தோழர்களும் எவ்வழியில் இருக்கிறோமோ அவ்வழியில் செல்பவர்கள். (ஹாகிம்)
நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடி 73 கூட்டங்களில் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் தவறானவை; சீர் கெட்டவை ஆகும். அதனால்தான் அவற்றின் முடிவு நரகமாகிவிட்டது. சரியானது; சீரானது ஒன்றுதான். அதனாலேயே, அது சொர்க்கம் செல்கிறது.
சீர்கெட்ட 72 கூட்டங்களுக்கு அசலாகவும் அடிப்படையாகவும் அடையாளம் காணப்பட்டவை 7 பிரிவுகளாகும்.
ஏழு பிரிவுகள், 72 கூட்டங்கள்
1. முஅதஸிலா. இவர்களின் வேறுபட்ட கொள்கைகளாவன: மனிதன்தான் தன் செயல்களைப் படைக்கிறான் (இறைவன் அல்ல). இறைவனைச் சொர்க்கத்திலும் பார்க்க முடியாது. நல்லறத்திற்கு நன்மையும் தீமைக்குத் தண்டனையும் அளிப்பது இறைவன்மீது கட்டாயம்.
இவர்களில் இருபது உட்பிரிவுகள் உள்ளனர்.
2. ஷீஆ. நபித்தோழர் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்மீது எல்லை கடந்த பாசம் கொண்டவர்கள். இவர்களில் 22 உட்பிரிவுகள் உள்ளனர். அலீ (ரலி) அவர்களுக்குத்தான் நபித்துவம் கிடைத்திருக்க வேண்டும்; வானவர் ஜிப்ரீல் தவறிழைத்துவிட்டார் -என்று கூறுவோரும் அவர்களில் உள்ளனர்.
நபித்தோழர்களான அலீ (ரலி), அம்மார் (ரலி), மிக்தாத் (ரலி), சல்மான் (ரலி) ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் காஃபிர்கள் -என்று கூறும் ராஃபிஸ்களும் அவர்களில் அடங்குவர்.
3. கவாரிஜ்கள்: இஸ்லாமிய கிலாஃபத் ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியைத் தொடங்கியவர்கள் ‘கவாரிஜ்கள்’ அல்லது ‘காரிஜிய்யாக்கள்’ என அறியப்படுகிறார்கள். தீவிரப்போக்கு கொண்ட இவர்கள், அலீ (ரலி) அவர்களையே ‘காஃபிர்’ என்று பிரகடனப்படுத்தினர். ‘அவ்வாறே, பெரும் பாவம் செய்யும் ஒவ்வொருவரும் இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்கள் என்று கருதினர்.
இருபது உட்பிரிவுகளைக் கொண்ட காரிஜிய்யாக்கள், அலீ (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்களைக் கடுமையாக விமர்சித்துவந்தனர்.
4. முர்ஜிஆ: இவர்கள், ஓரிறை நம்பிக்கை (ஈமான்) இருந்துவிட்டாலே போதும்; பாவங்கள் பாதிப்பை ஏற்படுத்தா என்று கூறுகிறார்கள். எப்படி, ஓரிறை மறுப்பு (குஃப்ர்) இருக்கையில் செய்யப்படும் நல்லறங்கள் பயனளிக்காதோ அப்படித்தான் இதுவும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.
முர்ஜிஆக்களில் 5 உட்பிரிவுகள் உள்ளனர்.
5. நஜ்ஜாரிய்யா: மனிதனின் செயல்கள் அல்லாஹ்வால் படைக்கப்படுபவைதான் என்று ஒப்புக்கொள்ளும் இவர்கள், முஅதஸிலாக்கள்போல், இறைவனுக்குப் பண்புகள் (ஸிஃபாத்) என்று எதுவுமில்லை என்பார்கள். அவ்வாறே, இறைமறை, இறையுரை எல்லாம் படைப்புகள் என்று ‘நஜ்ஜாரிய்யா’க்கள் கூறுவர்.
இவர்களில் 3 உட்பிரிவுகள் இருக்கின்றனர்.
6. ஜப்ரிய்யா: மனிதனுக்குச் சுய விருப்பம் என்று எதுவுமில்லை; அவன் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டவன் என்று இவர்கள் கூறுவர். மனிதன் நினைத்தாலும் தன் விருப்பப்படி செயல்பட இயலாது. அவன் செயலுக்கு அவன் பொறுப்பு அல்ல. இறைவன்தான் பொறுப்பு -என்று கருதும் இவர்களில் உட்பிரிவு கிடையாது.
7. முஷப்பிஹா: படைப்புகளைப் போன்றே படைப்பாளனுக்கும் முப்பரிமாண உடல் உண்டு; மற்றப் பொருட்களைப் போன்றே இறைவனும் இடத்தை அடைத்துக்கொள்ளும் சரீரம் உடையவன் என்று நம்புகிறார்கள் இவர்கள். இதனாலேயே, ‘படைப்புக்கு ஒப்பிடுவோர்’ எனும் பொருளில் ‘முஷப்பிஹா’ என இவர்கள் அழைக்கப்படுகின்றனர். இவர்களிலும் உட்பிரிவு இல்லை.
ஆக, முஅதஸிலா - 20 பிரிவுகள்; ஷீஆ - 22 பிரிவுகள்; காரிஜிய்யா - 20 பிரிவுகள்; முர்ஜிஆ - 5 பிரிவுகள்; நஜ்ஜாரிய்யா - 3 பிரிவுகள்; ஜப்ரிய்யா - 1 பிரிவு; முஷப்பிஹா - 1 பிரிவு.
ஆக மொத்தம் - 72 பிரிவுகள் நடுநிலை தவறிய, தீவிரப் போக்கு கொண்ட, நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் கொண்டிருந்த நம்பிக்கைகளுக்கு எதிரான சிந்தனை கொண்ட கூட்டங்கள் ஆவர்.
அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்
சொர்க்கம் செல்லும் ஒரே வெற்றிக் கூட்டம் இறைத்தூதரையும் அவர்கள்தம் தோழர்களையும் நம்பிக்கையாலும் நடத்தையாலும் பின்பற்றக்கூடியவர்களே! இவர்கள்தான் நபிகளார் சுட்டிக்காட்டியபடி, “நானும் என் தோழர்களும் எவ்வழியில் உள்ளோமோ அவ்வழி செல்பவர்கள்” என்ற வரைமுறைக்கு ஏற்ப நடப்பவர்கள் ஆவர்.
‘நான் செல்லும் வழி’ என நபியவர்கள் குறிப்பிட்டதுதான், ‘சுன்னத்’ ஆகும். ‘என் தோழர்கள் சென்ற வழி’ என்பதுதான், ‘ஜமாஅத்’ ஆகும். இந்த இரண்டையும் இணைத்தே, ‘சுன்னத்தையும் ஜமாஅத்தையும் பின்பற்றுவோர்’ என்ற பொருளில் ‘அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்’ (நபிவழி மற்றும் நபித்தோழர்கள் வழி உடையோர்) என இக்கூட்டத்தார் அறியப்படுகின்றனர்.
ஆக, குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ (ஜமாஅத்), சிக்கலான -புதிய- பிரச்சினைகளில் இம்மூன்றின் அடிப்படைக்கு மாற்றமில்லாமல் இமாம்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வு எனும் இஜ்திஹாத், அல்லது கியாஸ் ஆகியவற்றைப் பின்பற்றி ஒழுகுவோரே வெற்றிபெறும் கூட்டத்தார் ஆவர்.
இந்த சுன்னத் வல்ஜமாஅத்தார்தான், இன்றைய உலக முஸ்லிம்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் என்பது குறிப்பிடத் தக்கது. பெயரைப் போன்றே, இவர்களின் நம்பிக்கைகளும் வழிபாடுகளும் நபிவழி மற்றும் நபித்தோழர்கள், இமாம்கள் வழியை ஒட்டியதாக இருக்கும்.
சரியான கொள்கைகள்
1. ‘முஅதஸிலாக்கள்’போல், “மனிதனே தன் செயல்களைப் படைத்துக்கொள்கிறான்” என்று சுன்னத் வல்ஜமாஅத்தினர் சொல்லவுமாட்டார்கள். அதற்காக “மனிதனுக்குச் சுயவிருப்பம் என்பதே கிடையாது” என்று ‘ஜப்ரிய்யாக்கள்’ வாதிடுவதைப் போன்று சொல்லவுமாட்டார்கள்.
மாறாக, மனிதனுடைய செயல்களை மட்டுமல்ல; அவன் எண்ணங்களையும்கூட இறைவனே படைக்கின்றான்; உருவாக்குகின்றான் -என்பதே சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களின் நம்பிக்கையாகும். திருமறை குர்ஆன் சொல்வதுதான் இந்தக் கொள்கை.
உங்களையும் நீங்கள் செய்கின்றவற்றையும அல்லாஹ்தான் படைத்தான் (என்று இப்ராஹீம் கூறினார்). (37:96)
அல்லாஹ் நாடுவதைத் தவிர (வேறு எதையும்) நீங்கள் நாடுவதில்லை. (76:30)
அதே நேரத்தில், நன்மை அல்லது தீமையை, உயர்வு அல்லது தாழ்வை, அழுகை அல்லது புன்னகையைத் தேர்ந்தெடுக்கும் சுய விருப்பம் மனிதனுக்கு உண்டு. இதுவும் அருள்மறை குர்ஆன் அறிவிப்பதுதான்:
அது (ஆன்மா) தேடிக்கொண்ட நன்மை அதற்கே உரியது; அது தேடிக்கொண்ட தீமையும் அதற்கே உரியது. (2:286)
மனிதக் கரங்கள் தேடிக்கொண்டதன் விளைவாகத் தரையிலும் கடலிலும் சீரழிவு தோன்றிவிட்டது. (30:41)
2. சுன்னத் வல்ஜமாஅத்தாரின் மற்றொரு நடுநிலைக் கொள்கையைப் பாருங்கள். நபித்தோழர் அலீ (ரலி) அவர்களை ஷியா பிரிவினரைப் போன்று அளவுக்குமேல் உயர்த்தவுமாட்டார்கள்; காரிஜிய்யாக்கள்போல் தாழ்த்தவும்மாட்டார்கள்.
மாறாக, அலீ (ரலி) அவர்களை எந்த அளவிற்கு மதிக்கிறார்களோ, அதே அளவிற்கு அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருபெரும் (ஷைகைனி) நபித்தோழர்களையும் மதிப்பார்கள்; தம் குடும்பத்தாருக்குத் தனியான குர்ஆன் இருக்கிறது என்று அலீ (ரலி) அவர்களே, ஒருமுறைகூடச் சொன்னதில்லை என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளார்கள்.
ஆதாரபூர்வமான நபிமொழிகளைக் காணுங்கள்:
(இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால், அபூபக்ர் அவர்களையே ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும் (இன்பத்திலும் துன்பத்திலும்) என் தோழரும் ஆவார். (புகாரீ-3656)
உமரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக்கூடிய ஒரு (அபூர்வ) தலைவரை நான் கண்டதில்லை. (புகாரீ-3682)
அலீ (ரலி) அவர்களை நோக்கி, நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன் -என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ-2699)
பொதுவாக, நபித்தோழர்கள் அனைவர்மீதும் அபரிமிதமான மதிப்பும் மரியாதையும் கொள்ள வேண்டும்; அவர்களில் யாரையும் இழிவாகக் கருதக் கூடாது; அவமரியாதையாகப் பேசக் கூடாது என்பதே சன்னி முஸ்லிம்களின் போற்றத் தக்க நம்பிக்கையாகும்.
“நபித்தோழர்கள் அனைவரும நேர்மையாளர்கள் -என்பதே அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாத்தார் கொள்கையாகும்; இறைவேதமும் நபிமொழியும் நபித்தோழர்களை -அவர்களின் குணநலன்கள், செயல்கள், தியாகங்கள் அனைத்தையும்- பாராட்டியிருப்பதே இதற்குக் காரணம்” -என இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள். (இக்த்திஸாரு உலூமில் ஹதீஸ்)
3. முர்ஜிஆக்களைப் போல் இறைநம்பிக்கை (ஈமான்) மட்டும் போதும்; பாவங்களால் எந்தப் பாதிப்புமில்லை -என்று சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்கள் சொல்லவுமாட்டார்கள்; காரிஜிய்யாக்களைப் போல், பெரும் பாவம் செய்பவர் ‘காஃபிர்’ (இறைமறுப்பாளர்) என்று சொல்லவுமாட்டார்கள்.
மாறாக, இறைநம்பிக்கையாளர் ஒருவர் பாவம் செய்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். நாடினால் அவன் மன்னிக்கலாம். நாடினால் தண்டிக்கலாம். தண்டனைக் காலம் முடிந்தபின் சொர்க்கத்திற்கு அனுப்புவான். நிரந்தர நரக வேதனை என்பது, முஃமினுக்குக் கிடையாது -என்பதே எமது கோட்பாடாகும்.
மறுமையில் நபி (ஸல்) அவர்கள் செய்யும் பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பான நீண்ட ஹதீஸ் ஒன்றில் பின்வருமாறு இடம்பெறுகிறது:
“யாருடைய உள்ளத்தில் அணுவளவு ஈமான் உள்ளதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுவீராக” என அல்லாஹ் என்னிடம் கூறுவான். (புகாரீ-7510)
இவர்களே சுன்னத் ஜமாஅத்தினர்.
ஆக, பல்வேறு தரப்பட்ட, வேறுபட்ட, வித்தியாசமான கொள்கையாளர்களுக்கு மத்தியில், இறைமறையும், இறைத்தூதரும் நபித்தோழர்களும் இமாம்களும் எந்தக் கொள்கை கோட்பாட்டைக் காட்டியுள்ளார்களோ அவற்றை ஏற்று நம்பி, செயல்படுகின்ற வெற்றிக் கூட்டமே சுன்னத் வல்ஜமாஅத் முஸ்லிம்கள் ஆவர்.
இதை விடுத்து, இன்றைய முஸ்லிம்களிடம் ஊடுருவிவிட்ட அநாசாரங்கள், மார்க்கத்தின் பெயரால் செய்யப்படும் புதுப்புது அனுஷ்டானங்கள், மூடக்கொள்கைகள் ஆகியவற்றை நம்புகின்றவர்கள்தான் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் என்ற முற்றிலும் தவறான கண்ணோட்டம் களையப்பட வேண்டியதாகும்.
இவற்றில் சில, ‘ஷியா’க்களிடமிருந்தும் இன்னும் சில பிற மதங்களிலிருந்தும் முஸ்லிம்களிடம் பரவியவை ஆகும்.
முஹர்ரம் மாதத்தில் பஞ்சா எடுப்பது, தீ மிதிப்பது, மார்பில் அடித்துக்கொள்வது, அதைப் புனிதமாகக் கருதுவது, பெரியார்கள் பெயரில் சந்தனக்கூடு தூக்குவது, உர்ஸ் என்ற பெயரில் நடக்கும் ஆட்டம் பாட்டங்கள், ஸஃபர் மாதத்தில் ‘ஸஃபர் கழிவு’ என்று சொல்லி நடக்கும் பித்அத்கள், திக்ர் அல்லது ஸலவாத் என்ற பெயரில் நடக்கும் குத்தாட்டம், ‘பேய்விரட்டல்’ என்று காரணம் காட்டி, போடும் பேயாட்டங்கள், பந்தக்கால் விசேஷம், திருஷ்டி கழிப்பிற்காக பூசணிக்காய் உடைத்தல், பெரியார்கள் அடக்கத் தலங்களில் நடக்கும் மயிலிறகு பூச்சு, தவாஃப், சஜ்தா… இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதற்கெல்லாம் மார்க்கத்தில் இடமுண்டா? சுன்னத் வல்ஜமாஅத்தின் மூலாதாரங்களில் எதிலாவது சான்று உண்டா? இதுவெல்லாம் தடை செய்யப்பட்டுள்ள அநாசாரங்கள் என்று பிரசாரம் செய்து, தடுக்க முயல்வோரை ‘வஹ்ஹாபிகள்’ என்ற பயங்கரவாதிகள் என்று வசைபாடலாமா?
இந்த அநாகரிகங்கள் தீனின் பெயரால் நடைபெறும்போது அவை பாவச்செயல்கள் அல்லவா? பாவத்தை பாவம் என்று சொல்லாமல் அனுமதிப்பதோ, மௌனம் காப்பதோ பெருங்குற்றம் அல்லவா?
எல்லாவற்றையும்விட மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், இவற்றை அனுமதிப்பதுதான் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை என்று பாமரர்கள் நம்புகின்ற நிலையை உருவாக்கிவிட்டு, எதிர்ப்பவர்களைத் தீண்டத் தகாதவர்கள்போல் நடத்துவதுதான்.
இன்னொரு பக்கம், பித்அத்களைச் செய்வோர் எல்லாம் ‘இணைவைப்பாளர்கள்’ ஆவர் என்று ‘ஃபத்வா’ கொடுத்து, இஸ்லாத்திலிருந்தே வெளியேற்றும் கொடுமையும் நடக்கிறது.
மாணவக் கண்மணிகளே! இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும். எதார்த்தம் என்ன என்பதை அறிந்து தெளிய இப்போதே உழைக்க வேண்டும்.
(சந்திப்போம்)

Wednesday, May 16, 2018

வல்லவரெல்லாம்_நல்லவரா?

வல்லவரெல்லாம்_நல்லவரா?

#கான்_பாகவி

ஒருவர் வல்லவராக இருப்பதால் நல்லவராகவும் இருப்பார் என்று நம்புவது, நம்பியவரின் தவறு. வல்லவராக இருப்பவரெல்லாம் நல்லவரும் அல்லர்; நல்லவராக இருப்பவரெல்லாம் வல்லவரும் அல்லர். வல்லவரில் சிலர் நல்லவராகவும் இருக்கலாம்! நல்லவரில் சிலர் வல்லவராகவும் இருக்கலாம்!

ஒருவர் நல்லவரும் அல்லர்; காரணம், நல்லவருக்கான குணநலன்கள் அவரிடம் இல்லை; வல்லவரும் அல்லர்; காரணம், வல்லவருக்கான திறமைகள் அவரிடம் இல்லை. மிக அரிதாகவே, ஒருவர் வல்லவராகவும் இருப்பார்; நல்லவராகவும் இருப்பார்.

வல்லவர் – என்றால் என்ன பொருள்? ஒன்றைச் செய்வதில் மிகுந்த திறமை உடையவரே வல்லவர் எனப்படுகிறார். அவர் பேச்சில் வல்லவர்; அவர் துப்பாக்கிச் சுடுவதில் வல்லவர் என்று கூறுவர். ஆக, ‘வல்லவர்’ (Adept) என்பது, ஆற்றல், சக்தி, திறன் ஆகிய வலிமை (Power)  சார்ந்த பண்பு.

நல்லவர் – என்றால் யார்? பொதுவாக மனிதர்களிடம் எதிர்பார்க்கப்படும் ஒழுங்கு, நற்குணம், நன்னடத்தை முதலியவை உடையவரே நல்லவர் எனப்படுவார். ஆக, ‘நல்லவர்’ என்பது, நடத்தை, செயல்பாடு குறித்த பாராட்டத் தகுந்த, தீயதாக இல்லாத, பண்பாடு சார்ந்த (Character) பண்பு.

*மார்க்க ஒளியில்*

இஸ்லாத்தில் ‘நல்லவர்’ (ஸாலிஹ்) என்பதற்கு, இறைவனுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமைகளையும் அடியார்களுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமைகளையும் முறையாக நிறைவேற்றுபவரே ‘நல்லவர்’ (ஸாலிஹ்) எனப்படும். ‘நல்லடியார்’ என்பதற்குச் சிலர் இலக்கணம் சொல்கையில், மார்க்கம் எதிர்பார்க்கும், அல்லது மார்க்கம் திருப்திகொள்ளும் வகையில் யாருடைய செயல்பாடு அமைகிறதோ அவரே ‘நல்லடியார்’ ஆவார் என்று கூறுகின்றனர்.

திருக்குர்ஆனில், வெற்றியடைந்த இறைநம்பிக்கையாளர்கள் குறித்து ‘அல்முஃமினூன்’ அத்தியாத்தின் (23) தொடக்கத்தில் குறிப்பிடுகையில் அறுபெரும் பண்புகளைச் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்:

1. உள்ளச்சத்துடன் தொழுவது 2. வீண் செயல்களிலிருந்து விலகிவிடுவது 3. கட்டாய தர்மம் (ஸகாத்) வழங்குவது 4. கற்பொழுக்கம் பேணுவது 5. கையடைப் பொருட்களையும் ஒப்பந்தங்களையும் பேணிக் காப்பது 6. தொடர்ந்து தொழுகையைக் கடைப்பிடிப்பது. இப்பண்பாளர்களுக்கு ‘ஃபிர்தவ்ஸ்’ எனும் உயர் சொர்க்கம் கிடைக்கும். (23:1-11)

*வரலாற்று ஒளியில்*

இறைத்தூதர்களான நபிமார்கள் ஒவ்வொருவரையும் திருக்குர்ஆன் ‘நல்லவர்’ (ஸாலிஹ்) எனச் சான்று பகர்கின்றது. அவர்களில் நபி தாவூத் (அலை), சுலைமான் (அலை) போன்றோரை ‘வல்லவர்கள் என்றும் இனம்காட்டுகிறது. (12:15-19)

உலக சர்வாதிகாரி ஃபிர்அவ்ன் (ஃபாரோ), அவன் அமைச்சரவையில் முதன்மை அமைச்சராக இருந்த ஹாமான், இஸ்ரவேலர்களில் அழகும் செல்வமும் மிகுந்த பெரும் பணக்காரன் காரூன் (கோராகு) ஆகியோர்பற்றிக் குறிப்பிடும்போது, இவர்களெல்லாம் வல்லவர்களாக இருந்தார்களே தவிர, நல்லவர்களாக இருக்கவில்லை என்கிறது. (29:39)

இறுதித் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ‘வல்லவராக’ இருந்த அதே நேரத்தில், வல்லமையை முதன்மைப்படுத்தவில்லை; நல்லவர் பண்புகளுக்கே முதலிடம் அளித்தார்கள்; அதனாலேயே வென்றார்கள்.

எனவே, வல்லவரெல்லாம் நல்லவர் என்று தவறாகக் கணித்து, மக்கள் குழம்பிக்கொள்ள வேண்டாம்! அறிவு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு ஆகியவற்றில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் பெரும்பாலோர் இறைமறுப்பாளர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்! அவர்கள் தங்கள் திறமைமீது நம்பிக்கைகொண்டார்கள்; திறமையை வழங்கிய இறைவனை மறந்தார்கள்.

Thursday, May 10, 2018

#அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பிரச்சினை தொடர்பான காலச்சுவடு பத்திரிகையின் தலையங்கத்திற்கு நான் எழுதிய கடிதம்#

#அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பிரச்சினை தொடர்பான காலச்சுவடு பத்திரிகையின் தலையங்கத்திற்கு நான் எழுதிய கடிதம்#

*அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு…*

‘கல்வித் தரகர்கள்’ எனும் தலையங்கம் வாசித்து முடித்தபோது மனம் வலித்தது. தக்க தருணத்தில் முறையாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

உயர் கல்வித் துறையில் காணப்படும் மோசடிகளைப் பார்க்கும்போது, அன்றாடம் நடக்கும் அற்ப சொற்ப ஊழல் எனக் கருதி மௌனமாகக் கடந்துபோக இயலவில்லை. கட்டணமில்லாக் கல்வியே அரசின் அறைகூவலாகக் காட்சிப்படுத்தப்பட்டுவரும் வேளையில், “காசின்றி கல்வி இல்லை” என்ற எதார்த்தம் சுடுகிறது; பிடரியில் ஓங்கி அறைகிறது.

அறிவிற்கும் அறத்திற்கும் வழிகாட்ட வேண்டிய கல்விக் கூடங்கள், கலவிக் கூடங்களாக மாறிவிடுமோ என்ற அச்சம் முள்ளாய் குத்துகிறது. அடியிலிருந்து உச்சிவரை பணம் பண்ணும் தொழிற் கூடங்களாகவும் அவை மாறிப்போன நிஜம், நிஜமாகவே நோகடிக்கிறது. இதையெல்லாம் நோக்குகையில், கல்வித் திட்டத்தில் எங்கோ கோளாறு இருப்பது உறுதியாகிறது.

“Teacher is Second Mother” என நமக்கெல்லாம் சொல்லிக்கொடுத்தார்கள்; ஆசிரியர்கள் அன்னையராகவே விளங்கவும் செய்தார்கள்; மாணவர்களின் கல்வி அறிவில் மட்டுமன்றி, அவர்களின் ஆரோக்கியம், குடும்ப நலன், அறநெறி ஆகியவற்றிலும் தாயைப் போன்றே அக்கறை செலுத்தினார்கள். பணம் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை; பண்பே பிரதானமாக இருந்தது.

சுயநலமற்ற நல்லாசிரியர்கள் மட்டும் கிடைத்திருக்காவிட்டால், செய்தித்தாள் வினியோகித்து, அதில் கிடைத்த சில்லறைகளை வைத்துக்கொண்டு, படித்துப் பல பட்டங்கள் பெற்று, பிற்காலத்தில் விஞ்ஞானியாகி பெருமை சேர்த்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்றோரை இந்நாடு கண்டிருக்குமா? அவர்களுக்கெல்லாம் ‘நல்லாசிரியர்’ விருது கிடைத்திருக்காது. ஆனால், இயல்பிலேயே நல்லவர்களாகத் திகழ்ந்தார்கள்.

இயந்திரங்களை இயக்கக் கற்றுக்கொடுக்கும் கல்வி நிலையங்கள், இதயங்களை இயக்குவது எப்படி என்பதைக் கண்டுகொள்ளாமல் போனதுதான், நமது துர்பாக்கியம். லட்சங்களைக் கொடுத்து கல்லூரியில் இடம் வாங்கி, லட்சங்களைக் கொடுத்துத் தேர்வுகளில் வென்று, கோடிகளைக் கொடுத்து பணியிலும் சேர்ந்துவிடும் ஒருவரிடம் திறமையை எப்படி எதிர்பார்க்க முடியும்? போட்டதை எடுக்கத்தானே அவர் பார்ப்பார்! இவரிடம் கல்வி கற்க வரும் அடுத்த தலைமுறை இவர்மூலம் எதைக் கற்கும்?

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல –என்பதை அடிப்படையிலேயே போதிக்க வேண்டும். பணத்திற்கப்பால் தனிமனித ஒழுக்கம், சமூக பிரக்ஞை, தேச நலன், மனித நேயம்… என எத்தனையோ நன்னெறிகள்தான் மனிதனைப் பண்படுத்திப் புனிதனாக்கும் –என்பதையெல்லாம் பாடமாகவும் பயிற்சியாகவும் மாணவர் உள்ளத்தில் ஊட்ட வேண்டும். இல்லையேல், மாற்றம் ஏமாற்றம்தான்.

10.5.2018
*அ. முஹம்மது கான் பாகவி*
சென்னை-14