Sunday, April 26, 2020

தீமையிலும் ஒரு நன்மைஉண்டு!

~~~~~~~~~~~~
தீமையிலும் ஒரு நன்மை
உண்டு!
~~~~~~~~~
நான் மாணவனாக இருந்த சமயம் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் எங்கள் மாணவ நண்பர்களின் ரமளான் பொழுதுகள் இனிமையாகக் கழிந்ததுண்டு.

அருகில் உள்ள புதுப்பட்டி எனும் சிற்றூரில் ஒரு சிறிய மஸ்ஜித். அங்கு ஹாஃபிழ் வைத்து தராவீஹ் நடத்தும் அளவுக்கு வசதியில்லை.நாங்கள் சில மாணவர்கள் சேர்ந்து தராவீஹ் நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம்.

ரக்அத்களைப் பிரித்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று பேர் தொழவைப்போம். அந்த எளிய மக்களுக்கோ ஆனந்தம்.தங்கள் மஹல்லாவிலும் சிறப்புத் தொழுகை நடக்கிறதே!

இப்படி சில ஆண்டுகள்.நானும் இமாமத் செய்தேன் மனநிறைவோடு. அதற்குப் பிறகு இமாமத்திற்கான வாய்ப்பு வாய்க்கவில்லை. நினைவு தெரிந்த காலத்திலிருந்து ஜமாஅத்துடன் தராவீஹ் தொழுவதை விட்டதில்லை. அதில் அவ்வளவு ஓர் ஆனந்தம்; மனநிறைவு.

  இந்த ஆண்டு வந்ததே வைரஸுடன். பேரிடிதான். நினைத்தும் பார்க்கவில்லை. பள்ளியில் தொழமுடியாதென்று. நொந்து போனேன்.

திடீரென ஒரு யோசனை. இல்லத்தில் ஆறு பேர். ஏன் நாமே இமாமாக நின்று ஜமாஅத்தாகத் தொழக்கூடாது? அதையே நடைமுறைப்படுத்திவருகிறேன். மகிழ்ச்சியாக கழிகிறது ரமளான்.

ஆனாலும் என்ன? முழு குர்ஆன் ஓதி தொழமுடியவில்லை. சின்னச் சின்ன சூராதான். இதுவே என்ன கஷ்டமாக இருக்கிறது தொரியுமா?

இப்போதுதான் தெரிகிறது இமாமத் எவ்வளவு பெரிய மகத்தான பணி! அதிலும் ஹாஃபிழ்கள் பாடு எவ்வளவு பெரியது!

எப்படியோ கரோனா தீமையிலும் எனக்கொரு நன்மை!

அன்புடன் உங்கள் கான் பாகவி.

Sunday, April 19, 2020

மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளியே

~~~~~~~~~~~~
மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளியே
~~~~~~~~~~~~
பேரா.க.பஞ்சாங்கம்

மொழிபெயர்ப்பும் ஒரு கலையே; மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளியே என்ற கருத்துதான் இன்றைக்கு வலுவாக நிலைப்பெற்றுள்ளது.

       மூல நூலாசிரியரும் , மொழியாலான உலகத்தின் மேல்தான் வினை புரிகிறார்.மொழிபெயர்ப்பாளரும் மொழியாலான உலகத்தின் மேல்தான் வினை புரிகிறார்.

மொழிபெயர்ப்பாளருக்கு மூல நூலாசிரியர் உருவாக்கித்தந்த மொழி உலகம் வெளிப்படையாக முன் நிற்கிறது.மூல ஆசிரியருக்கு அவர் முன்னோர்கள் உருவாக்கித்தந்த மொழி உலகம் மறைவாக நிற்கிறது.அவ்வளவுதான்
வேறுபாடு. எனவே, பெரிதாக இருவருக்கும் இடையில் உயர்வு/தாழ்வு கற்பிக்கப் தேவையில்லை.

ஆக, மொழிபெயர்ப்பு என்பது, சிரமம் என்று கருதினால் சிரமம். அதேநேரத்தில்,ரசித்து இறங்கிவிட்டால் ,அதைப்போல சுவாரஸ்யமான பணி எதுவுமே இருக்க முடியாது.

மொழிபெயர்ப்பாளருக்குப் பன்மொழிப் புலமை இருந்தாக வேண்டும்.அது மட்டுமே மொழிபெயர்ப்பாளராகத் தகுதியா என்றால் அதுவும் இல்லை. மொழி
ஆளுமை வேண்டும். ரசனையும் வேண்டும்.

Thursday, April 02, 2020

~~~~~~~~~~~~எங்கள் ஆசிரியர் ஆயங்குடி சாலிஹ் ஹள்ரத் அவர்கள் மறைவு~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~
எங்கள் ஆசிரியர் ஆயங்குடி சாலிஹ் ஹள்ரத் அவர்கள் மறைவு
~~~~~~~~~~~~
1960களில் கூத்தாநல்லூர் மன்ப உல் உலா அரபிக் கல்லூரியில் எங்களுக்குத் திறம்பட கல்வி கற்பித்த என் மரியாதைக்கும் பாசத்திற்கும் உரிய ஆசிரியப் பெருமகனார் மெளலானா சாலிஹ் ஹள்ரத் அவர்கள் இன்று 02.04.2020 காலை லால்பேட்டையில் மறைந்தார்கள் எனும் செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமும் துக்கமும் அடைந்தேன்.

அன்னார் பொரவாச்சேரி , நெல்லை பேட்டை ஆகிய கல்லூரிகளில் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்கள். பின்னர் நீண்ட காலம் மலேஷியாவில் இருந்த ஹள்ரத் அவர்கள் மூப்பின் காரணத்தால் லால்பேட்டையில் தம் இல்லத்தில் ஓய்வு எடுத்துவந்தார்கள்.
சாலிஹ் ஹள்ரத் அவர்களிடம் நான் 3 ஆண்டுகள் கல்வி பயின்றுள்ளேன். பாடங்களை எளிமையாகப் புரியவைப்பதேடன் இறையச்சம், நல்லொழுக்கம் ஆகிய போதனைகளையும் செய்வார்கள். தாயுள்ளம் கொண்ட அந்த மகான் என்மீது தந்தை பாசத்தைப் பொழிவார்கள்.

நான் , கம்பம் பீர் முஹம்மது பாகவி, ஜைனுல் ஆபிதீன் உலவி, எம்.சி. ரோடு அப்துல் ஃபத்தாஹ் உலவி போன்றோர் அன்னாரின் மாணவர்கள். 

ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள சில ஆண்டுகள் முன் லால்பேட்டை சென்றிரேந்தபோது சாலிஹ் ஹள்ரத் அவர்கள் இல்லம் சென்று அன்னாரைச் சந்தித்தோம். அச்சந்திப்பு எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

அண்மையில் ரஹ்மத் பப்ளிகேஷன் வெளியிட்ட தஃப்சீர் இப்னு கஸீர் பத்தாம் பாகத்திற்கு எங்கள் அன்பான வேண்டுகோளை ஏற்று அணிந்துரை வழங்கினார்கள்.ஒரு மாணவனின் எழுத்துக்கு, அவன் ஆசிரியர் வழங்கும் மதிப்புரையைவிட உயர்ந்த விருது வேறு இருக்க முடியாது. ஹள்ரத் அவர்களின் இறுதி நாட்கள் என்பதை உணர்ந்து, இப்போது விட்டால் இனி வாய்ப்பு கிடைக்காது என்ற துடிப்பில் தான் அணிந்துரை வற்புறுத்தி வாங்கினோம்.

கிட்டத்தட்ட என் ஆசிரியர்கள் அனைவரும், அல்லது பெரும்பாலோர் என் எழுத்துத் தொண்டை ஊக்கிவித்து மதிப்புரை வழங்கியது நான் செய்த புண்ணியம் என்பேன்.
ஹள்ரத் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள தந்தான் வேண்டும். ஆனால் நாட்டு நிலைமை இடம் கொடுக்காது. அன்னாரின் மறுமை வாழ்வு செழிக்க அல்லாஹ் அருள் புரிவானாக.
اللهم اغفر له و ارحمه وأدخله جنة الفردوس الأعلى يارب العالمين.
என வேண்டி விடைபெறுகிறேன். வஸ்ஸலாம்.
அன்புடன் உங்கள்
கான் பாகவி