Sunday, January 31, 2021

பட்டிமன்றம் பத்ம ஸ்ரீவிருது பெற்றது

~~~~~~~~~~~~~~~~
பட்டிமன்றம் பத்ம  ஸ்ரீ
விருது பெற்றது
~~~~~~~~~~~~~~~~
பட்டிமன்றங்கள் மக்களை மேம்படுத்தும் கலையாக மாறியுள்ளது. இது பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் தாம் பத்ம ஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்துத் தெரிவித்த கருத்தாகும்.

மார்க்க அறிஞர்களான இளம் ஆலிம்கள் இத்துறையில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ளதைப் பலரும் அறிந்திருப்பார்கள்.1970களில் வேலூர் பாகியாத்தில் நாங்கள் கல்வி பயின்ற காலத்திலேயே பட்டிமன்றம் ஆலிம்கள் வட்டாரத்தில் பேச்சுப் பொருளாகிவிட்டது.

1972இல் பட்ட வகுப்பில் நான் பயின்ற அன்றே லஜ்னத்துல் இர்ஷாத் மாணவப் பயிற்சி மன்றத்தில் பட்டிமன்றம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்கத் தொடங்கிவிட்டனர்.

ஆரம்பத்திலேயே விமர்சனம் ஒன்று தலைதூக்கியது. மார்க்கம் கற்கும் மாணவர்கள் மார்க்கம் அனுமதித்த ஒன்றை தடைசெய்யப்பட்தாகவும், தடைசெய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதாகவும் மாற்றவா இந்தப் பட்டிமன்றம்? என்பதே அந்த க் கடும் விமர்சனம்.

உண்மை அதுவலல. பட்டிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் தலைப்பு, இரண்டும் அனுமதிக்கப்பட்டதே. இரண்டில் எது மிகவும் சிறந்தது என்ற ரகத்திலேயே இருக்கும். எடுத்துக்காட்டிற்குச் சில :

1.குடும்ப அமைதிக்கு ஆணும் காரணம்தான்; பெண்ணும் காரணம்தான். அதிகச் சீரழிவு யாரால்?

2. முன்னேற்றத்திற்கு அதிகக் காரணம் கல்வியா? செல்வமா?

3.சமுதாயப் பின்னடைவுக்கு முதல் காரணம் கல்வியின்மையா? ஒழுக்கமின்மையா?

இரண்டு பக்கமும் உள்ள நன்மை மற்றும் தீமையை ஈரணியினர் தத்தம் ஆதாரங்களை முன்வைத்து வாதிடுகையில் , பார்வையாளர்களுக்குத்  தெளிவு பிறக்கும். இரண்டில் ஒவ்வொன்றும் எவ்வளவு முக்கியம் என்பது புலப்படும்.

சாதாரண உரைக்கும் பட்டிமன்ற உரைக்கும் உள்ள வித்தியாசமே சுவைகூட்டி புரியவைப்பது தான்.

பாகியாத்தில் தொடங்கிய இப்பயிற்சி, எண்பதுகளில் பொதுமக்கள் வரை சென்றது. மன்றத்தில் பயிற்சி பெற்றவர்களில் ஈரணிகளை உருவாக்கி, நான் நடுவராக இருந்து பல ஊர்களில் பட்டிமன்றம் மூலமாக மார்க்கப் பரப்புரை செய்துள்ளோம். சாதாரண பயான்களைவிட பட்டிமன்றத்திற்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது.

சில வேளைகளில் நாள்கணக்கில் எங்கள் பயணம் நீண்டதுண்டு. முதல் கூட்டத்தில் சொன்ன அதே நகைச்சுவையை அல்லது ஒரு நிகழ்வைப் பேச்சாளர் குறிப்பிடுகையில், புதிதாகக் கேட்கும் பாவனையில் நடுவராக இருந்த நான் கேட்பேன். இது பேச்சாளருக்கு. உற்சாகத்தை ஊட்டும்.

நிகழ்ச்சியெல்லாம் முடிந்தபிறகு, பத்து தடவை கேட்டிருந்தும் அதெப்படி புதிதாகக் கேட்பதுபோல் கேட்கிறீர்கள் என்று நண்பர்கள் சிரிப்பார்கள்.

இன்றும் இளம் ஆலிம்களால் இத்தகைய பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

அன்புடன் உங்கள்
 கான் பாகவி

Wednesday, January 27, 2021

கூத்தூர் வாஹித் பாகவி மறைவு

கூத்தூர் வாஹித் பாகவி மறைவு
~~~~~~~~~~~~~~
நாகப்பட்டினம் மாவட்டம் கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மெளலவி, அப்துல் வாஹித் பாகவி கடந்த 06.01.2021 புதன்கிழமை இறந்
துவிட்டார்.தகவல் தாமதமாகவே கிடைத்தது.

இவர் என் வகுப்புத் தோழர் மட்டுமன்றி ரூம் மேட் கூட.
பள்ளிப் படிப்பை முடித்தவர்.ஆங்கிலம் நன்கு கற்றவர்.1972ஆம் ஆண்டு ஸலஜ்னத்துல் இர்ஷாத் மாணவ மன்றச் செயலாளராக நன்கு செயல்பட்டவர். 

வேலூர் கல்லூரிகளில் நடக்கும் கவியரங்கம், கருத்தரங்கம்,பட்டிமன்றம் ஆகியவற்றுக்குப் சென்று வருவார்.

இந்த அனுபவத்தைக் கொண்டே எங்களாண்டில் மன்றத்தில் பட்டிமன்றம்  தொடங்கினோம் என்று நினைவு. அவ்வாறே கவியரங்கமும் நடத்தினோம்.

ஓதி முடித்தபின் சில இடங்களில் இமாமத் பணியாற்றியவர் , பின்னர் அரபு நாடு சென்றார். ஊர் திரும்பி நீண்ட நாள் ஓய்வில் இருந்தார்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நண்பர் மாரடைப்பால் கடந்த ஆறாம் தேதி இறந்துபோனார்.

அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள்.இருவருக்கும் திருமணமாகி குழந்தைகுட்டிகளுடன் நலமாக உள்ளனர்.

என் உற்ற நண்பரின் மறுமை வாழ்வு செழிக்க அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். 
اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا ارحم الراحمين.
அன்புடன் உங்கள்
கான் பாகவி

Friday, January 22, 2021

இனிய நண்பர் இழப்பு ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎இளம் ‎வயதில்

இனிய நண்பர் இழப்பு இளம் வயதில்
~~~~~~~~~~~~
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை  அருகிலுள்ள ஆத்தூர் கிராமத்தில் பிறந்து,பள்ளிப் படிப்பை முடித்து பாகியாத்தில் கற்றவர்தான் மெளலானா சதகத்துல்லாஹ் ஹழ்ரத்.அவர் எனக்குப் பிந்திய வகுப்பில் துவரங்குறிச்சி சலாம் பாகவி, அஷ்ரப்  பாகவி ஆகியோருடன் கல்வி பயின்றவர். பின்னாளில் பாகியுத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.
அத்துடன் ஒருசில பாடங்களும் நடத்தினார்.மாணவர்களுக்கு தமிழ் மொழி, இலக்கியம், ஆங்கிலம் போன்றவற்றில் ஆர்வமூட்டியதுடன் மாணவர்கள் சிலருக்குக் கற்பிக்கவும் செய்தார்.

பிழையின்றி தமிழை எழுதும் தமிழ் எழுத்தாளர். எளிமையாகப் பேசினாலும் விஷயத்தோடு பேசும் பேச்சாளரும் கூட.

எனக்கும் அவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டதே தமிழ் எழுத்தால் தான். ஆம்! தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆனின் வசன மொழிபெயர்ப்பு கடையநல்லூர் மதிப்புக்குரிய யூசுப் அன்சாரி ஹழ்ரத் அவர்கள் எழுதியது.மொழிபெயர்ப்பு மட்டும் வெளியிடலாம் என்று திட்டத்தில் மேலாய்வைத் தொடங்கிய பாகியாத், பின்னர் விரிவுரையாகவே வொளியிட முடிவு செய்தது.கனம் கமாலுத்தீன் ஹழ்ரத் அவர்கள் விரிவுரை எழுத, தமிழைச் செப்பனிடும் பணியை சதகத்துல்லாஹ் ஹழ்ரத் அவர்கள் ஏற்றார்.

பின்னர் என்னையும் அப்பணியில் இணைத்தனர். 

இறுதிவரை தஃப்சீர் எழுத்துப் பணியில் ஈடுபட்டதுடன், முஃப்தி அவர்கள் கொடுக்கும் ஃபத்வாக்களை தமிழில் எழுதி அனுப்பும் பணியையும் மேற்கொண்டிருந்தார்.
தஃப்சீரின் ஆரம்பப் பாகங்கள் அச்சாகி, அதன் அச்சுப் பிழைகளைத் திருத்தும் பணிக்காக நானும் மெளலானா அவர்களும் சென்னையில் அறை போட்டு பல வாரங்கள் தங்கி ,திருத்தப் பணியை மேற்கொண்டுள்ளோம். அப்போதெல்லாம் மெளலானா அவர்களின் எளிமை, அலட்டிக்கொள்ளாத போக்கு, எதையும் பாசிடிவாகப் பார்க்கும் பண்பு ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன.

சுருங்கக் கூறின், அவருக்கு இருந்த ஆற்றல்கள் வேறு யாருக்கும் அமைந்திருந்தால், அவரைக் கையில் பிடிக்க முடியாது.அத்துணை ஆற்றல்களை த் தமக்குள் வைத்துக்கொண்டு, ஒன்றுமே தெரியாதவர் போன்று நடந்துகொண்ட  ஒரு துறவி என்றுகூட அவரைச் சொல்லலாம்.அதற்காக இந்த அளவுக்கா தம்மை மறைத்து வாழ்வது என்றுகூட அவர் நண்பர்கள் அவரிடம் உரிமையோடு கோபித்துக் கொண்டதும் உண்டு.

அவருக்கிருந்த ஆங்கில அறிவுக்கும் மார்க்க அறிவுக்கும் வேறு யாருமாக இருந்தால் ,எங்கோ போயிருப்பார்கள்.
உடல்நிலை ஒத்துழைக்காத இறுதி நாட்களில் மதரசாவிலிருந்து விடைபெற்று ஓய்வில் இருந்தார்.அப்போதும்கூட மாணவர்களின் அழைப்பை ஏற்று சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
ஆனால் ,துரத்தி வந்த நோய் இறுதியாக அன்னாரை நம்மிடமிருந்து பிரித்து விட்டதுதான் சோகம்.

கண்ணீர் மல்க அவருக்காக இறையைப் பிரார்த்திப்போம்.
اللهم اغسله بالماء والثلج ونقه من الذنوب كما ينق الثوب الأبيض من الدنس. اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا رب العالمين.

--அன்புடன் உங்கள் கான் பாகவி.