Friday, February 26, 2016

உலக உலமாக்களின் முன்னோடி இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்)

- கான் பாகவி

மாம் அஷ்ஷஹீத் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களின் நினைவு நாள் பிப்ரவரி -12. எகிப்து நாட்டில் அல்பஹீரா மாவட்டம் அல்மஹ்மூதிய்யா நகரில் 1906 அக்டோபர் (ஹிஜ்ரீ 1324 ஷஅபான்) மாதம் அன்னார் பிறந்தார்கள். அவர்களின் தந்தை ஷைகு அஹ்மத் அப்துர் ரஹ்மான் அல்பன்னா (ரஹ்) அவர்களும் ஒரு பெரிய மார்க்க அறிஞர். நபிமொழி தொடர்பாகப் பல நூல்கள் எழுதியவர். ‘அல்பத்ஹுர் ரப்பானி லி தர்தீபி முஸ்னதில் இமாம் அஹ்மத்’ எனும் நூல் அவற்றில் பிரபலமானது; முதன்மையானது.

ஹசனுல் பன்னா அவர்கள் சிறுவயதிலேயே மார்க்க சேவையில் ஈடுபட்டார்; ‘தஅவாபணியில் ஆர்வம் காட்டினார். மத்ரசாவில் சகமாணவர்களுடன் சேர்ந்து ‘மார்க்கப் பண்பியல் மன்றம்’ ஒன்றைத் தொடங்கினார். பின்னர் ‘தீமைகள் ஒழிப்பு மன்றம்’ ஒன்றைத் தொடங்கினார். 1919இல் தமது 12ஆவது வயதில் நடந்த புரட்சியிலும் பங்கு பற்றினார்.

1927ஆம் ஆண்டு ‘தாருல் உலூம்’ கல்லூரியில் பயின்று முதல் மாணவராகத் தேர்வாகிய ஹசனுல் பன்னா அவர்கள், ‘அல்இஸ்மாயீலிய்யா’ மத்ரசாவில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். 1928 மார்ச் மாதம் ஆறு பேருடன் சேர்ந்து ‘இக்வானுல் முஸ்லிமீன்’ (முஸ்லிம் சகோதரர்கள்) எனும் சீர்திருத்த மற்றும் விழிப்புணர்வு சங்கத்தை ஆரம்பித்தார். முஸ்லிம் சமூகத்தை அரித்துக்கொண்டிருந்த உட்பூசல்களைக் களைந்து, சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதில் ஆரம்பத்திலிருந்தே அதிகக் கவனம் செலுத்திவந்தார்.

1932ஆம் ஆண்டில் கெய்ரோ குடிபெயர்ந்த இமாம் ஹசனுல் பன்னா அவர்கள், அங்கே பரப்புரைக்கான பொது மையம் ஒன்றை நிறுவினார். எகிப்தில் மட்டுமன்றி இதர முஸ்லிம் நாடுகளுக்கும் அவரது பிரசாரம் பரவியது. இதனால், அவர் அதிகமாகப் பயணத்திலேயே நாட்களைக் கழிக்க வேண்டியதாயிற்று. அன்னாரின் மனத்தூய்மையுடன் கூடிய சொற்பொழிவுகள் மக்களின் மனதைக் கவர்ந்ததில் வியப்பில்லை. ஆனால், நல்லது நடந்தால் ஷைத்தானுக்குப் பிடிக்காது.

வீர மரணம்

1948 டிசம்பர் 9ஆம் தேதி, எகிப்து ஆட்சித் தலைவர் கலீஃபா மஹ்மூத் ஃபஹ்மீ அந்நக்ராஷி, இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பிற்குத் தடை விதித்ததுடன், ஜமாஅத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் அங்கத்தினர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். தம் சகோதரர்களுடன் கைதாக ஹசனுல் பன்னா அவர்கள் முன்வந்தும் அரசு அனுமதிக்கவில்லை.

சில நாட்களுக்குப்பின், இமாம் ஹசனுல் பன்னா அவர்களின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்டிருந்த தற்பாதுகாப்பு ஆயுதங்களையும் திரும்பப் பெற்றார்கள். உதவியாக இருந்த அவருடைய சொந்தச் சகோதரர்கள் இருவர் பிடிக்கப்பட்டார்கள்.

1949 பிப்ரவரி 12ஆம் நாள் முஸ்லிம் இளைஞர்கள் மன்றத்திற்கு முன்னால் இமாம் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அக்குளுக்குக் கீழே குண்டு பாய்ந்த்து. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இமாம் அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், “அபாய கட்டத்தில் இல்லை; காப்பாற்றிவிடலாம்என்றே அறிவித்தார்கள். ஆனால், அரசின் சதியால் மருத்துவமனைக்குள் இமாம் கொல்லப்பட்டார்கள்.

இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களின் ஜனாஸாவில் ஆண்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்று அரசாங்கம் தடை விதித்தது. எனவே, பெண்கள்தான் அன்னாரின் ஜனாஸாவைத் தூக்கிச் சென்றார்கள். ஆனால், கிப்தியர்களில் ஒருவரான உபைத் பாஷா அரசாங்கத்தைக் கண்டித்ததுடன், பன்னா அவர்களின் குடும்பத்தாருடன் ஜனாஸாவில் கலந்துகொண்டாராம்! இது அன்னாரின் சுருக்கமான வரலாறு.

அறிஞர் பன்னாவின் பத்துக் கட்டளைகள்

  1. பாங்கொலி கேட்டவுடன் நீ எங்கிருந்தாலும் தொழுகைக்குச் செல்!


  2. திருக்குர்ஆனை, ஒன்று ஓத வேண்டும்! அல்லது வாசித்துணர வேண்டும்! அல்லது குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்க வேண்டும்! அல்லது அல்லாஹ்வை நினைவுகூர வேண்டும்! பயனில்லாத வகையில் ஒரு நிமிடத்தைக்கூடச் செலவிடாதே!


  3. தெளிவான அரபியில் பேச முயல வேண்டும்! அது இஸ்லாமிய அடையாளங்களில் ஒன்றாகும்.


  4. எந்த விஷயமாக இருந்தாலும் தர்க்கம் செய்துகொண்டே இராதே! தர்க்கம் நன்மையைத் தருவதில்லை.


  5. அதிகமாக சிரிக்காதே! அல்லாஹ்வுடன் தொடர்புள்ள உள்ளம் அமைதியாகவும் கண்ணியமாகவும்தான் இருக்கும்.


  6. கேலி செய்யாதே! விழிப்புள்ள சமுதாயம், வீரியத்தை மட்டுமே அறிந்த்தாக இருக்கும்!


  7. தேவையைவிடக் கூடுதலாகக் குரலை உயர்த்தாதே! அது, பதற்றத்தையும் தொல்லையையும்தான் தரும்.


  8. அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசாதே! யாரையும் காயப்படுத்தாதே! நல்லதையே பேசு!


  9. நீ சந்திக்க வேண்டிய சகோதரர்களைப் பற்றி அறிந்துவைத்திருக்க வேண்டும்! அவருக்கு உன்னிடம் தேவையில்லாமல் இருக்கலாம்! ஆனால், ‘தஅவாவின் அடிப்படை என்ன தெரியுமா? அன்பும் அறிமுகமும்தான்.


  10. கடமைகள் காலத்தைவிட அதிகம். எனவே உனக்கு அலுவல் இருந்தாலும் பிறர் தமது நேரத்தால் பயனடைய உதவு! (என்ன அருமையான கட்டளைகள்!)


முக்கியமான இருபது அடிப்படைகள்

1. இஸ்லாம் என்பது, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அமைப்பாகும். இஸ்லாம் ஒரு நாடு; தேசம். அல்லது அரசாங்கம்; சமுதாயம். அதுவே நற்பண்பு; ஆற்றல். அல்லது கருணை; நீதி. அதுவே கலாசாரம்; சட்டம். அல்லது அறிவு; தீர்ப்பு. அதுவே பொருள்; செல்வம். அல்லது உழைப்பு; தன்னிறைவு. அதுவே போராட்டம்; அழைப்பு. அல்லது பாதுகாப்புப் படை; சிந்தனை. மேலும், அதுவே உண்மையான நம்பிக்கை; சரியான வழிபாடு. இவ்விரு பார்வைகளும் சரிக்குச் சமமாக ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும்.
2. திருக்குர்ஆனும் தூய நபிவழியும்தான் ஒவ்வொரு முஸ்லிமின் பற்றுக்கோடாகும். இஸ்லாமிய விதிகளை அனைவராலும் அறிய முடியும். சிரமமோ சுமையோ இல்லாமல், அரபு மொழி விதிகளுக்கேற்ப குர்ஆனை அறியலாம். நபிமொழி அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையைக் கொண்டு தூய நபிவழியை அறிந்துகொள்ள முடியும்.
3. மெய்யான இறைநம்பிக்கை, ஏற்கப்பட்ட வழிபாடு, மனப் போராட்டம் ஆகியவற்றுக்கு ஓர் ஒளி உண்டு; சுவையும் உண்டு. அல்லாஹ், தான் நாடும் அடியார்களின் உள்ளத்தில் அந்த ஒளியையும் சுவையையும் போடுவான். அதே நேரத்தில், அகத்தூண்டல், எண்ணங்கள், கனவுகளெல்லாம் மார்க்கச் சட்டத்தின் அடிப்படைகளுக்கும் மூலாதாரங்களுக்கும் முரண்பட்டால், அவை ஏற்கப்படா. 

4. சோதிடம், ஆரூடம், பெயர் ராசி, மணல் ராசி, நாள் நட்சத்திரம், குறி பார்த்தல், கயிறு கட்டுதல், மந்திரித்தல் போன்றவை எல்லாம் நிராகரிக்கப்படும்; குர்ஆன் வசனங்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட துஆக்களைக் கொண்டு ஓதிப்பார்த்தல் தவிர மற்றவற்றுக்கெதிராகப் பிரசாரம் செய்து முஸ்லிம்களைக் காக்க வேண்டும். 

5. குர்ஆனிலோ ஹதீஸிலோ நேரடியாக்க் குறிப்பு இல்லாத விஷயங்களிளோ, பல கருத்துகளுக்கு இடமளிக்கும் ஒன்றிலோ, பொது நன்மைகள் தொடர்பானதிலோ ஆட்சித் தலைவர், அல்லது அவரது பிரிதிநிதியின் கருத்தை ஏற்றுச் செயல்பட வேண்டும். ஆயினும் ஷரீஅத்தின் அடிப்படை பொது  விதிகளுக்கு அது முரண்பட்டதாக இருக்கலாகாது. இத்தகைய சட்டங்கள், காலம், நேரம், வழக்கு, பழக்கம் ஆகியவற்றுக்கேற்ப மாறுபடலாம். வழிபாடுகளைப் பொறுத்தவரை அடிபணிதலும் வணக்கமும்தான் நோக்கமே தவிர, சொற்களின் பொருள்கள் அல்ல; அவ்வாறே, பழக்கவழக்கங்களைப் பொறுத்தமட்டில் நோக்கமும் காரணங்களும்தான் முக்கியம்.

6. ஒருவர் தம்மைப் பற்றித் தாமே அளிக்கும் தன்னிலை விளக்கமே அவர் தொடர்பாக முடிவெடுப்பதில் கருத்தில் கொள்ளப்படும். குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் ஒத்ததாக இருக்கும் முன்னோர்களின் கருத்துகளை ஏற்போம்; இல்லையென்றால், இறைவேதத்திற்கும் இறைத்தூதரின் வழிக்குமே முன்னுரிமை அளிப்போம். அதே நேரத்தில், கருத்து வேறுபாடுள்ள விஷயங்களில் தனிமனிதர்களைத் தாக்கவோ காயப்படுத்தவோ மாட்டோம். அவர்களின் எண்ணம் என்ன என்பதை அல்லாஹ் அறிவான் என ஒதுங்கிவிடுவோம். 

7. சட்டப் பிரிவுகளில் சுயமாக ஆதாரம் தேடி மூலாதாரஙகளை அறியும் தகுதி யாருக்கு இல்லையோ அவர்கள், ஓர் இமாமின் வழியைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழி கிடையாது. அத்தோடு, தாம் பின்பற்றும் அந்த வழிக்கான ஆதாரங்களை அறிய இயன்ற வரை அவர் முயற்சி செய்ய வேண்டும். எவ்வழி மிகச் சரியானது என்பதற்கு எப்போது ஆதாரம் கிடைத்தாலும் அதை ஏற்றுச் செயல்படுவதில் தவறில்லை. கல்வியாளர்களாக இருப்பவர்கள், ஆய்வு செய்யும் தகுதியை வளர்த்துக்கொண்டு, குறையை அகற்ற முன்வர வேண்டும். 

8. சட்டப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, மார்க்கத்தில் பிரிவினையாக மாற இடளித்துவிடக் கூடாது; பகை, குரோதம் ஆகிய மோசமான முடிவுகளுக்கு அவை காரணங்களாக அமைய அனுமதித்துவிடக் கூடாது. ஆய்வு செய்யும் ஒவ்வொரு முஜ்தஹிதுக்கும் நற்கூலி உண்டு. இறையன்பு, உண்மைத் தேடல் ஆகிய நோக்கில் இருக்கும்போது, கருத்து வேறுபாடு தடையாக இருந்துவிடக் கூடாது. அது தர்க்கத்திற்கோ பிடிவாதத்திற்கோ கொண்டுசென்றுவிடக் கூடாது. 

9. அமலுக்கு அடிப்படையாக இல்லாத எந்தக் கருத்து வேறுபாட்டிலும் சிரத்தை காட்டுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட செயலாகும். நிஜத்தில்  நிகழாத, வெறும் ஊகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சட்டப் பிரிவுகள் இந்த வகையில் அடங்கும். அவ்வாறே, இதுவரை அறுதியிட்டுச் சொல்ல இயலாத திருவசனங்களின் பொருள்களிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியதில்லை. அவ்வாறே, நபித்தோழர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு காட்டும் விவாதம், அவர்களிடையே எழுந்த சர்ச்சைகளில் மூக்கை நுழைப்பது ஆகியவை கைவிடப்பட வேண்டும். நபித்தோழர்களைப் பொறுத்தவரை, ஒவ்வொருவருக்கும் நபியின் தோழமை, எண்ணத்திற்கான நற்கூலி உண்டு. 

10. உயர்ந்தோன் அல்லாஹ்வை அறிவது, அவனது ஒருமை, பரிசுத்த தன்மை ஆகியவையே இஸ்லாத்தின் நம்பிக்கைகளில் உன்னதமான கோட்பாடுகளாகும். இறைப் பண்புகள் (ஸிஃபாத்) தொடர்பாக வந்துள்ள குர்ஆன் வசனங்களையும் ஆதாரபூர்வமான நபிமொழிகளையும் அப்படியே ஏற்க வேண்டும். குறுக்கு விளக்கம் அளிப்பதோ முற்றிலும் ஒதுக்கிவிடுவதோ கூடாது. இது தொடர்பாக வந்துள்ள அறிஞர்களிடையிலான கருத்து வேறுபாடுகளில் நாம் தலையிட வேண்டாம்! 

11. இறைமார்க்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன அனுஷ்டானங்கள் அடிப்படையற்றவை ஆகும். மக்கள் தம் விருப்பத்திற்கேற்ப கூட்டியோ குறைத்தோ இவற்றை உருவாக்கி, நன்மைகளென நம்பிவிட்டனர். இந்தத் தவறான வழிமுறைகளை எதிர்த்துப் போராடுவதும் அவற்றை ஒழிப்பதும் கடமையாகும். அதே நேரத்தில், அவற்றைவிட மோசமான ஒன்றுக்குத் தள்ளிவிடாத வழிகளில்தான் இந்தப் போராட்டம் அமைய வேண்டும். 

12. பொதுவாகச் சொல்லப்பட்டுள்ள வழிபாடுகளில் புது இணைப்புகள், குறைப்புகள், கடைப்பிடித்தல் ஆகியவற்றில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தத்தமது கருத்தைச் சொல்ல உரிமையுண்டு. எந்த வகையிலாவது ஆதாரத்தைக் கொண்டு உண்மை வெளிப்பட்டால், நல்லதுதான். 

13. நல்லோர்மீது அன்பு கொள்வதும் அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் அவர்கள் புரிந்த நல்லறங்களைச் சொல்லிப் பாராட்டுவதும் அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தரும் செயல்கள்தான். இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சத்தோடு நடந்தவர்களே இறைநேசர்கள். இதன்படி, அவர்களுக்கு மார்க்கரீதியாக மரியாதை உண்டு. அதே நேரத்தில் (அல்லாஹ்வின் நாட்டமின்றி) அவர்கள் தம் ஜீவியத்திலோ இறந்தபிறகோ தாமே நன்மையோ தீமையோ செய்துகொள்ள முடியாது எனும்போது, பிறருக்கு எவ்வாறு அருள் பாலிப்பார்கள்? 

14. அடக்கத் தலங்களை (கப்றுகள்) ஸியாரத் செய்வதுஅதற்கான அறியப்பட்ட முறையில்- சுன்னத்தாகும். அதே நேரத்தில், அடக்கப்பட்டவர்களிடம் உதவி தேடுவது, அதற்காக அவர்களை அழைப்பது, உடனுக்குடனோ தாமதமாகவோ தேவைகளை நிறைவேற்றுமாறு கோருவது, அவர்களுக்காக நேர்த்திக்கடன் செய்வது, கட்டடம் எழுப்புவது, திரைபோட்டு மறைப்பது, விளக்குகளால் அலங்கரிப்பது, தொட்டு முத்தமிடுவது, அல்லாஹ் அல்லாதவர் பெயரில் சத்தியம் செய்வது போன்ற பித்அத்கள் பெரும் பாவங்களாகும். இவற்றுக்கெதிராகப் பிரசாரம் செய்வது கடமையாகும். இவற்றை அனுமதிப்பதற்காகச் சாக்குப்போக்குகளோ மாற்று விளக்கங்களோ சொல்லமாட்டோம். 

15. யாரையும்வசீலாவாக்கி அல்லாஹ்விடம் துஆ செய்வது, துஆவின் நடைமுறையில் ஏற்பட்ட சட்டப்பிரிவு தொடர்பான கருத்துவேறுபாடாக இருக்குமே தவிர, கொள்கைப் பிரிவில் இது சேராது. 

16. மக்களின் தவறான சொல்வழக்கை வைத்து ஷரீஆவின் சொற்களுக்கான உண்மைப் பொருள்களை மாற்றுவது கூடாது. மாறாக, ஷரீஆவின் சொற்கள் குறிக்கும் பொருளின் எல்லையை உறுதிப்படுத்துவதும் அதையறிந்து செயல்படுத்துவதும் அவசியமாகும். மார்க்கத்திலாகட்டும்! உலகவியலில் ஆகட்டும்! சொல் மோசடியில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும். கவனிப்பு, பெயர்களுக்கு அல்ல; பொருட்களுக்குத்தான். 

17. கொள்கைதான் செயலின் அடிப்படை; உள்ளத்தின் நடவடிக்கையே உறுப்புகளின் செயலைவிட முக்கியம். இரண்டிலும் நிறைவை அடைவதே ஷரீஆவின் நோக்கம். இரண்டின் தரம் வேறுபடலாம். 

18. இஸ்லாம் அறிவுக்குச் சுதந்திரமளிக்கிறது; பிரபஞ்சத்தை ஆய்வு செய்யுமாறு தூண்டுகிறது; அறிவு மற்றும் அறிஞர்களின் தகுதியை உயத்தியிருக்கிறது; எல்லாவற்றிலும் நல்லதையும் பயனுள்ளதையும் வரவேற்கிறது. ஞானம் எங்கு கிடைத்தாலும் அதை இறைநம்பிக்கையாளர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

19. ஆய்வுக்குரிய விஷயங்களில் ஒருவரின் பார்வை மற்றவரின் பார்வைக்கு வேறுபடலாம். ஆனால், உறுதி செய்யப்பட்ட விஷயங்களில் கருத்து வேறுபாட்டிற்கு இடமில்லை. சரியான அறிவியல் உண்மை எதுவும் உறுதி செய்யப்பட்ட ஷரீஅத் விதியோடு மோதுவதற்கு வாய்ப்பில்லை. அறிவியல் கருத்து, மார்க்கவியல் கருத்து ஆகிய இரண்டில் எது ஊகக்கருத்தாக உள்ளதோ அது, உறுதி செய்யப்பட்ட மற்றொன்றோடு இணங்கிப்போகும் வகையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். இரண்டுமே ஊகங்களாக இருப்பின், மார்க்கவியல் ஊகத்தையே பின்பற்ற வேண்டும். 

20. கலிமா சொல்லி, அதற்கேற்ப செயல்பட்டு, கட்டாயக் கடமைகளை நிறைவேற்றிவரும் எந்த முஸ்லிமையும்அவர் சொன்ன ஒரு கருத்துக்காகவோ அவர் செய்த ஒரு பாவத்திற்காகவோ- இறைமறுப்பாளர் (காஃபிர்) என்று நாம் சொல்லமாட்டோம். அவர் இறைமறுப்பு சொல்லைச் சொன்னாலோ, மார்க்கத்தில் கட்டாயமாக அறியப்பட்ட ஒன்றை மறுத்தாலோ, குர்ஆனின் வெளிப்படையை ஏற்க மறுத்தாலோ, அல்லது எந்த வகையிலும் அரபி மொழி வழக்கத்திற்குப் பொருந்தாத விளக்கமளித்தாலோ, இறைமறுப்பைத் தவிர வேறொன்றுக்கு இடமளிக்காத வகையில் ஒன்றைச் செய்தாலோ தவிர காஃபிர்எனத் தீர்மானிக்கமாட்டோம்.

இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்கள் மார்க்கத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும் அரும்பாடுபட்டு, தம் இன்னுயிரை அதற்காகவே அர்ப்பணித்து வீரமரணமடைந்த பேரறிஞர் ஆவார். சின்னச் சின்ன விஷயங்களுக்காகப் பிளவுபட்டு, உம்மத்தின் ஆற்றல் சிதறடிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, ஐக்கியப்படுத்த உழைத்த உத்தமர் ஆவார். அன்னாருடைய கருத்துகளும் வழிகாட்டல்களும் இன்றைய இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஆக்கபூர்வமான, அவசியமான போதனைகளாகும். அன்னாருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

No comments:

Post a Comment