Sunday, January 31, 2021

பட்டிமன்றம் பத்ம ஸ்ரீவிருது பெற்றது

~~~~~~~~~~~~~~~~
பட்டிமன்றம் பத்ம  ஸ்ரீ
விருது பெற்றது
~~~~~~~~~~~~~~~~
பட்டிமன்றங்கள் மக்களை மேம்படுத்தும் கலையாக மாறியுள்ளது. இது பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் தாம் பத்ம ஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்துத் தெரிவித்த கருத்தாகும்.

மார்க்க அறிஞர்களான இளம் ஆலிம்கள் இத்துறையில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ளதைப் பலரும் அறிந்திருப்பார்கள்.1970களில் வேலூர் பாகியாத்தில் நாங்கள் கல்வி பயின்ற காலத்திலேயே பட்டிமன்றம் ஆலிம்கள் வட்டாரத்தில் பேச்சுப் பொருளாகிவிட்டது.

1972இல் பட்ட வகுப்பில் நான் பயின்ற அன்றே லஜ்னத்துல் இர்ஷாத் மாணவப் பயிற்சி மன்றத்தில் பட்டிமன்றம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்கத் தொடங்கிவிட்டனர்.

ஆரம்பத்திலேயே விமர்சனம் ஒன்று தலைதூக்கியது. மார்க்கம் கற்கும் மாணவர்கள் மார்க்கம் அனுமதித்த ஒன்றை தடைசெய்யப்பட்தாகவும், தடைசெய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதாகவும் மாற்றவா இந்தப் பட்டிமன்றம்? என்பதே அந்த க் கடும் விமர்சனம்.

உண்மை அதுவலல. பட்டிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் தலைப்பு, இரண்டும் அனுமதிக்கப்பட்டதே. இரண்டில் எது மிகவும் சிறந்தது என்ற ரகத்திலேயே இருக்கும். எடுத்துக்காட்டிற்குச் சில :

1.குடும்ப அமைதிக்கு ஆணும் காரணம்தான்; பெண்ணும் காரணம்தான். அதிகச் சீரழிவு யாரால்?

2. முன்னேற்றத்திற்கு அதிகக் காரணம் கல்வியா? செல்வமா?

3.சமுதாயப் பின்னடைவுக்கு முதல் காரணம் கல்வியின்மையா? ஒழுக்கமின்மையா?

இரண்டு பக்கமும் உள்ள நன்மை மற்றும் தீமையை ஈரணியினர் தத்தம் ஆதாரங்களை முன்வைத்து வாதிடுகையில் , பார்வையாளர்களுக்குத்  தெளிவு பிறக்கும். இரண்டில் ஒவ்வொன்றும் எவ்வளவு முக்கியம் என்பது புலப்படும்.

சாதாரண உரைக்கும் பட்டிமன்ற உரைக்கும் உள்ள வித்தியாசமே சுவைகூட்டி புரியவைப்பது தான்.

பாகியாத்தில் தொடங்கிய இப்பயிற்சி, எண்பதுகளில் பொதுமக்கள் வரை சென்றது. மன்றத்தில் பயிற்சி பெற்றவர்களில் ஈரணிகளை உருவாக்கி, நான் நடுவராக இருந்து பல ஊர்களில் பட்டிமன்றம் மூலமாக மார்க்கப் பரப்புரை செய்துள்ளோம். சாதாரண பயான்களைவிட பட்டிமன்றத்திற்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது.

சில வேளைகளில் நாள்கணக்கில் எங்கள் பயணம் நீண்டதுண்டு. முதல் கூட்டத்தில் சொன்ன அதே நகைச்சுவையை அல்லது ஒரு நிகழ்வைப் பேச்சாளர் குறிப்பிடுகையில், புதிதாகக் கேட்கும் பாவனையில் நடுவராக இருந்த நான் கேட்பேன். இது பேச்சாளருக்கு. உற்சாகத்தை ஊட்டும்.

நிகழ்ச்சியெல்லாம் முடிந்தபிறகு, பத்து தடவை கேட்டிருந்தும் அதெப்படி புதிதாகக் கேட்பதுபோல் கேட்கிறீர்கள் என்று நண்பர்கள் சிரிப்பார்கள்.

இன்றும் இளம் ஆலிம்களால் இத்தகைய பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

அன்புடன் உங்கள்
 கான் பாகவி

No comments:

Post a Comment