Thursday, April 10, 2014

வாக்காளப் பெருமக்களே! என்ன செய்யப்போகிறீர்கள்?


ப்ரல் 24 உங்கள் சுதந்திரத்தையும் உரிமையையும் நிர்ணயிக்கும் நாள். கையிலுள்ள வாக்குச்சீட்டு ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் விலைபோகின்ற கடைச்சரக்கு அல்ல! உங்களின் கருத்துச் சுதந்திரத்தை, நம்பிக்கைகளை, வாழ்வில் கடைப்பிடிக்கும் கோட்பாடுகளை, கற்கும் உரிமையை, கற்பிக்கும் அதிகாரத்தை, திருமணம், விவாகரத்து, பாகப்பிரிவினை போன்ற நடைமுறைகளை நீங்கள் விரும்பும் சட்டப்படி தொடர்ந்து மேற்கொள்வதை இவற்றையெல்லாம் காத்து தக்கவைத்துக்கொள்வதற்கான துருப்புச்சீட்டே இந்த வாக்குச்சீட்டு!






  • பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும்.
  • இராமர் கோயில் கட்டுவதற்கான வழிவகைகள் ஆராயப்படும்.
  • காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்படும்.
  • மதமாற்றத்திற்குத் தடை விதிக்கப்படும்.
  • பசுவதைக்குத் தடை விதிக்கப்படும்.
  • மதரஸாக்கள் நவீனப்படுத்தப்படும்.
  • பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படும்.
  • சேது சமுத்திர திட்டம் கைவிடப்படும்.



இவையெல்லாம் என்ன தெரியுமா? இந்தியாவின் 16ஆவது பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு  பாரதீய ஜனதா கட்சி அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் கறுப்புச் சட்டங்கள்தான் இவை.


இந்தக் கட்சி மட்டும் வெற்றிபெற்று நடுவண் அரசில் அமர்ந்தால் என்ன ஆகும் தெரியுமா?

  • மதச் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பு இருக்காது.
  • அவரவர் தம் சமயங்களின் சட்டங்களின்படி திருமணம், மணவிலக்கு, பாகப் பிரிவினை போன்ற சிவில் நடைமுறைகளைப் பின்பற்ற முடியாது
  • விரும்பியவர், விரும்புகிற மதத்தைத் தழுவ முடியாது.
  • சமயப் பள்ளிக்கூடங்களை அவரவர் விரும்பும் வகையில் நடத்த முடியாது.
  • ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் பாழாய்ப் போகும்.
  • சிறுபான்மையினருக்கென மத்திய அரசில் இடஒதுக்கீடு கிடையாது.
    http://www.bjp.org/manifesto2014

இப்போது சொல்லுங்கள்! வாக்காளப் பெருமக்களே! என்ன செய்யப்போகிறீர்கள்? கவர்ச்சியான விளம்பரங்களையும் ஆடம்பரக் கூட்டங்களையும் பொய்யான கருத்துக் கணிப்புகளையும் பார்த்து ஏமார்ந்து, உங்கள் உரிமைகளை நீங்களே பறிகொடுக்கப்போகிறீர்களா? அல்லது சுதாரித்துக்கொள்ளப்போகிறீர்களா?

யோசியுங்கள்! ஒன்றுக்குப் பலமுறை யோசியுங்கள்!







இந்த பா.ஜ.க.வுக்கோ அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ தேர்தலுக்குப்பின் பா.ஜ.க.வுடன் பதவியைப் பங்குபோட்டுக்கொள்ள அதிக வாய்ப்புள்ள கட்சிகளுக்கோ ஆதரவாக ஒரு வாக்குகூடப் பதிவாகிவிடக் கூடாது என்பதை ஒப்புக்கொள்வீர்கள்தானே!

மதச்சார்பற்ற, சமய நல்லிணக்கம் பேணும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து, உங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்! சொல்வது எங்கள் கடமை! சொல்லிவிட்டோம்.



இஸ்லாமியர் விழிப்புணர்வுக் கழகம்

Wednesday, April 09, 2014

அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன்வரை

. முஹம்மது கான் பாகவி


கிரேக்கத் தத்துவம் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ்தான் (மறைவு: கி.மு. 399) கிரேக்கத் தத்துவத்தின் முன்னோடியாகப் போற்றப்படுகிறார். தத்துவக் கலந்துரையாடலில் ஈடுபடுவதன்மூலம் தம் நாட்டு மக்களின் வாழ்க்கையை ஆய்ந்து, அவர்களை உணரவைக்க வேண்டியது தமது சமயக் கடமை என சாக்ரடீஸ் கருதினாராம்.


சாக்ரடீஸ்

துருவிக் கேட்கும் கேள்விகள்மூலம் அவரோடு உரையாடுபவரின் அறியாமையை உணர்த்துவது சாக்ரடீஸின் பழக்கமாம்! இத்தகைய குறுக்கு விசாரணை முறை, கற்பிக்கும் நுணுக்கமாகப் பயன்படுகிறது. இதற்கு சாக்ரடீஸ் முறை என்று பெயர்.


இவருடைய மாணவர் பிளேட்டோ (மறைவு: கி.மு. 347). அவருடைய மாணவர் அரிஸ்டாட்டில். இவர் கி.மு. 384இல் ஸ்டாகிரா நகரில் பிறந்து, கி.மு. 322இல் சால்சிஸ் நகரில் இறந்தார். இவர்கள் மூவரும்தான் மேலைக் கலாசாரத் தத்துவங்களுக்கு அடித்தளமிட்டவர்கள் என அறியப்படுகிறார்கள்.


அரிஸ்டாட்டில் இயற்பியல், வேதியியல், உயிரியல், உளவியல், அரசியல் எனப் பல்வேறு துறைகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக தர்க்க சாஸ்திரத்தில் (Logic) பெயர் பெற்று விளங்கினார். இவர் உருவாக்கிய தர்க்கக் கலை மும்மடி நியாயம் என அழைக்கப்படுகிறது.


மும்மடி நியாயம்


இவரதுமும்மடி நியாயம்’ (Three Premises) குறித்துக் கொஞ்சம் விளக்க வேண்டும். அரபிக் கல்லூரிகளில் கற்றுத்தரப்படுகின்றமன்திக்எனப்படும் தர்க்கவியலின் சூட்சுமமே இந்தமும்மடி நியாயம்தான். காரணகாரிய அடிப்படையில் படிப்படியாக விவாதங்கள் அமைத்து, ஒரு கூற்றை நிறுவும் முறைதான்தர்க்கவியல்எனப்படுகிறது.


இவன் மனிதன்; ஒவ்வொரு மனிதனும் பகுத்தறிவுள்ளவன்; எனவே, இவன் பகுத்தறிவுள்ளவன்மும்மடி நியாயத்திற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இதில் முதல் மடி, தனிப் பொருள் நியாயம் (ஸுஃக்ரா); இரண்டாம் மடி, பொதுப் பொருள் நியாயம் (குப்றா); மூன்றாம் மடி, முடிவு ((த்)தீஜா).


அவ்வாறே, தொலை இயல் (Teleolgy) என்று ஒன்று உண்டு. அடைய வேண்டிய முடிவை வைத்து, விளைவை விளக்குவதே தொலை இயல் எனப்படுகிறது. எதற்கு முழு விளக்கம் அளிப்பதானாலும் அதன் இறுதிக் காரணம் அதாவது அது எதற்காக இருக்கிறது; அல்லது உருவாக்கப்பட்டது என்பதன் நோக்கம் - முதலில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று தொலை இயல் குறித்து அரிஸ்டாட்டில் கூறுவார்.


ஆக, கிரேக்கத் தத்துவங்கள் பெரும்பாலும் வாதப் பிரதிவாதங்களையும் அனுமானத்தையும் (கியாஸ்) அடிப்படையாகக் கொண்டவை என்பதுதான் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம். எந்த ஆராய்ச்சியும் கண்டுபிடிப்பும் அந்தத் தத்துவத்தை நிரூபிக்க உதவியிருக்காது; அல்லது வேத ஆதாரமும் அந்தத் தத்துவத்திற்கு இருக்காது. அப்படியே இருந்தாலும் தத்துவ ஞானிகள் அதைப் பொருட்டாக எடுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள்.


வாதப் பிரதிவாதம் என்பது ஒருவகை அறிவு விளையாட்டு, ஒன்றை, மும்மடி நியாயக் கோட்பாட்டின்படி நிரூபிப்பதால் மட்டும் அது உண்மையாகிவிட முடியாது. பொய்யைக்கூட இவ்வாறு நிரூபித்துவிட முடியும். தண்ணீரில் மின்சாரம் உண்டு; மின்சாரத்தில் கை வைத்தால் அதிர்வு (ஷாக்) ஏற்படும்; எனவே, தண்ணீரில் கை வைத்தால் அதிர்வு ஏற்படும் என்று மேம்போக்காகப் பேசிவிட்டுப் போவது அறிவியல் அல்ல.


அணுவைப் பிளக்க முடியுமா?


கிரேக்கத் தத்துவங்களில் ஒன்று, அணுவைப் பிளக்கலாம் என்பது, ஆனால், அதை ஆராய்ச்சி மூலம் நிறுவுவதற்குப் பதிலாக, ஆர்கியுமெண்டின் மூலமே நிறுவ முயல்வார்கள். அணுவைப் பிளக்க முடியாது என்று வாதிடுவோர் ஒருபக்கம்; பிளக்க முடியும் என்று கூறும் கிரேக்க தத்துவவாதிகள் மறுபக்கமாக நின்று பேசுவார்கள் பாருங்கள்! பக்கம் பக்கமாக! (இதுவும் சில அரபிக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெறுகிறது.)


ஆனால், அறிவியலார் அணுவைப் பிளந்தது மட்டுமன்றி, அதிலிருந்து அணுகுண்டையே கண்டுபிடித்துவிட்டார்கள். அணுவைப் பிளப்பதன் மூலம் வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் (பேரழிவை உண்டாக்கும்) குண்டே அணுகுண்டு (Atom Bomb) ஆகும். செயல்முறையில் ஒரு கருத்து நிரூபிக்கப்பட்டபின், வாதமும் பிரதிவாதமும் எதற்கு? அதற்காக ஒரு பாடம் எதற்கு?


ஆனால், அணுவைப் பிளக்க முடியும் என்று கிரேக்கர்கள் வாதிட்டதில் ஓர் உள்நோக்கம் உண்டு என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்! ஆம்! அதுதான் பிரபஞ்சத்தின் அழிவை அதாவது மறுமையை - மறுக்கும் வாதமாகும். அணுவைப் பிளந்துகொண்டே போகலாம் என்று சொல்லும்போது, உலகை அடியோடு அழிக்க ஒரு சக்தி முற்பட்டால், உடைக்க உடைக்க துகள் இருந்துகொண்டே இருக்குமே! முற்றாக எப்படி பிரபஞ்சம் இல்லாமல்போகும்? இதுதான் இவர்களின் வாதத்தின் பின்னணி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


விண்மீன்கள் அழிவற்றவையா?



அவ்வாறே, விண்மீன்கள், கோள்கள் எல்லாம் அழிவற்றவை; மாறாதவை என்பதும் கிரேக்கத் தத்துவத்தின் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். ஆனால், 1572ஆம் ஆண்டு பெருநட்சத்திர வெடிப்பொன்று நிகழ்ந்ததை அறிவியலார் உறுதிசெய்துள்ளனர்.


இங்குதான் திருக்குர்ஆன் வேதம் பேசுகிறது: நட்சத்திரங்கள் ஒளியிழக்கும்போது வானம் பிளக்கப்படும்போது மலைகள் தகர்க்கப்படும்போது (அந்நாள் வந்தே தீரும்). (77:8-10)

மற்றொரு வசனம், சூரியன் சுருட்டப்படும்போது நட்சத்திரங்கள் உதிரும்போது மலைகள் பெயர்க்கப்படும்போது (தான் முன்பு செய்ததை மனிதன் அறிந்துகொள்வான்) என்கிறது. (81:2,3)

வேதமும் விஞ்ஞானமும் எங்கே மோதுகிறது? இல்லையே! எல்லாம் கிரேக்கத் தத்துவத்தின் அறியாமை! இதனால்தான், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் (ஹி. 728) இப்படிக் கூறினார்கள்:


அரிஸ்டாட்டில் சொல்லும் தர்க்கவியல் புத்திசாலியாக இருப்பவனுக்கு அவசியமே இல்லை; புத்திசாலி இல்லாதவனுக்கு அதனால் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில், இந்த இயல், ஏற்கெனவே உள்ள ஒன்றை மீண்டும் உண்டாக்கும் செயலையே செய்கிறது.


அறிவு ஒன்று மட்டுமே உறுதியான விளக்கத்திற்கு அடிப்படையாகும்என்று நம்பிய பழங்கால கிரேக்கர்கள், உணர்வுகளோ, பிரபஞ்ச ஆராய்ச்சிகளோ, ஆய்வுகளோ உதவக்கூடியவை அல்ல என்று கருதினர்.


தத்துவஞானிகள் காலம்காலமாக நம்பிவந்த இன்னொரு கொள்கை உண்டு. நிலவு உள்ளிட்ட கோள்கள் எல்லாம் முழுமையான கோளமாகவும் சமமாகவும் சீராகவும் உள்ளன என்பதுதான் அந்தக் கொள்கை. 1969இல் நிலவு, மேடுபள்ளமாகவும் கரடுமுரடாகவும் சீரற்ற பரப்பைக் கொண்டதாகவும் இருக்கிறது என்பதை அறிவியல் உலகம் நிலவில் மனிதன் இறங்கியபின் கண்டறிந்தது.


பூமியும் பேரண்டமும் வெவ்வேறா?


அரிஸ்டாட்டில் இன்னொரு கருத்தையும் சொன்னார். பூமி வேறு; பிரபஞ்சம் வேறு. பூமியைக் கொண்டு பிரபஞ்சத்தைக் கணிக்க முடியாது. இரண்டுக்கும் தொடர்பில்லை என்று அவர் கருதிவந்தார். 17ஆம் நூற்றாண்டில் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்புவிசை எனும் விதியைக் கண்டறிந்ததன் மூலம் இது தவறு என்பது நிரூபிக்கப்பட்டது.


பிரபஞ்சத்தை மனிதனால் அறிய முடியாது என்ற அரிஸ்டாட்டிலின் கூற்று பொய்யானது. சூரியக் குடும்பத்திலுள்ள கோள்கள் சூரியனை மையமாகக் கொண்டு தத்தம் பாதையில் சுழல்கின்றன. பூமியும் சூரிய குடும்பத்தின் உறுப்பினர்தான். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவதாலேயே இரவு -பகல் தோன்றுகிறது; ஆண்டுகள் கணக்கிடப்படுகின்றன என்ற உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.


நியூட்டன் வரும்வரை

ஐஸக் நியூட்டன்

உலகம் திருக்குர்ஆனை சமயக் கண்ணோட்டத்தில் அணுகாமல், பொதுவான இறைமறை; ஆய்வு செய்துபார்ப்போமே என்று படித்துப் புரிந்து ஆராய்ச்சி செய்திருந்தால், இந்த பிரபஞ்ச உண்மைகளை அறிய நியூட்டன் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.


(நபியே!) வானங்களிலும் பூமியிலும் உள்ளவை என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் என்று கூறுவீராக! (12:101)

வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ சான்றுகள் இருக்கத்தான் செய்கின்றன. (அவ்வப்போது) அவற்றைக் கடந்துதான் செல்கின்றனர். ஆயினும், அவற்றை(க் குறித்து சிந்திக்காமல்) புறக்கணித்துவிடுகின்றனர். (10:105)

ஓயாமல் இயங்கிவருகின்ற சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு அவன் வசப்படுத்தித் தந்தான். இரவையும் பகலையும் அவன் வசப்படுத்தித் தந்துள்ளான். (14:33)

அவன்தான், இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் (அதனதன் நீள்வட்ட) கோள்வீதியில் நீத்திக் கொண்டிருக்கின்றன. (21:33)

மனித மற்றும் ஜின் சமுதாயமே! வானங்கள் மற்றும் பூமியின் பல பாகங்களுக்குச் செல்ல உங்களுக்கு முடிந்தால் செல்லுங்கள்! (ஆனால்,) ஆற்றல்மூலம் தவிர உங்களால் செல்ல முடியாது. (55:33)

நியூட்டன் பிறப்பதற்கு பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பே அருளப்பெற்ற, மாசுமறுவற்ற இறைவசனங்கள் இவை. பத்து நூற்றாண்டை அறிவியல் உலகம் வீணாக்கிவிட்டதே! சமயப் பார்வைதானே மனித குலத்தைத் தடுத்து அறியாமையில் ஆழ்த்திவிட்டது!


பைபிளும் பாதிரியார்களும்


பைபிளை பாதிரியார்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்று சொல்லி, வேதத்தை மறைத்துவைத்தன திருச்சபைகள். 1517ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங், புராட்டெஸ்டண்டு பிரிவைத் தோற்றுவித்து, ஒவ்வொரு தனிமனிதரும் பைபிளை வாசித்துப் புரிந்துகொள்ள முடியும் என்று பிரகடனம் செய்தாராம்!


திருக்குர்ஆன், அது அருளப்பெற்ற விநாடியிலிருந்து உலக மக்களுக்கே அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறது. அனைவரும் வாசியுங்கள்! அனைவருக்கும் புரிந்துகொள்ள அது எளிதாக்கப்பட்டுள்ளது. ஏன் தாமதம்? என அறைகூவல் விடுத்துவருகிறது.


அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்கமாட்டார்களா? அல்லது (அவர்களின்) உள்ளங்களில் பூட்டுகள் (போடப்பட்டு) உள்ளனவா? (47:24)


ஏன், பிரபஞ்சம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது என அறிவியல் உலகம் மிகத் தாமதமாக 1940களில் கண்டறிந்த பெருவெடிப்பு (Big Bang) கொள்கை பற்றி 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறவில்லையா?


இந்த வானங்களும் பூமியும் ஒன்றாகப் பிணைந்திருந்தன. பின்னர் அவ்விரண்டையும் நாமே உடைத்துப் பிரித்தோம். (21:30)


படைப்புகளின் இரகசியங்கள், அந்தப் படைப்புகளைவிட அவற்றைப் படைத்தவனுக்கே நன்கு தெரியும்! காரணம் அவன் படைப்பாளன். இனியேனும், இறைமறையைப் பொதுக்கண்ணில் பாருங்கள்! புதுக் கண்டுபிடிப்புகளைக் காண்பீர்கள்!