Friday, January 22, 2021

இனிய நண்பர் இழப்பு ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎இளம் ‎வயதில்

இனிய நண்பர் இழப்பு இளம் வயதில்
~~~~~~~~~~~~
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை  அருகிலுள்ள ஆத்தூர் கிராமத்தில் பிறந்து,பள்ளிப் படிப்பை முடித்து பாகியாத்தில் கற்றவர்தான் மெளலானா சதகத்துல்லாஹ் ஹழ்ரத்.அவர் எனக்குப் பிந்திய வகுப்பில் துவரங்குறிச்சி சலாம் பாகவி, அஷ்ரப்  பாகவி ஆகியோருடன் கல்வி பயின்றவர். பின்னாளில் பாகியுத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.
அத்துடன் ஒருசில பாடங்களும் நடத்தினார்.மாணவர்களுக்கு தமிழ் மொழி, இலக்கியம், ஆங்கிலம் போன்றவற்றில் ஆர்வமூட்டியதுடன் மாணவர்கள் சிலருக்குக் கற்பிக்கவும் செய்தார்.

பிழையின்றி தமிழை எழுதும் தமிழ் எழுத்தாளர். எளிமையாகப் பேசினாலும் விஷயத்தோடு பேசும் பேச்சாளரும் கூட.

எனக்கும் அவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டதே தமிழ் எழுத்தால் தான். ஆம்! தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆனின் வசன மொழிபெயர்ப்பு கடையநல்லூர் மதிப்புக்குரிய யூசுப் அன்சாரி ஹழ்ரத் அவர்கள் எழுதியது.மொழிபெயர்ப்பு மட்டும் வெளியிடலாம் என்று திட்டத்தில் மேலாய்வைத் தொடங்கிய பாகியாத், பின்னர் விரிவுரையாகவே வொளியிட முடிவு செய்தது.கனம் கமாலுத்தீன் ஹழ்ரத் அவர்கள் விரிவுரை எழுத, தமிழைச் செப்பனிடும் பணியை சதகத்துல்லாஹ் ஹழ்ரத் அவர்கள் ஏற்றார்.

பின்னர் என்னையும் அப்பணியில் இணைத்தனர். 

இறுதிவரை தஃப்சீர் எழுத்துப் பணியில் ஈடுபட்டதுடன், முஃப்தி அவர்கள் கொடுக்கும் ஃபத்வாக்களை தமிழில் எழுதி அனுப்பும் பணியையும் மேற்கொண்டிருந்தார்.
தஃப்சீரின் ஆரம்பப் பாகங்கள் அச்சாகி, அதன் அச்சுப் பிழைகளைத் திருத்தும் பணிக்காக நானும் மெளலானா அவர்களும் சென்னையில் அறை போட்டு பல வாரங்கள் தங்கி ,திருத்தப் பணியை மேற்கொண்டுள்ளோம். அப்போதெல்லாம் மெளலானா அவர்களின் எளிமை, அலட்டிக்கொள்ளாத போக்கு, எதையும் பாசிடிவாகப் பார்க்கும் பண்பு ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன.

சுருங்கக் கூறின், அவருக்கு இருந்த ஆற்றல்கள் வேறு யாருக்கும் அமைந்திருந்தால், அவரைக் கையில் பிடிக்க முடியாது.அத்துணை ஆற்றல்களை த் தமக்குள் வைத்துக்கொண்டு, ஒன்றுமே தெரியாதவர் போன்று நடந்துகொண்ட  ஒரு துறவி என்றுகூட அவரைச் சொல்லலாம்.அதற்காக இந்த அளவுக்கா தம்மை மறைத்து வாழ்வது என்றுகூட அவர் நண்பர்கள் அவரிடம் உரிமையோடு கோபித்துக் கொண்டதும் உண்டு.

அவருக்கிருந்த ஆங்கில அறிவுக்கும் மார்க்க அறிவுக்கும் வேறு யாருமாக இருந்தால் ,எங்கோ போயிருப்பார்கள்.
உடல்நிலை ஒத்துழைக்காத இறுதி நாட்களில் மதரசாவிலிருந்து விடைபெற்று ஓய்வில் இருந்தார்.அப்போதும்கூட மாணவர்களின் அழைப்பை ஏற்று சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
ஆனால் ,துரத்தி வந்த நோய் இறுதியாக அன்னாரை நம்மிடமிருந்து பிரித்து விட்டதுதான் சோகம்.

கண்ணீர் மல்க அவருக்காக இறையைப் பிரார்த்திப்போம்.
اللهم اغسله بالماء والثلج ونقه من الذنوب كما ينق الثوب الأبيض من الدنس. اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا رب العالمين.

--அன்புடன் உங்கள் கான் பாகவி.

No comments:

Post a Comment