Monday, September 24, 2012

மனிதச் சந்தையில் விலைபோகும் ‘ஆடுகள்’



ஹீஹுல் புகாரியில் ஒரு பாடம். ‘‘சுதந்திரமானவரை விற்பது குற்றமாகும்’’ என்பது பாடத்தின் தலைப்பு. அதில் இடம்பெற்றுள்ள நபிமொழி இதுதான்:


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன். ஒருவன், என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, மோசடி செய்தவன்; இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தை உண்டவன்; மூன்றாமவன், ஒரு கூலியாளிடம் நன்றாக வேலை வாங்கிக்கொண்டு, அவனது கூலியைத் தராமல் இருந்தவன். (ஹதீஸ் - 2227) 

இதில் குறிப்பிடப்படும் மூவருமே குற்றவாளிகள்தான். இருப்பினும், சுதந்திரமான ஒருவரை விற்றுப் பிழைப்பவன்கூட இருப்பானா என்ற ஐயம் வந்ததுண்டு. அவனுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என்ற வினாவும் எழுந்ததுண்டு. விரிவுரைகளில் பொருத்தமான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக மனிதர்கள் சுதந்திரமானவர்களே; அடிமைத்தளை என்பது இடையில் பூட்டப்படும் விலங்கு. அப்படியிருக்க, சுதந்திரமான ஒரு மனிதனைப் பிடித்து ‘அடிமை’ என்று சொல்லி விற்றுக் காசாக்குவது வன்கொடுமை ஆகும்.

இதனால் அவனது சுதந்திரம் பறிக்கப்படுகிறது; இழிவு பூசப்படுகிறது. இறை அடியானான அவனுக்கு இழைக்கப்பட்ட இக்கொடுமைக்கு, எஜமானனான இறைவனே வழக்காடுவதுதான் பொருத்தமானதாகும். (ஃபத்ஹுல் பாரீ)

அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு


பணத்துக்காக மனிதன் மனிதனையே வேட்டையாடிக்கொண்டிருக்கின்றான். இது காலங்காலமாக இடைவிடாது நடந்துகொண்டிருக்கிறது. மனிதச் சந்தையில் விற்கப்படும் மனிதர்களின் எண்ணிக்கை எவ்வளவு? விற்கப்படுவோர் யார்? கிடைக்கும் லாபம் எவ்வளவு? தடுப்பதற்கு வழி என்ன? 

அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சகம், ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச தொழில் கழகம் ஆகிய அமைப்புகள் அளிக்கும் புள்ளி விவரங்கள் நம்மை உறையவைக்கின்றன; அதே நேரத்தில், இஸ்லாத்தின் கருணையை நமக்குப் புரியவைக்கின்றன.

மனிதச் சந்தை, அல்லது மனித விற்பனை என்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை அளித்துள்ள விளக்கம் நீளமானது. கடத்தல், குடிபெயர்தல், குடிபெயரவைத்தல், மிரட்டிப் பணியவைத்தல், ஆற்றலைச் சுரண்டுதல், விபசாரத்தில் ஈடுபடுத்தல், பிச்சையெடுக்கவைத்தல், கொத்தடிமைகளாக நடத்துதல், உறுப்புகளை வெட்டி எடுத்தல், போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்டுத்துதல், வீட்டு அடிமைகள் முதலான அனைத்து ஈனச்செயல்களும் மனித விற்பனையில் அடங்கும் என்கிறது ஐ.நா. சபை.

இவற்றில் பாலியல் குற்றங்களுக்காகப் பயன்படுத்துவதே மனித விற்பனையில் 79 விழுக்காடாக உள்ளது. அடுத்து 18 விழுக்காடு கொத்தடிமைத் தொழிலில் ஈடுபடுத்துவதாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் இந்த அநியாயம் பரவலாக நடக்கிறது.

புள்ளி விவரம்


உலகம் முழுவதிலும் நடக்கும் மனித விற்பனை மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் பணம் எவ்வளவு தெரியுமா? 32 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் 100 கோடி.) 

விற்கப்படும் மனிதர்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளே அதிகம் (79%) 

கட்டாயப்படுத்தி, அல்லது கூலியே இல்லாமல், அல்லது விபசாரத்தில் வேலை (?) செய்வோர் 21 மில்லியன். (ஒரு மில்லியம் 10 லட்சம்.) 

ஒவ்வோர் ஆண்டும் எல்லை தாண்டி கடத்தப்படுவோர் எண்ணிக்கை 8 லட்சம். 

எல்லைக்குள்ளேயே கடத்தப்படுவோரையும் கணக்கில் எடுத்தால் 2 முதல் 4 மில்லியனை எட்டும். 

ஒவ்வொரு வகையான மனித விற்பனையில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாகப் பலியாவோர் குழந்தைகளே. 

எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெறும் லாட்வியா குடியரசு, இந்த மனித விற்பனையைத் தடுக்க அதிகக் கவனம் செலுத்த வேண்டுமென அயர்லாந்து அரசை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்குவதற்கு அனுமதி பெறுவதற்காக, 400 பேர் லாட்வியா இளம்பெண்களைக் கட்டாயப்படுத்தி மணமுடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

பிபிசி வெளியிட்ட ஒரு செய்தி: ஆண்டுதோறும் ஒரு லட்சம் இளம்பெண்கள் (வயது 14 முதல் 19) விபசாரத்திற்காக லத்தீன் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குக் கடத்தப்படுகிறார்கள். 

விலைமாதுகள் 


விபசாரம், இலாபம் கொழிக்கும் ஒரு தொழிலாக (?) வளர்ந்துவருகிறது. ஏதோ தொழில்சாலைகளில் பணியாற்றுவதைப் போன்று விபசாரத்தையும் ஒரு தொழிலாக்கி, அதில் இருப்போரை ‘பாலியல் தொழிலாளர்கள்’ என்று பெயர்சூட்டும் மானக்கேடு நடந்தேறுகிறது. இவர்களில் பெரும்பாலோர் குழந்தைகளும் இளம்பெண்களும் ஆவர். உண்மையில் இவர்கள்தான், நவீன காலத்து ‘அடிமைகள்’ ஆவர். 

ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான பெண்கள் வறுமை காரணமாக உலகின் பல பகுதிகளிலிருந்து ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான், அமெரிக்கா, வளைகுடா நாடுகள் ஆகியவற்றுக்கு வேலைக்காகப் படையெடுக்கின்றனர். 

கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைச் சொல்லி இடைத் தரகர்கள் மூலம் இளம்பெண்களை விலைக்கு வாங்கும் தீய சக்திகள், எல்லைக்குப் போனபின் பெரிய விலைக்கு ஏலத்தில் விற்றுவிடுகின்றனர். அங்குதான் அந்த அபலைப் பெண்கள் தங்களுக்குத் தெரியாமலேயே கடன்காரர்களாகின்றனர். கடனை அடைக்க ஓய்வின்றி உழைக்கின்றனர். 

உதாரணத்திற்கு நியூயார்க்கில் ஓர் இளம்பெண் நாளொன்றுக்கு 10 மணிநேரம் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறாளாம்! 25 முதல் 30 வாடிக்கையாளர்களை அவள் திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. ஆனாலும், அவள்மீதான கடன் ஒருகாலும் அடையப்போவதில்லை. காரணம், அவள் சம்பாதிப்பதில் (?) பாதி விபசார விடுதி நடத்துபவர்களுக்கும் மீதிப் பாதி, கடத்தியவர்களுக்கும் அவள் செலுத்தியாக வேண்டும். 

விடுதியிலிருந்து ஓடிப்போக நினைத்தால் சித்திரவதைதான். போலிஸுக்குப் போனால், வேலையிலிருந்து நிறுத்தப்படுவாள்; அவளது குடும்பத்தார் அவள் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தியாக வேண்டும். அப்படியே யாரும் தப்பித்துச் சென்றாலும் மறுபடியும் அவள் விலைக்கு வாங்கப்பட்டுவிடுவாள். மொத்தத்தில் இந்த நரகத்தில் நுழைந்தவள், அதிலிருந்து வெளியேற முடியாது. 

இஸ்லாமே தீர்வு 


இக்கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென்றால் இஸ்லாம் ஒன்றே அதற்கான வழியாகும். அடிமைகளை ஒழிக்கவும் அடிமைத் தளையிலிருந்து மனித இனத்தை விடுவிக்கவும் இஸ்லாம் பல வழிகளைக் காட்டியுள்ளது; எல்லாவற்றுக்கும் மேலாக, சுதந்திர மனிதனை அடிமையாக்குவதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கிறது. 

திருடன், கடன்காரன் யாராக இருந்தாலும் அவனை அடிமையாக்க அனுமதியில்லை. 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன: 

முதல் வகை: 

இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்: ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண்பேசி ‘மஹ்ர்’ (மணக்கொடை) கொடுத்து மணந்துகொள்வார். 

இரண்டாம் வகைத் திருமணம்: 

ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக்கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள்!’ என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலகி இருப்பார். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்றவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்டமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார். 

குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஉ’ (விரும்பிப்பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர். 

மூன்றாம் வகைத் திருமணம்: 

பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகி சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச்சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்றுகூடுவார்கள். 

அப்போது அவர்களிடம், ‘‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது’’ என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) ‘‘இவன் உங்கள் மகன், இன்னாரே!’’ என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதை மறுக்க முடியாது. 

நான்காம் வகைத் திருமணம் : 

நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள். 

இந்தப் பெண்கள் விலைமாதர்கள் ஆவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டுவைத்திருந்தனர். எனவே, அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை- பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்துவருவார்கள். 

தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டுவந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது. 
சத்திய (மார்க்க)த்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டபோது, இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள். (புகாரீ - 5127)


சில இணைப்புகள்:- 

Saturday, September 15, 2012

செப்டம்பர் 11-ம் ஷைத்தான்களின் சூழ்ச்சிகளும்


அ. முஹம்மது கான் பாகவி

செப்டம்பர் 11-ல் ஆண்டுதோறும், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு செப்-11 நினைவு தினத்தில் கோரமான காட்சிகள் அரங்கேறின; உலக முஸ்லிம்களின் இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சும் கொடூரக் காட்சிகள் திரையிடப்பட்டன.

FILM PRODUCER STEVE - KLEIN

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் பேராயர் தேவாலயத்தின் உள்ளே செப்டம்பர் தாக்குதல் சம்பவங்களின் நினைவுக் கூட்டம். கூட்டத்தை நடத்தியவர்கள், எகிப்து நாட்டைப் பிரித்து, தனியான ‘கிப்தி’ நாடு உருவாக்க வேண்டும் என்று கேட்கும் எகிப்து அரபு கிறித்தவர்கள். இவர்கள் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்துவிட்டவர்கள்.

PASTOR TERRY JONES
இவர்களில் மோரிஸ் ஸாதிக் முக்கியமானவர். இவரது குடியுரிமையை எகிப்து அரசு பறித்து நாட்கள் பல ஆகிவிட்டன. மற்றொருவர் இஸ்மத் ஸக்லமா. இவர்தான், உத்தேச கிப்தி நாட்டிற்கான உயர்மட்டக் குழுவின் தலைவர். இவர்களுடன் அமெரிக்க தீவிரவாதியும் பேராயருமான டேரிஜோன்ஸும் சேர்ந்துகொண்டார். இவர்தான், திருக்குர்ஆன் பிரதிகளை எரியுங்கள் என்று பிரசாரம் செய்பவர்.

அன்றைய நிகழ்ச்சியின் பெயர் என்ன தெரியுமா? ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நீதிவிசாரணை.’ உள்ளூர் அமெரிக்கத் தொலைக்காட்சி சேனல்கள் புடைசூழ நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.

பேராயர்கள் வாய்ட்டனிசாப், டைடுஜீத், உசாமா தக்தூக் ஆகியோர் விசாரனை நடத்துகிறார்கள். மோரிஸ் ஸாதிக், ஈலியா பாஸிலீ, ஈஹாப் யஅகூப் ஆகியோர் வழிநடத்துவோராகப் பங்கேற்கிறார்கள்.

செப்டம்பர் தாக்குதலுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பொறுப்பாளராக ஆக்கவும் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தவும் அங்கே முயற்சி நடக்கிறது. வானிலிருந்து அருளப்பெற்ற தூதுத்துவம் இல்லை; மனிதக் கற்பனையே இஸ்லாம் என்று தீர்ப்பளித்த பேராயர்கள் நபி (ஸல்) அவர்கள்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்துகிறார்கள்.

‘அவர் பூமிக்குச் சாந்தியைக் கொண்டுவரவில்லை; மனிதர்களிடையே வெறுப்பை விதைத்தார்; இரத்தத்தை ஓட்டினார். எனவே, முஹம்மத் (ஸல்) அவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறோம்’ என்று பேராயர்கள் கூச்சலிட்டனர்; இது ‘முஹம்மத் மீதான நீதிவிசாரணைக்குரிய உலக நாள்’ என்று கொக்கரித்தனர்.

INNOCENCE OF MUSLIMS

Morris Sadek with Terry Jones
இந்நிகழ்ச்சி தொடங்குவதற்குமுன், நபி (ஸல்) அவர்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தும் ஒரு படத்தைத் திரையிடுவதற்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். உத்தேச கிப்தி நாட்டின் உயர்மட்டக் குழுவின் தயாரிப்பே இப்படம். இஸ்மத் ஸக்லமா, மோரிஸ் ஸாதிக் ஆகியோரே இக்குழுவின் பொறுப்பாளர்கள். படத்தின் பெயர்: இந்நோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் (முஸ்லிம்களின் அப்பாவித்தனம்).

மூன்று மணிநேரம் ஓடும் இப்படத்தைத் தயாரிக்க மூன்று ஆண்டுகள் பிடித்தன. அரபி மொழியிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

படத்தின் இயக்குநர் சாம் பாசைல் என்பவன் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த யூதன் ஆவான். ‘முஹம்மதின் குணாதிசியங்களைப் படமாக்க பிரபல இஸ்லாமிய நூல்களையே நான் முன்னோடியாகக் கொண்டேன்; அவை அவரது வாழ்க்கை குறித்துப் பேசுகின்றன’ என்று பச்சைப் பொய் பேசும் இந்த சாம், அவை இன்ன நூல்கள் என்று குறிப்பிடவில்லை. இதிலிருந்தே, காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தில் இருந்துகொண்டு கற்பனைகளைக் கலந்து விஷத்தைக் கக்கியுள்ளான் என்பது உறுதியாகிறது.

‘அல்வ(த்)தன்’ நாளேட்டின் கையில் இப்படத்தின் ஒருபிரதி கிடைத்திருக்கிறது. நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் அவர்களின் துணைவியர் மற்றும் தோழர்கள் பற்றியும் வார்த்தையால் வடிக்க முடியாத மட்டரகமான காட்சிகள் படத்தில் நிறைந்துள்ளன.

படம் சொல்வதென்ன?

எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு கிறித்தவ டாக்டர் தன் மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது காட்டுமிராண்டிகள் தோற்றத்தில் சில முஸ்லிம்கள் திடீரென உள்ளே நுழைந்து மருத்துவமனையை அடித்து நொறுக்குகிறார்கள்; நோயாளிகளைக் கடுமையாகத் தாக்குகிறார்கள். இதையெல்லாம் தடுக்காமல் வெளியே நின்று எகிப்து போலீஸார் வேடிக்கை பார்க்கின்றனர்... என்று தொடங்குகிறது படம்.

டாக்டரிடம் இந்தக் கலகக்காரர்கள் யார் என்று அவருடைய மனைவியும் மகளும் கேட்கின்றனர். அவர் இவர்கள்தான் முஸ்லிம்கள்; முஹம்மதைப் பின்பற்றுபவர்கள். அவர் வரலாறு தெரியுமா என்று கேட்டு, நபியவர்களின் கதையைச் சொல்கிறார்.

படத்தைப் பற்றி அரபிமொழியில் நமக்குக் கிடைத்த எல்லா தகவல்களையும் என்னால் இங்கே குறிப்பிட இயலவில்லை. என் எழுதுகோல் எழுத மறுக்கிறது. சில காட்சிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்:

நபி (ஸல்) அவர்களையும் அவர்களுக்கு வந்த வேத அறிவிப்பான வஹீயையும் படம் கேலி செய்கிறது. அன்னை கதீஜா (ரலி) அவர்களை மலிவாகச் சித்தரிக்கிறது. கதீஜா (ரலி) அவர்களுடனும் வேறுசில துணைவியருடனும் நபியவர்கள் தனிமையில் இருந்த காட்சி என்று சொல்லி கேவலமாகவும் செக்சியாகவும் காட்டப்படுகிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் சிறுகுழந்தையாக இருந்தபோதே அவர்களை நபியவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள் என்று சொல்லி, நபியவர்கள் பெண்ணாசை பிடித்தவர் எனக் காட்டுகிறார்கள். மனைவிக்கு முன்னாலேயே ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு, அம்மனைவியுடன் உறவு கொள்வதாக ஒரு காட்சி.

ஒரு கழுதைதான், முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்பதைப் போன்று ஒரு காட்சி. திருக்குர்ஆன் ‘தவ்ராத்’ வேதத்தின் கலப்பு என்றும் ஒரு கிறித்தவப் பாதிரிதான் அதை வடிவமைத்தார் என்றும் படம் புளுகுகிறது. அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஒரு கண் குருடு என்பதுபோல் காட்டப்படுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, குழந்தைகளைக் கடத்தி அடிமைகளாக விற்றல் ஆகியவற்றையே தோழர்களுக்கு முஹம்மத் கற்பித்தார் என்ற மாபெரும் அபாண்டம் ஒன்றை படம் வெளியிடுகிறது.

அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் குர்ஆனையும் அவமானப்படுத்தியதற்காக ஒரு மூதாட¢டியை நபித்தோழர்கள் இருகால்களை இரு பக்கம் இழுத்துக் கிழிப்பதாக ஒரு காட்சி. இதன்மூலம், முஸ்லிம்களை சகிப்புத் தன்மை அற்றவர்கள் என்று படம் சித்தரிக்கிறது.

முடிவில் ஒரு போர்க்களக் காட்சி. அதில் இரத்தம் சொட்டச் சொட்ட ஒரு வாளை நபியவர்கள் ஏந்தியிருப்பதைப் போன்றும் ஆடையெல்லாம் இரத்தம் தோய்ந்திருப்பதைப் போன்றும் காட்டப்பட்டுள்ளது. தமக்கு முன்னாலுள்ள எல்லாரையும் கண்மண் தெரியாமல் வெட்டிச் சாய்க்கிரார்களாம்! நீங்களும் இவ்வாறே நடந்துகொள்ள வேண்டும் என்று முஸ்லிம்களுக்குப் போதிக்கிறார்களாம்!

செய்திக்காக இருந்தாலும், இவற்றையெல்லாம் என் கைப்பட எழுதியதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கிறேன்; அஸ்தஃக்ஃபிருல்லாஹ்!

என்னதான் வேண்டும் உங்களுக்கு?

உலக முஸ்லிம்களே! இக்காட்சிகளில் ஒன்றாவது உண்மையா? குர்ஆனிலோ ஹதீஸிலோ வரலாற்றிலோ அறிஞர்களின் உரைகளிலோ இதை நீங்கள் என்றாவது கேள்விப்பட்டதுண்டா? முழுக்க முழுக்க பொய்யிலும் பொய்யான காட்சிகளைப் படமாக்கி அரிப்பைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் யூதர்களும் கிறித்தவர்களும் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது இதில்?

ஏன் இவர்களுக்கு இந்தக் கொலைவெறி? நம்மை உசுப்பேற்றி கலகங்களை உருவாக்க நினைக்கிறார்களா? அல்லது இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாமல் வெறிபிடித்து அலைகிறார்களா? அல்லது எகிப்து போன்ற நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக அங்குள்ள சிறுபான்மையினரைத் தூண்டிவிடுகிறார்களா?

உண்மையில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பதை இன்றுவரை உலக அரங்கில் அமெரிக்கா நிரூபிக்கவில்லை. அமெரிக்கா குற்றம் சாட்டிய சத்தாம் ஹுசைனையும் உசாமா பின் லேடனையும் கொன்று குவித்துவிட்டீர்களே! இன்னும் வெறி அடங்கவில்லையா? இராக்கையும் ஆப்கனையும் அதையொட்டி பாகிஸ்தானையும் சூறையாடி கொள்ளையடித்துவிட்டீர்களே! இன்னும் உங்கள் பசி அடங்கவில்லையா?

இன்னும் எத்தனை முஸ்லிம்களைக் கொன்று, எத்தனை முஸ்லிம் நாடுகளைக் கொள்ளையடிக்கத் திட்டம்? சொல்லுங்கள்!

ஒன்றுமட்டும் நிச்சயம்! சியோனிஸ்டுகளையும் அமெரிக்கர்களையும் எதிர்க்கின்ற வல்லமையும் நெஞ்சுறமும் முஸ்லிம்களுக்கு மட்டுமே உண்டு என்பதைத்தான் இவர்களின் சேட்டைகள் காட்டுகின்றன. இல்லாவிட்டால் உலகில் மற்ற எல்லாரையும் விட்டுவிட்டு முஸ்லிம்களையே இந்த ஷைத்தான்கள் குறிவைக்கக் காரணமென்ன?

இறுதியாக ஒன்றைச் சொல்லிக்கொள்வோம்: யூதர்கள் என்ன? கிறித்தவர்கள் என்ன? யாராலும் இஸ்லாத்தையோ திருக்குர்ஆனையோ அசைக்க முடியாது. சில முஸ்லிம்களை நீங்கள் கொல்லலாம்; இஸ்லாத்தைக் கொல்ல முடியாது. காரணம், அது ஒன்றுதான் இன்றைக்கு இறைமார்க்கம்; அது ஒன்றுதான் சத்தியம்; அது ஒன்றுதான் வாழும் வாழ்க்கைநெறி.

இஸ்லாத்தைக் காக்கும் பொறுப்பை, அதை அருளிய இறைவனே ஏற்றுக்கொண்டிருக்கிறான். இறைவனோடு போர் தொடுக்கிறீர்களா? அழிந்துபோவீர்கள்! இந்தப் பார் உள்ளளவு, வானமும் பூமியும் உள்ளளவு, உலகம் அழியும்வரை இஸ்லாம் இருக்கும்.

இதோ வல்லோன் அல்லாஹ் அறிவிக்கிறான் கேளுங்கள்:
நிச்சயமாக இந்த அறிவுரையை (குர்ஆனை) நாமே அருளினோம். உறுதியாக இதை நாமே பாதுகாப்போம். (15:9)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ், அல்லாஹ்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் (இறைநம்பிக்கையாளர்) எவர்மீதும் மறுமைநாள் நிகழாது. (முஸ்லிம்)
பூமியில் ‘அல்லாஹ், அல்லாஹ்’ என்று சொல்லப்படாத போதுதான் மறுமை நாள் நிகழும். (முஸ்லிம்)
அதாவது முஸ்லிம்கள் இருக்கும்வரை உலகம் அழியாது; உலகம் அழியாது இருக்கக் காரணமே ‘அல்லாஹ், அல்லாஹ்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள்தான்.

Friday, September 14, 2012

செய்தித் துளிகள்...


யூத விஞ்ஞானி இஸ்லாத்தை ஏற்றார்

கருவியல் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஜெயில்ஹம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்தபின்பே- மறுமணம் செய்ய வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். ஆணுக்குள்ள டி.என்.ஏ ரேகைப் பதிவு ((DNA Finger Printing) தொடர்பானதே அந்த ஆய்வு. ஓர் ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவானது மூன்று மாதங்களுக்குப்பின் அழிந்துவிடும் என அவரது ஆய்வு கூறியது.

இது தொடர்பாக, எகிப்தில் மருத்துவப் பரிசோதனை துறை பேராசிரியராக உள்ள டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சய்யித் கூறுகிறார்: அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனக்குரிய பாலின ரேகையைப் பெண்ணிடத்தில் விட்டுச்செல்கிறான். அது மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.

அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் ராபர்ட் கள ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவன்மார்களின் ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. இவ்வாறு மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களிடம் பதிவாகியிருந்தன.

ராபர்ட் ஜெயில்ஹம் அதிரடியாக இன்னொரு காரியமும் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனை செய்தார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அது மட்டுமன்றி, தம்முடைய மூன்று மகன்களில் ஒருவர் மட்டுமே தமக்குப் பிறந்தவர் என்ற உண்மையும் அவரைத் தாக்கியது.

இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் என்பதற்குக் காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால் டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு.

ஐரோப்பாவில் பெருகிவரும் முஸ்லிம்கள்

ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 4.5 கோடியை (45 மில்லியன்) எட்டிவிட்டது. சர்வதேச சிறுபான்மையினர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று இத்தகவலை வெளியிட்டிருக்கிறது. ஐரோப்பாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதாகவும் கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய சமூகத்தில் முஸ்லிம்களின் பங்கு குறிப்பிடும் அளவுக்கு அதிகமாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது. 

ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படியான அங்கீகாரம் பெற்றுள்ள இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம்தான். பால்கன் தீபகற்பத்தில் (தென்கிழக்கு ஐரோப்பா) முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்துவருகிறார்கள். கோஸ்வோ, அல்பேனியா, போஸ்னியா, ஹெர்ஸகோவினா ஆகிய பால்கன் நாடுகளில் முஸ்லிம்கள் பெரிய எண்ணிக்கையில் வசிக்கின்றனர். 

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பெரிய நாடான பிரான்சில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியுள்ளது. அடுத்து ஜெர்மனியில் 40 லட்சம்; பிரிட்டனில் 30லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். கிரீஸ் நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். அடுத்து ஸ்லோவேனியாவிலும் குறைவு. ஐரோப்பாவிலேயே அதிகாரபூர்வமான பள்ளிவாசல்கள் இல்லாத ஒரேநாடு ஸ்லோவேனியாதான்.

குர்ஆனே அடிப்படை கல்வி - அமெரிக்க செனட் மெம்பர்

அமெரிக்காவின் இண்டியானா மாகாண ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஆண்ட்ரியா கார்சன் ஆச்சரியமான யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின் பாடத்திட்டத்தில் திருக்குர்ஆனை ஓர் அடிப்படை பாடமாகச் சேர்க்க வேண்டும். 

கல்வித் திட்டத்தில் குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பள்ளிகள், மற்ற பள்ளிகளைக் காட்டிலும் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளன. கல்வித் தகுதியிலும் அதை அடையும் வழியிலும் அவை வித்தியாசப்படுகின்றன. அமெரிக்காவில் எதிர்பார்த்த கல்வி முன்னேற்றம் ஏற்படவில்லை என்று குற்றம் சாட்டிய கார்சன், அமெரிக்கா பள்ளிக்கூடங்கள் சமயத்தை நம்புவதில்லை; இஸ்லாமியப் பள்ளிகளை முன்னோடியாகக் கொள்வதில்லை என்று கடுமையாகச் சாடினார். உண்மை ஒருநாள் தலைதூக்கியே தீரும்.

2 லட்சம் சிரியா அகதிகள்
சிரியாவில் பஷ்ஷார்எனும் கொடுங்கோலன் ஆட்சிபுரிந்துவருகிறான். இவனது ஊழல் மிகுந்த சர்வாதிகார குடும்ப ஆட்சியை எதிர்த்து சிரியா மக்கள் துணிவுடன் போராடிவருகின்றனர். துனூசியா, எகிப்து போன்ற நாடுகளைத் தொடர்ந்து சிரியாவிலும் இரண்டாவது சுதந்திரப் போர் நடந்துவருகிறது.
இதுவரை சுமார் 25ஆயிரம் பேர் இப்போரில் பலியாகியுள்ளனர். கடைசி சில மாதங்களில் மட்டும் 17,281 சிவிலியன்களும் 1051 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
தீக்காடாக மாறிவிட்ட அந்த நல்ல பூமியில் நாள்தோறும் துப்பாக்கி சப்தமும் பீரங்கி முழக்கமும் கேட்டவண்ணம் உள்ளன. சிரியாவைவிட்டு வெளியேறி அண்டை நாடுகளில் மக்கள்
தஞ்சமடைந்துவருகின்றனர். இதுவரை 2லட்சம் சிரியர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். துருக்கி, இராக், லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு 30 ஆயிரம்பேர் சென்றுவிட்டனர். இராக்கில் மட்டும் 15 ஆயிரம் சிரியா அகதிகள் முகாம்களில் குடியேறியுள்ளார்கள்.
ஷாம் ஃபிர்அவ்ன்என அழைக்கப்படும் கொடுங்கோலன் பஷ்ஷாருக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. போர்க்கைதிகள், தன் போட்டோவை வழிபட வேண்டும் என்று அவன் உத்தரவிட்டுள்ளான். உள்நாட்டிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக உள்ளனர்; 25 லட்சம் பேர் மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்துள்ளனர்.
பஷ்ஷார் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பும் முதல் ஆள் யார் தெரியுமா? இஸ்ரேல் பிரதமர்தான். இதிலிருந்தே அவனது யோக்கியதை தெரியும். மற்றொரு நாடு ஈரான்; காரணம் ஷியா-சன்னி பிரச்சினைதான்.

Saturday, September 08, 2012

வேறு என்ன சொல்ல...?

- கான் பாகவி

லக நாடுகளுக்கு உபதேசம் செய்வதிலும் அவற்றில் நாட்டாண்மைத் தனம் செய்வதிலும் அமெரிக்காவுக்கே முதலிடம். ஜனநாயகம், சுதந்திரம், அணு ஆயுதம், பயங்கரவாதம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு சிறிய நாடுகளுக்குள் புகுந்து அவற்றை அழிப்பதும் அவற்றின் வளங்களைச் சுருட்டுவதுமே அமெரிக்காவின் பிழைப்பு.

அண்மைக் காலத்தில் அமெரிக்காவின் அராஜகத்திற்கு ஆளான நாடுகள் வரிசையில் இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அடுத்து ஈரான் ஆகிய முஸ்லிம் நாடுகள்தான் இடம்பெறுகின்றன. இதே அணுஆயுதம், பயங்கரவாதம், அடுத்தவரை இழிவுபடுத்தல், அடுத்தவரின் உரிமைகளைப் பலம் கொண்டு பறித்தல் ஆகிய எல்லாக் கொடுமைகளையும் அமெரிக்காவே செய்யும்போது ஐ.நா.சபை வேடிக்கை பார்க்கும். 


அவ்வாறுதான், வளரும் நாடுகளுக்குச் சுற்றுச்சூழல் பற்றியும் சுகாதாரம் பற்றியும் அமெரிக்கா அடிக்கடி அறிவுரை சொல்லும். பூமி வெப்பமாதலுக்கு இந்தியாவும் சீனாவும்தான் காரணம் என்று காரணம் காட்டி, கார்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்; பெரிய ஆலைகளைக் கட்டுப்படுத்துங்கள் என்றெல்லாம் அமெரிக்கா ஆணையிடுவதுண்டு. 

ஆனால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, சுகாதாரத்தைக் கெடுப்பதில் அமெரிக்காவுக்கு நிகர் இருக்க முடியாது. அணுக்கழிவுகள் உள்ளிட்ட நச்சுகளைக் கடலில் கொட்டி, கடல்நீர், கடல்வாழ் உயிரினங்கள், காற்று ஆகியவற்றை மாசுபடுத்துவதிலும் அமெரிக்காதான் மற்றவர்களுக்கு வழிகாட்டி . அமெரிக்காவைப்போல் சுயநலமிக்க நாடு ஒன்றை நீங்கள் உலக வரைபடத்தில் காணமுடியாது.

அந்தப் பட்டியலில் அமெரிக்காவின் மான்சாண்டோ (MONSANTO) நிறுவனத் தயாரிப்புகளால் விளையும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரக் கேடுகள் பற்றிய ஆய்வு இதயமுள்ள ஒவ்வொருவரையும் கதிகலங்கச்செய்துவிடும். மான்சாண்டோவின் ஐந்துவகை தயாரிப்புகள் பற்றியும் அவற்றால் விளையும் தீமைகள் பற்றியும் இங்கு காண்போம். 

மான்சாண்டோவின் ஐந்து தயாரிப்புகள்: 

1901 ஆம் ஆண்டு மான்சாண்டோ நிறுவனம் சாக்ரின் (SACCHARIN) என்றொரு இனிப்பைத் தயாரித்தது. இது, இயற்கையான கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையைவிட 200 முதல் 700 மடங்கு அதிக இனிப்புள்ள செயற்கைக் கரிமச் சேர்மம் ஆகும். 

சாக்ரினின் சோடியம் அல்லது கால்சியம் உப்பு நீரிழிவு நோயாளிகளுக்கான இனிப்பாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையும் உலகின் பிற நிறுவனங்களும் அங்கீகரித்துள்ளன. சாக்ரினை சர்க்கரைக்குப் பதிலாக கோகாகோலா நிறுவனமும் பாக்கெட்டில் அடைத்த உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. 

ஆனால், 1907ஆம் ஆண்டே சாக்ரின் ஆரோக்கியத்திற்கு ஊறுவிளைவிக்கும் தன்மை கொண்டது என்பதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கண்டுபிடித்தது. இது புற்றுநோய் ஊக்கி ஆகும் என்பதால் இதன் பாதுகாப்பு சர்ச்சைக்குரியதானது. 

DR. HARVEY WILEY
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் முதலாவது பொறுப்பாளர் ஹார்வி வாய்லி கூறுகிறார்: 

சாக்ரினைப் பயன்படுத்துவோர் சர்க்கரையைத்தான் நாம் சுவைக்கிறோம் என்று நம்பினால், அவர்கள் ஏமாந்துபோவர். உண்மையில் சாக்ரின் என்பது, தார் மற்றும் நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. உணவு மதிப்பீடு அதில் அறவே கிடையாது. எனவே, இது அடியோடு ஆரோக்கியத்தைப் பாதிக்கும். 

கட்டுப்பாடின்றி சாக்ரினைப் பயன்படுத்திய நீண்டகால அனுபவத்திற்குப்பின் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில், எச்சரிக்கை வாசகம் உறையில் பொறிக்காமல் சாக்ரின் விற்பனை செய்யக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. எலிகளுக்கு சாக்ரினைக் கொடுத்து சோதித்ததில், சாக்ரின் புற்றுநோயை ஊக்குவிக்கக்கூடியது என்று கண்டறியப்பட்டதே இதற்குக் காரணம். 

அப்படியிருந்தும், மூன்று தசாப்தங்களாக மான்சாண்டோ நிறுவனம் போராடி, மேற்கண்ட முடிவை மாற்றுவதில் 2001 ஆம் ஆண்டு வெற்றியும் கண்டது. என்னதான் அவர்கள் முடிவை மாற்றிக்கொண்டாலும், தார் மற்றும் நிலக்கரி மூலம் எடுக்கப்பட்ட ஒருபொருள் எப்படி பாதுகாப்பான உண்பொருளாக இருக்க முடியும்?

சாக்ரின் கலந்த பொருளை இனியாவது பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

2.பாலிஸ்டைரின் (POLYSTYRENE):

POLYSTRENE

கடந்த நூற்றாண்டின் நாற்பதுகளில் மான்சாண்டோ நிறுவனம் பிளாஸ்டிக் தயாரிப்பில் இறங்கியது. வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் குறிப்பிட்ட வடிவங்களில் வார்த்து எடுக்கக்கூடிய பாலிமர்களே பிளாஸ்டிக்குகள் (PLASTICS) ஆகும். பிளாஸ்டிக்குகள் இரண்டு பெரும் பிரிவுகளில் அடங்குகின்றன. 

பாலிஸ்டைரின் போன்ற தெர்மோ பிளாஸ்டிக்குகள் ஒரு பிரிவு. இவற்றை உருக்கி மீண்டும் மீண்டும் உருவாக்க முடியும். மற்றொரு பிரிவு, பாலியரித்தேன் போன்ற தெர்மோ செட்டிங் பிளாஸ்டிக்குகள். இவற்றை மீண்டும் உருக்கி வார்ப்பதில்லை; அழிக்கத்தான் செய்வர். 

நுரைத்த பாலிஸ்டைரின், அல்லது ஸ்டைரோஃபோம் (உணவுக் கொள்கலன்கள்) சுற்றுச்சூழலைக் கடுமையாக பாதிக்கக்கூடியதாகும். இதைவிட சுற்றுச்சூழலை அதிகமாகக் கெடுக்கும் பொருள் வேறொன்றுமில்லை. தெர்மோ பிளாஸ்டிக்குகளில் உள்ள பாலிஸ்டைரின் மக்குவதுமில்லை; மாறுவதுமில்லை. இதை மறுசுழற்சி செய்வதே ஒரு தனித்தொழிலாக வளர்ந்திருக்கிறது. 

அழியாமல் இருக்கும் பிளாஸ்டிக், சிறுசிறு துண்டுகளாகி உயிரினங்களை அழித்துவருகிறது; கடல்வாழ் ஜீவன்களுக்கு இடரளிக்கிறது; புற்றுநோய்க்குக் காரணமாகும் பென்ஸின் எனும் பொருளை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் காற்றில் கலக்கச் செய்கிறது. நிறமற்ற நீர்மமான பென்ஸின் நச்சுத் தன்மை கொண்டது. நீண்டகாலம் புழங்கினால் வெள்ளணுப் புற்று வர வாய்ப்பு உண்டு. 

2007 ஆம் ஆண்டு சாண்பிரான்ஸிஸ்கோ நகரின் மேற்பார்வை அவையின் தலைவராக இருந்த ஹாரன் பஸ்கீன் அப்போதே கூறினார்: 

சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கும் நுரைத்த பாலிஸ்டைரினை, உணவுகளை அடைக்கும் பெட்டிகளாக்ப் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. அமெரிக்கா நாடாளுமன்றம், இதை உற்பத்தி செய்வதற்கு ஆதரவான நிலையை எடுத்திருப்பதுதான் அதிர்ச்சிதரும் செய்தியாகும். 

3. ஏஜென்ட் ஆரஞ்சு (AGENT ORANGE)


இது களைக்கொல்லி மருந்துகளின் கலவை; 2,4 – டைக்ளோரோ ஃபினாக்ஸி அசிடிக் அமிலமும், 2,4,5 – டிரைக்ளோரோ ஃபினாக்ஸி அசிடிக் அமிலமும் சமஅளவில் கொண்டது. இதில் டைஆக்ஸினையும் சிறிதளவு காணலாம். 

இது, ஆரம்பத்தில் களைக்கொல்லியாக அறிமுகமாகி வளர்ச்சியடைந்து, போகப்போக எதிரிகளையும் எதிரி நாடுகளையும் அழிக்கும் மிகப் பெரிய ஆயுதமாக மாறியதுதான் கொடுமையிலும் கொடுமை. 

வியட்நாம் போரின்போது, எதிரிகளின் நடமாட்டத்தை மறைக்கும் வகையில் செறிந்திருந்த வியட்நாம் காடுகளை அழிக்கவும், எதிரியின் உணவு ஆதாரங்களான பயிர்களை அழிக்கவும் 30 லட்சம் காலன் அளவுள்ள ஏஜென்ட் ஆரஞ்சு, அமெரிக்க ராணுவத்தால் தெளிக்கப்பட்டது. 

வியாட்நாம்மீது அமெரிக்கா தொடுத்த கடும்போர் ஒன்பது ஆண்டுகள் நீடித்தது. இக்கால இடைவெளியில் வியட்நாம் நகரங்கள், காடுகள், பயிர்கள், நீர்நிலைகள் ஆகியவற்றின்மீது அமெரிக்க வீரர்கள் இந்த உயிர்க்கொல்லியைத் தெளித்தார்கள். கடுமையான விளைவுகளை உண்டாக்கக்கூடிய வேதியல் பொருட்கள் இந்தக் களைக்கொல்லியில் கலந்திருக்கின்றன. 

ஒரு கோடி வியட்நாமியர்களிடையே இயல்புக்கு மாறான அளவில் நிகழ்ந்த கருச் சிதைவுகள், தோல் நோய்கள், புற்றுநோய், பிறவிக் குறைபாடுகள், வளர்ச்சிக் குறைபாடுகள், தாறுமாறான உருவமைப்பு ஆகிய உலகம் கண்டிராத சித்திரவதைகளுக்கு இந்த ஏஜென்ட் ஆரஞ்சே காரணமாயிற்று. 

அமெரிக்க அரசின் வேதியல் ஆயுதங்கள் பிரிவின் முன்னாள் விஞ்ஞானியான டாக்டர் ஜேம்ஸ் ஆர். கிளாரி கூறுகிறார்:

அறுபதுகளில் களைக்கொல்லி திட்டத்தை இராணுவ விஞ்ஞானிகள் தொடங்கியபோதே, இதனால் ஏற்படும் கடும் விளைவுகளை நாங்கள் தெளிவாகப் புரிந்திருந்தோம். களைக்கொல்லியில் உள்ள டியோக்ஸின் எனும் பொருள் சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்கும். அவ்வாறிருந்தும், எதிரிகள் மீது இதைப் பயன்படுத்துவதற்கு எங்களில் யாரும் சற்றும் கலக்கம் அடையவில்லை.

வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “4.8 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாயினர்; 4 லட்சம் பேர் பலியாயினர்; 5 லட்சம் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. 

4. மாடு வளர்ச்சி ஹார்மோன் (BOVINE GROWTH HORMONE):

செயற்கை வளர்ச்சி ஹார்மோன் (இயக்குநீர்) கொடுக்கப்பட்ட பசுக்களின் பாலை விற்பனை செய்வதற்கு அனுமதித்த முன்னேறிய நாடு அமெரிக்கா மட்டுமே.


பிரேசில் தவிர, இதர முன்னேறிய நாடுகள் அனைத்தும் செயற்கை ஹார்மோன் செலுத்தப்பட்ட பாலின் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளும் கனடா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இவ்வாறு தடை செய்துள்ளன.


வளர்ச்சி ஹார்மோன் (GH) உருவாக்கப்படும் முறை என்ன தெரியுமா? உடம்பில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியின் முன்முண்டுப் பகுதியில் சுரக்கும் ‘சோமடோட்ரோப்பின்’ எனும் பெப்டைட் ஹார்மோன் புரதம் உருவாவதைத் தூண்டுவதன் வாயிலாகவும், கொழுப்பைச் சிதைப்பதன் வாயிலாகவும் எலும்பு மற்றும் உடம்பின் மற்றத் திசுக்களின் வளர்ச்சிக்கு வகை செய்யப்படுகிறது.


இது அளவுக்கு அதிகமாக உற்பத்தியானால் பூதாகாரம், அக்ரோமெகாலி போன்ற கோளாறுகள் உண்டாகும்; அளவு குறைந்தால் குள்ளத் தன்மை உண்டாகும். இது செயற்கை உடல் வளர்ச்சியினால் விளையும் விபரீதம்.

செயற்கை ஹார்மோன் ஊட்டப்பட்ட பசுக்களின் பாலில் புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோன்கள் அதிக அளவில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவேதான், இயற்கையான பால் என இனம்காட்ட லேபிலில் ‘ஹார்மோன் கலக்காதது’ என முத்திரையிட வேண்டும் என அமெரிக்க நீதி மன்றங்கள் உத்தரவிட்டன.


ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர் டாக்டர் ஜான்மா டாவேசம்போ கூறகிறார்:


நாம் இன்றைக்கு அருந்திவரும் பாலானது, இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் அருந்திவந்த பாலுக்கு முற்றிலும் வேறுபட்டதாகும். நாமெல்லாம் நம்பியிருப்பதைப் போல் இது சிறந்த ஊட்டச்சத்து அல்ல.


அமெரிக்காவில் அறுபது விழுக்காடு மக்கள் ஹார்மோன் இல்லாத பாலையே அருந்துகின்றனர்; ஹார்மோன் ஊட்டப்பட்ட செயற்கைப்பாலை 40 விழுக்காட்டினரே பயன்படுத்துகின்றனர் – என்கிறது அமெரிக்கா உணவு பாதுகாப்பு மையம்.


5. மரபு மாற்று விதைகள்

உலக வரலாறு காணாத பேரழிவாக மான்சாண்டோ நிறுவனம் விதைகளிலும் மாற்றத்தை உருவாக்கியது.கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் மரபு மாற்று விதைகளை (GENETICALLY-MODIFIED SEEDS) இந்த நிறுவனம் தயாரித்தது.

மற்ற நிறுவனங்களை எல்லாம் அழிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கான டாலர்கள் செலவிட்டு விதவிதமான விளம்பரங்களின் துணையால் மான்சாண்டோ சந்தையை வளைத்துப் போட்டது. உலகில் பட்டினியை ஒழிக்க உணவு உற்பத்தியில் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம் என்றுவேறு இந்தக் கம்பெனி மனிதநேயம் பேசியது.

உண்மை என்ன? மரபு மாற்று விதைகளிலிருந்து விளையும் தானியங்களை மனிதர்கள் உட்கொண்டால் - அந்த மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகள் கண்பார்வையை இழக்கும் அவலம் ஏற்படும் என்கிறார் நியூயார்க் டைம்ஸ் இதழின் மைக்கேல் போலன்.

அதுமட்டுமின்றி இந்த மரபு மாற்று விதைகளை ஏழைநாடுகள் ஒவ்வோர் ஆண்டும் வாங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காக, மான்சாண்டோ பயன்படுத்தும் தொழில்நுட்பம் ஆபத்தானது. விதைகளில் மலட்டுத் தன்மையை உருவாக்கி, குறிப்பிட்ட காலத்திற்குள் அதன் வீரியத்தைச் சாகடித்துவிடுகிறது இந்தத் தொழில்நுட்பம். இதனால் பசியும் பட்டினியும்தான் உலகில் பரவும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.


இவ்வாறு அமெரிக்கவின் மான்சாண்டோ கம்பெனியின் கொடுமைகளுக்கு அளவே இல்லை. உலக மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எனக்குத் தேவை விற்பனை. அதையடுத்து குவியும் டாலர்கள்.

உலகமயமாக்கல்


அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் பொருளாதார கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் தாராளமயமாக்கள். இது இந்தியாவில் செயல்பாட்டுக்கு வந்த 20 ஆண்டுகளாகியும் மக்களின் வாழ்க்கை நிலை உயரவில்லை.


தேசிய மாதிரி சோதனை நிறுவனம் (NSSO) நடத்திய ஆய்வில் தெளிவந்துள்ளதாவது:


இந்தியாவில் கிராமப் பகுதிகளில் நாளொன்றுக்க ரூ.17க்கும் குறைவான (மாதம் ரூ. 503) வருமானத்தில் வாழ்வோர் 10 விழுக்காட்டிற்கும் அதிகம். இது 2011 -12ஆம் நிதியாண்டில் நடத்தப்பட்ட ஆய்வு. நகர்ப்புறங்களில் சராசரி மாத வருமானம் ரூ. 702 (நாளொன்றுக்கு ரூ. 23.40)

எக்ஸ்-பிளேன்


அமெரிக்கா எதிரிநாடுகளை அழிக்க புதிய போர் விமானம் ஒன்றைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது. 

இதன் பெயர் எக்ஸ்-பிளேன். ‘ஹைபர் சானிக் பாமர்ஸ்’ எனப்படும் இந்த நாசகார விமானத்தை அமெரிக்காவிலிருந்து உலகின் எந்த மூலைக்கு அனுப்பினாலும் ஒரு மணி நேரத்துக்குள் சென்று குண்டுகளை வீசி அழித்துவிடுமாம்!

ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு வேகமாகப் பாய்ந்து செல்லும் இந்த விமானத்தை 30 ஆண்டுகள் கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ளார்களாம்! அணு ஆயுதத்தை முதலில் தயாரித்ததே அமெரிக்காதான். வேதியியல் உயிரி ஆயுதங்களை வைத்திருப்பதும் அமெரிக்காதான்.

பொதுவாக அமெரிக்காவின் தத்துவமே என்ன தெரியுமா? நான் நன்றாக வாழ வேண்டும்; சுகபோகத்தில் மிதக்க வேண்டும். இதற்காக யாரையும் எதுவும் செய்யலாம். இந்த அமெரிக்காதான் உலக நாடுகளுக்கு மனித நேயம் குறித்தும் மனித உரிமை குறித்தும் பாடம் நடத்துகிறது.


ஷைத்தான் வேதம் ஓதுகிறது. வேறு என்ன சொல்ல?