Monday, April 15, 2013

ஐ.நா. சபையின் ‘பெண் விடுதலை’ கோஷம் - ஒரு கபட நாடகம்


- கான் பாகவி

க்கிய நாடுகள் சபை (United Nations Organization - UNO) இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1945ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. போரைத் தடுத்தல், மனித உரிமை, சுதந்திரம், பண்பாடு போன்றவற்றைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட, உலக நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பே ஐ.நா. சபை.

2002ஆம் ஆண்டின் கணக்குப்படி இந்த அமைப்பில் 191 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன் உலகத் தலைமையகம் நியூயார்க்கிலும் ஐரோப்பியத் தலைமையகம் ஜெனிவாவிலும் உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் (செக்யூரிட்டி கவுன்சில்) அமெரிக்கா, ஃபிரான்ஸ், பிரிட்டன், ரஷியா, சீனா ஆகிய ஐந்து நாடுகளே நிரந்தர உறுப்பினர்கள். இந்நாடுகளுக்கு மட்டுமே, ‘வீட்டோ அதிகாரம் உண்டு. எந்தவொரு தீர்மானத்தையும் ‘எதிர்க்கிறேன் என்ற ஒற்றைச் சொல்லால் தோற்கடிக்கும் வலிமையே ‘வீட்டோ அதிகாரம் எனப்படுகிறது.

ஸீடாவ் தீர்மானம்


ஐக்கிய நாடுகள் சபைக்கு பாதுகாப்புக் குழு உள்பட 6 முக்கிய துணைக் குழுக்கள் உள்ளன. இவைதவிர 14 சிறப்பு முகமைகளும் உள்ளன. வேறுபல துணை அமைப்புகளும் உண்டு. அவற்றில் ஒன்றுதான் CSW 57 எனப்படும் பெண்களின் தகுதிநிலை ஆணையம்.

இந்த ஆணையத்தின் சார்பாக 1979 டிசம்பர் 18ஆம் நாள் ஓர் உடன்பாடு அறிக்கை வெளியானது. பெண்களுக்கெதிரான எல்லா பாரபட்சங்களுக்கும் முடிவு கட்டுதல்என்பதே அறிக்கையின் தலைப்பு. இதைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் ஸீடாவ் (CEDAW) என்பர். இதன் முழுப் பெயர்Convention on the Elimination of All Forms of Discrimination Against Women என்பதாகும்.

அரபு மற்றும் முஸ்லிம் பெண் இனத்தை, ‘சர்வதேச உடன்படிக்கைஎன்ற பெயரில் சிக்கவைத்து, அவர்களின் கலாசாரப் பாரம்பரியத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றி, மேற்கத்திய அநாகரிக வாழ்க்கை முறையில் தள்ளிவிடுவதே இந்த ஸீடாவின் குறிக்கோள்.

இந்த உடன்படிக்கை (180/34) ஒப்புதலுக்காக 1979 டிசம்பர் 18இல் சமர்பிக்கப்பட்டது. இது சர்வதேச மகளிர் உரிமைச் சட்டம்என வர்ணிக்கப்பட்டது. 1981 டிசம்பர் 3இல் செயல்பாட்டுக்கு வரத்தொடங்கியது.

இதில் பெரிய விநோதம் என்னவென்றால், ‘ஸீடாவ்உடன்பாட்டிற்கு அமெரிக்கா உடன்படவில்லை என்பதுதான். அத்துடன் வேறு எட்டு நாடுகளும் அடிப்படையிலேயே இதில் சேர மறுத்துவிட்டன. அவற்றில் ஈரான், வாடிகன், சூடான், சோமாலியா, தான்ஜானியா ஆகிய நாடுகள் அடங்கும்.

உடன்படிக்கையில் முதலில் கையெழுத்திட்ட நாடு ஸ்வீடன். பின்னர் 20 நாடுகள் திட்டத்தில் சேர்ந்தன. 2009 மேயில் 186 நாடுகள் சேர்ந்தன. அவற்றில் கத்தரும் ஒன்று. இருப்பினும், இவ்வாறு ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்த நாடுகளில் சில, பாதுகாப்பு திருத்தங்கள் சிலவற்றை முன்வைத்தன.

இந்தத் திட்டத்தின் முதல்முக்கிய விதியே, உள்ளூர் சட்டங்களில் ஆண்-பெண் பாலினச் சமத்துவத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். பாலுறவு சுதந்திரம், தவறான பாலுறவுக்கு அனுமதி போன்ற ஷரீஅத் சட்டத்திற்கு எதிரான அம்சங்களே இச்சட்டத்தை ஆக்கிரமித்துள்ளன.

பெய்ஜிங் தீர்மானம்


இந்நிலையில், 1995இல் பெய்ஜிங் தீர்மானம் ஒன்று வெளியானது. ஐ.நா. சபையின் மேற்பார்வையில் மகளிர் மற்றும் குடும்பம் தொடர்பாக வெளியிடப்பட்ட இத்தீர்மானம், சொல்லில்கூட ஆண்-பெண் பாலின வேறுபாடு இருக்கக் கூடாது என அறிவித்தது. இதற்கு ஜென்டர்’ (Gender Perspective)  என்று பெயர்.

120 ஷரத்துகளைக் கொண்ட இத்தீர்மானம், மனித இயற்கைக்கும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் முரணான பிரிவுகளையும் கொண்டிருந்தது. குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறி, விபசாரம் செய்துகொள்ளவும் கருக்கலைப்பு செய்துகொள்ளவும் பெண்களுக்கு உரிமை அளித்தது. இதுவே உலக முஸ்லிம் குடும்பங்களுக்கெதிரான சதியின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

ஆனால், 2000இல் நடந்த பெய்ஜிங் + 15 மாநாட்டில் இத்தீர்மானத்திற்கு முஸ்லிம் உலகம் தெளிவான எதிர்ப்பைப் பதிவு செய்தது. அத்துடன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டாய்வு அறிக்கை மாற்றுத் திட்டத்தையும் முன்வைத்தது. ஆனால், இதைக் கண்டுகொள்ளாத ஐ.நா. சபை அமைப்பு அடுத்தடுத்த மாநாடுகளில், ஐ.நா. மகளிர் ஆணையத்தின் தீர்மானங்களை மறுக்கும் நாடுகளுக்கு உத்தேச தண்டனைகளை அறிவித்தது.

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், 2005இல் நியூயார்க்கில் நடந்த பெய்ஜிங் + 10ஆவது மாநாட்டில் கலந்துகொண்ட அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளில் ஒருவர்கூட, தீர்மானத்தை எதிர்த்து ஒரு வரிகூடப் பதிவு செய்யவில்லை என்பதுதான்.

முஸ்லிம் பிரதிநிதிகளின் அறியாமை இதற்கு ஒரு காரணம் என்றால், ‘‘இஸ்லாம் ஒரு பிற்போக்கு மதம்’’ என்று சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம் இன்னொரு காரணம். இத்தனைக்கும், தீர்மானத்தை அப்போது எதிர்த்த நாடுகளின் வரிசையில் அமெரிக்காவும் வாடிகனும் இருந்தன.

இஸ்லாத்திற்கெதிரான தீர்மானங்கள்


தொடர்ந்து நடந்த மாநாடுகளில் பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடந்தன. முஸ்லிம் மகளிருக்கென சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. முஸ்லிம் மகளிரின் சுதந்திரத்திற்காகவும் ஷரீஅத் சட்ட விதிகளுக்கு எதிராகவும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உச்சகட்டமாக, முஸ்லிம் பெண்கள் திருக்குர்ஆன் வசனங்களுக்கு எப்படி விளக்கமளிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மீள்பார்வை செய்ய வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது.

2009 மார்ச்சில் நடந்த ஐ.நா. சபை மகளிர் ஆணையம் நடத்திய மாநாட்டில், முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளாத ஒரு கூட்டத்தில் இஸ்லாத்திற்கெதிரான தீர்மானங்களை நிறைவேற்றி, உலக நாடுகள் இவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆணையம் கட்டாயப்படுத்தியது.

அவற்றில், பாகப்பிரிவினைச் சட்டத்தில் ஆண்-பெண் சமநிலை, நிர்வாகத்தில் ஆண்-பெண் சமத்துவம், திருமணத்திற்குமுன் கர்ப்பமடைய அனுமதி, கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதி, ஆண்-பெண் வேறுபாடுகள் அனைத்தையும் முற்றாக ஒழித்தல் ஆகிய அணுகுண்டுதீர்மானங்களும் இடம்பெற்றிருந்தன. பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் மௌனமாக இருக்க, எதிர்ப்பு தெரிவித்த ஒருசில நாடுகளின் குரலையும் ஐ.நா. அமைப்பு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

2010 மார்ச்சில் நடந்த பெய்ஜிங் + 15 மாநாட்டில் ஸீடாவ்தீர்மானம் முதலிடத்தைப் பிடித்தது. சூடான், அமெரிக்கா, இஸ்ரேல் நீங்கலாக மற்ற எல்லா நாடுகளும் ஏற்றன.

ஜென்டர்சமத்துவம், ‘ஸீடாவ்ஒப்பந்தம், திருமணத்திற்குமுன் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தும் பயிற்சி, வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு, கணவனின் தேவைகள் ஆகியவற்றைப் பெண்ணே செய்வதற்குக் கடுமையான எதிர்ப்பு முதலான தீர்மானங்கள் அவற்றில் இடம்பெற்றன.

மனாமா மாநாடு


இதற்கிடையில்தான், 2010 ஏப்ரலில் பஹ்ரைன் நாட்டுத் தலைநகரம் மனாமாவில் முஸ்லிம் நாடுகளின் மாநாடு ஒன்று நடந்தது. சர்வதேச மகளிர் மாநாட்டுத் தீர்மானங்களும் முஸ்லிம் உலகின் மீது அதன் தாக்கமும்என்ற தலைப்பில் அம்மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்ட முஸ்லிம் அறிஞர்களும் நிபுணர்களும் ஐ.நா. சபையின் மகளிர் ஆணையத் தீர்மானங்களுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார்கள்.

ஆணையத்தின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கும் பெண்களின் இயல்புகளுக்கும் எதிரானவையாகும்; ஆண்-பெண்களிடையிலான இயற்கை வேறுபாடுகளைக்கூடப் புறக்கணிக்கும் இத்தீர்மானங்கள், குடும்ப அமைப்பைச் சீர்குலைத்துவிடும்; ஒழுக்கச் சீரழிவை உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை முஸ்லிம்கள் முறையாக வழங்கிடவும் தங்கள் குடும்பப் பிரச்சினைகளுக்குத் தாங்களே தங்கள் மார்க்க முறைப்படி தீர்வு கண்டிடவும் அந்நியர்கள் யாரும் இதில் மூக்கை நுழைக்க இடமளித்திடலாகாது எனவும் மனாமாமாநாடு உலக முஸ்லிம்களைக் கேட்டுக்கொண்டது.

ஐ.நா. சபை வெளியிட்டுள்ள தீர்மானங்களை மதிக்க வேண்டும் என்று காரணம் காட்டி, அவற்றை அரபு நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளிலும அமல்படுத்த வேண்டும் என முஸ்லிம் அரசுகளோ சமூக அமைப்புகளோ கோர வேண்டாம் என்றும் மாநாடு வலியுறுத்தியது.

மீண்டும் மீண்டும்


இந்த நிலையில்தான் 2013 மார்ச்சில் ஐ.நா. மகளிர் ஆணையம் கசப்பான 9 தீர்மானங்களை மீண்டும் நிறைவேற்றி, இஸ்லாமிய மாண்புகளையும் நாகரிகத்தையும் குழிதோண்டி புதைக்க முடிவு செய்திருக்கிறது. இத்தீர்மானங்கள் விரிவாக முந்தைய கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன.

இத்தீர்மானங்களை எதிர்ப்பதென எகிப்து உள்ளிட்ட 17 முஸ்லிம் நாடுகள் தீர்மானித்திருக்கின்றன. இதற்கான முன்முயற்சியை எகிப்து எடுத்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கத்தர், சஊதி, ஈரான் முதலான நாடுகளும் இதில் இடம்பெறுகின்றன. இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு எதிரான இத்தீர்மானங்களைக் கடுமையாக எதிர்ப்போம் என இந்நாடுகள் முடிவு செய்துள்ளன.

ஜனநாயகம், சுதந்திரம், பெண்கள் விடுதலை, ஆண்-பெண் பாலினச் சமத்துவம் என்ற கவர்ச்சிகரமான பெயர்களில் மனிதகுலத்தை நரகப் படுகுழியில் தள்ள ஐ.நா. சபை முடிவு செய்துவிட்டதுபோலும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் உண்மையில் நினைத்திருந்தால், இத்தீர்மானங்களை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். தீர்மானங்ளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லிக்கொண்டே, மற்ற நாடுகள்மீது -குறிப்பாக முஸ்லிம் உலகின்மீது- திணிக்க அவை சதி செய்கின்றன.

எனவே, முஸ்லிம் நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூக அமைப்புகள் ஐ.நா.வின் இந்தக் கேவலமான முயற்சிக்குக் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்க வேண்டும். ஆலிம்கள், தாஇகள், சமூக ஆர்வலர்கள் பிரசாரத்தை முடுக்கிவிட வேண்டும்!
(அல்முஜ்தமா)

No comments:

Post a Comment