Thursday, December 23, 2021

18இல் வளையாதது 21இல் வளையப்போகிறதா?

18இல் வளையாதது 
21இல் வளையப்போகிறதா?
~~~~~~~~~~~~~~~~~~~
பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தி சட்டமியற்றத் துடிக்கிறது ஒன்றிய அரசு. பொதுவாக இந்த அரசுக்கு இப்படி சர்ச்சைக்குரிய வேண்டாத வேலைகளைச் செய்வதே வேலையாகிப்போனது.

சரி! என்னதான் காரணம் சொல்கிறார்கள்? பாலின சமத்துவம் வேண்டுமாம்!ஆணுக்குத் திருமண வயதாக 21 இருக்கும்போது பெண்ணுக்கு மட்டும் 18 என்பது பாலினப் பாகுபாடு அல்லவா? இரு பாலினருக்கும் இயற்கையிலேயே பருவ வேறுபாடுகள் இருக்கும்போது அதைப் புறம் தள்ளிவிட்டு கல்யாண வயதைக் கூட்டுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இவர்கள் மறைக்கப்பார்க்கிறார்கள். 

பருவமடைவதில் தொடங்கி, பாலியல் இச்சை, குழந்தைப்பேறு, நோய் நொடிகள்,உடலமைப்பு, குழந்தை வளர்ப்பு, ஆயுள் காலம்...என ஒவ்வொரு கட்டத்திலும் ஆண்- பெண் வேறுபாடு என்பதை இவர்களால் மறுக்க முடியுமா?

பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கொடுமைகளுக்கு இலக்காகி வரும் பெண்களை கல்லூரிப் பருவம் வரை இழுத்து , இன்னும் மூன்றாண்டுகளுக்குக் கொடுமைகளை அனுபவியுங்கள் என்று வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் பாலின சமுத்துவமா?

 ஆண்களுக்குக் கருப்பை இல்லை. புகுந்து விளையாடுகிறார்கள். பெண்ணோ என்னதான் தடுப்புச் சாதனங்களைப் பயன்படுத்தினாலும் கருக்கலைப்பு வரை போகிறதே எப்படி? 


பாலின சமத்துவம் பேசி எல்லா அரங்குகளுக்கும் மகளிரை இழுத்துவந்து விட்ட இந்த அநாகரிக உலகில், ஆண்களின் வக்கிரப் புத்திக்கு மேலும் கால அவகாசம் தரவா? இந்த ஏற்பாடு?

படிப்பு, வேலைவாய்ப்பு, சுயமுன்னேற்றம் என்றெல்லாம் கதைகட்டிவிட்டு மங்கையரின் மானமிகு வாழ்க்கைக்கு வேட்டுவைப்பது எந்தவகை தத்துவம்?

ஒரு பெண்ணின் குடும்பச் சூழ்நிலை, வரன் தாமதம், உடல் நிலைப் பாதிப்பு போன்ற நியாயமான காரணங்கள் இருந்து, தாமே முன்வந்து 21 என்ன? 31இல் திருமணம் செய்துகொண்டால் அஃது அவளது உரிமை. அதைவிடுத்து, எல்லாம் சாதகமாக இருக்கும்போது ஒரு பெண் 18இல் திருமணம் செய்ய விரும்பினால் அதை எப்படி சட்டம் போட்டுத் தடுக்கலாம்?


இல்லை. முன்னேற்றம், பக்குவம், வளர்ச்சி...என நீங்கள் காரணத்தை அடிக்கினால் ,18இல் வளையாதது 21இல் வளையப்போகிறதா?

இறைவனே!காப்பாற்று எம் இளவரசிகளை.
வேறு என்ன சொல்ல?

Saturday, November 13, 2021

இஸ்லாமியப் பேரறிஞர் மறைவு.+++++++++++++

இஸ்லாமியப் பேரறிஞர் மறைவு.+++++++++++++

தமிழக ஆலிம்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும்  பேரிழப்பாகும். இஸ்லாமியப் பேரறிஞர். நபிமொழி கலை விற்பன்னர். சிறந்த பேராசிரியர்; பேச்சாளர். சமூக அக்கறையாளர் ,,,, எனப் பன்முக வித்தகர்.
தனிப்பட்ட முறையில் என்மீது பாசமும் பரிவும் கொண்ட மூத்த மகான்.

அன்னாருக்காகப் பிரார்த்திப்போம்..
اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا ارحم الراحمين. اللهم اغسله بالماء والثلج و البرد ونق ذنوبه كما ينقى الثوب الأبيض من الدنس.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவரும் லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் பெருந்தகை a.m. அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சற்று முன் வபாத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Thursday, October 28, 2021

பொறியியல் பட்டதாரிகளின் பரிதாப நிலை

~~~~~~~~~~~~~~~~~~~~
பொறியியல் பட்டதாரிகளின் 
பரிதாப  நிலை
~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்நாட்டில் 2016-17இல் கல்லூரிகளில் 1,85,000ஆக இருந்த மொத்த இடங்கள்,நடப்புக் கல்வியாண்டில்1,51,870 இடங்களாகக் குறைந்துள்ளன. அதாவது56,801 இடங்கள் காலியாக உள்ளன.கல்லூரிகளின் எண்ணிக்கையும் 525இலிருந்து 440ஆகக் குறைந்து போனது.

          இதற்கு அடிப்படைக் காரணம், பொறியியல் படிப்புகளால் வேலைவாய்பிற்கு உத்தரவாதமோ உறுதியோ அளிக்க முடியாததுதான்.ஒன்றிய அரசின் மனிதவளத் துறை வெளியிட்ட 2019 அறிக்கையில், 38.52 லட்சம் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதாகக் குறிப்பிடுகிறது.

          ஆனால்,ஆஸ்பைரிங் மைன்ட்ஸ் எனும் வேலை வாய்ப்பு கணக்கெடுப்பு நிறுவனம்,2019இல் 80% பொறியாளர்கள் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர் என மதிப்பிட்டுள்ளது.
    
           இதனால் கிடைக்கும் எந்த வேலையையும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அப்பட்டதாரிகள் ஆளாகியுள்ளனர்.இதனால் கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் நிலை உருவாகிவருகிறது.

( இந்து தமிழ்-27.10.2021)

Monday, October 25, 2021

ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி- ஒரு சிறந்த முன்னோடி

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் எனும் இறைமார்க்கம் வேரூன்றி வளர்ந்திருக்கிறது. இதற்கு வரலாற்றுப் பூர்வமான தரவுகள் உண்டு. 
       இக்காலகட்டத்தில், இங்கே தமிழகத்தில் இஸ்லாமிய மேதைகள், சட்ட அறிஞர்கள், மார்க்கத் தீர்ப்புகள் வழங்கும் முஃப்திகள் எனப் பல்துறை அறிஞர்கள் இருந்துள்ளனர்.
        ஆனால், கடந்த 13 நூற்றாண்டுகளாக அரபி மொழியில் தமிழக முஸ்லிம்கள் திருக்குர்ஆனை ஓத மட்டுமே செய்துள்ளனர். அதன் பொருள், கருத்து, விளக்கம் ஆகியவற்றை ஆலிம்கள் வாயிலாக வாய்மொழியாகவே கேட்டு அறிந்து வந்துள்ளனர். தாய்மொழியாம் தமிழ்மொழியில் திருமறையின் மொழிபெயர்ப்பையோ உரைகளையோ வாசிக்கின்ற பெரும்பேறு கிடைக்காமலேயே இருந்துவந்துள்ளது.
           
ஆ.கா. பாகவி
        இந்நிலையில், மார்க்க அறிஞர்களை மதிக்கும் ஒரு வணிகர் குடும்பத்தில் 26.11.1876 (ஹிஜ்ரி 1294) 
ஞாயிற்றுக்கிழமை சேலம் ஆத்தூரில் காதிர் முகைதீன் ஹாஜியார் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு அப்துல் ஹமீது எனப் பெயர் சூட்டினர்.
          குழந்தைப் பருவத்தை தாண்டி பள்ளியில் சேர்ந்து தமிழ் உள்ளிட்ட பாடங்களைக் கற்றார்.பின்னர் தமது இளமைப் பருவத்தில் கிலாஃபத் இயக்க முன்னோடியாகவும், மதுவிலக்குப் பிரசாரகராகவும், கதர் அணியாத திருமணங்களில் கலந்துகொள்ள மறுத்த காந்தியவாதியாகவும் விளங்கினார்.

பாகியாத்தின் பாக்கியம்
         இதற்கிடையில், அண்ணல் அஃலா ஹழ்ரத் ஷம்சுல் உலமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் வேலூர் நகரில் கி.பி. 1884 ( ஹிஜ்ரி 1301)ஆம் ஆண்டு அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் எனும் பெயரில் ஓர் அரபிக் கல்லூரி தொடங்கி நடத்த வந்தார்கள். 
         அங்கு நிஸாமிய்யா பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது. நிறுவனர் அஃலா ஹழ்ரத் அவர்களுடன் மூத்த ஆசிரியப் பெருமக்கள் பயிற்றறுவித்துவந்தனர். மெளலானாக்களான  குலாம் முஹ்யித்தீன், அப்துல் காதிர் பாஷா, முஹம்மது கமாலுத்தீன், அப்துல் ஜப்பார் ஆகியோரும் , வட இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் நூர் முஹம்மது பஞ்சாபி , ஷாஹ் ஸமான் தேவ்பந்தீ , அப்துர் ரஹ்மான் பஞ்சாபி ஆகியோரும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். 
              கி.பி. 1892  ( ஹிஜ்ரி 1314)ஆம் ஆண்டில்-அதாவது 130 ஆண்டுகளுக்கு முன்- முதலாவது பட்டமளிப்பு விழா அங்கு நடந்தது. அதில் தஹ்சீல் ( இளங்கலை) வகுப்பில் தேறிய 17 ஆலிம்களுக்கும் முதவ்வல் (முதுகலை) வகுப்பில்
தேறிய ஃபாஸில்கள் 2 பேருக்கும் தாருல் உலூம் தேவ்பந்தின் தலைமை ஆசிரியர் மெளலானா சையிது அஹ்மத் தஹ்லவீ அவர்கள் பட்டம் வழங்கினார்கள்.

பாகவி ஆனார் மெளலானா
      பாரம்பரியமிக்க இந்த அரபிக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் முதல் அணியில் தமது 17ஆம் வயதில் ஆ.கா. அப்துல் ஹமீது அவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். அங்கு பத்தாண்டுகள் கல்வி பயின்று 1906ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் பட்டமளிப்பு விழாவில் ஆலிம் பட்டம் பெற்றார்கள்.
        அப்படியானால், 1896ஆம் ஆண்டு அன்னார் பாகியாத்தில் சேர்ந்திருக்க வேண்டும். அங்கு மாணவராகச் சேர்ந்த நாள் முதலாய் , திருக்குர்ஆனுக்குத் தமிழில் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வம் மெளலானா அப்துல் ஹமீது அவர்களுக்கு இருந்துவந்துள்ளது.
          ஆலிம் பட்டம் பெற்ற பிறகு வியாபாரம், அரசியல், கிலாஃபத் இயக்கம் என அன்னாரின் பொழுதுகள் கழிந்தன. பின்னர் 1926 பிப்ரவரி 19 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் திருக்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புப் பணியை மெளலானா அப்துல் ஹமீது பாகவி அவர்கள் தொடங்கினார்கள்.

அல்பகரா- அத்தியாயம்
          திருக்குர்ஆனின் 'அல்பகரா' (2) அத்தியாயத்தின் தமிழாக்கம், விரிவுரை ஆகியவற்றை எழுதி முடித்தபின், தமிழகத்தின் தலைசிறந்த ஆலிமகளின் பார்வைக்கு அனுப்பிவைத்து, அவர்கள் கொடுத்த முறையான திருத்தங்களுடன் 19.02.1929 அன்று முதல் பாகம் வெளியிடப்பட்டது.
     பின்னர் பொருளாதார தேக்கநிலை ஏற்படவே, சிரமப்பட்டுக் கொண்டிருந்த மெளலானா அவர்களுக்கு, ஹைதராபாத் நிஜாம் மன்னரின் மாமனார் நவாப் நஸீர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.அதையடுத்து பொருளாதார உதவி கிடைக்கவே, காரைக்காலில் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது.
       இரவு பகலாக பணி தொடர்ந்தது. ஒரு வழியாக 1942 அக்டோபர் 24இல் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு நிறைவடைந்தது.இருந்தாலும், உடனே அச்சிடாமல் , பாகியாத் பேராசிரியர் குழுவின் ஆய்விற்கு உட்படுத்தி 9.11.1943இல் பணி முடிவுற்றது.

இரண்டாம் உலகப் போர்
            எழுபது வயதைக் கடந்துவிட்ட மெளலானா அவர்கள் பலமுறை பயணம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இரண்டாம் உலகப் போர் நடந்த நேரம் அது. பயணம் என்பதே பெரிய கேள்விக்குறியதான நேரம். இதனால் தமது மொழிபெயர்ப்பைப் பாதுகாக்க மெளலானா அப்துல் ஹமீது பாகவி அவர்கள் ஒரு வேலை செய்தார்கள்.
            தமது கையேட்டுப் பிரதிநிதிகள் இரண்டைத் தயார் செய்தார்கள்.ஒரு பிரதியைத் தமது இல்லத்தில் பத்திரமாக வைத்துவிட்டு , மற்றொன்றை பாகியாத் கல்லூரி நூலகத்தில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்தார்கள்.
          இறுதியாக, 1949ஆம்ஆண்டு மே மாதம் முதல் நாள் - ஹிஜ்ரி 1368 ரஜப் பிறை 2 -முழு தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவந்தது. 
             1955 ஜூன் 23ஆம் தேதி மெளலானா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மறைந்தார்கள். அவர்களின் அகவை 79. அந்த மொழிபெயர்ப்பு இன்றுவரை கிடைக்கிறது.பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது. அன்னார் நமக்கெல்லாம் சிறந்த முன்மாதிரி என்பதில் ஐயமில்லை.

( 23.10.2021இல் நடந்த ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் நினைவு நிகழ்ச்சியில் அ.முஹம்மது கான் பாகவி ஆற்றிய உரையின் சுருக்கம்)

Tuesday, October 19, 2021

ஆலிம் பப்ளிகேஷனின் இதயங்கனிந்த நன்றி

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஆலிம் பப்ளிகேஷனின்
இதயங்கனிந்த நன்றி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இறையருளால் 16.10.2021 காலை எமது ஆலிம் பப்ளிகேஷனின் வெளியீடான முஸ்னது அஹ்மத் தமிழாக்கம் மூன்றாம் பாகம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
எமது அன்பு அழைப்பை ஏற்று விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அறிஞர் பெருமக்கள், விழாவை மிக வெற்றிகரமாக நடத்திக்காட்டிய அப்பகுதி பிரமுகர்கள், விழாவில் திரளாகக் கலந்துகொண்ட ஆலிம்கள், பட்டதாரிகள்,வணிகர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் முதலான அனைத்து  அன்பர்களுக்கும் எமது இதயங்கனிந்த நன்றியை சமர்ப்பிக்கிறோம்.

பாளையங்கோட்டையில் பிரபலமானதும் பிரமாண்டதுமான காயிதே மில்லத் moc அரங்கத்தை வழங்கி உதவிய நிர்வாகப் பெருமக்கள், நூல் தயாரிப்புச் செலவினங்களுக்கு வாரிவழங்கிய புரவலர்கள், எல்லா ஏற்பாடுகளையும் முன்நின்று சிரத்தையோடு கவனமாகச் செய்த பெருந்தகைகள், மக்களுக்கு விழா குறித்துப் பள்ளிவாசல்களில் அறிவிப்புச் செய்து உதவிய இமாம்கள் என அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஆலிம் பப்ளிகேஷன் மொழிபெயர்ப்புக் குழுவினர் மற்றும் நிர்வாகக் குழுவினர் சார்பாக  இதயங்கனிந்த நன்றியைத் தெரிவிப்பதில் அகமகிழ்றோம்.
ஜஸாகுமுல்லாஹு கைரல் ஜஸா ஃபித்தாரைன்.

நம்  தொடர்புகள் தொடரட்டும்! தொண்டுகள் சிறக்கட்டும்!
நபிகளாரின் பொன்மொழிகள் அனைவரின் வாழ்க்கையாக மாறட்டும்!
 வஸ்ஸலாம்.

நபிகளார் வெளியிட்ட உலகப் பிரகடனம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நபிகளார் வெளியிட்ட உலகப் பிரகடனம்
^^^^^^^^°^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புனித ஹஜ் பயணத்தின்போது பெருந்திரளாகக்  குழுமியிருந்த மக்கள் முன் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பேருரையில் உலக மக்களுக்கு வெளியிட்டப் பிரகடனம்:

* மனிதர்களே! உங்கள் இறைவன் ஒருவன். உங்கள் தந்தை ஒருவரே. 

* எந்த அரபியருக்கும் அரபியர் அல்லாதோரைவிட, இறையச்சம் ஒன்றில் தவிர எந்த உயர்வும் கிடையாது.

* அரபியரல்லாத எவருக்கும் அரபியரைவிட ,இறையச்சம் ஒன்றில் தவிர வேறு எந்த உயர்வும் கிடையாது.

* வெள்ளையருக்குக் கறுப்பரைவிடவோ, கறுப்பருக்கு வெள்ளையரைவிடவோ , இறையச்சம் ஒன்றில் தவிர வேறு எந்த உயர்வும் கிடையாது.

* இந்தப் புனிதத் தலத்தில் , இப்புனித மாதத்தில், இப்புனித நாள் எவ்வளவு மகத்தானதோ அவ்வளவு மகத்துவமிக்கவை உங்கள் உயிரும் உங்கள் உடைமையும் உங்கள் சுயமரியாதையும்.

( முன்னது அஹ்மத் - ஹதீஸ் 22391)

Tuesday, October 12, 2021

நவீன இந்தியப் பெண்களின் பரிதாப நிலை

நவீன இந்தியப் பெண்களின் பரிதாப நிலை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெங்களூரில்  10.10.2021 நடந்த உலக மனநல நாள் விழாவில் பேசிய கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள நவீன பெண்களில் பெரும்பாலோர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்வே விரும்புகிறார்கள்.இதைக் கூற வருத்தமாக இருக்கிறது.

ஒரு வேளை திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதில்லை. வாடகைத் தாய் மூலமே குழந்தையைப் பெற்றெடுத்து வளர்க்கவே விரும்புகிறார்கள்.

நமது சிந்தனையில் தலைகீழ் மாற்றம் நடந்துள்ளது. இது சரியான போக்கு அல்ல.மேற்கத்திய பண்பாட்டுக் கூறுகளை இந்திய சமூகம் உள்வாங்கிக் கொண்டுள்ளது துரதிருஷ்ட வசமானது

தாத்தா, பாட்டி உடனிருப்பதை விரும்பாத அவர்கள், தாய் தந்தையரை உடன் வைத்துக் கொள்ளத் தயங்குவது வேதனை அளிக்கிறது.

(நன்றி-தினமணி )

Thursday, September 23, 2021

சுகாதாரத் துறை அமைச்சரின் அருமையான அறிவுறுத்தல்

~~~~~~~~~~~~~~~~~~~~
சுகாதாரத் துறை அமைச்சரின் 

அருமையான அறிவுறுத்தல்
~~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கர்ப்பிணி பெண்கள் விரும்புகின்றனர்.இது தவறானது. இந்த முடிவை பெண்கள் கைவிட வேண்டும்.

சிசேரியன் மூலம் 10 அல்லது 15 நாட்களுக்கு முன்பாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.எனவே, குழந்தையை  முழுமையாக வளரவிட்டு , சுகப்பிரசவத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்.அப்போதுதான் அக்குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இது குறித்து ஆலோசனை வழங்குமாறு , சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
நேற்று -22.09.2021- தெரிவித்தார்.

இந்த வேண்டுகோளில் தாய்மை வெளிப்படுகிறது.

Thursday, September 02, 2021

பாதிக்கப்பட்டவர்களுக்குப்பரிவு காட்டுங்கள்- காவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

~~~~~~~~~~~~~~~~~~
பாதிக்கப்பட்டவர்களுக்குப்
பரிவு காட்டுங்கள்- காவலர்களுக்கு          முதல்வர் அறிவுறுத்தல்
~~~~~~~~~~~~~~~~~~~

அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், மற்றொரு கை காவல் துறை.இரண்டும் முறையாகச் செயல்பட்டால், அந்த அரசு தலைசிறந்த அரசாகப் போற்றப்படும்.

மக்களோடு நேரடியாகத் தொடர்பு கொள்வோர் உதவி ஆய்வாளர்கள்தான். அந்த வகையில் முக்கியமான கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது.
 
காவல்துறை என்றாலே குற்றங்களைத் தடுக்கும் துறை, தண்டனை வாங்கித்தரும் துறை என்று மட்டுமே நினைக்கின்றனர். ஆனால், குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக அது மாற வேண்டும் என்பது என் ஆசை.

மக்கள் எதிர்பார்ப்பது அமைதியைத் தான். அந்த அமைதியை உருவாக்கும் கடமை காவல் துறைக்கு உண்டு. பயிற்சி முடிந்து நீங்கள் செயல்படத் தொடங்கும்போது அமைதியான தமிழகத்தை உருவாக்க சூளுரைக்க வேண்டும்.

அநியாயத்தைத் தடுக்க எப்போதும் தயங்காதீர்கள். நியாயத்திற்காக எப்போதும்  நில்லுங்கள். உங்கள் பகுதியைக் குற்றம் நடக்காத பகுதியாக மாற்றுங்கள். உண்மைக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுங்கள்.இவற்றையெல்லாம் சட்டபூர்வமாகச் செய்யுங்கள்.

குறிப்பு: உரை நாள் +1.9.2021
நிகழ்ச்சி: காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சி தொடக்க விழா.

 * முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய தத்துவப் பாடல்களை இவ்வுரை விஞ்சி விட்டது.

Thursday, August 26, 2021

இயலாமைக்கு வருந்துகிறேன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~
இயலாமைக்கு வருந்துகிறேன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஸ்ஸலாமு அலைக்கும்.க்ரோனா பரவல் காரணத்தால் வீடு-அலுவலகம் என்ற அளவில் மட்டுமே என் நாட்கள் கழிகின்றன. உறவுகள், நண்பர்கள், மாணவர்கள், பெரியவர்கள்...என
யாருடைய அழைப்பையும் ஏற்று நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நிலையில் நான் இல்லை.

தவிர்க்கவே முடியாத சில நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொள்கிறேன். காணொளி வகுப்புகள், ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்வதுண்டு.

எனவே , நண்பர்கள் யாரும், குறிப்பாக அன்பு மாணவர்கள் தம் இல்ல நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ளாத தற்காக வருந்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என் இயலாமைக்கு வருந்துகிறேன்.

வஸ்ஸலாம். அன்புடன் உங்கள்
கான் பாகவி

Monday, August 02, 2021

காலச்சுவடு மதிப்புரையும் கான் பாகவி கருத்துரையும்

*காலச்சுவடு மதிப்புரையும் கான் பாகவி கருத்துரையும்*

‘ரோஜா’ மனம் எனும் தலைப்பில் களந்தை பீர் முஹம்மது எழுதிய நூல் மதிப்புரை கண்டேன். அவர் பெயரைக் கண்டவுடன், எல்லாரையும் போன்று நானும் “என்ன பூகம்பத்தைக் கிளப்பியுள்ளாரோ!” என்ற தயக்கத்தில்தான் வாசிக்கத் தொடங்கினேன். நூலின் தலைப்பும் என் அச்சத்தை உறுப்படுத்தும்வகையில் ‘இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்’ என்று இருந்தது. நூலின் அட்டைப் படம்வேறு என் அச்சத்திற்கு எண்ணெய் வார்த்தது.

மதிப்புரையை நுகர்ந்தபின் முகம் மலர்ந்தது. மனத்திற்குள் நூலாசிரியர் அப்சலையும் மதிப்புரை தீட்டிய களந்தையாரையும் வாழ்த்திக்கொண்டேன். சினிமா எனக்குத் தொடர்பில்லாத துறைதான். ஆனால், விவாதிக்கப்படும் பொருளோ முஸ்லிம்கள் தொடர்பானது; சொல்லப்போனால் இஸ்லாம் குறித்தது.

சினிமா என்பது, என்போன்றோரின் பார்வையில் ஒரு பொழுதுபோக்குச் சாதனம். ஒரு படத்தின் கதைக்களம் கற்பனையாகவே இருந்தாலும், அதன் கரு உண்மைக்குப் புறம்பாக இருக்கலாமா? ஒரு சமூகத்தின் முகத்தைக் கோரப்படுத்துவதும் அதன் நம்பிக்கையையே குற்றப்படுத்திக் கூண்டில் நிறுத்துவதும்தான் பொழுதுபோக்கா?

உலகின் எங்கோ ஒரு மூலையில் யாரோ சிலர் சுயநலத்திற்காக, அல்லது அரசியல் நோக்கத்திற்காக ஆயுதமேந்தி கண்மூடித்தனமாக அப்பாவிகளைச் சுட்டுத்தள்ளுகிறார்கள் என்றால், ஒட்டுமொத்த சமூகத்தின் மீதே ‘பயங்கரவாதிகள்’ முத்திரை குத்தி, சுமுக வாழ்வை மேற்கொண்டிருக்கும் பெரும்பான்மை அங்கத்தினரை இழிவுபடுத்துவது என்ன ரசனை?

நல்ல வேளையாக, சமூக நீரோட்டத்திலிருந்து முஸ்லிம்களைப் பிரிப்பதற்கென்றே பலர் திரைப்படங்களைத் தயாரித்துவந்த நிலையில், அதற்கு நேரெதிரான படங்களையும் தயாரித்து சிலர் வெளியிட்டது ஆறுதல் அளிக்கிறது. சினிமாதானே என்று புறம்தள்ளிவிட்டுப் போக முடியாத அளவிற்கு அது இன்றைக்கு ஒரு பெரிய ஊடகமாக மாறிவிட்டிருக்கிறது.

மணிரத்தினம் போன்றோர் திரையில் புதைத்த வெடிகுண்டுகளின் வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், அப்சலின் இந்நூல் நிச்சயமாக வாசகர்களின் இதயக் கதவைத் திறக்கும் என நம்பலாம். பாகிஸ்தானையும் இந்திய முஸ்லிம்களையும் நட்புச் சக்திகளாகக் கருதி இந்துக் கலைஞர்கள் படம்பண்ணி மாபெரும் வசூலை ஈட்டியுள்ளார்கள் என்பது, ஒரு நல்ல அடையாளம். அதிலும், அவர்கள் தம்மையும் தம் வாழ்வையும் பணயம் வைத்துப் படங்கள் எடுத்து வென்றுள்ளார்கள் என்பது வியப்பின் உச்சம்.

சர்வதேச அளவில் ‘இஸ்லாமோபோபியா’ ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க, முஸ்லிம் சமூகம் முடங்கிக் கிடப்பதற்கு நூலாசிரியர் கண்டனம் தெரிவிக்கிறார். இது, சமூகத்தின் மீது அவருக்குள்ள அக்கறையைக் காட்டுகிறது.

ஆம்! முஸ்லிம் சமூகம் தன் ஆற்றலை எதில் செலவிடுகிறது? தன்னைப் பற்றிய உண்மைகளை, தன் மார்க்கம் உலக மாந்தருக்குமுன் எடுத்துவைக்கும் மனிதநேயப் பக்கங்களை எப்போது வெளிச்சத்திற்குக் கொண்டுவரப் போகிறது? தம்மை நஞ்சூட்டிக் கொல்லப்போன யூத யுவதியை, கத்தியால் குத்தப்போன ஒரு இளைஞனைப் பழிதீர்க்க சக்தி இருந்தும் மன்னித்த மாநபி பற்றி எப்போது எடுத்துரைக்கப்போகிறது?

அ. முஹம்மது கான் பாகவி
சென்னை

Monday, July 05, 2021

காலச்சுவடு இதழுக்கு கான் பாகவியின் மடல்

காலச்சுவடு இதழுக்கு             
கான் பாகவியின் மடல்
---------------------------------------------

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, 'வரலாற்றில் பெயர் நிலைக்க...' எனும் தலையங்கம் கண்டேன்.

மகிழ்ச்சி அளிக்கும் தலையங்கம். அதே நேரத்தில், சார்பற்ற நடுநிலை தலையங்கம். பாராட்டுகள்.

கருணாநிதி மகன் என்ற அளவிலேயே அரசியல் தலைவராக அறியப்பட்டிருந்த ஸ்டாலின், அரிசியல் வியூகம், நிர்வாகத் திறமை, தந்தையை மிஞ்சிய சாணக்கியம், தற்புகழ் துறந்த உயர்ந்த நிலைப்பாடு, மாநில முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு, எதிர்க் கட்சிகளையும் அரவணைக்கும் நளினமான நிர்வாகம் ... எனப்  பன்முகம் கொண்ட சிறந்த முன்மாதிரியான தலைவராக இப்போது அறியப்படேகிறார்.

இது பலரும் எதிர்பார்த்திராத திருப்பம் என்றுதான் நினைக்கிறேன். அரசியல் பாலபாடம் படிக்க வேண்டிய அரசியல் மாணவர் என்றே பலரும் எடைபோட்டிருந்த நிலையில் , இல்லை; நான் அரசியல் ஆராய்ச்சியாளன் என்பதைத் தம் திட்டங்களாலும் நடவடிக்கைகளாலும் ஸ்டாலின் நிரூபித்து வருகிறார்.

துறை சார்ந்த அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் பெற்றே அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள் ; என்றாலும் நிபுணர்களைப் பயன்படுத்தவும் அவர்கள் முன்வைக்கும் திட்டங்களை இனம் கண்டு ஏற்கவும் அல்லது மறுக்கவும் சுய அறிவு தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

செயல்திறன் மிக்க அதிகாரி இறையன்பு போன்றவர்கள் முந்தைய ஆட்சியிலும் இருக்கத்தானே செய்தார்கள்! எல்லாவற்றையும் விட, வீண் பந்தாக்களை ஸ்டாலின் புறக்கணித்து வருவது அவரது  மதிப்பைக் கூட்டியுள்ளது.

அன்புடன் உங்கள்
அ. முஹம்மது கான் பாகவி
சென்னை

Wednesday, June 09, 2021

©©©©©©©©©©©©©©©©
அரபி மத்ரஸாக்களில் ஆன்லைன் வகுப்புகள்
©©©©©©©©©©©©©©©®
புனித ரமளான் முடிந்து ஷவ்வால் மாதமும் முடியப் போகிறது. கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் மத்ரஸாக்கள் திறக்கப்படுவதில் இழுபறி உள்ளது.

இதையடுத்து பாடங்கள் நடைபெறாமல் முன்பு போலவே வீணாகக் காலம் கழிகின்ற நிலையே காணப்படுகிறது.  இது , மேலும்  மாணவர்கள் துறை மாறுவதற்கு வழிவகுத்துவிடலாம். இருக்கும் மாணவர்களையாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் மீண்டும் நேர்ந்துள்ளது.

எனவே,உடனே எல்லா மத்ரஸாக்களிலும் ஆன்லைன் ( காணோலி) வகுப்புகளை ஆரம்பித்து, இருக்கிற ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்த தயக்கமின்றி முன்வர வேண்டும். ஆண்டின் இறுதியில் முழுஆண்டுத் தேர்வுகளையும் நடத்தி முடிக்கத் தயாராக வேண்டும்.

பட்டவகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அதிகக் கூட்டம் சேர்க்காமல் கல்லூரியிலேயே வைத்து பட்டமளிப்பு விழா நடத்திவிடலாம்.

ஆக, தொடர்ந்து மத்ரஸாக்கள் செயல்பட வேண்டும். பூட்டிப்போட்டு பாடமும் நடத்தாமல் மாணவர்களை வேறு துறைகளுக்குத் தள்ளிவிட்டுவிடக் கூடாது.சிறிய மத்ரஸாக்களும் இதே நடைமுறையைக் கையாளலாம். வேலை செய்யாமல் ஊதியம் பெறுவதா என்ற கேள்வியும் இதன்மூலம் தவிர்க்கப்பட்டு விடும்.

ஆன்லைன் க்ளாஸ் எப்படி நடத்துவது என்ற நடைமுறை அறிந்தவர்கள் ஒவ்வோர் ஊரிலும் இருப்பார்கள். அவர்களின் உதவியை நாடலாம்.

காலத்தின் ஓட்டத்தை அறிந்து சவால்களை எதிர்கொள்ள முன்வராவிட்டால் இழப்பு நமக்குத்தான்; நம் சமுதாயத்திற்குத்தான் என்பதை மறந்துவிடலாகாது.
©©©©©©©©©©©©©©©®
அன்புடன் உங்கள்
கான் பாகவி.

Tuesday, June 01, 2021

~~~~~~~~~~~~~~~~~
குடும்பக் கட்டுப்பாடும் சீனாவும்
~~~~~~~~~~~~~~~~~~
மக்கட்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
 
இதையடுத்து அங்கு இளைஞர்களைவிட வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமானது. உழைக்க ஆட்கள் இல்லாமல் பொருளாதார தேக்க நிலை அங்கு உருவானது.

இதனால் 2016ஆம் ஆண்டு இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்தது. ஆனாலும் கடந்த ஆண்டு 1.2கோடி குழந்தைகளே பிறந்தனர்.

இது இப்போதுள்ள தேவையான அளவைவிட மிகவும் குறைவாகும் என அரசு கருதுகிறது. சீனாவின் மக்கட்தொகை 141 கோடியாக தற்போது உள்ளது. ஆண்-பெண் பாலின விகிதமும் குறைந்து வருகிறது.

பெரும்பாலான தம்பதியர் ஆண்குழந்தை களையே விரும்புகின்றனர். பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்து வயிற்றிலேயே பெற்றோர் கொன்றுவிடுகின்றனர்.

இதனால் குடும்பக் கட்டுப்பாடு கொள்ள்கையைத் தளர்த்த சீன அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மூன்று குழந்தைகள் வரைப் பெற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.

 *** 
வறுமையைப் பயந்து குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.( குர்ஆன்,17:31)
***
இரு பெண் குழந்தைகளைப் பெற்று, அவர்களின் எதிர்காலம் வரை அன்போடு பராமரித்து வளர்ப்பவர்கள் சொர்க்கம் செல்வர். ( நபிமொழி )

***

Wednesday, May 26, 2021

Khan Baqavi

~~~~~~~~~~~~~~~~~~
இந்தியாவில் வலைத்தள பயனாளிகள்
~~~~~~~~~~~~~~~ ~~~~~
வாட்ஸ் அப்-53  கோடி
யூ-டியூப் - 44.8 கோடி
ஃபேஸ் புக் - 41 கோடி
இன்ஸ்டாகிராம் - 21 கோடி
ட்விட்டர் - 1.75 - கோடி
( இந்து தமிழ்)

????????????????????????????

Wednesday, May 19, 2021

~~~~~~~~~~~~~~~~~~
ஹசனிகளின் தந்தை
மறைந்தார்
~~~~~~~~~~~~~~~~
பள்ளபட்டி உஸ்வத்துல் ஹசனா அரபிக் கல்லூரி நிறுவனரும் முதல்வரும் தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞருமான மெளலானா அப்துர் ரஹீம் ரஷாதி அவர்கள் இன்று (19.05.2021) மறைந்தார் என்பதை பெருந்துக்கத்தோடு பதிவிடுகிறேன்.

இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றுதான் சொல்வேன்.காரணம் ஒரு கனவோடும் உயர்ந்த இலட்சியத்தோடும்  கல்லூரியை உருவாக்கி, அதன் கல்விக் கொள்கையைத் திட்டமிட்டு அமைத்து அதை இன்றுவரைச் செயல்படுத்தி, அமைதியானதோர் அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பெரும் இலட்சியவாதி அவர்.

இன்றைக்கு அவர் பாசறையில் உருவான ஹசனி ஆலிம்கள் பல்துறைகளில் சாதனை படைத்துவருவது கண்கூடு.நத்வத்துல் உலமாவை முன்மாதிரியாகக் கொண்டு அரபி,உருது ஆகிய மொழிகளில் மாணவர்களுக்கு மொழி ஆற்றலை உருவாக்கியவர்.

நடுநிலைச் சிந்தனை, நிதானப் போக்கு, ஆய்வுத் தேட்டம், அறிவியலுடன் கூடிய  ஆன்மிகம் முதலான காலத்திற்கேற்ற கல்வி முறையை நிலைநாட்டியது அவர் செய்த சாதனையாகும்.

அவ்வாறே வணக்க வழிபாடுகளிலும் சுன்னத்தான வாழ்க்கை முறைகளிலும் ஈடுபாடு உள்ளவர். அவருடைய தந்தையார் பாகவி அவர்களுடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.நான் பள்ளப்பட்டி மக்தூமிய்யாவில் ஆசிரியராகப் பணியாற்றியபோது என்மீது ஒரு தந்தையின் பாசத்தைக் பொழிந்தவர் அவர் தந்தை.

மெளலானா ரஷாதி அவர்களின் மறுமை வாழ்வு வளம்பெற துஆ செய்கிறேன்.

اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا ارحم الراحمين.

Saturday, May 15, 2021

~~~~~~~~~~~~~~~
         வாயும் வயிறும்
~~~~~~~~~~~~~~~
மூடியிருந்தது வாய்
மூச்சு விட்டது வயிறு

திறந்து கொண்டது வாய்
திணறுகிறது வயிறு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கான் பாகவி

Sunday, April 25, 2021

https://youtu.be/kxvfLznUp-8
https://youtu.be/SRT9q_WGD38
https://youtu.be/FwlMGAAKJUA

Monday, April 12, 2021

மொழிபெயர்ப்பு ஒரு தனிக்கலை

*மொழிபெயர்ப்பு  ஒரு  தனிக்கலை*
                                              *ஆர்.ஷண்முகசுந்தரம்*

கிட்டத்தட்ட நூறு நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறேன்.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே சில கவிதைகள் யாத்திருக்கிறேன். உரைநடைக்கவிகளும் எத்தனை எத்தனையோ சமைத்ததுண்டு. ஆனால், அழகான கவிதைகள், நாவல்களில் ஆங்காங்கு வரும் இடங்களில் நான் கைவைக்க அஞ்சுவேன். பாடலின் பொருளைக் கூறித் ‘தக்காரை’க் கொண்டே அப்பணிபுரிதல் என் வழக்கம்.

சொந்த பாஷையில் நன்கு எழுதக்கூடிய ஆற்றல் பெற்றவராக இருந்தால் அவர் செய்கின்ற மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்கும்.

மூல பாஷையில் – எந்தத் துறையிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்கிறாரோ – அத்துறையில் உள்ள புத்தகங்களை அவர் ஏராளமாகப் படித்திருக்க வேண்டும். கவிதைகளை மொழிபெயர்ப்பவர் நிச்சயம் கவிஞராகத்தான் இருக்க வேண்டும்.

விஞ்ஞான நூல்களை, அத்துறையில் ஈடுபாடும் பயிற்சியும் பெற்றவர் செய்தால்தானே சிறப்பாக இருக்கும்? சும்மா ‘மேதை’ ஒன்றையே நம்பிச் செய்கிற காரியம் அன்று இது. தன்னிடமிருக்கும் அபார எழுத்துத் திறன், சக்தி எல்லாக் கட்டங்களிலும் கை கொடுக்காது. 

*(அப்படியிருக்க, முறைப்படி மார்க்கம் கற்காத - அத்துறையில் ஈடுபாடும் பயிற்சியும் பெறாத ஒருவர், மார்க்கம் தொடர்பான ஆங்கிலம், அல்லது உருது மொழியிலிருந்து மொழிபெயர்த்தால் எப்படி அது சிறப்பாக இருக்கும்?)*

ஆக, பரிபூரண ஈடுபாடும் அனுபவமும் இல்லாத எந்தக் காரியமும் அரைவேக்காடாகத்தான் இருக்கும்;

வாசகருக்கு மொழிபெயர்ப்பு என்ற உணர்வே ஏற்படா வண்ணம் மொழிபெயர்ப்பு அமைய வேண்டும். அப்படிப்பட்ட ‘நிறை’வை நிரப்புவது எப்படி? தாய்மொழியில் மொழிபெயர்ப்பளாருக்கு நல்ல ஞானமும், இனிய நடையும், எதையும் சரளமாக எடுத்துக்கூறும் ஆற்றலும் அவசியம் வேண்டும்.

மொழிபெயர்ப்பாளாருக்கு வார்த்தைகள் சில விளங்கவில்லையா? அகராதி இருக்கவே இருக்கிறது. என்னதான் ‘புலமை’ பெற்றிருந்தாலும்.அனுபவமே ஏற்பட்டிருந்தாலும் எவ்வளவோ வார்த்தைகளைப் பார்க்க அகராதியின் துணை அவசியம் தேவை. அதை முதலிலேயே பார்த்துவைத்துக்கொள்ள வேண்டும்.

இருமொழியிலும் ‘புலமை’ இருக்கின்ற காரணத்தால், தமிழில் எழுதிவிட்டால் மட்டும் அது தமிழாகிவிடாது; மொழிபெயர்ப்பும் ஆகிவிடாது.சரியான  உணர்ச்சிகளைக் கொண்டுவந்துவிட்டதாகவும் கூறிக்கொள்ள முடியாது.

இதற்காகத்தான், தாய்மொழியில் மொழிபெயர்ப்பாளருக்குள்ள சக்திதான் மொழிபெயர்ப்பிலும் பிரதிபலிக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது. உயிர்த்துடிப்பும் மூர்ச்சனையும் பெயர்ப்பில் துள்ளிக் குதிக்க வேண்டும்.

மூல நூலாசிரியர் சொல்ல முயன்றது? என்ன அவர் நினைத்தவற்றையெல்லாம் – எழுத்தில் சேமித்து வைத்திருப்பதை – மொழிபெயர்ப்பிலும் கொண்டு வந்துவிட்டோமா என்பதை ஒரு கணம் ஆற அமர பெயர்ப்பாசிரியர் சிந்தித்துப்பார்த்து - திருப்தி அடைந்தால் – அது தெளிவான மொழிபெயர்ப்பாக இருக்கும் என நம்பலாம்.

எக்காரணம் கொண்டும், இஷ்டம்போல் எழுதியோ, கதை விட்டோ, ஒதுக்கியோ, கூட்டிக்குறைத்தோ மூல நூலாசிரியருக்குத் துரோகம் செய்துவிடக் கூடாது மொழிபெயர்ப்பாளர்.

*(மூலநூல் மார்க்கம் சமந்தப்பட்டதாக இருப்பின் மொழிபெயர்ப்பாளர் செய்யும் தவறு, மார்க்கத்திற்கே செய்யும் துரோகமாகிவிடும். எச்சரிக்கை)*

எல்லாத் தொழில்களுக்கும் எல்லாத் துறைகளுக்கும் பெரும்பாலும் பயிற்சி உண்டு . மொழிபெயர்ப்புச் செய்வதெப்படி என்பதற்கும் பயிற்சி அளிக்கிறார்கள். ஆனால் , இவை யாவும், சொல்லிக்கொடுத்த சொல்லும் கட்டிக் கொடித்த கட்டுச்சோறும் எவ்வளவு தூரகத்திற்கு வரும்? என்ற கணக்கில்தான் முடிகின்றன .வாட் பயிற்சி பெறுவோரெல்லாம் மாவீரக்களாகத் திகழ்வதில்லை.

மொழிபெயர்ப்புச் செய்வதே ஒரு தனிக்கலை! மொழிபெயர்ப்புச் செய்வதெப்படி என்பதை எழுதிக்காட்டுவது அதனிலும் நுட்பமானகலை அன்பை எழுதிக்காட்டுவது சிரமமான காரியம். இதயத்தின் மூலம்தான் சிலவற்றை அறிந்துகொள்ள வேண்டும். மணிக்கணக்கில் பேசலாம். பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் நமது நெஞ்சமே நமக்குத் தெளிவாகத் துலங்காமல் இருக்கும்போது , பிறமொழி ஆசிரியரின் மனத்தை எவ்வாறு படம் பிடிப்பது? 

சுருக்கமாகச் சொல்லப்போனால், மூல ஆசிரியரே மொழிபெயர்க்கப்படும் மொழியில் எழுதி இருப்பாரேயானால் . குறிப்பிட்ட ஒரு கருத்தை எம்மாதிரி எழுதி இருப்பாரோ அம்மாதிரிதான் மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.

(‘எழுதுவது எப்படி’ எனும் நூலில் இருந்து – காலச் சுவடு– ஏப்ரல்-2021)

Monday, April 05, 2021

தனிமனித உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை

~~~~~~~~~~~~~~~~~~~
தனிமனித உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை
~~~~~~~~~~~~~~~~~~~
தனிமனித உரிமைகளில் வாழ்வாதாரம் , கல்வி, கலாசாரம், கருத்துச் சுதந்திரம், வழிபாட்டு உரிமை,  பரைப்புரை , எல்லாவற்றுக்கும் மேலாக குடியுரிமை ஆகியன அடங்கும்.

வாழ்வாதாரத்தைப் பொறுத்தவரை, அவரவர் உழைப்பு, உத்வேகம், வாய்ப்புகள் முதலான பக்க துணைகளைப் பொறுத்து தரம் வேறுபடலாம். மக்களை ஆளும் அரசுத் துறைகள் அன்றைய காலச் சூழ்நிலைகளுக்கேற்ப குடிமக்களின் வாழ்வாதாரத்திற்குக் கைகொடுக்க வேண்டும்.

கல்வி,சுகாதாரம்,போக்குவரத்து போன்ற பொதுத் துறைகளில் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது மக்களாட்சியின் தலையாய கடமையாகும்.

இதற்கெல்லாம் அடிகோலுவது எதுவென்றால் , குடியுரிமையும் நடமாடும் உரிமையுமதான். இந்த உரிமைக்கே வேட்டுவைக்கும் அரசியல் கட்சிக்கோ, அதன் கூட்டணிக் கட்சிக்கோ வாக்களிப்பது  தன் தலையில் தானே மண்ணை வாரிப் போடுவது தவிர வேறென்னவாக இருக்க முடியும்? 

அவ்வாறே, மதச் சுதந்திரம் என்பது, அரசியல் சாசனம் பிரிவு-25 வழங்கியுள்ள வலுவான உரிமையாகும். இதில் கைவைத்து, மதத்தின் சட்டங்களை மிருக பலம் கொண்டு மாற்றி,. ஒரு சமூகத்தின் மதக்கோட்பாட்டைச் சீரழிப்பது எந்த வகை ஜனநாயகம்? இந்த  வெறியர்களுக்கோ , இவர்களின் சாரபுக் கட்சிகளுக்கோ வாக்களிப்பது ஒருவர் தம் சமய நம்பிக்கையைப் புதைப்பதற்குச் சமம் அல்லவா? 

தனியாக மாட்டிக்கொண்ட அப்பாவி ஒருவனை, அவன் பெயரைக் கேட்டு சமயத்தைப் புரிந்துகொண்டு, அவன் ஏற்காத நம்பிக்கையை அவன்மீது வலுக்கட்டாயமாகத் திணிப்பதும் மறுத்தால் ஆயுதங்களால் அடித்துத் துவம்சம் செய்வதும் இந்தக் கொடுமைகளை அருகில் இருந்தே கண்டும் மெளனமாக இருக்கும் காவல்துறையைக் கொண்ட அரசு அமைய வாக்களிப்பது முட்டாள்தனம் அல்லவா?

ஒரு மொழிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து மற்ற மொழிகளை அழிக்கவும் , அவர்கள் விரும்பும் மொழிக்காரர்களுக்கே கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வாய்ப்புகள் அளித்து மற்றவர்களை நிர்க்கதியாக்கும் கட்சி மக்களாட்சி தருமா? இக்கட்சிக்கோ அதன் நட்புக் கட்சிக்கோ வாக்களிப்பது நம் அடுத்த தலைமுறையை நடுத்தெருவில் நிறுத்திவிடாதா?

யோசிக்க இனி நேரமில்லை.இப்போதே முடிவெடுங்கள். பாசிச சக்திகளைத் தோற்கடியுங்கள். ஜனநாயக, மனித மாண்புகளை மதிக்கின்ற, வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற, இந்தியர்கள் யாவரையும் ஒன்றாக நடத்துகின்ற, சுருஙகச் சொன்னால் மனிதாபிமானமிக்க கட்சியை, கூட்டணியை ஆதரித்து வாக்களியுங்கள்.

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று சொல்லும் பூத் அதிகாரி பேச்சைக் கேட்டு திரும்பிவிடாதீர்கள். உங்கள் ஐடிகளைக் கையோடு கொண்டு போங்கள். காட்டுங்கள். வாதாடி உங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டிவிட்டு வாருங்கள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அன்புடன் உங்கள்
கான் பாகவி

Thursday, March 04, 2021

உனக்கும் வாழ்வு உண்டு!மயங்காதே மகனே!

உனக்கும் வாழ்வு உண்டு!
மயங்காதே மகனே!
பேராசிரியர், அ. முஹம்மது கான் பாகவி

எந்த உயிரினத்தையும் இறைவன் வீணாகப் படைக்கவில்லை. ஒவ்வொன்றின் படைப்பிலும் ஒரு நோக்கம் உண்டு; தத்துவம் உண்டு. ஆழ்ந்து சிந்திப்போருக்கு இந்த உண்மை புலனாகும். “நாம் வானத்தையும் பூமியையும் அவ்விரண்டுக்கும் இடையிலுள்ளவற்றையும் வீணாகப் படைக்கவில்லை” (38:27) என்றுரைக்கின்றான், படைத்தவன் அல்லாஹ்.
அது மட்டுமன்று. எல்லாப் படைப்புகளின் வாழ்வாதாரத்திற்கான பொறுப்பையும் படைப்பாளனே ஏற்றுக்கொண்டிருக்கின்றான். அப்படி இல்லை என்றால், படைப்புகளால் என்ன செய்ய இயலும்? கொடுப்பவன் அவன்; பெறுபவர்களே அவன் அடிமைகள்.
“பூமியிலுள்ள எந்த உயிரினமானாலும், தன் இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவையும் உங்களைப் போன்ற இனங்கள்தான்” (37:38) என்று அறிவிக்கும் அருளாளன் அல்லாஹ், “பூமியில் உள்ள எந்த உயிரினமானாலும், அதற்கு உணவை(ப் பெறும் வழியைக் காட்டி) தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகவே உள்ளது” (11:6) என்று வாக்களிக்கின்றான்.
எல்லா உயிருக்கும் வாழ்வாதாரம்
ஆக, உலகில் படைக்கப்படும் ஒவ்வோர் உயிரினத்திற்கும் உரிய வாழ்வாதாரம், ஏற்கெனவே உலகில் எங்கோ ஓரிடத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. உயிரினம் செய்ய வேண்டிய வேலை ஒன்று உண்டு. அதுதான் தேடல்; அல்லது முயற்சி. தேடலுக்கு முன்னால், அதற்கான அறிவையும் பயிற்சியையும் பெற்றாக வேண்டும். தேவையான தகைமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்; உழைக்க வேண்டும்; வியர்வை சிந்த வேண்டும்.
இருந்த இடத்தைவிட்டு நகரவேமாட்டேன்; யாரேனும் கை கொடுத்து என்னைத் தூக்கிவிட வேண்டும்; நான் ஊரைச் சுற்றிக்கொண்டு வீணாகப் பொழுதைக் கழிப்பேன்; என் குடும்பம், என் சமுதாயம், என் நாடு எனக்கு உதவ வேண்டும் -என்ற எதிர்பார்ப்பில் நாட்களைக் கழித்தால், யாரும் உதவ முன்வரமாட்டார்கள். மற்றவர்மீது பழியைப் போட்டு, தன் மீதுள்ள பொறுப்பை மறந்து உட்கார்ந்துகிடந்தால், வாழ்வாதாரம் என்ற கனியைப் பறிக்கவே இயலாது.
“படைத்தவன் கொடுப்பான்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கை (தவக்குல்) இருக்க வேண்டிய அதே நேரத்தில், இலட்சியத்தை அடைய நகர வேண்டும்; ஓட வேண்டும்; ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நமக்கான வாழ்வாதார ஒதுக்கீடு எங்கே ஒளிந்திருக்கிறதோ அந்த இடத்தைப் பிடிக்கும்வரை ஓயக் கூடாது; ஓட்டத்தை நிறுத்தக் கூடாது.
முயன்றால் முடியும்
இறைவன் திருமறையில் பகர்வதைப் பாருங்கள்: மனிதனுக்கு, அவன் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. (53:39)
இது, மறுமைக்கு மட்டுமன்றி, இம்மைக்கும் பொருந்தும். இம்மையில் நீங்கள் தேடிக்கொண்ட வினைக்கான பிரதிதான் மறுமையில் கிடைக்குமே தவிர, நீங்கள் தேடாத ஒன்றுக்கான பலன் கிடைக்காது. அவ்வாறுதான், இவ்வுலகிற்காக எதை நாம் தேடுகிறோமோ அதுதான் நமக்குக் கிடைக்கும். தேடாத ஒன்றுக்கு ஆசைப்படுவது அறிவீனமாகும்.
அவ்வாறு தேட முயலும்போது, நம் திறமையையும் உழைப்பையும் மட்டும் நம்பியிராமல், இறைவனின் அருளையும் ஆதரவையும் பலமாக நம்ப வேண்டும். நபி (ஸல்) அவர்களின் அழகான, ஆழமான தத்துவம் ஒன்றைப் பாருங்கள்:
நீங்கள் அல்லாஹ்வைச் சார்ந்திருக்க வேண்டிய விதத்தில் சார்ந்திருந்தால், பறவைகளுக்கு உணவளிக்கப்படுவதைப் போன்று உங்களுக்கும் உறுதியாக உணவளிக்கப்படும். பறவை ஒட்டிய வயிற்றுடன் காலையில் புறப்பட்டுச் செல்கிறது. நிரம்பிய வயிற்றுடன் மாலையில் (கூடு) திரும்புகிறது. (திர்மிதீ, ஹதீஸ் - 2266)
அதாவது ஆறறிவு அற்ற பறவை என்ன நம்பிக்கையோடு காலையில் கூட்டைவிட்டுப் புறப்படுகிறது! காலியான வயிற்றுடன் காலையில் புறப்படும் பறவை, மாலையில் நிரம்பிய வயிற்றுடன் திரும்புகிறதே! அது மட்டுமா? தன்னை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் தன் குஞ்சுக்கும் அல்லவா தீனியைத் தேடிக் கொண்டுவந்து ஆசையோடு ஊட்டுகிறது.
அந்தப் பறவைக்கு உணவளித்தவன் யார்? இதே நம்பிக்கை ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டும் ஏன் இல்லாமல்போய்விடுவிறது? இந்த நம்பிக்கையோடு உழைத்தால், உணவு மட்டுமன்றி உயர்வும் நிச்சயம்.
இதுதான் இறைசார்பு
இந்த நபிமொழி, ‘தவக்குல்’ என்ற இறைசார்புக்குச் சரியான விளக்கமளிக்கிறது எனலாம்! ‘தவக்குல்’ என்பது, நான் இறைவனை நம்பியிருக்கிறேன்! அவன் எனக்குச் சோறுபோடுவான் என்று உழைக்காமல் சோம்பிக் கிடப்பதற்குப் பெயரன்று. மாறாக, நம்பிக்கையுடன் முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் இறைவன் வெற்றியளிப்பான் என நம்ப வேண்டும்.
இதுதான், ‘தவக்குல்’ எனும் இறைசார்பு. வெற்றி கிட்டினால் இறைவனுக்கு நன்றி. வெற்றி கிட்டாவிட்டால் பொறுமை. பறவையேகூட படைத்தவன் பார்த்துக்கொள்வான் என்று கூட்டில் அடைந்து கிடக்கவில்லை. காலையில் இரையைத் தேடி கூட்டைவிட்டும் குஞ்சைவிட்டும் பறந்து செல்கிறது எங்கோ! இரையைத் தேடுகிறது எப்படியோ! மாலையில் திரும்பும்போது, அதன் வயிறும் நிரம்பியுள்ளது; குஞ்சுக்கு வேண்டியதும் வாயில் நிரம்பியுள்ளது.
ஆக, இரை கிடைத்தால், அது இறைக்கருணை. கிடைக்காவிட்டால், அது இறைவிதி. இரண்டையும் சமமாகப் பாவிக்கும் ஈமான் இருந்துவிட்டால், வாழ்க்கையே சொர்க்கம்தான். உயரும்போது மமதை கொள்ளவோ, தாழும்போது விரக்தி அடையவோ இடமிருக்காது; மன அழுத்தமும் வாட்டாது

Friday, February 26, 2021

சென்னையில் ஆங்கிலவழி ஆலிம் பட்டப் படிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் 

சென்னையில் ஆங்கிலவழி ஆலிம் பட்டப் படிப்பு
----------------------------------------------
இறையருளால் சென்னை மாநகரில் ஆங்கிலவழி ஆலிம் பட்டப்படிப்பு இன் ஷா அல்லாஹ் தொடங்கவிருக்கும் நற்செய்தி உண்மையிலேயே வரவேற்கத் தக்கதாகும்.

இன்றைக்கு நம் சமுதாய இளைஞர்களும் இளைஞிகளும் பெரும்பாலும் ஆங்கிலவழிக் கல்வியே கற்றுவருகிறார்கள். தங்கள் மத்தியில் பலரும் ஆங்கிலத்திலேயே உரையாடிக்கொள்கிறார்கள். நம் சிறுவர், சிறுமியர் ஆங்கில எழுத்துகளை விரைவாக வாசித்துவிடுகிறார்கள். தமிழ், அல்லது உருது எழுத்துகளை வாசிக்கவோ எழுதவோ அறியாதவர்களாக உள்ளனர். தமிழ், அல்லது உருது எண்கள்கூட அவர்களுக்குத் தெரிவதில்லை.

நம் சமுதாயப் பட்டதாரி இளைஞர்களின் நிலையும் கிட்டத்தட்ட இதுவாகவே உள்ளது. ஜுமுஆவில் இமாம் தமிழ், அல்லது உருது மொழிகளில் உரை நிகழ்த்தினால், இளைய தலைமுறையினர் பலருக்கும் புரிய வேண்டிய விதத்தில் புரிவதில்லை; அரைகுறையாகவே -ஏனோ தானோ என்றுதான்- உரைகளைக் கேட்டுவிட்டுச் செல்கிறார்கள்.

இவர்களின் பேச்சு மொழியின் நிலையே இதுவென்றால், வாசிப்பு மொழியின் நிலைபற்றி சொல்லவும் வேண்டுமா? சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்களின் மொழி நிலை, இங்கேயும் வந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

இதனாலெல்லாம், ஆங்கிலத்தைத் தூக்கிப் பிடிக்கிறோம் என்று கருதிவிடாதீர்கள். ஆங்கிலத்தையே தங்கள் கனவு மொழியாக்கிக் கொண்டுவிட்ட நம் பட்டதாரி இளைஞர்களும் இளைஞிகளும் நம் மார்க்கத்தைப் புரிந்துகொள்வது எப்படி என்பதுதான், நம்மை மிரட்டிக்கொண்டிருக்கும் கேள்வியாக உள்ளது; காலதாமதமின்றி விடை கண்டாக வேண்டிய வினாவாகவும் உள்ளது.

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிகின்ற மார்க்க ஆர்வலர்கள் சிலர் மார்க்க உரை நிகழ்த்துவதும், மார்க்க வகுப்புகள் நடத்துவதும் உண்மைதான். ஆனால், அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அத்துடன், குர்ஆன், ஹதீஸ், ஷரீஆ, வரலாறு முதலான துறைகளை அவர்கள் முறையாகக் கற்றவர்கள் என்றோ, அவற்றில் பாண்டித்தியம் பெற்றவர்கள் என்றோ கூற முடியாது.

அப்படியானால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? ஒரு பெருங்கூட்டத்தை, இளைய தலைமுறையினரை மார்க்கம் அறியாத அனாதைகளாக விட்டுவிட முடியுமா? இது, ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டாதா? குறிப்பாக, மார்க்க அறிஞர்களின் தோள்மேல் சுமத்தப்பட்டுள்ள மாபெரும் கடப்பாட்டினை அலட்சியம் செய்வதாகாதா?

ஒரே தீர்வு இதுவாகத்தான் இருக்க முடியும்! அதாவது பாரம்பரிய அரபி மத்ரசாக்களின் பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்ற அரபி இலக்கணம், இலக்கியம், மொழியியல், குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹு, வரலாறு முதலான எல்லாக் கலைகளையும் ஆங்கிலவழியில் கற்ற அறிஞர்களை உருவாக்குவது ஒன்றே இதற்குத் தீர்வாக இருக்க முடியும். ஏற்கெனவே, இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஆங்கிலவழி ஆலிம் பட்டதாரிகள் உருவாகிவருகின்றனர்.

இந்தியாவில் முதல்முறையாக ஆங்கிலவழி ஆலிம் பட்டப் படிப்பு சென்னை மாநகரில் சூளைமேடு, பாஷா தெருவில் உள்ள ஜாமிஆ இல்மிய்யா அரபிக் கல்லூரியில் இன் ஷா அல்லாஹ் தொடங்கப்படுகிறது. இங்கு மார்க்கக் கல்வியுடன், ஆட்சிப் பணி, பொருளியல், உளவியல், போன்ற கல்விப் பிரிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் NIOS மற்றும் இலங்கை, கேரளா பல்கலைக்கழகங்களுடன் இணைந்த பாடத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இது ஏழாண்டு பாடத்திட்டம். 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், குர்ஆன் சரளமாக ஓதத் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 2021-2022 ஆண்டுக்கான விண்ணப்பப் படிவங்கள் 2021 பிப்ரவரி முதல் மார்ச் 30வரை கல்லூரி முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். மறந்துவிடாதீர்கள்; தகுதித் தேர்வு உண்டு.    

இதுபோன்ற கல்லூரிகளில் ஆலிம் பட்டம் பெற்றவர்கள், டாக்டர்கள், பட்டதாரிகள், வணிகர்கள், வழக்குரைஞர்கள், வணிக நிறுவன அதிகாரிகள் போன்ற அறிஞர்களுக்கும் ஆளுமைகளுக்கும் மார்க்கக் கல்வி கற்பிக்கின்றனர். உரைகள் வாயிலாகவும் வகுப்புகள் வழியாகவும் இஸ்லாமிய போதனைகள், வழிபாடுகள், நன்னடத்தைகள், அனைத்துத் துறை சட்டங்கள், ஹலால் மற்றும் ஹராம் போன்ற எல்லா அறிவுகளையும் ஆங்கில மொழியில் போதிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இன்றே முந்துங்கள்! உங்கள் வாரிசுகளை ஈருலகிற்கும் வழிகாட்டும் அறிஞர்களாக உருவாக்க முன்வாருங்கள்!

இது பெருமைக்காகப் படிப்பதில்லை; கடமைக்காகப் படிப்பது

அன்புடன் உங்கள்
அ. முஹம்மது கான் பாகவி
முதல்வர் 
ஜாமிஆ இல்மிய்யா
அறிவியல் மற்றும் ஆய்வு அரபிக் கல்லூரி

Monday, February 08, 2021

தேன்கூட்டில் கல் எறிந்தகதையாகி விட்டது.

தேன்கூட்டில் கல் எறிந்த
கதையாகி விட்டது.
~~~~~~~~~~~~~~~~~~
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், விளக்கப் பொதுக்கூட்டங்கள், வரலாற்று உரைகள்,
நபிகளார் வரலாற்று நூல் வாசிப்பு...
என் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதோரும் நபிகளாரை வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

தமிழகத்தில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் இந்த மலர்ச்சியைக் காண முடிகிறது. மார்க்க அறிஞர்கள் பலதார மணம் குறித்தும் நபிகளார் துணைவியர் குறித்தும் நபிகளாரின் இல்லற வாழ்வு குறித்தும் புதிய கண்ணோட்டத்தில் உற்சாகத்துடன் ஆய்வு செய்வதில் ஆர்வம் காட்டுவதைக் காண முடிகிறது.

இதற்கெல்லாம் வழிவகுத்தவன் யார் என்று உங்களுக்குத் தெரியும். யோசிக்காமல்  தேன் கூட்டில் கல் எறிந்து விட்டான் ஆசாமி.

தீமையிலும் நன்மை உண்டு- என்பது 
இதுதானோ!

அன்புடன் உங்கள்
கான் பாகவி

Monday, February 01, 2021

கல்யாண ராமன் என்னசொல்கிறான் தெரியவில்லையா?

~~~~~~~~~~~~~~~~~~~
கல்யாண ராமன் என்ன
சொல்கிறான் தெரியவில்லையா?
~~~~~~~~~~~~~~~~~~~~
வருகின்ற தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு யாரும் வாக்களிக்காதீர்கள். மீறி வாக்களித்தால் இதை விடக் கேவலமாக நடந்து கொள்வோம்.

உங்களை, சிறுபான்மையினரை,அவர்களின் மத உணர்வுகளைக் கடுமையாகக் காயப்படுத்துவோம். காயம் உள்ளத்தில் மட்டுமல்ல;உடம்பிலும் இருக்கும்.

கூட்டணியில் உள்ள நாங்கள் இதைத் தைரியமாகச் செய்வோம். நீங்கள் சட்டத்தை நாடுவீர்கள். சட்ட அமல் எங்கள் கூட்டணியின் பெரிய கட்சியான அதிமுக இடம் இருக்கும். அதிமுக எங்களைக் காக்கும். தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லும்.

உங்கள் முயற்சிகளுக்கோ கூச்சலுக்கோ எந்நப் பயனும் கிடைக்காது.அப்படியானால் எங்களை அடக்கி வைக்கும் கூட்டணி எதுவோ அது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் . அப்போதுதான் நாங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு இருப்போம்.

நண்பர்களே! தமிழகத்தில் அமைதி நிலைக்க வேண்டுமென்றால் , மதச்சார்பற்ற கூட்டணி வென்றாக வேண்டும் என்பதைத்தான் அவன் சொல்லாமல் சொல்லியிருக்கிறான்.

இன்றிலிருந்து, இப்பொழுதிலிருந்து தயாராகுங்கள் இந்தக் கழிசடைகளைத் தோற்கடிக்க! இளைஞர்கள், தாய்மார்கள், படித்தவர்கள், தொழிலாளர்கள் என அனைவரிடமும் இதையே சாக்காக வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

தமிழகத்தைப் பிடித்த பீடையை விரட்டுவோம்.
நல்ல விமோசனம் காண்போம் ;
இறை நாடினால்.

அன்புடன் உங்கள்
கான் பாகவி

Sunday, January 31, 2021

பட்டிமன்றம் பத்ம ஸ்ரீவிருது பெற்றது

~~~~~~~~~~~~~~~~
பட்டிமன்றம் பத்ம  ஸ்ரீ
விருது பெற்றது
~~~~~~~~~~~~~~~~
பட்டிமன்றங்கள் மக்களை மேம்படுத்தும் கலையாக மாறியுள்ளது. இது பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் தாம் பத்ம ஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்துத் தெரிவித்த கருத்தாகும்.

மார்க்க அறிஞர்களான இளம் ஆலிம்கள் இத்துறையில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ளதைப் பலரும் அறிந்திருப்பார்கள்.1970களில் வேலூர் பாகியாத்தில் நாங்கள் கல்வி பயின்ற காலத்திலேயே பட்டிமன்றம் ஆலிம்கள் வட்டாரத்தில் பேச்சுப் பொருளாகிவிட்டது.

1972இல் பட்ட வகுப்பில் நான் பயின்ற அன்றே லஜ்னத்துல் இர்ஷாத் மாணவப் பயிற்சி மன்றத்தில் பட்டிமன்றம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்கத் தொடங்கிவிட்டனர்.

ஆரம்பத்திலேயே விமர்சனம் ஒன்று தலைதூக்கியது. மார்க்கம் கற்கும் மாணவர்கள் மார்க்கம் அனுமதித்த ஒன்றை தடைசெய்யப்பட்தாகவும், தடைசெய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதாகவும் மாற்றவா இந்தப் பட்டிமன்றம்? என்பதே அந்த க் கடும் விமர்சனம்.

உண்மை அதுவலல. பட்டிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் தலைப்பு, இரண்டும் அனுமதிக்கப்பட்டதே. இரண்டில் எது மிகவும் சிறந்தது என்ற ரகத்திலேயே இருக்கும். எடுத்துக்காட்டிற்குச் சில :

1.குடும்ப அமைதிக்கு ஆணும் காரணம்தான்; பெண்ணும் காரணம்தான். அதிகச் சீரழிவு யாரால்?

2. முன்னேற்றத்திற்கு அதிகக் காரணம் கல்வியா? செல்வமா?

3.சமுதாயப் பின்னடைவுக்கு முதல் காரணம் கல்வியின்மையா? ஒழுக்கமின்மையா?

இரண்டு பக்கமும் உள்ள நன்மை மற்றும் தீமையை ஈரணியினர் தத்தம் ஆதாரங்களை முன்வைத்து வாதிடுகையில் , பார்வையாளர்களுக்குத்  தெளிவு பிறக்கும். இரண்டில் ஒவ்வொன்றும் எவ்வளவு முக்கியம் என்பது புலப்படும்.

சாதாரண உரைக்கும் பட்டிமன்ற உரைக்கும் உள்ள வித்தியாசமே சுவைகூட்டி புரியவைப்பது தான்.

பாகியாத்தில் தொடங்கிய இப்பயிற்சி, எண்பதுகளில் பொதுமக்கள் வரை சென்றது. மன்றத்தில் பயிற்சி பெற்றவர்களில் ஈரணிகளை உருவாக்கி, நான் நடுவராக இருந்து பல ஊர்களில் பட்டிமன்றம் மூலமாக மார்க்கப் பரப்புரை செய்துள்ளோம். சாதாரண பயான்களைவிட பட்டிமன்றத்திற்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது.

சில வேளைகளில் நாள்கணக்கில் எங்கள் பயணம் நீண்டதுண்டு. முதல் கூட்டத்தில் சொன்ன அதே நகைச்சுவையை அல்லது ஒரு நிகழ்வைப் பேச்சாளர் குறிப்பிடுகையில், புதிதாகக் கேட்கும் பாவனையில் நடுவராக இருந்த நான் கேட்பேன். இது பேச்சாளருக்கு. உற்சாகத்தை ஊட்டும்.

நிகழ்ச்சியெல்லாம் முடிந்தபிறகு, பத்து தடவை கேட்டிருந்தும் அதெப்படி புதிதாகக் கேட்பதுபோல் கேட்கிறீர்கள் என்று நண்பர்கள் சிரிப்பார்கள்.

இன்றும் இளம் ஆலிம்களால் இத்தகைய பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

அன்புடன் உங்கள்
 கான் பாகவி

Wednesday, January 27, 2021

கூத்தூர் வாஹித் பாகவி மறைவு

கூத்தூர் வாஹித் பாகவி மறைவு
~~~~~~~~~~~~~~
நாகப்பட்டினம் மாவட்டம் கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மெளலவி, அப்துல் வாஹித் பாகவி கடந்த 06.01.2021 புதன்கிழமை இறந்
துவிட்டார்.தகவல் தாமதமாகவே கிடைத்தது.

இவர் என் வகுப்புத் தோழர் மட்டுமன்றி ரூம் மேட் கூட.
பள்ளிப் படிப்பை முடித்தவர்.ஆங்கிலம் நன்கு கற்றவர்.1972ஆம் ஆண்டு ஸலஜ்னத்துல் இர்ஷாத் மாணவ மன்றச் செயலாளராக நன்கு செயல்பட்டவர். 

வேலூர் கல்லூரிகளில் நடக்கும் கவியரங்கம், கருத்தரங்கம்,பட்டிமன்றம் ஆகியவற்றுக்குப் சென்று வருவார்.

இந்த அனுபவத்தைக் கொண்டே எங்களாண்டில் மன்றத்தில் பட்டிமன்றம்  தொடங்கினோம் என்று நினைவு. அவ்வாறே கவியரங்கமும் நடத்தினோம்.

ஓதி முடித்தபின் சில இடங்களில் இமாமத் பணியாற்றியவர் , பின்னர் அரபு நாடு சென்றார். ஊர் திரும்பி நீண்ட நாள் ஓய்வில் இருந்தார்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நண்பர் மாரடைப்பால் கடந்த ஆறாம் தேதி இறந்துபோனார்.

அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள்.இருவருக்கும் திருமணமாகி குழந்தைகுட்டிகளுடன் நலமாக உள்ளனர்.

என் உற்ற நண்பரின் மறுமை வாழ்வு செழிக்க அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். 
اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا ارحم الراحمين.
அன்புடன் உங்கள்
கான் பாகவி

Friday, January 22, 2021

இனிய நண்பர் இழப்பு ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎இளம் ‎வயதில்

இனிய நண்பர் இழப்பு இளம் வயதில்
~~~~~~~~~~~~
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை  அருகிலுள்ள ஆத்தூர் கிராமத்தில் பிறந்து,பள்ளிப் படிப்பை முடித்து பாகியாத்தில் கற்றவர்தான் மெளலானா சதகத்துல்லாஹ் ஹழ்ரத்.அவர் எனக்குப் பிந்திய வகுப்பில் துவரங்குறிச்சி சலாம் பாகவி, அஷ்ரப்  பாகவி ஆகியோருடன் கல்வி பயின்றவர். பின்னாளில் பாகியுத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.
அத்துடன் ஒருசில பாடங்களும் நடத்தினார்.மாணவர்களுக்கு தமிழ் மொழி, இலக்கியம், ஆங்கிலம் போன்றவற்றில் ஆர்வமூட்டியதுடன் மாணவர்கள் சிலருக்குக் கற்பிக்கவும் செய்தார்.

பிழையின்றி தமிழை எழுதும் தமிழ் எழுத்தாளர். எளிமையாகப் பேசினாலும் விஷயத்தோடு பேசும் பேச்சாளரும் கூட.

எனக்கும் அவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டதே தமிழ் எழுத்தால் தான். ஆம்! தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆனின் வசன மொழிபெயர்ப்பு கடையநல்லூர் மதிப்புக்குரிய யூசுப் அன்சாரி ஹழ்ரத் அவர்கள் எழுதியது.மொழிபெயர்ப்பு மட்டும் வெளியிடலாம் என்று திட்டத்தில் மேலாய்வைத் தொடங்கிய பாகியாத், பின்னர் விரிவுரையாகவே வொளியிட முடிவு செய்தது.கனம் கமாலுத்தீன் ஹழ்ரத் அவர்கள் விரிவுரை எழுத, தமிழைச் செப்பனிடும் பணியை சதகத்துல்லாஹ் ஹழ்ரத் அவர்கள் ஏற்றார்.

பின்னர் என்னையும் அப்பணியில் இணைத்தனர். 

இறுதிவரை தஃப்சீர் எழுத்துப் பணியில் ஈடுபட்டதுடன், முஃப்தி அவர்கள் கொடுக்கும் ஃபத்வாக்களை தமிழில் எழுதி அனுப்பும் பணியையும் மேற்கொண்டிருந்தார்.
தஃப்சீரின் ஆரம்பப் பாகங்கள் அச்சாகி, அதன் அச்சுப் பிழைகளைத் திருத்தும் பணிக்காக நானும் மெளலானா அவர்களும் சென்னையில் அறை போட்டு பல வாரங்கள் தங்கி ,திருத்தப் பணியை மேற்கொண்டுள்ளோம். அப்போதெல்லாம் மெளலானா அவர்களின் எளிமை, அலட்டிக்கொள்ளாத போக்கு, எதையும் பாசிடிவாகப் பார்க்கும் பண்பு ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன.

சுருங்கக் கூறின், அவருக்கு இருந்த ஆற்றல்கள் வேறு யாருக்கும் அமைந்திருந்தால், அவரைக் கையில் பிடிக்க முடியாது.அத்துணை ஆற்றல்களை த் தமக்குள் வைத்துக்கொண்டு, ஒன்றுமே தெரியாதவர் போன்று நடந்துகொண்ட  ஒரு துறவி என்றுகூட அவரைச் சொல்லலாம்.அதற்காக இந்த அளவுக்கா தம்மை மறைத்து வாழ்வது என்றுகூட அவர் நண்பர்கள் அவரிடம் உரிமையோடு கோபித்துக் கொண்டதும் உண்டு.

அவருக்கிருந்த ஆங்கில அறிவுக்கும் மார்க்க அறிவுக்கும் வேறு யாருமாக இருந்தால் ,எங்கோ போயிருப்பார்கள்.
உடல்நிலை ஒத்துழைக்காத இறுதி நாட்களில் மதரசாவிலிருந்து விடைபெற்று ஓய்வில் இருந்தார்.அப்போதும்கூட மாணவர்களின் அழைப்பை ஏற்று சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
ஆனால் ,துரத்தி வந்த நோய் இறுதியாக அன்னாரை நம்மிடமிருந்து பிரித்து விட்டதுதான் சோகம்.

கண்ணீர் மல்க அவருக்காக இறையைப் பிரார்த்திப்போம்.
اللهم اغسله بالماء والثلج ونقه من الذنوب كما ينق الثوب الأبيض من الدنس. اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا رب العالمين.

--அன்புடன் உங்கள் கான் பாகவி.