Sunday, September 22, 2019

அனைவருக்கும் நன்றி

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
அனைவருக்கும் நன்றி
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

என் இரு கண்களிலும் ஏற்பட்டிருந்த கடினமான புரைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, பரிபூரண குணம் கிடைத்து இறையருளால் முழுப் பார்வையும் கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

தொடர்ந்து சில வாரங்களுக்கு மெடிஸன் கையாள வேண்டும். இன் ஷா அல்லாஹ் நாளை ( 23.09.2019 ) முதல் அலுவலகப் பணிக்குத் திரும்பிவிட்டேன். விழிகளுக்கு அதிகச் சுமை கொடுக்கக் கூடாது என்பது மருத்துவர் அறிவுரை.

என் கண் நலத்திற்காகவும் மார்க்கப் பணி தொடர்வதற்காகவும் பிரார்த்தித்த அனைத்து நல்லிதயங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் அதற்கான கூலியை உங்கள் அனைவருக்கும் வழங்கட்டும்.! வஸ்ஸலாம்.
++++++++++++ உங்கள் அன்பு கான் பாகவி.

Sunday, August 25, 2019

# மொழிபெயர்ப்பில் முதன்மையான அக்கறை எதில் ? #

# மொழிபெயர்ப்பில் முதன்மையான அக்கறை எதில் ? #
**************************
---- வெ. ‌ராம்
0 ஒரு வாக்கியத்தைப் புரிந்து கொள்வதோ கதையைப் புரிந்துகொள்வதோ மட்டும் இலக்கியமல்ல. சொல்லாடல் ,உள்வாங்கிக்கொள்ளும் மொழியின் அமைப்பு,தொனி இவற்றிலெல்லாம் என் முதன்மையான அக்கறை இருக்கும்.வாக்கியங்களை உடைத்தாலும் அதன் தன்மை மாறாது என்றால் மட்டுமே உடைத்துக்கொள்வேன்.இல்லையேல் அதை அப்படியே மொழிபெயர்ப்பதுதான் சரி.

எது மொழிக்கு இயல்பாக இருக்கிறது;எது இயல்பாக இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பானது சொற்களை மட்டுமே சார்ந்திருப்பதில்லை.எனவே பிரெஞ்சு கருத்தாக்கத்துக்கும் பண்பாட்டு அம்சத்துக்கும் தமிழில் சரியான சொல் இல்லை எனும்போது , அங்கிருந்து அந்தச் சொல்லைக் கடன் வாங்கிக்கொள்ளலாம். ஒருவேளை ஏதேனும் வார்த்தைப் பயன்பாட்டால் பொருள் திரிவதாகத்  தோன்றினால்,அடிக்குறிப்புகள் கொடுத்து விடுவோம்.ஒரு வாக்கியம் சரியாக வர வேண்டும் என்பதற்காக இரண்டு மணிநேரம் கூட நண்பர்களுடன் உரையாடியிருக்கிறோம்.
முறையாகக் கலந்தாலோசிப்பதன் மூலம் மொழிபெயர்ப்பின் தன்மை வளம்பெறுகிறது.

  ( நன்றி: இந்து தமிழ் )

Sunday, August 11, 2019

தியாகமே வாழ்க்கையாய் தினந்தோறும்

**************************
தியாகமே வாழ்க்கையாய் தினந்தோறும்
**************************
# ஏக இறைக் கோட்பாட்டாளர்களின் தந்தையான இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

அன்னாரின் பிள்ளைகளான நம்மவர் வாழ்க்கையும் தினமும் தியாகத்தையே நினைவைட்டுகிறது.

இறையன்பைப் பெற,இறைச் சட்டத்தைப் பின்பற்ற, 'இறையடியான்' எனும் அடையாளத்தைக் காப்பாற்ற, இறைமறையைக் கற்க - கற்பிக்க ஒவ்வொரு நாளும் இங்கே நாம் போராட வேண்டியுள்ளது; உழைப்பை மட்டுமல்ல; உதிரத்தையும் சிந்த வேண்டியுள்ளது.

இது எதுவரை நீடிக்கும் என்று தெரியவில்லை.ஆனால் , எத்துணை நாளாயினும் தியாகங்கள் பல செய்து உரிமைகளை வென்றெடுப்போம் எனத் தியாகத் திருநாளாம் இந்நன்னாளில் சங்கல்பம் ஏகற்போம்.அதற்கான உறுதியை வல்லோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்கிடுவானாக என்ற துஆவையே பெருநாள் வாழ்த்தாகத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈத் முபாரக்.

- அன்புடன் உங்கள்
 அ.மு.கான் பாகவி.

+++++++++++++++++++

Wednesday, July 31, 2019

இறக்கும் வயதன்று; ஆனாலும்...

இறக்கும் வயதன்று; ஆனாலும்...
+++++++++++++++++++
சைதங்கநல்லூர் அரபிக் கல்லூரி நிறுவனரும் தாய்க்கல்லூரி பாகியாத்தின்  முன்னாள் ஆசிரியருமான மெளலானா ஆதம் முஹ்யித்தீன் ஃபாஸில் பாகவி அவர்கள் மறைவு செய்தி கேட்டுத் திடுக்குற்றேன்.

ஆலிம் பப்ளிகேஷன்ஸ் மெளலானா யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி அவர்கள் ஆதம் ஹழ்ரத் அவர்களின் உடல் நிலை குறித்து சில தினங்களுக்கு முன்பு தான் விரிவாகத் தெரிவித்திருந்தார். இருந்தாலும் மவ்த் அளவுக்கு எண்ணத் தோன்றவில்லை. வயது அதற்கு இடம் கொடுக்கவில்லை.சர்க்கரை நோய்க்கப்பால் வேறு ஏதோ நோய் பாதித்திருக்க வேண்டும்.

எப்படியானாலும் திறமை வாய்ந்த ஓர் நல்லாசிரியர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் ஆதம் ஹழ்ரத் , மாணவர்களிடம் பரிவோடு நடந்துகொள்ளும் பண்பாளர்.பாடத்தில் திறமைசாலி. இலங்கை மத்ரஸாவில் பணிபுரிந்தவர்.தம் சொந்த மண்ணில் சொந்தமாக மத்ரஸா உருவாக்கி நடத்திவந்தவர்.

மன்திக் (லாஜிக்),ஃபல்ஸஃபா ( கிரேக்கத் தத்துவம்), ஃபலக் (வானவியல்) ஆகிய கலைகளில் தனி ஆர்வம் கொண்டவர். ஃபிக்ஹில் ஒரு நூல் எழுதியவர்.

இப்படி திறமையான மார்க்க அறிஞர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்து கொண்டிருப்பது சமுதாயத்திற்குப் பேரிழப்பாகும்.இழப்பை ஈடு செய்யத்தான் ஆளில்லை. இறைவன் காக்க வேண்டும்.

எஞ்சியிருப்போர் தம் வாழ்நாளைப் பயனுள்ள வழியில் செலவிட வேண்டும் என்பதையே இத்தகைய மரணங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மறைந்த வரின் பிழைகளை மன்னித்து மறுமை வாழ்வை வசந்தமானதாக ஆக்கி இறைவன் அருள் புரிவானாக. ஆமீன்.

ஏக்கத்துடன் கான் பாகவி.

Saturday, July 06, 2019

ஆலிம் பப்ளிகேஷன்ஸ் பணி துவக்கம்

ஆலிம் பப்ளிகேஷன்ஸ் பணி துவக்கம்
மௌலவி, அ. மு. கான் பாகவி
இறைவனின் மாபெரும் அருளால், சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஆலிம் பப்ளிகேஷன்ஸ் அலுவலகத்தில் மொழிபெயர்ப்புப் பணி கடந்த 03.07.2019 புதன் கிழமை அன்று தொடங்கியது.
உலகப் பிரசித்தி பெற்ற மாபெரும் நபிமொழித் தொகுப்பான முஸ்னது அஹ்மத் தமிழாக்கப் பணியை, ஆலிம் பப்ளிகேஷன்ஸ் மொழிபெயர்ப்பாளர் குழுவினர் ஆரம்பித்தனர். இதன் மூல மொழியான அரபியிலேயே 12 பாகங்களைக் கொண்ட இப்பெரு நூலில், 14 அத்தியாயங்கள், 1306 பாடங்கள், 26,363 நபிமொழிகள் இடம்பெறுகின்றன.
ஹதீஸ் அறிவிப்பாளர் பெயர்கள் வரிசையில் பாடத் தலைப்புகள் அமைந்துள்ள இந்நூலில், அவரவர் அறிவித்துள்ள நபிமொழிகள் அனைத்தும் அந்தந்தப் பாடங்களில் இடம்பெறும். உதாரணமாக, ‘சொர்க்க நற்செய்தி சொல்லப்பட்ட நபித்தோழர்கள் அறிவித்தவை’ எனும் முதலாவது அத்தியாயத்தின் முதல் பாடத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் 77 ஹதீஸ்கள் இடம்பெறுகின்றன.
மொழிபெயர்ப்பாளர் குழுவில் மேலாய்வாளராகப் பணியாற்றும் பேராசிரியர், அ. முஹம்மது கான் பாகவி, மொழிபெயர்ப்பாளர்களான மௌலவி, சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., மௌலவி, எஸ். அப்துல்லாஹ் பாகவி M.A., M.Phil., நூல் வடிவமைப்பாளரான அ. ஹைதர் அலி, கணக்கரான மௌலவி, A. முஹம்மது ஆஷிக் பாகவி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
ஆலிம் பப்ளிகேஷன்ஸ் நிர்வாகக் குழுவில், புரொஃபஷனல் கூரியர், மேனேஜிங் டைரக்டர், S. அஹ்மத் மீரான், தைசீர் கன்சல்டன்சி சேர்மேன், S. இப்னு சஊத், அல்ஹரமைன் டிரஸ்ட், S. முஹம்மது ரஃபி, கம்மி எக்ஸ்போ லிங்க்ஸ், மேனேஜிங் டைரக்டர், உடன்குடி M. முஹம்மது யூசுஃப், டிரிப்பிள் எம் சேர்மேன், முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் உள்ளனர். ஒருங்கிணைப்பாளர்களாக சிராங்கூன் டிராவல்ஸ் மேலாளர், மௌலவி, முஜீபுர் ரஹ்மான் உமரீ, ஹெர்ட்ஸ்மென் எஸ்டேட்ஸ், டைரக்டர், C.R. ரியாஸ் நவ்ஷாத் ஆகியோர் செயல்படுகின்றனர்.
கீழ்க்கண்ட முகவரியில் ஆலிம் பப்ளிகேஷன்ஸ் இயங்குகிறது. அனைவரும் துஆ செய்யுங்கள்:
AALIM PUBLICATION FOUNDATION
82/324, 2nd Floor, Baitulmal Tamilnadu Building,
Triplicane High Road, Triplicane, Chennai – 600 005.
Phone: 044-4746 7373

Tuesday, May 21, 2019

நிதானம் மிகவும் தேவை

*நிதானம் மிகவும் தேவை*

*கான் பாகவி*

மே 23ஆம் தேதி தேர்தல் முடிவு எல்லாராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து தமிழகத்தில் முடிவு வெளிவருகிறது.

வாக்குப் பதிவும் பதிவான வாக்கின் எண்ணிக்கையும் எளிதாகவும் விரைவாகவும் முடிவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதே வாக்குப் பதிவு இயந்திரம். மிகவும் பாதுகாப்பானது எனத் தேர்தல் ஆணையம் என்னதான் அடித்துச் சொன்னாலும், மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. தில்லுமுல்லு செய்ய முடியும் எனச் சிலர் செயல்பூர்வமாக நிரூபித்தும் ஆணையம் நம்பவில்லை.

பலத்த எதிர்பார்ப்பிற்கும் ஏக்கத்திற்கும் மத்தியில் வெளிவரும் தேர்தல் முடிவு எப்படியும் இருக்கலாம்! கருத்துக் கணிப்புகளை உண்மைப்படுத்தலாம்! அல்லது பொய்யாக்கலாம்! எல்லாவற்றையும்விட, இந்திய ஒருமைப்பாட்டின் மீதும் தேச ஒற்றுமைமீதும் உண்மையிலேயே கவலை கொண்டுள்ள நல்ல இதயங்களுக்கு ஆறுதலான முடிவு வரலாம். அல்லது அதிர்ச்சியான முடிவும் வரலாம்.

முடிவு எதுவாக இருந்தாலும், மக்கள் அமைதி காப்பது மிகவும் முக்கியமான ஒன்று. பாதகமான முடிவைப் பார்த்துப் பொங்கி எழுவதோ, சாதகமான முடிவைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடுவதோ இரண்டும் கூடாது.

பாதகமான முடிவே வந்தாலும், தெம்போடு நின்று எதிர்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள்! உரிமைகள் பறிக்கப்படும்போது, அரசியல் சட்டம் மீறப்படும்போது, மொழி மற்றும் மதச் சிறுபான்மையினர் நசுக்கப்படும்போது சக்தியைத் திரட்டிப் போராடித்தான் ஆக வேண்டும்.

போராட்டமே வாழ்க்கையாகிவிட்ட சமூகம், நம்பிக்கையில் சமரசம் செய்துகொள்வதோ, உரிமைகள் களவாடப்பட வாளாவிருப்பதோ, அதிகார சக்திக்குமுன் மண்டியிடுவதோ ஒருபோதும் ஏற்புடையதல்ல.

*நம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்வோம் துவண்டுபோகமாட்டோம்!*

Thursday, May 16, 2019

சதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர்

# சதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர்#
----------------------------------------
ஐ.எஸ்.ஐ. பற்றியும் அதன் பொய் கலீஃபா அபூபக்கர் பக்தாதி பற்றியும் நாங்களெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்ததை நம் இளைஞர்கள் பலர் நம்பவில்லை.அந்த ஆளை தம்பி இன்னும் பலர் தம் வாழ்க்கையையும் மார்க்கத்தையும் தொலைத்துவிட்டு ,ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.அதன் விளைவுதான் இலங்கை கொடுமைகள்.

எங்கோ ஐரோப்பாவில் பள்ளிவாசலில் நடந்த கொடுந்தாக்குதலுக்கு இலங்கை தேவாலயங்களில் நடந்த தற்கொலை தாக்குதல் (அதுதான் காரணமாக இருப்பின்) எப்படி பதிலடியாக அமையும்?அந்த அப்பாவி கிறித்தவர்களும் மற்ற பொதுமக்களும் அநியாயமாகக் கொல்லப்பட்டது எந்த வகை நாயம்?

இதுதான் சாக்கு என்று ஏதோ காத்துககொண்டிருந்ததைப் போல பெளத்த தீவிரவாதிகள் அப்பாவி முஸ்லிம்களை அடித்துக் கொல்வது எப்படி நியாயமாகும் ?

இப்போது தெரிகிறதா இளைஞர்களே!இந்த ஐ.எஸ்ஸும் அதன் பொய் கலீஃபா அபூபக்கர் பக்தாதி என்பாரும் யார்;அந்த அமைப்பின் திட்டமென்ன?யாருடைய தயாரிப்பு?இனியாவது அந்தக் கொலைகார அமைப்பிடமிருந்து தப்பித்து உண்மையான முஸ்லிம்களாக வாழ முன்வாருங்கள்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தயாரிப்பே இந்த ஐ.எஸ்.இந்த பக்தாதி சிறையில் இருந்தபோது உருவாக்கப்பட்ட நயவஞ்சகன்.

முழு தகவல் அறிய கீழ்க்கண்ட எமது பழைய கட்டுரை வாசியுங்கள்.உங்களையும் நண்பர்களையும் காப்பாற்றுங்கள்.

இராக்கிலும் சிரியாவிலும் மனித நாகரிகம் கண்டிராத காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்திவரும் ஐ.எஸ். இயக்கம் உண்மையில் யாருடையது; அதன் நிறுவனரும் தலைவரும் நான்தான் என்று வீடியோக்களில் காட்சியளித்து, தூய அரபிமொழியில் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் அபூபக்ர் அல்பஃக்தாதீ என்பார் யார்? இவர்களின் பின்னணி என்ன என்பதெல்லாம் தெரியாமல் உலக முஸ்லிம்களைப் போன்றே நாமும் குழப்பத்தில்தான் இருந்தோம்.

இந்நிலையில், குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோர் (2014) பிரதியைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, ஓர் ஆய்வுக் கட்டுரை படிக்க நேர்ந்தது. கட்டுரையை ஃபிரான்ஸ் கலாசாரத் துறை பேராசிரியர் டாக்டர், ஸைனப் அப்துல் அஸீஸ் எழுதியிருக்கிறார். ‘இராக் கிறித்தவர்களும் இனப் படுகொலை பற்றிய ஊகங்களும்’ என்பது கட்டுரையின் தலைப்பு.

கட்டுரையின் இறுதியில் டாக்டர் ஸைனப் எழுதியிருப்பதன் தமிழாக்கத்தை அப்படியே கீழே தருகிறோம். (இதில் நமது சொந்தக் கருத்து எதுவும் இல்லை.) நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்:

ஐ.எஸ். இயக்கத்தை அரபி இதழ்கள் சுருக்கமாக ‘தாஇஷ்’ எனக் குறிப்பிடுகின்றன. இதன் பொருள் ‘அத்தவ்லத்துல் இஸ்லாமிய்யா’ (இஸ்லாமிய அரசு) என்பதாகும். ‘கிலாஃபத்’ ஆட்சி என விளக்கம் கூறலாம். இந்த இயக்கத்தின் தலைவர் ‘அபூபக்ர் அல்பஃக்தாதி’யை ‘பஃக்தாது கலீஃபா’ என அவருடைய ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். இவரது பின்புலம் குறித்து முன்னணி இணைய தளங்கள், குறிப்பாக ‘Veteran Today’ எனும் இணையதளம் தோலுரித்துக்காட்டியிருக்கிறது.

பக்தாத் கலீஃபா, இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாத்’தின் கையாள். இவர் யூதப் பெற்றோருக்குப் பிறந்தவர். அபூபக்ர் அல்பஃக்தாதியின் உண்மையான பெயர்: ஷைமோன் எலியூட். இவரை சியோனிஸ மொசாத், தன் உளவுப் பணிகளுக்காக உருவாக்கிப் பயிற்சியையும் அளித்துள்ளது. உளவுத் துறையிலும் வெளியுறவுத் துறையிலும் அவர் பயிற்சியை முடித்துள்ளார்.

அத்துடன், பல்வேறு இராணுவப் பயிற்சிகளுக்கும் உட்படுத்தப்பட்டார். பல்வேறு சோதனைகளையும் அவர் கடந்துவந்துள்ளார். இதுவெல்லாம் எதற்காக? அரபு மற்றும் முஸ்லிம்களின் வாழ்வையும் இஸ்லாமியச் சிந்தனைகளையும் அழிக்கும் சதிவேலைகளுக்கு எலியூட் தலைமை ஏற்க வேண்டும்; அழிவு சக்திகளை ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்பதற்காகத்தான்!

இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? ஐ.எஸ். (Islamic State) அமைப்பு, பயங்கரவாத இயக்கங்களின் ஐ.நா. பட்டியலில் இடம்பெற்றுள்ள அதே வேளையில், அதற்குப் பொருளுதவி செய்வது அமெரிக்காவாகும். 2014 வரி ஆண்டுக்கான இரகசிய கூட்டத்தில் முடிவான சட்டத்திற்கேற்ப ஐ.எஸ். அமைப்புக்குப் பொருளுதவி செய்ய அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இது, 2014 செப்டம்பர் 30 வரைக்குமான ஒப்புதலாகும்.

இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், 2004 முதல் 2009 வரை 5 ஆண்டு காலம் குவாண்டநாமோ சிறையில் அபூபக்ர் அல்பஃப்தாதி இருந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் சி.ஐ.ஏ. மற்றும் மொசாத் ஆகிய உளவுத் துறை அமைப்புகள் தம் பணிகளுக்காக ஆள் திரட்டியபோது அபூபக்ரைப் பயன்படுத்த எண்ணின. பல்வேறு நாடுகளில் இருக்கும் முஜாஹித்களை ஒரே இடத்தில் திரட்டுவதற்கு வசதியாக ஒரு குழுவை அமைக்கும் பெரிய பொறுப்பினை அபூபக்ரிடம் அவை கொடுத்தன. இக்குழு, முஜாஹித்கள் யாரும் இஸ்ரேலைத் தாக்கிவிடாமல் தடுக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்பது மொசாத்தின் திட்டமாகும்.

அபூபக்ர் என்ற ஒற்றரை மொசாத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்ற நாடுகளின் இராணுவ மற்றும் சிவில் வட்டாரங்களில் ஊடுருவுவதே ஆகும். அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதற்கு வசதியாகவும் அந்நாடுகளின் ஒவ்வொரு பகுதிமீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு வசதியாகவும் சியோனிஸ ஆட்சியை உருவாக்கும் பணியை எளிதாக்க வேண்டும்.

உலகின் நாலா பாகங்களிலிருந்தும் தீவிரவாதிகளின் ஒரு பெரும் படையை ஓரிடத்தில் ஒன்றுசேர்த்து, ஷைத்தானின் உண்மையான படை இதுதான் என உலகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். அவர்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் கலிமா பொறிக்கப்பட்ட கறுப்புக் கொடியைத் தூக்கிக் காட்டுவார்கள். இதன்மூலம், இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பை உலக மக்களிடம் விதைக்க முடியும் என்பது மொசாத்தின் கனவாகும்.

இப்படையினர், ஈவிரக்கமின்றி கைதிகளைத் துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை செய்வார்கள். இந்தப் பயங்கரமான காட்சிகளைப் படமாக்கி இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிடுவார்கள். இவர்கள் இரத்த வெறிபிடித்த காட்டுமிராண்டிகள் என உலகம் அடையாளம் காண வேண்டும்.

யாராலும் சகிக்க முடியாத, மனிதாபிமானமே இல்லாத இந்த நிலைக்கு ஒரு மனிதன் வரவேண்டுமென்றால், ஒன்று அவன் போதைக்கு அடிமையாக இருக்க வேண்டும்; அல்லது இரத்தத்தையும் பயங்கரத்தையும் பார்த்துப் பார்த்துப் பழகிப்போனவனாக இருக்க வேண்டும். இதுதான் அமெரிக்க சியோனிஸ போர் உத்தியாகக் காலம்காலமாக இருந்துவருகிறது.

சுருங்கக்கூறின், ஐ.எஸ். எனும் இந்தப் படைக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் அறவே இல்லை. இது, முஸ்லிம்களின் கரத்தாலேயே இஸ்லாத்தின் மீது போர் தொடுப்பதற்காக ‘பிளாக் வோட்டர்’கள் மூலம் அமெரிக்கா நிகழ்த்தும் நாடகமாகும்.

Sunday, May 05, 2019

ஆலிம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது

# ஆலிம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது.الحمد لله. #
+++++++++++++++++++
இறையருளால் இன்று 05.05.2019 ஞாயிறு காலை சென்னை திருவல்லிக்கேணி தமிழ்நாடு பைத்துல்மால் மஹாலில் ஆலிம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் முஸ்னது அஹ்மது நபிமொழித் தொகுப்புத் தமிழாக்கத்திட்ட அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது.

வண்டலூர் புகாரிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் முனைவர் மஸ்ஊத் ஜமாலி அவர்கள் தலைமையில் ஆலிம் பப்ளிகேஷன்ஸ் மொழிபெயர்ப்பாளர் குழு ஒருங்கிணைப்பாளர் முஜுபுர் ரஹ்மான் உமரி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

ஆலிம் பெருமக்கள் , நீதித்துறையின் ,பேராசிரியர்கள்,பதிப்புத் துறையினர்,புத்தக விற்பனையாளர்கள், மாணவர்கள்,வணிகர்கள் , சமூக ஆர்வலர்கள், ஆலிம் பப்ளிகேஷன்ஸ் பொறுப்பாளர்கள் ...எனப் பல்துறை ஈடுபாட்டாளர்கள் கலந்துகொண்டு ஆலரவளித்தனர்.

உரையாற்றிய அனைவரும் இரத்தினச் சுருக்கமாகவும் இடத்திற்கேற்பவும் கருத்தோடு உரையாற்றியது பாராட்டுக்குரியது.முஸ்னது அஹ்மது நபிமொழித் திரட்டின் தமிழாக்கம் பணிக்கு அனைவரும் உதவலாம் என்றும் விருப்பம் உள்ளவர்கள் 98419 81166 ; 96000 16031
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் விழா முடிவில் அறிவிக்கப்பட்டது.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
( கான் பாகவி)





Thursday, April 25, 2019

# இந்து தமிழ் நாளிதழில் வெளியான கட்டுரைகளுக்கு கான் பாகவியின் கடிதம் #

# இந்து தமிழ் நாளிதழில் வெளியான கட்டுரைகளுக்கு கான் பாகவியின் கடிதம் #
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு…

இன்றைய (25.04.2019) இந்து தமிழ் நடுப்பக்கத்தில் வெளிவந்த இலங்கையைச் சேர்ந்த இரு எழுத்தாளர்களின் கட்டுரைகள் வாசித்தேன்.

இஸ்லாத்தை முறையாக அறிந்த எவரும் சக மனிதர்கள்மீது வெறுப்பை உமிழமாட்டார். முஸ்லிம் அடையாளத்தோடு, இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றி வாழும் அதே நேரத்தில், பிற சமூகத்தாருடன் மனிதநேயத்தோடும் இணக்கத்தோடும் வாழ முடியும்; வாழ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூதச் சிறுவர் பணிவிடைகள் புரிந்துவந்தார். அவர்மீது பாசம் காட்டிவந்த நபிகளார், சிறுவர் நோயுற்று வீட்டிலிருந்தபோது, உடல்நலம் விசாரிக்க சிறுவரின் இல்லத்திற்கே சென்றுவந்ததை வரலாறு சொல்லும்.

தமிழ்நாட்டில் எங்கள் ஊரில் (திண்டுக்கல் மாவட்டம்) முஸ்லிம்களே அதிகம். ஆனால், பிற மதத்தாரோடு சொந்தம் கொண்டாடி இன்றுவரை வாழ்ந்துவருகிறோம். எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர் குஞ்சரம் பிள்ளை ஐயா. அவரை நாங்கள் ஐயா என்றே அழைப்போம். அவர் மகன் பாஸ்கரை அண்ணன் என்றே விளிப்போம். என் மூத்த சகோதரர் மகளுக்குத் திருமணம். பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பிவைத்தபோது, நாங்கள் அழுததைவிட அண்ணன் மனோகரனும் அண்ணியும்தான் தேம்பித்தேம்பி அழுதனர்.

ஊரில் பெரிய தனவந்தர் நடராஜ் நாயக்கர். அவரை மாமா என்றே அழைப்போம். அவர் என்னை, என்னடா மருமகன்! என்ன படிக்கிறாய்? எப்படி இருக்கிறாய்? எனப் பாசத்தோடு விசாரித்தது இன்றும் என் நினைவில் உள்ளது. இன்றைக்குக்கூட சென்னையில் எங்கள் வீட்டில் வேலைபார்க்கும் கற்பகத்தை என் மக்கள் ‘அக்காள்’ என்றே அழைப்பார்கள். கற்பகத்தின் சுகதுக்கங்களில் எங்கள் குடும்பமே பங்குபெறும். சலவைத் தொழிலாளியை நாங்கள் பாட்டி என்றே அழைப்போம்; பரிவு காட்டுவோம்.

சொல்லப்போனால், உண்மை முஸ்லிம் இவ்வாறுதான் நடந்துகொள்வார். இத்தனைக்கும் நான், திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழித் தொகுப்புகள் ஆகிய இஸ்லாமிய அடிப்படைத் தரவுகளை அரபிமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் குழுவின் தலைவராகக் கடந்த 23 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறேன். என் மார்க்க அறிவு, ஒருபோதும் சக மனிதர்மீது –அவர் முஸ்லிமல்லாதவர் என்பதற்காக- விரோதம் பாராட்டச் சொன்னதே இல்லை.

தாமே இஸ்லாத்தைச் சரியாகப் புரிந்தோர் எனக் கருதிக்கொள்ளும் வெகுசிலர், இலங்கையில் தவறான வழிகாட்டலில் ஈடுபடுவதாக இக்கட்டுரைகள் சொல்கின்றன. இது உண்மையானால், இவர்கள் தாமும் வழிதவறி, அப்பாவிகளையும் வழிகெடுக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்தவொன்றையும் –அது உன்னதமாக இருந்தாலும்கூட- அடுத்தவர்மீது திணிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை. அப்படியிருக்க, ‘தூய்மைவாதம்’ பேசிக்கொண்டு வகுப்பொற்றுமையையும் சமூக இணக்கத்தையும் கெடுப்பதானது, இஸ்லாத்திற்கே உலைவைத்துவிடும். இதைப் பரப்புரையாக முஸ்லிம் அறிஞர்கள் வீரியத்தோடு மேற்கொள்ள வேண்டும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

25.04.2019                       
*அ. முஹம்மது கான் பாகவி*
சென்னை-14.

Thursday, April 18, 2019

# பூத்தில் கான் பாகவிக்கே இந்நிலை என்றால்..?

# பூத்தில் கான் பாகவிக்கே இந்நிலை என்றால்..?
+++++++++++++++++
இன்று (18.4.2019)காலை 11.00 மணியளவில் மத்திய
சென்னை தொகுதி இராயப்பேட்டை டாக்டர் பெசண்ட் சாலை என்.கே.டி.பள்ளியில் 132ஆவது வார்டுக்கான பூத்தில் கான் பாகவி,துணைவியார், மூத்த மகன் , மருமகள் ஆகிய நான்குபேர் வரிசையில் நின்று வாக்களிக்க கையில் வாக்காளர் அட்டையுடன் காத்திருந்தனர்.

அறைக்குள் நுழைந்தவுடன் கான் பாகவியின் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த பூத் அதிகாரி பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றார்.அதே பதில்தான் குடும்பத்தார் அனைவருக்கும் சொல்லப்பட்டது.

கோபமடைந்த கான் பாகவி , இதே முகவரியில் இதற்கு முன் பல தேர்தல்களில் வாக்களித்துள்ளோம்.ஆன்லைனில் பல தடவை பரிசோதித்து பெயர் இருப்பதை உறுதி செய்துள்ளோம்.இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த பரிசோதகர் பட்டியலைப் பார்த்துப் பெயர் இருப்பதை உறுதி செய்துள்ளனர் என்றெல்லாம் எடுத்துச் சொல்லியும் அதே பதிலை அதிகாரியும் பூத் ஏஜண்டுகளும் சொல்லிக்கொண்டிருந்தனர்.

கோபம் அதிகமான கான் பாகவி குரலை உயர்த்தி ஆவேசத்தோடு பேச ஆரம்பித்தார்.வொட்டுப்போடாமல் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம்.எங்கள் அடிப்படை உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டோம்.இப்படித்தான் சிறுபான்மை மக்களை நசுக்கப்பார்கீகிறீர்கள்.இரண்டில் ஒன்றுதெரியாமல் செல்லமாட்டோம் என்று சப்தமிட்டுக்கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தார் கான் பாகவி.

வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களிடமும் இந்த அநியாயத்தை எடுத்துச்சொன்னார்.இதற்கிடையில் பட்டியலைத் தேடிப்பார்த்த பூத் அதிகாரி உள்ளே அழைத்து உங்கள் பெயர் இருக்கிறது.ஆனால் டெலிட் செய்யப்பட்டுள்ளது.இன்னும் ஆவேசமடைந்த கான் பாகவி ,எங்கள் பெயரை யார் எதற்காக டெலிட் செய்தார்கள்.முஸ்லிம் பெயரைப் பார்த்தவுடனேயே டெலிட் செய்துவிடுவீர்களா ? இங்கே எங்களுக்கு கொடுமை இழைக்கப்படுகிறது என்று குரல் எழுப்பினார்.

அதுதான் பெயர் கிடைத்துவிட்டதே !வாக்களித்துவிட்டுச் செல்லுங்கள் என்றார் அதிகாரி.இத்தனை போராட்டத்திற்குப் பிறகு அனுமதிக்கிறீர்கள்.இப்படி எத்தனை அப்பாவிகளுடைய பெயரை நீக்கினீர்களோ ! அவர்களும் பேசாமல் திரும்பிப் போயிருப்பார்கள்தானே என்று கேட்டுவிட்டு , இயந்திரத்தில் பெட்டியைச் சரியாகப் பார்த்து வாக்களித்துவிட்டு வெளியேறினர்.
### மக்களே உஷார் ! உரிமையை விடாதீர்கள் !