Friday, February 04, 2022

இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய அறிஞர்பேராசிரியர்.#முஹம்மது_கான் பாகவி.(بارك الله في عمره)

இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய அறிஞர்
பேராசிரியர்.
#முஹம்மது_கான் பாகவி.(بارك الله في عمره)
*************************
தமிழகத்தில் இன்று மிகச் சிறந்த பல மார்க்க அறிஞர்கள் சத்தமில்லாமல் சமுதாய மேம்பாட்டிற்காக சேவை செய்து வருகிறார்கள்.
அவர்களை இன்றைய இளந்தலைமுறையினர் அறிந்து அவர்களின் அறிவாற்றலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் நோக்கோடு இங்கு ஒரு அறிஞரின் சேவைகளை நினைவுகூறுகிறேன்.
لكل فن رجال 
#ஒவ்வொரு துறையிலும் சில நிபுணர்கள் இருப்பார்கள்" என்கிறது அரபு பழமொழி.
#அல்லாஹ், தான் விரும்புபவர்களுக்கு நுண்ணறிவை வழங்குகிறான்" என்கிறது குர்ஆன்.
அத்தகைய நிபுணத்துவமும் நுண்ணறிவும் வாய்க்கப் பெற்ற மார்க்க ஆளுமை தான் #கான்பாகவி என அழைக்கப்படும் 'பேராசிரியர் #அப்ஃஸலுல்உலமா  #முஹம்மது_கான்_  #பாஸில்_பாகவி அவர்கள்.

கற்றல்,கற்பித்தல்,
பேச்சு,எழுத்து, உலகநடப்புகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் நவீன அரபி மொழியில் புலமை என பல துறைகளில் இளமையிலேயே திறன்  படைத்தவர்.
பெரும் மார்க்க ஜாம்பவான்கள் ஆசான்களாக பணியாற்றிய,ஆற்றுகின்ற தாய் மதரஸாவான பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்தில் தனது இருபத்து நான்காம் வயதிலேயே பேராசிரியராக இணைந்தார்.
பேராசிரியராக தனது பணியைச் சிறப்பாக செய்ததுடன் எழுத்துத் துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

எனக்கு கான் பாகவி அவர்களை முதலில் அறிமுகப் படுத்தியது #தினமணி நாளிதழ் என்றால் நீங்கள் வியப்படைவீர்கள்.
அக்காலத்தில்  தமிழ் நாளிதழ்களில்
 #பாமர மக்கள் வாசிப்பது #தினத்தந்தி, #படித்தவர்கள் #வாசிப்பது #தினமணி என்பார்கள்.
பல லட்சம் வாசகர்களைக் கொண்ட தினமணியின் ஆசிரியராக ஏ.என்.எஸ்.என அழைக்கப்பட்ட ஏ.என்.சிவராமன் அவர்கள் இருந்தார்.
அவரின் தலையங்கமும் உலக நடப்புகளைப் பற்றிய அவரின் கட்டுரைகளும் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருக்கும். தினமணியின் சிறுவயதிலிருந்தே தீவிர ரசிகன் நான்.
அதில் வரும் வாசகர் கடிதமும் மக்கள் விரும்பி வாசிக்கும் வகையில் சிறப்பான கடிதங்களே வெளியாகும்.
அதில் அரபுக்கல்லூரி பேராசிரியர் என்ற அடையாளத்துடன் கான் பாகவி அவர்கள் ஆசிரியர் ஏ.என்.எஸ் அவர்களின் கட்டுரைகளை விமர்சித்து எழுதும் கடிதத்திற்கு ஆசிரியர் முன்னுரிமை கொடுப்பார் 
சிலநேரங்களில் 'பாகவி'யாரின் கடிதத்தைத் தனியாக கட்டம் கட்டி வெளியிடுவார்.

ஆலிம் களுக்கு பிழையின்றி நல்ல தமிழில் பேசவோ எழுதவோ வராது எனச் சொல்லப் பட்ட கால கட்டத்தில் எளிய நடையில் அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில்
நல்ல விஷய ஞானத்துடன் எழுதும் ஆற்றல் படைத்தவராக இருந்தார்.

எழுத்துத் துறையைப் பொறுத்தவரையில் 1977 ஆம் ஆண்டிலேயே இவரது முதலாவது எழுத்து
அச்சிலேறிவிட்டது. தினமணி தினகரன், மாலை முரசு போன்ற பிரபல நாளேடுகளில் இவரது
கட்டுரைகள், கடிதங்கள் வெளிவந்துள்ளன, மணிச்சுடர், மறுமலர்ச்சி, சமரசம், முஸ்லிம் முரசு, ரஹ்மத்
ஜமாஅத்துல் உலமா, சிராஜ். இஸ்மி, குர்ஆனின் குரல், சமநிலைச் சமுதாயம் உள்ளிட்ட சமுதாய
ஏடுகளில் இவருடைய தொடர் கட்டுரைகளும் தனிக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. மலேசியா
நம்பிக்கை மாத இதழிலும் இவர் எழுதியுள்ளார்.

பேராசிரியராகப் பணியாற்றிய கால கட்டத்தில்
மாணவர்களுக்குப் பாடநூல்களைப் போதிப்பதோடல்லாமல் பேச்சு எழுத்து இலக்கியம் ஆகிய
துறைகளிலும் மாணவர்களுக்கு ஆர்வமூட்டிவந்தார் உலக நடப்புகள், நவீன அரபி, பத்திரிகைத் துறை
ஆகியவற்றிலும் மாணவர்களின் கவனத்தைத் திருப்பிவந்தார். மாணவர்களிடையே சுயமரியாதை
தன்னம்பிக்கைப் போக்கை ஊக்குவித்தார். இதனாலேயே இன்றும் அவரிடம் கற்ற மாணவர்கள் பலர்
அவர் மீது அதிகப் பாசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

சுயமரியாதை யும் பிறரிடம் கையேந்தக் கூடாது என்ற கொள்கையும் கொண்டவர்.
 முகஸ்துதி செய்வது அவருக்குப் பிடிக்காது.
அதே நேரத்தில் எவ்வித பந்தா இல்லாமல் அனைவரிடமும் இனிமையாக பழகுபவர்

சிதம்பரத்தில் செல்வந்தர் ஒருவர் நடத்தும் மதரஸா ஆண்டுவிழா விற்கு அதன் செயலாளராக இருந்த நான் சிறப்பு விருந்தினராக கான் பாகவி அவர்களை அழைத்திருந்தேன்.
விழா மேடையில்  உரையாற்றியவர்கள், பெரும்பாலானோர்
அந்த செல்வந்தரை வானளாவ புகழ்ந்தார்கள்.
அச் செல்வந்தர் அருகே அமர்ந்திருந்த பாகவி அவர்கள் சற்று தள்ளி அமைந்திருந்த என்னை  முக சுளிப்பு டன் பார்த்தார்.
தனது உரையில் சபை நாகரீகம் கருதி முகஸ்துதி கூடாது  என்பதை  நாசூக்காக சுட்டிக் காட்டினர்.
விழா முடிந்ததும் என்னிடம் "மவ்லானா! இது போன்ற தனிநபர் புகழ் பாடும் விழாக்களுக்கு என்னை அழைக்காதீங்க" என்றார்.
யார் தவறு செய்தாலும் முகத்திற்கு நேராக அதை சுட்டிக் காட்டுபவர்.
அதனால் சில இழப்புகளையும் சந்தித்தவர்.
அதே நேரத்தில் பாரட்டுக்குரியவர்களை மனந் திறந்து பாராட்டி ஊக்குவிப்பவர்.

மொழிபெயர்ப்புத் துறையில் #கான்_பாகவி

  சென்னை ரஹ்மத் அறக்கட்டளை ஏழு மார்க்க அறிஞர்களைக் கொண்ட குழுவினர் மூலம் குர்ஆன், ஹதீஸ் கருவூலங்களை தமிழாக்கப் பணியை மேற்கொண்டது.
 
 வேலூரில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டே மேற்கண்ட பணியில் கான் பாகவி மேலாய்வாளராக இருந்தார்.

ஸஹீஹூல் புகாரியின் மூன்று பாகங்கள் வெளியான  நிலையில் ரஹ்மத் அறக்கட்டளையினரின் நீண்ட நாள் தொடர் வேண்டுகோளை ஏற்று தாம் நீண்ட நெடுங்காலம் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் பணியை  பிரிய மனமின்றி  பெரும் தயக்கத்துடன் ராஜினாமா செய்து விட்டு திருத்தூதரின் பொன்மொழிகளைப் பரப்ப வேண்டும் எனும் தூய எண்ணத்துடன் மொழிபெயர்பாளர் கள் குழுவின தலைவராக இணைந்தார்.

மவ்லானா கான் பாகவி அவர்கள் முழு நேர மேலாய்வளராகப் பொறுப்பேற்ற பின் ஹதீஸ் களை அரபிலிருந்து தமிழில் மொழிமாற்றம் மட்டும் செய்யாமல் நபிமொழி க்கான விளக்கத்தையும் சுருக்கமாக விளக்கும் அடிக்குறிப்பு என்ற நடைமுறையை உருவாக்கினார். மூல மொழியின் அடிப்படை கருத்துமாறாமல் சிக்கலான வாக்கிய அமைப்பின்றி  எளிய தமிழ் நடையில் தமிழாக்கம் செய்வது தான் பாகவி அவர்களின் குழுவினரின் தனிச்சிறப்பு.

 இவரது
மேலாய்வில் இதுவரை ஸஹீஹுல் புகாரி தமிழாக்கம் ஏழு பாகங்களும் ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம்
நான்கு பாகங்களும் தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் பத்து பாகங்களும் ஜாமிஉத் திர்மித் தமிழாக்கம்
மூன்று பாகங்களும் வெளிவந்துள்ளன.

 தற்போது ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷனில் முஸ்னது
அஹ்மத் தமிழாக்க மேலாய்வாளராக பணியாற்றிவருகிறார்
இவருடைய குழுவில் பாகவிஅவர்களுடன்  இருபதாண்டுகளுக்கு மேலாக இணைந்து பணியாற்றிவரும் மெளலவி,ஹாபிஃழ்
#அப்ஃஸலுல்உலமா
சா.யூசுப் சித்தீக் மிஸ்பாஹி.M.A.M.phill அவர்களும்
மெளலவி,ஹாபிழ்
#அப்ஃஸலுல்உலமா
சா.அப்துல்லாஹ் பாகவிM.A.,M.P.hill அவர்களும்
இணைந்து பணியாற்றி வருகிறார்கள்

இதுவரை பாகவி அவர்கள்  ஆற்றிவந்த பணிகளில் மிகப் பெரிய பணி முஸ்னத் அஹ்மத்  ஹதீஸ் நூல் தமிழாக்கப் பணியாகும்.
ஏனென்றால் முஸ்னத்அஹ்மத் மூலமொழியான அரபி மொழியிலேயே 12 பாகங்களைக் கொண்டது
14 அத்தியாயங்கள்,
1306 பாடங்கள்,
26363 நபிமொழிகள் இடம் பெற்றுள்ள பெருநூல்.
இதுவரை மூன்று பாகங்கள் சிறந்த அடிக்குறிப்புகளுடன் வெளியீடப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு நூல்கள் மட்டுமின்றி 12க்கும் மேற்பட்ட பல தலைப்புகளில் ஆய்வு நூல்களை பாகவி அவர்கள் எழுதியுள்ளார்.

1 ஹினால் - மாத இதழ் (1986 - 1988)
2 மனாருல் ஹுதா - மாத இதழ் (1993 - 1999)
 ஆசிரியராக பத்திரிக்கை துறையிலும் பயணித்திருக்கிறார்.

பல்வேறு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்களில் இவர் உரை
நிகழ்த்தியுள்ளார். சென்னையில் பல பள்ளிவாசல்களில் ஜும்ஆ உரை ஆற்றிவருகிறார். 1976 முதல்
நூற்றுக்கணக்கான கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்
இவரது மார்க்க உரைகள், கேள்வி - பதில்கள், பேட்டிகள் சன் டி.வி. ஜெயா டிவி விஜய் டி.வி,
ராஜ் டிவி தமிழன் டிவி, வின் டிவி ஆகிய தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி யுள்ளன.
லண்டன் தீபம் தொலைக்காட்சியில் கடந்த 2002 பிப்ரவரி முதல் இவரது உரைகள் ஒளிபரப்பாயின்
700-க்கும் மேற்பட்ட தொடர்கள் வந்துவிட்டன, தூர்தர்ஷன் பொதிகையிலும் இவரது உரை
இடம் பெற்றிருக்கிறது.

வெளிநாடு பயணங்கள்
1, 1991 அபுதாபி துபாய் நாடுகளிலிருந்து வந்த அழைப்பின் பேரில் மார்க்கச் சொற்பொழிவு
2 1996 சிங்கப்பூர் ஷரீஅத் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்,
3 1994 சிங்கப்பூர் நபிமொழித் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பங்கேற்பு
4 2000 சிங்கப்பூர் திருவிதாங்கோடு முஸ்லிம் யூனியன் (TMU) கூட்டங்களில் பங்கேற்பு
5. சவூதி 6 குவைத் 7. மலேஷியா 8. இலங்கை 9. பாங்காக்

மவ்லானா கான் பாகவி அவர்களின் சேவையைப் பாராட்டி
#1993இல் அய்யம்பேட்டையில் நடந்த திருக்குர் ஆன் மாநாட்டில் ரூ. 2500 பொற்கிழியும்,
எழுத்துலகின் இளைய தலைமுறை கேடயமும் இவருக்கு வழங்கப்பட்டன.

இப்படி மௌலானா கான் பாகவி அவர்களின் சேவைப் பயணம்  எவ்வித இவ்வுலக எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி த்தொடர்கிறது. வாழ்க்கையில் சாதிக்க
வேண்டும் என்ற வேகம் பாகவியிடம் தெரிகிறது. தாம் மட்டுமன்றி தம் சமுதாயமும் ஆலிம்களும்
முன்னேற வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் பளிச்சிடுகிறது.
கல்வி பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் சமுதாயம் விழிப்புணர்வு பெற வேண்டும்
என்ற நோக்கில் 2000ஆம் ஆண்டில் இஸ்லாமியர் விழிப்புணர்வுக் கழகம் என்ற அமைப்பை மற்ற
ஆலிம்களுடன் சேர்ந்து ஆரம்பித்து சமூக சேவை ஆற்றிவந்தார்.
தற்போதும் பல கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்து வருகிறார்.
அவரது பயணம் தொடர, இலட்சியங்கள் வெற்றிபெற அவரால் சமுதாயம் தொடர்ந்து பயன்பெற
வாழ்த்தி துஆச் செய்வோம்.
-----கணியூர் முஹம்மது இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயி

No comments:

Post a Comment