Tuesday, May 20, 2014

சிறுபான்மையினர் அஞ்ச வேண்டியதில்லை

. முஹம்மது கான் பாகவி



ந்தியாவின் 16ஆம் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகளும் தெரிந்து, பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியும் மத்தியில் வந்துவிட்டது. கருத்துக் கணிப்புகளையும் தாண்டி அறுதிப் பெரும்பான்மை பெற்று பா..கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பா..கட்சி மட்டுமே 282 இடங்களை லாவகமாகக் கைப்பற்றியிருக்கிறது. ஆட்சியமைக்கத் தேவைப்படும் 272 இடங்களைவிடப் பத்து இடங்களை அக்கட்சி கூடுதலாகப் பெற்றிருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்களையும் சேர்த்தால் பா... அணியின் பலம் 337. இது, மூன்றில் இரு பங்குக்கு 25 இடங்களே குறைவு.


மதவாதக் கட்சி; சிறுபான்மையினருக்கு எதிரான வலதுசாரிக் கட்சி; அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக்கூட சிறுபான்மையினரிடமிருந்து அது பறிக்கப்போகிறது; இனி இந்தியாவில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நிம்மதியாக வாழ முடியாதுஎன்றெல்லாம் புலம்பிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, இனி ஆகவேண்டியதைப் பற்றிச் சிந்திப்பதே அறிவுடைமை ஆகும்.

மசோதாக்களின் நிலை

நாடாளுமன்றத்தில் நிதி மசோதாக்களை நிறைவேற்ற, அவையில் பாதிக்குமேலான உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும். பா..கட்சி, தன் சொந்த பலத்திலேயேகூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றியே- நிதி மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்றிட முடியும்.

ஆனால், நிதி மசோதாக்கள் ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவையிலும் நிறைவேறினால்தான், செயல்பாட்டுக்கு வர முடியும். மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. இதில் பாதிக்குமேல்அதாவது 123 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே நிதி மசோதா நிறைவேறும். தற்போது மாநிலங்களவையில் காங்கிரஸ் கூட்டணிக்கு 80 உறுப்பினர்களும் பா... கூட்டணிக்கு 64 உறுப்பினர்களும் உள்ளனர்.

எனவே, நிதி தொடர்பான மசோதாக்களை மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றிட பா...வுக்கு இன்னும் 59 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மாநிலங்களவையில் அ.தி.மு..விற்கு 10 உறுப்பினர்களும் பிஜு ஜனதா தளத்திடம் 9 உறுப்பினர்களும் உள்ளனர். பற்றாக்குறைக்கு உதிரிக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவது பா...வுக்குச் சிரமம் அல்ல.

ஆனால், சட்டம் தொடர்பான மசோதாக்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற வேண்டுமானால், அந்தந்த அவைகளின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கினரின் ஆதரவு வேண்டும். இதன்படி மக்களவையில் 362 உறுப்பினர்களின் ஆதரவும் மாநிலங்களவையில் 164 உறுப்பினர்களின் ஆதரவும் இருக்க வேண்டும். பா..கட்சிக்குக் கூடுதலாக 25 உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மக்களவையிலும் 100 உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மாநிலங்களவையிலும் கட்டாயம் தேவைப்படுகிறது.

இந்த ஆதரவுகளையும் வெளியிலிருந்து பெறுவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சாத்தியமான ஒன்றுதான். இதற்காகவே, மத்திய அமைச்சரவையில் மானசீக நட்புக் கட்சிகளுக்கும் இடமளிக்க பா... தலைமை திட்டமிடுகிறது. இருப்பினும் பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சீமாந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்கு விரைவில் 50 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்கள் பா...வுக்குக் கைகொடுப்பார்கள்.

ஆக, உடனுக்குடன் இல்லாவிட்டாலும் ஓரிரு ஆண்டுகளில், தேர்தல் அறிக்கையில் பா... அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்த முயலும் என்பதில் ஐயமில்லை. பா..கட்சி தயங்கினாலும் அதன் தாய்ச் சபையான ஆர்.எஸ்.எஸ். சும்மா விடாது என்பதிலும் ஐயமில்லை.

தேர்தல் அறிக்கை

  • பொது சிவில் சட்டம்
  •   காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம்
  •   மதமாற்றத் தடைச் சட்டம்
  •   பசுவதைத் தடைச் சட்டம்
  •   பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு
  •   மதரசாக்களை நவீனப்படுத்துதல்


நாடாளுமன்ற அவையில் அடியெடுத்து வைக்கும்போது,
மண்டியிட்டு வணங்கிய மோடி. (படம்: தி இந்து)
என்பன போன்ற பா...வின் திட்டங்களைச் சட்டத் திருத்தம் மூலமே செயல்படுத்த இயலும் என்று கூறப்படுகிறது. அதற்கான இயைந்த சூழ்நிலையை உருவாக்க பா..கட்சி வியூகம் வகுத்துவருகிறது. பா... கூட்டணிக்கு வெளியே உள்ள ஒரு சிறிய கட்சி அமைச்சரவையில் இடம்பெற சம்மதித்துவிட்டால், பெரிய கட்சிக்கு ஒத்துப்போக வேண்டிய நெருக்கடி அதற்கு ஏற்படும். அதைப் பயன்படுத்தி இந்தச் சட்டங்களை எளிதாக நிறைவேற்றிவிடலாம் என்பது பா...வின் கணக்கு.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் நீண்டநாள் கனவான இராமர் கோயில் கட்டும் திட்டத்தைக்கூட இதே பாணியில் சட்ட அனுமதியோடு செயல்படுத்த முயன்றாலும் வியப்பதற்கில்லை.

நீதிமன்றத் துணை

இந்நிலையில், பாதிக்கப்படும் சிறுபான்மை சமுதாயம் என்ன செய்ய வேண்டும்? நீதிமன்றத்தின் துணையை நாட வேண்டும். ஏனெனில், சட்டம் இயற்றுவதற்கும் சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கும் மக்கள் பிரதிநிதிகளின் சபைகளுக்கு அதிகாரம் இருப்பதைப் போன்றே, அச்சட்டம் இந்திய அரசியல் சாசனத்திற்கு (Constitution) முரண்படும்போது அதற்கெதிராக வழக்குத் தொடுக்கவும் வாதாடவும் குடிமக்களுக்கு உரிமையுண்டு. அச்சட்டம் செல்லாது எனத் தீர்ப்பளிக்கின்ற அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு அச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் நீதிமன்றம் தலையிட முடியும்.

இதற்குச் சிறுபான்மை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டாக வேண்டும். அந்த விழிப்புணர்வை சமுதாய அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மார்க்க அறிஞர்கள் உருவாக்கிட வேண்டும். அறிவுபூர்வமாகச் சிந்தித்து, சட்டரீதியில் அவர்கள் தங்களின் உரிமைகளைக் காக்கப் பாடுபட முன்வர வேண்டும். இதை விடுத்து, பீதியடைந்து, அச்சப்பட்டு, கூனிக்குறுகி நிற்க வேண்டிய துர்நிலை சிறுபான்மையினருக்கு இல்லை என்பதை முதலில் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சொந்த முயற்சி

சரி! நீதிமன்றத்திலும் நாம் எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை என்றே வைத்துக்கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, முஸ்லிம் தனியார் சட்டம் செல்லாது; பொதுக் குடியுரிமை சட்டமே இனி நடைமுறைப்படுத்தப்படும் என்று நாடாளுமன்றம் தீர்மானிக்க, நீதிமன்றமும் அதையே ஏற்றுத் தீரப்பளிக்கும் நிலைக்கு வந்துவிடுகிறது. இந்தச் சூழ்நிலையில் சமுதாயம் விழிப்படைந்து, நீதிமன்றம் செல்லாமல் ஷரீஅத் சமரச மன்றங்களை உருவாக்கி, அதன்மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காணும் முடிவை ஏகமனதாக மேற்கொள்ள முன்வர வேண்டும்.

இப்போதும் சமரச மன்றங்கள்மூலம் தீர்வு காணும் மரபு பல இடங்களில் இருந்துவருகிறது. அதைப் பரவலாக்கச் சமூக ஆர்வலர்களும் மார்க்க அறிஞர்களும் முயல வேண்டும். குடியுரிமை (சிவில்) சட்டங்களைப் பொறுத்தவரையில், அவை இரு முஸ்லிம்களுக்கிடையிலானவை.

திருமணம், மணவிலக்கு, பாகப்பிரிவினை, வஸிய்யத் (இறுதி விருப்பம்) போன்ற விஷயங்களில் இஸ்லாம் அளிக்கும் தீர்வுகளை அவர்களே ஏற்க முன்வருகையில், அரசாங்கம் தலையிட்டு நீ உன் மார்க்கச் சட்டத்தையெல்லாம் பின்பற்றக் கூடாது; நாங்கள் சொல்லும் பொதுச் சட்டத்தைத்தான் ஏற்று நடக்க வேண்டும் என்று திணிப்பதற்கு என்ன உரிமையிருக்கிறது?
சம்பந்தப்பட்ட இருவர்வாதியும் பிரதிவாதியும்- நீதிமன்றத்தை அணுகினால்தானே இந்தத் திணிப்பு நடக்கும்? சமுதாயத்திற்குள்ளேயே மார்க்கச் சட்டப்படி சமரசத் தீர்வு கண்டால், வேறு யாரும் தலையிட முடியாதுதானே!

இவ்வாறே, பா... அறிவித்துள்ள சிறுபான்மை விரோதத் திட்டங்கள் ஒவ்வொன்றும் நடைமுறைக்கு வருமானால், நீதிமன்றத்தின் வாயிலாகவும் அதையடுத்து சுயக் கட்டுப்பாடு, சமூக வழிகாட்டல், சுய முனைப்பு ஆகிய வழிகளில் தீர்வு காணும் உறுதிப்பாட்டை முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டும். இதைப் பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும்.

காங்கிரஸின் பரிதாப நிலை

கடந்த அறுபது ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்கள் காங்கிரஸை மலைபோல் நம்பினார்கள். ஆனால், காங்கிரஸ் முஸ்லிம்களின் நம்பிக்கையை வீணடித்துவிட்டது; அல்லது நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது. பாபர் மசூதி சர்ச்சைக்குரியதாக்கப்பட்டது, மசூதியின் வாயில் மூடப்பட்டது, மீண்டும் சிலைவழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டது, இறுதியாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது என எல்லா அக்கிரமங்களும் நடந்தது மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோதுதான் என்பதை முஸ்லிம்களால் எப்படி மறக்கவோ மன்னிக்கவோ முடியும்?

சச்சார் கமிட்டியை நியமித்த ஒன்றை மட்டுமே தன் சாதனையாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ், சச்சாரின் பரிந்துரைகளில் எதையேனும், குறிப்பாக 10 விழுக்காடு இடஒதுக்கீட்டினைச் செயல்படுத்தியதா? பயங்கரவாத முத்திரை குத்துவதில் உளவுத்துறை முனைப்புக் காட்டியது, ஆயிரக்கணக்கான இளைஞர்களைகுற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமலேயே - சிறையில் வாட்டிவதைத்தது, முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சியிலும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அக்கறை காட்டாதது, ஆட்சியிலும் முஸ்லிம்களுக்குரிய பிரதிநிதித்துவம் வழங்காததுஎனத் தேசிய காங்கிரஸ் கட்சியின் மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

அதனால்தான், .பி., ராஜஸ்தான், பீஹார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு முதலான மாநிலங்களில் காங்கிரஸை முஸ்லிம்கள் அடியோடு கைகழுவிவிட்டார்கள். காங்கிரஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 44 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட அடைய முடியாத இழிநிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது. பல இடங்களில் மாநிலக் கட்சிகளுக்குச் சிறுபான்மை வாக்காளர்கள் மாறிவிட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

உ.பி. வெற்றிக்கு உழைத்த அமித்ஷா
மோடியின் நெருங்கிய நண்பர்
எண்பது மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் முப்பது தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பவர்கள் முஸ்லிம்கள்தான். அந்த மாநிலத்திலேயே 70க்கும் அதிகமான இடங்களை பா... கைப்பற்றியிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?

நண்பனும் பகைவன் ஆவான் ஒருநாள்; பகைவனும் நண்பன் ஆவான் ஒருநாள். நம்பிக்கைத் துரோகியைவிட எதிரியே மேல் என்று எண்ணிவிட்டார்களோ!
___________________________

Monday, May 12, 2014

சர்வதேசப் பார்வை (செய்திச் சுருள்)



செல்வாக்கு மிக்க நூறுபேரில்
தாரிக் ரமளானுக்கு இடம்


பி
ரிட்டன்டைம்ஏடு, பல்வேறு சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நூறுபேரில் ஒருவராக சுவிட்சர்லாந்தின் இஸ்லாமிய சிந்தனையாளர் டாக்டர், தாரிக் ரமளானைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர் இமாம் ஹசனுல் பன்னா அவர்களின் பேரர் என்பது குறிப்பிடத் தக்கது. ஐரோப்பாவில் இஸ்லாமியப் பரப்புரை ஆற்றுவதிலும் இஸ்லாமோஃபோபியாவுக்குத் தக்க தீர்வு காண்பதிலும் ஐரோப்பாவில் வாழும் சிறுபான்மையினர் சமமாக நடத்தப்படாததை எதிர்த்து இயக்கம் கண்டதிலும் மாபெரும் சாதனை படைத்தவர் தாரிக் ரமளான் என ‘டைம்’ ஏடு பாராட்டியுள்ளது.

طارق رمضان
கனடா பல்கலைக் கழகம் அண்மையில் வெண்ட்சார் நகரில் இஸ்லாமிய விழிப்புணர்வு வாரம் அனுசரித்தது. இஸ்லாம் குறித்துச் சொல்லப்படும் தவறான விளக்கங்களையும் பொய்யான செய்திகளையும் மறுத்து, உண்மைகளை விவரிக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு வாரம் மேற்கொள்ளப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவர்களின் தொடர் முயற்சியால் இது நடத்தப்பட்டது.

இதே அடிப்படையில், இஸ்லாமிய இம்பீரியல் கல்லூரி மன்றம், இஸ்லாமிய அறிமுக வாரம் ஒன்றைக் கடைப்பிடித்தது. ‘இஸ்லாமைக் கண்டறிந்துகொள்’ என்பது அறிமுக வாரத்தின் தலைப்பு. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு லண்டன் பொதுமக்களுக்குப் பொது அழைப்பு விடுக்கப்பட்டது. இஸ்லாம் பற்றிய சந்தேகங்கள் குறித்துக் கேட்டு, விடைகள் பெற்று அனைவரும் தெளிவு பெற வேண்டும் என்பதே நோக்கம்.

அறிமுக வார நிகழ்ச்சிகளில் உரைகள், சந்திப்புகள், கட்டுரைகள், உணவுக்கான இடைவெளி ஆகியன இடம்பெற்றன. இவற்றில் ஏராளமான ‘தாஇ’கள், அறிஞர்கள் கலந்துகொண்டு கேள்விகளுக்கு விடையளித்தனர்; இஸ்லாம், முஸ்லிம் சமூகம், மனிதன் தொடர்பான தலைப்புகளில் உரைகளும் நிகழ்த்தினர்.


கத்தோலிக்க மருத்துவமனையில் தொழுகைத் தலம்

ஜெ
ர்மனி நாட்டின் ஜனநாயகப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவரும் திட்டத் துறை அமைச்சருமான ஜான்ட்ராம் ஷினைடர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தம் உரையில், “இஸ்லாம் ஜெர்மனி சமூகத்தின் ஓர் அங்கமாகும். குறிப்பாக, வடக்கு ரீன்வெஸ்ட்ஃபாலி மாநிலத்தில் இதுதான் நிலையாகும். இன்று இதற்கு மாற்றமான சிந்தனை சிலரிடம் இருந்தாலும் இதுவே உண்மையாகும்என்று குறிப்பிட்டார்.

ஜெர்மனியின் ரைம்ஷேய்டு நகரில் புதிய பள்ளிவாசல் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டியபோது இவ்வாறு சொன்ன அவர் மேலும் கூறியதாவது:

இந்நகரில் ஏற்கெனவே ஒரு பள்ளிவாசல் இருந்துவருகிறது. இப்பள்ளிவாசல் தூபி (Dome). 28 மீட்டர் கொண்ட மனாரா ஆகியவற்றுடன் இருந்தாலும் இதுவரை அங்கு பாங்கொலி கேட்டதில்லை. இந்நிலையில் இந்தப் புதிய பள்ளிவாசல் எழுப்பப்படுவதானது, ஜெர்மனியில் குடியேறிய முஸ்லிம்கள் ஜெர்மனி சமூகத்தின் ஓர் அங்கமாக இருப்பதையே விரும்புகிறார்கள் என்பதற்குத் தெளிவான அத்தாட்சியாகும்.

இதன் தொடர்ச்சியாக, வடக்கு ரீன்வெஸ்ட்ஃபாலி மாநிலத்தில் பாகூம்நகரில்புனிதர் எலிஸபெத்கத்தோலிக்க மருத்துவமனையில், நாட்டிலேயே முதலாவது தொழுகைத் தலம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைபெற வரும் முஸ்லிம்கள், அவர்களைச் சந்திக்கவரும் முஸ்லிம் பார்வையாளர்கள் ஆகியோர் தம் தொழுகைக் கடமையை நிறைவேற்ற இத்தலம் உதவும். நகர மக்களின் கோரிக்கையின்பேரில் பாகூர் நகர்மன்ற உறுப்பினர் மேர்ஸ்லாவ்டோரக் மற்றும் பள்ளிவாசல் மேலாளர் ஆகியோரின் முன்முயற்சியால் இத்தொழுகைத் தலம் அமைக்கப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்த சிறிய தேவாலயமே தாற்காலிகத் தொழுகைத் தலமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் இதே இடத்தில் முஸ்லிம்களுக்கெனத் தனிப் பள்ளிவாசல் கட்டப்படும்.


பெல்ஜியத்தில் பெருகும் முஸ்லிம்களின் எண்ணிக்கை

பெ
ல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய முஸ்லிம் மகளிர் மன்றக் கூட்டத்தில், பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மன்றம் உலக முஸ்லிம்களுக்கு விடுத்த அறிக்கையில், “முஸ்லிம் மகளிருக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை முஸ்லிம்கள் வழங்கிட வேண்டும். அப்போதுதான் சமூக நீதி நிலைபெறும்; முஸ்லிம் பெண்களின் நிலை உயரும்என்று வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பெல்ஜியம் இமாமும் சமூக ஆர்வலருமான நூருத்தீன் தவீல் கூறியதாவது: ஃப்ளாமென்க் பகுதியில் வாழும் பெல்ஜிய மக்களிடையே இஸ்லாம் வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாகப் பெண்கள் அதிகமாக இஸ்லாத்தில் இணைகின்றனர்.

ஆயினும், பெரிய நகரங்களில் வாழ்வோர் இஸ்லாத்தில் இணைவதாகத் தெரியவில்லை. முஸ்லிம்களுடன் கலந்து வாழும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. சமூகத் தொடர்புச் சாதனங்களுக்கு இதில் முக்கியப் பங்கு இருக்கிறது.

இளைஞர்கள், முதியோர் எனப் பல வயதினரும் இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். இருப்பினும் பெண்களின் சதவீதமே அதிகம். குறிப்பிட்ட எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால், இஸ்லாத்திற்கு மாறுவோர் மனஅமைதியைத் தேடியே வருகின்றனர் என்பது மட்டும் உறுதி. புதிதாக இஸ்லாத்தில் இணைந்த பெண்களுக்கென ஒரு மன்றம் அண்மையில் தொடங்கப்பட்டது. குறுகிய காலத்தில் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 700ஐ எட்டியது என்று இமாம் நூருத்தீன் விவரித்தார்.

ஜப்பான் விமான நிலையத்தில் முஸ்லிம் பயணிகள் தொழுவதற்கு ஏற்பாடு

ப்பான் நாகோயா நகரில் ஷோபோ விமான நிலையம் உள்ளது. ஒஸாகா வளைகுடாவின் நடுவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை தீவுக்குமேலே இவ்விமான நிலையம் அமைந்துள்ளது. முஸ்லிம் பயணிகளின் தேவையை முன்னிட்டு தனியான தொழுகை அறைகள், ஹலால் உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

முஸ்லிம் பயணிகளின் வேண்டுகோளை அடுத்து ஷோபோமலேசியா இடையிலான புதிய ஏர்லைன்ஸ் ஒன்றை இந்த விமான நிலைய நிர்வாகம் அண்மையில் தொடங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது. மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலிருந்து அதிகமான முஸ்லிம் சுற்றுலாப் பயணிகள் ஜப்பான் வருகிறார்கள். 2020இல் ஒலிம்பிக் விளையாட்டுக்கு ஜப்பான் தயாராகிவருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டு முஸ்லிம்களுடனான நல்லுறவு சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் ஜப்பானுக்கு உண்டு. 1930இல் ஜப்பானில் முஸ்லிம் மக்கட்தொகை வெறும் ஆயிரமாக இருந்த நிலையில், இப்போது அங்கு 1,20,000 முஸ்லிம்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.


தென்கொரிய முஸ்லிம்கள் கோபம்

தெ
ன்கொரியாவில் இசைஆல்பம் ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இளம்பெண்கள் சிலர் சேர்ந்து வெளியிட்டுள்ள அந்த ஆல்பத்தில், குர்ஆனின் சில வசனங்கள் பாடல்வரிகளில் இடம்பெறுகின்றன. குறிப்பாக, ‘அந்நபஉஅத்தியாயத்தில் (78) வசனங்கள் சில, பாடல் வரிகளில் சேர்க்கப்பட்டு, இசையோடு வெளிவந்துள்ளது இந்த ஆல்பம். தென்கொரிய முஸ்லிம் யூனியன் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுடன், வசனங்களை ஆல்பத்திலிருந்து அகற்ற வேண்டுமென்று கோரியுமுள்ளது. ஆல்பம் தயாரித்த நிறுவனம் அந்தச் சொற்களை அகற்றிவிடுவதாக உறுதியளித்துள்ளது.

அவ்வாறே, ஜப்பானின் தயாரிப்பானஅல்ட்ரா மேன்என்ற வீடியோ விளையாட்டிற்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. இதில் வரும் விளையாட்டு வீரனுக்குஅல்லாஹ்என்பதைப் போன்று ஒரு பெயரைச் சூட்டியுள்ளனர். இது முஸ்லிம்கள் புனிதமாகக் கருதும் பெயரோடு தொடர்பு கொண்டிருப்பதால், விளையாட்டைக் காணும் குழந்தைகளின் சமய நம்பிக்கையை இது கெடுத்துவிடும்; சட்ட ஒழுங்கும் பாதிக்கப்படும் என்று மலேசியா உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட இந்த வீடியோகேமை யார் விற்றாலும் 3 ஆண்டுக்குக் குறைவில்லாத சிறைதண்டனை விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.


ஆஸ்திரேலியாவில் முதலாவது இஸ்லாமிய அருங்காட்சியகம்

ஸ்திரேலியா நாட்டிலேயே முதலாவது இஸ்லாமிய அருங்காட்சியகம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் திறப்பு விழாவில் ஆஸ்திரேலியா நிதியமைச்சர் ஜோய்ஹாக்கி, பன்முகக் கலாசாரத் துறை அமைச்சர் நகோலாஸ், ஆஸ்திரேலியா தபால்துறை பொது மேலாளர் அஹ்மது ஃபாஹோர் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆஸ்திரேலியா தபால்துறை நிர்வாகமே இந்த அருங்காட்சியத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

திறப்பு விழாவில் பேசிய அஹ்மது ஃபாஹோர், “அருங்காட்சியகம் திறக்கப்படுவதற்கு முன்பே, அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பார்வையாளர்கள் முன்பதிவு முடிந்துவிட்டது. அருங்காட்சியகம் வெறும் வரலாற்றை மட்டும் கூறுவதாக இருக்காது. இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் வேண்டிய தகவல்களைப் பார்வையாளர்களுக்கு அளிக்கும்; இஸ்லாமியக் கலாசாரம், பண்பாடுகளைக் காட்டும்என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: ஆஸ்திரேலியர்களின் மனதில் உருவாகியுள்ள இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களையும் உண்மைக்குப் புறம்பான தீர்மானங்களையும் களைவதில் அருங்காட்சியகம் இயன்றவரை பங்காற்றும். கல்வி, கலாசாரம் இரண்டையும் போதிக்கும் மையமாக இது விளங்கும். இத்திட்டத்திற்குத் தாராளமாக நிதியுதவி செய்த முஸ்லிம் சமுதாயம் பாராட்டுக்குரியது.


சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் ஹாக்கி தமது உரையில், “சிறப்பான முறையில் இந்தப் பணி நிறைவடைந்துள்ளது. அனைவரையும் வாழ்த்துகிறேன். அருங்காட்சியத்தைத் திறந்துவைப்பதில் உவகை கொள்கிறேன்என்று குறிப்பிட்டார். அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் ஆப்கானிய ஒட்டக உருவம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இஸ்லாம் பரவுவதற்கு ஆப்கன் முஸ்லிம்கள் அளித்த பெரும் பங்கினை நினைவுகூரும் முகமாகவே இந்த ஏற்பாடு. 18ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான் முஸ்லிம்கள் ஆஸ்திரேலியா வந்தார்கள் என்றும் அமைச்சர் நினைவுகூர்ந்தார்.