Sunday, June 24, 2012

பென்டகன் என்ன விரும்புகிறது?


- கான் பாகவி

மெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகமான பென்டகன், வர்ஜினியா மாகாணத்தின் ஆர்லிங்டனில் உள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு, அல்லது உலக நாடுகளின் பாதுகாப்பு என்ற பெயரில் யாரை அழிக்கலாம் எனத் திட்டமிடுவதே பென்டகன் உயர் அதிகாரிகளின் வேலை.

இப்போது இஸ்லாத்திற்கும் ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களுக்கும் எதிராகப் பேரழிவுப் போர் ஒன்றுக்கு பென்டகன் திட்டம் தீட்டிவருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. டோக்கியோ, ஹிரோஷிமா, நாகஸாகி, ட்ரீஸ்டன் ஆகிய நகரங்களை அழிக்க கையாண்ட அதே நடைமுறையைக் கையாண்டு மக்கா, மதீனா உள்ளிட்ட இஸ்லாமியப் புனித நகரங்களைத் தகர்க்க பென்டகன் இரகசிய ஆய்வை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

சி.ஐ.ஏ. தூண்டுதலால் அமெரிக்கா போலீஸார் உள்ளத்தில் இஸ்லாத்தின் மீது வெறுப்பூட்டப்பட்டுவருகிறது. இதையடுத்து அமெரிக்க முஸ்லிம்களுக்கெதிரான வேலைகள், வேவு பார்த்தல், பள்ளிவாசல்களிலும் கல்வி மையங்களிலும் முஸ்லிம்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தல் போன்ற அவலங்கள் நடந்துள்ளதாகக் கடந்த மே-11ஆம் நாள் இதழில் கார்டியன் நாளிதழ் ஆய்வறிக்கை வெளியிட்டது.

மூன்றாவது போர்?

இதைவிட ஒரு பெரிய அக்கிரமம் அம்பலமாகியுள்ளது. இதை நியூயார்க் டைம்ஸ் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.

நியூயார்க் காவல்துறை ‘மூன்றாவது போர்’ என்ற பெயரில் ஒரு குறும்படம் தயாரித்துள்ளது. அதை, பயிற்சி முகாம் ஒன்றில் கலந்துகொண்ட 1500 போலீஸ்காரர்கள் பார்த்திருக்கிறார்கள். முஸ்லிம்கள், அவர்கள் எந்தக் குழுவினராக இருந்தாலும் எல்லாருமே அமெரிக்காவைத் தகர்க்கவே முயல்கிறார்கள் என்கிறது படம். ஒரு கறுப்புக் கொடியில் ‘கலிமா’ எழுதப்பட்டுள்ளது. அது வெள்ளை மாளிகைமீது பறக்கிறது. இப்படி ஒரு காட்சியும் உண்டு.

இது கடுமையான விமர்சனத்திற்கு ஆளானதையடுத்து தன் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை, அமெரிக்காவுக்கான புலனாய்வுக் கழகம் கடந்த ஆண்டு நிறுத்திவிட்டது. இருப்பினும், வெர்ஜீனியாவில் அடுத்த சுற்றுப் பயிற்சி நடந்ததாக அண்மையில் அல்ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

பயிற்சிக் காவவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஒரு தொகுப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:  அமெரிக்க சமூகத்தின் பாதுகாப்பிற்கு உண்மையான அச்சுறுத்தல் தீவிரவாதிகளிடமிருந்து உருவாவது அல்ல; இஸ்லாத்திலிருந்தே உருவாகிறது.

கொழுப்பு

இச்செய்தியை வெளியிட்டுள்ள ‘ஒயர்டு’ (Wired) எனும் சஞ்சிகை கீழ்க்கண்ட தகவல்களையும் வெளியிட்டுள்ளது:
  • நடுநிலையான இஸ்லாம் என்பதெல்லாம் கிடையாது; எனவே, காட்டுத்தனமான இந்த மதக்கொள்கையை இனியும் பொறுத்துக்கொள்ள அமெரிக்காவால் இயலாது. ஒன்று, இஸ்லாம் மாற வேண்டும்; அல்லது அதை நாமே அழிப்போம்.

  • டோக்கியோ, ஹிரோஷிமா போன்ற நகரங்களின் அனுபவத்தை இஸ்லாமியப் புனித நகரங்களிலும் செயல்படுத்துவோம்; மக்காவையும் மதீனாவையும்கூட தகர்ப்போம்.

  • இதற்காக மொத்த சஊதியாவையே பட்டினியால் வாட்டுவோம்.

  • அவசியம் ஏற்பட்டால், ஜெனிவா ஒப்பந்தத்தைக்கூட தூக்கிப்போடுவோம்.

  • போலீஸ் பயிற்சி வகுப்பை முடித்தவர்களில் சிலர், பயங்கரவாத தடுப்பு ஏஜென்சியில் தங்களுக்கு அளிக்கப்ப்டட பயிற்சிக்கான பொருள்களின் தொகுப்பு ஒன்றை ‘வொயர்டு’ சஞ்சிகையிடம் கொடுத்துள்ளனர். தொகுப்பிலுள்ள சில வரிகள்:

  • அமெரிக்க முஸ்லிம்களால் ஏற்படும் முதலாவது பிரச்சினையே, பயங்கரவாதத்துக்கு அவர்கள் காட்டும் மென்மையான ஆதரவுதான்.

  • நபி முஹம்மத் மந்திரித்துவிடப்பட்ட (சூனியம் செய்யப்பட்ட) குழுவுக்கே தலைவராக இருந்தார்.

  • தர்மம் கொடுப்பதென்பது இஸ்லாத்தில் கொலைக்கான முதலீட்டு முறைதான்.

மழுப்பலும் கண்டனமும்

எல்லாம் நடந்து முடிந்தபிறகு அமெரிக்க அதிகாரிகள் சிலர் இந்தப் பயிற்சி வகுப்பைக் குறைகூறியுள்ளனர். ஜெனரல் மார்டின் டேம்பஸி, இது மதச்சுதந்திரத்தில் அமெரிக்காவுக்குள்ள ஈடுபாட்டுக்கு முரணானது. தீவிரவாத முஸ்லிம்களுடனேயே அமெரிக்கா போரிடுகிறது; இஸ்லாத்துடன் அல்ல என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஏப்ரலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அந்தப் பயிற்சி முகாம் தனியார் விருப்பத்தின்பாற்பட்டது. பயிற்சி முகாமை நடத்திய மாசியோடோலி பேராசிரியர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். (அதாவது ஆசிரியர் பணி இல்லையே தவிர, ஆய்வைத் தொடர்வார் என்கிறது பென்டகன்.)

எகிப்து அஸ்ஹர் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் அஹ்மத் தய்யிப், அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டைக் கண்டித்துள்ளார். அத்துடன் அமெரிக்கர்களுக்கு இஸ்லாத்தின் மனிதநேயப் பண்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். முஸ்லிம்களும் இஸ்லாத்தின் இப்பண்புகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான அமைப்பு ஒன்று, இந்தப் பயிற்சி முகாமை நடத்திய அதிகாரியை நீக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

உண்மையின் எதிரிகள்

உண்மையில் மனித குலத்தின் சுதந்திரத்திற்கும் விடுதலைக்கும் அமெரிக்கர்கள்தான் எதிரிகள். வியட்நாட், இராக், ஆப்கானிஸ்தான் உதாரணங்கள் எதைக் காட்டுகின்றன? பொதுவாக அமெரிக்க வெள்ளையர்கள் இரத்தத்திலேயே “நாங்கள்தான் பெரியவர்கள்” என்ற இனவெறி கலந்திருக்கிறது.

உலகத்தை மீட்கத் தோன்றிய ஒரே மதம் கிறித்தவம் மட்டுமே! உலக மக்களை ஆளப்பிறந்தவர்கள் கிறித்தவர்கள் -அதிலும் வெள்ளைக்காரர்கள் மட்டுமே! கர்த்தரின் அவதாரங்களாக நாங்களே இருக்கிறோம்- என்ற மமதை உணர்வும் பொய்யான சிந்தனையும் அமெரிக்கர்களிடம் ஊறிப்போயுள்ளன.

எனவேதான், உயிரோட்டமுள்ள இஸ்லாத்தை ‘பயங்கரவாதம்’ என்று சொல்லி ஒடுக்கப்பார்க்கிறார்கள்; முஸ்லிம்களின் முன்னேற்றத்தைத் தடுக்கப்பார்க்கிறார்கள்; உலகப் பொதுமறையாம் குர்ஆனை முடக்கப்பார்க்கிறார்கள்.

இது ஒருகாலும் நடக்காது. இந்த வேதத்தைக் காக்கும் பொறுப்பை, அமெரிக்கர்களைப் படைத்தவன் ஏற்றிருக்கின்றான். இஸ்லாம் என்ற ஒளியை நிறைவுசெய்யாமல் விடப்போவதில்லை என்று வெள்ளைக்காரர்களைப் படைத்தவன் அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறான்.

மாசியோடோலிக்கு அப்துல் முத்தலிபின் வரிகள்:
இந்த கஅபாவுக்கு இருக்கின்றான்
ஓர் அதிபதி
அதை அவன் காப்பாற்றிக்கொள்வான்.
(‘அல்முஜ்தமா’ வார இதழ்)