Friday, January 31, 2014

சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)

ரஷிய பத்திரிகையாளர் இஸ்லாத்தில்...


சைரஜீ ஜன்னாத் மார்கோஸ் என்பது அவரது பெயர். ரஷியாவில் அவரைத் தெரியாதவர் இருக்க முடியாது. நாளேடுகள், மாத-வார இதழ்களில் கலை, கலாசாரம் குறித்து எழுதிவரும் பிரபல பத்திரிகையாளர். கலாசார விழாக்களில் அவரது பங்கு ரஷியாவில் முக்கியமானது.

‘அல்முஜ்தமா’ ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்லாத்தை நோக்கிய தமது பயணம் குறித்து விவரிக்கிறார்:

சிறுவயது முதலே, மகா வல்லமை படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால், அவனுக்கு எந்தப் பெயரையும் நான் சூட்டிக்கொண்டதில்லை. நாத்திகக் கல்வியால் எனது இயல்பான தேட்டத்தைத் தடுக்க இயலவில்லை. இருந்தாலும், எதற்கும் ஒரு நேரம் வந்தாக வேண்டுமல்லவா?

கிறித்தவ மதத்திலிருந்தே என் ஆராய்ச்சியும் தேடலும் தொடங்கியது. அப்போது எனது மத நடவடிக்கைகள் சட்டப்புறம்பானவையாகக் கருதப்பட்டன. மூன்றாண்டு சிறைத் தண்டனையும் 1982இல் விதிக்கப்பட்டது. சீனா-மங்கோலியா எல்லையில் தென் சைப்ரஸில் உள்ள ‘தோபா’’வில் சிறை தண்டனையை அனுபவித்தேன்.

1985இல் மாஸ்கோ திரும்பினேன். அங்கு அடிப்படை மாற்றங்கள் தொடங்கியிருந்தன. சமயக் குழுக்களுக்குச் சுதந்திரம் கிடைத்தது. நாட்கள் செல்லச் செல்ல 1990இல் ரஷிய வானொலியில் சமய நிகழ்ச்சிகளுக்கு டைரக்டராக நியமிக்கப்பட்டேன். இதனால், ரஷியாவில் பரவியுள்ள எல்லா மதங்களின் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் வந்தது. அரசாங்க ஒலிபரப்பில் முழு ரஷியாவுக்கும் சமய நிகழ்ச்சியைத் தயாரித்தேன்.

கிறித்தவம், பௌத்தம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்தேன். இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. காரணம், இஸ்லாமிய அறிவு படைத்த ஊடகவியலாளர்கள் யாரும் கிடைக்கவில்லை. ஒலிபரப்பு தொடங்கி ஆறாண்டுகளுக்குப் பிறகு லைலா ஹசீனோவா தலைமையில் ஒரு குழுவை உருவாக்கினோம். ரஷியாவில் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை இக்குழு தொடர்ந்து ஒலிபரப்பியது. இந்நிகழ்ச்சிக்கு ‘இஸ்லாத்தின் ஓசை’’ எனப் பெயரிட்டோம். வெள்ளிக்கிழமை தோறும் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இஸ்லாமிய உலகின் முக்கிய அறிஞர்கள், சிந்தனையாளர்கள், முஃப்திகள் ஆகியோருடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டது. இது இஸ்லாத்துடனான அறிமுகத்திற்கும் அதைப் பற்றிய அறிவுக்கும் வழிவகுத்தது.

தொடர்ந்து ஆறாண்டுகளாக இஸ்லாமிய நிகழ்ச்சியை ஒலிபரப்பிவந்த லைலா சோர்வடைந்து விலகிவிட்டார். எனவே, நிகழ்ச்சி தடைபட்டது. இதை அறிந்த பிரதமர் விக்டர் வானொலி மேலாளரைத் தொடர்புகொண்டு, இஸ்லாமிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒலிபரப்ப வேண்டுமென்றும், இல்லாவிட்டால் ரஷியாவின் உள்நாட்டு அரசியலில் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்றும் சொன்னார். 20 மில்லியன் முஸ்லிம்கள் ரஷியாவில் இருப்பதே அவரது அச்சத்திற்குக் காரணம்.

நானே இஸ்லாமிய நிகழ்ச்சியை ஒலிபரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் மலைப்பாக இருந்த எனக்குப் பிறகு தைரியம் வந்தது. புனைபெயரில் நிகழ்ச்சியைத் தொடங்கினேன். இதையடுத்து இஸ்லாத்தைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்தேன். என் நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு, நெருங்கிய நண்பர்கள் நீ முஸ்லிமாகிவிட்டாயா என்றுகூட கேட்டார்கள். நான் இல்லை என்று மறுத்தேன்.

பிறகு 2000ஆம் ஆண்டில் ஓர் இரவில் என்னை ஒரு கேள்வி உலுக்க ஆரம்பித்தது. உண்மையிலேயே நான் இஸ்லாத்தை ஏற்றால் என்ன? என்பதே அக்கேள்வி. கிறித்தவ மதத்தில் என்னை நச்சரித்துக்கொண்டிருந்த ஏராளமான கேள்விகளுக்கு இஸ்லாத்தில்தான் எனக்கு விடை கிடைத்தது. எனவே, இறுதியாக இஸ்லாத்தின் இணைந்தேன்.

http://www.magmj.com/index.jsp?inc=5&id=15098&pid=4327&version=236

தொன்மையான பள்ளிவாசலை மீட்டெடுத்த
ரஷிய முஸ்லிம்கள்

ஷியாவில் ‘காசிமோவ்’’ கிராமத்தில் ‘மஸ்ஜிது கான்’’ எனும் பள்ளிவாசலைப் பெரும் போராட்டத்திற்குப்பின் ரஷிய முஸ்லிம்கள் மீட்டனர். 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலை 1702ஆம் ஆண்டு ரஷிய மன்னர் பீட்டர் தி கிரேட் இடித்துத் தள்ளினார். பாங்குமேடை மட்டுமே எஞ்சியிருந்தது.

பின்னர் 1768ஆம் ஆண்டு அப்பள்ளிவாசல் மீண்டும் கட்டப்பட்டது. 1835ஆம் ஆண்டு தாத்தாரிய தலைவர்கள் பள்ளிவாசலை விரிவுபடுத்தி, தற்போதைய வடிவில் சீரமைத்தனர். பாரம்பரியமிக்க இந்தப் பள்ளிவாசல் கடந்த 30 ஆண்டுகளாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, தொழுகைக்குத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப்பின் நீதிமன்றத் தீர்ப்பின்படி ரஷிய முஸ்லிம்கள் ‘மஸ்ஜிது கான்’’ பள்ளிவாசலை மீட்டெடுத்தனர்.

இதற்கிடையில் ரஷியாவின் கிறித்தவப் பெண்மணி ஒருவர் இஸ்லாத்தை ஏற்றார். ஒலிஜா சைரஜீ சோர்கீனா என்ற அப்பெண்மணி பாலஸ்தீன மக்களை ‘ஃகஸ்ஸா’வில் சந்தித்து தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஃகஸ்ஸாவில் உள்ள ஷரீஆ உயர்நீதிமன்றத்தின்முன் ஆஜரான அவர், தமது சுயவிருப்பத்தின்பேரில் கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார்.

இன்னொரு புறம், ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் தாஃகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது உடலில் சிலுவை அறையப்பட்டு, கைகால்கள் வெட்டப்பட்டு, அடுக்குமாடி கட்டிடத்தின் லிஃப்டில் பிணமாகக் கிடந்தார்.

ரஷியாவின் மொத்த மக்கட்தொகையில் 15 விழுக்காடு முஸ்லிம்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. ரஷியாவிலிருந்து தனிநாடாகப் பிரிவதற்காகப் போராடிவரும் கௌகாஸ் மாகாணத்தில் மட்டும் 23 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர்.

யூரோ பகுதியில் முதலாம் இஸ்லாமிய வங்கி



ரோப்பிய நாடுகளின் யூரோ ஏரியாவில் முதலாவது இஸ்லாமிய வங்கி விரைவில் உருவாகிறது. ‘ஊரீஸ் பேங்க்’ எனும் பெயரில் லக்ஸம்பர்கில் உருவாகும் இந்த வங்கியின் மூலதனம் 60 மில்லியன் யூரோ ஆகும். தனி நபர்கள், நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு வங்கிச் சேவைகளை இது வழங்க இருக்கிறது.

ஊரீஸ் வங்கியின் கிளைகள் ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸ், பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ், ஜெர்மனியின் ஃபிரான்க்ஃபோர்ட், ஹாலந்த் ஆகிய இடங்களில் செயல்பட இருக்கிறது. இந்த வங்கியின் முதன்மை முதலீட்டாளர்களாக வளைகுடா தொழிலாளர் மன்றம், எமிரேட்ஸ் அரச குடும்பம் ஆகியோர் உள்ளனர்.

கடைசி சில ஆண்டுகளாக –குறிப்பாக மேற்கில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு- இஸ்லாமியப் பொருளாதார அமைப்பின் இலாபமும் நிலைத்த தன்மையும் மேற்கத்திய நாடுகள் பலவற்றையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

காமரூனில் வேகமாகப் பரவும் இஸ்லாம்


மேற்கு ஆப்பிரிக்க நாடான காமரூனில் இஸ்லாம் வேகமாகப் பரவிவருகிறது. உலக நாடுகளிலேயே இஸ்லாம் அதிவேகமாகப் பரவும் நாடும் காமரூன்தான். காமரூன் முஸ்லிம்கள் பின்பற்றிவரும் இஸ்லாமியக் கலாசாரமும் பண்பாடும்தான் அந்நாட்டு மக்களை வெகுவாகக் கவர்ந்து, இஸ்லாத்தின்பால் ஈர்த்துவருகிறது.

கடற்கரை நகரமான ‘டவ்லா’ காமரூன் நாட்டின் பொருளாதார தலைநகராக விளங்குகிறது. தென்மேற்கு காமரூனில் உள்ள இந்நகரத்தின் உள்ளூர் முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ஒரு புதுப் பள்ளிவாசலை எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். புதிதாக இஸ்லாத்தில் இணையும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிவருவதே காரணம்!

இந்நகரத்தின் பெரிய இமாமான ஷைகு முஹம்மது மாலிக் ஃபாரூக் கூறுகிறார்: பள்ளிவாசல்கள் விரிவுபடுத்தப்படுவதும் புதிய பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுவருவதும் ‘டவ்லா’ நகரில் குறிப்பாகவும் காமரூனில் பொதுவாகவும் பெரிய அளவில் இஸ்லாம் வளர்ந்துவருகிறது என்பதையே காட்டுகிறது. அல்ஹம்து லில்லாஹ்! எங்களிடம் ஏராளமான பள்ளிவாசல்கள் உள்ளன; ஜும்ஆ தொழுகை நிறைவேற்றப்பட இவை வசதியாக உள்ளன.

முஸ்லிம் தலைவர்களில் ஒருவர் கூறியதாவது: காமரூனில் 19ஆம் நூற்றாண்டில்தான் முதல்முறையாக இஸ்லாம் கால் பதித்தது. வடக்கு காமரூனிலிருந்து முஸ்லிம்களும் வெளிநாட்டு வணிகர்களும் கடற்கரை நகரமான ‘டவ்லா’வுக்கு வந்தபிறகு 1922ஆம் ஆண்டில்தான் இந்நகருக்கு இஸ்லாம் வந்துசேர்ந்தது. 1922இல்தான் இந்நகரில் முதலாவது பெரிய பள்ளிவாசல் கட்டப்பட்டது.

இந்த நகரத்தில் மட்டும் 90க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ளன. 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நகரில் 5 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

http://www.magmj.com/index.jsp?inc=5&id=15131&pid=4336&version=236

மேற்குலகம் இஸ்லாத்தை அழிக்க விரும்புகிறது?


ரோப்பிய ஒன்றியத்தில் வாழும் முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினர், ஐரோப்பிய சட்டங்களின்படி தமது சமய நம்பிக்கைகளைச் செயல்படுத்திவருகின்றனர். அதே நேரத்தில், அவர்களில் 45 விழுக்காட்டினர், மேற்குலகம் இஸ்லாத்தை அழிக்க விரும்புகிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் சமூகவியலாளர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் இத்தகவல் தெரியவந்துள்ளது. ஹாலந்து, ஜெர்மன், ஃபிரான்ஸ், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் 12 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் நடத்திய ஆய்வில்தான் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

ஹாலந்தில் வாழும் முஸ்லிம்கள் ஜெர்மன் முஸ்லிம்களைவிட அதிகமாக மார்க்கத்தைப் பின்பற்றிவருகின்றனர். ஹாலந்து முஸ்லிம்களைவிடக் குறைவான உரிமைகளே ஜெர்மன் முஸ்லிம்கள் அனுபவித்துவருகின்றனர் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.


பிரேசிலில் முஸ்லிம் ‘தாஇ’க்கு மரியாதை


தென்அமெரிக்க நாடான பிரேசிலில் ‘பரானா’ மாநிலத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்துவரும் ஷைகு அஹ்மத் முஹாயிரீ அவர்களுக்கு லவ்ண்டரேனா நகரசபை கண்ணியம் செய்து பாராட்டு விழா நடத்தியது. இவர் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் வக்ஃப் அமைச்சகத்தின் முன்னாள் தூதர் ஆவார். பரானா மாநிலத்தில் அவர் ஆற்றிய பிரசார மற்றும் பரிபாலனப் பணிகளுக்காக இந்தப் பாராட்டு வழங்கப்பட்டது.

விழாவில் லவ்ண்டரேனா நகர இந்நாள் ஆர்ச்பிஷப், முன்னாள் ஆர்ச்பிஷபான கார்டினல் பானு, காவல்துறை தளபதி, இராணுவப் படை அதிகாரிகள் ஆகியோர் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். அத்துடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்லாத்தைப் பற்றியும் இப்பகுதியில் நடக்கும் அழைப்புப் பணி குறித்தும் வெகுவாக சிலாகித்துப் பேசினர். விழா நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பாயின.

Tuesday, January 14, 2014

வாசிப்பே நம் சுவாசிப்பு

- அ. முஹம்மது கான் பாகவி



பிறக்கும்போது எதுவும் அறியாதவனாகவே மனிதன் பிறக்கிறான். வாசிப்பின் மூலமே அறிஞனாகிறான்; ஆராய்ச்சியாளனாகிறான்.

ஆம்! தொடக்கத்தில் அன்னையின் முகத்தை ஆவலோடு வாசிக்கிறான். அவள் சொல்லி, தந்தையின் முகத்தைப் படிக்கிறான். வண்ணங்களை வாசிக்கிறான். வானத்தை வாசிக்கிறான்.

மண்ணைப் படிக்கிறான். மனிதர்களை, அவர்களின் நாடியை, மனத்தை, குணத்தைப் படிக்கிறான். சுவையை, மணத்தை, ஒலியை, ஒளியை, நடையை… இவ்வாறு ஒவ்வொன்றையும் பார்த்து, தொட்டு, செவியுற்று, நுகர்ந்து படிக்கத் தொடங்கும் மனிதன் புத்தகத்தைப் படித்து, நூல்களை வாசித்து மேதையாகிறான்.

முதல் கட்டளை


வாசிப்பின் வாடையைக்கூட நுகராத இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறைவன் பிறப்பித்த முதல் ஆணை ‘வாசிப்பீராக!’ (‘இக்ரஃ’) என்பதுதான். இது, வரலாற்றில் நடந்த ஒரு சுவையான முரண். அவர்கள் சந்தித்த முதல் சமுதாயமும் வாசிப்பு அரிதாகவே காணப்பட்ட ‘உம்மீ’ சமுதாயம்தான்! (அல்குர்ஆன், 62:2)

(நபியே!) படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை, (பற்றித்தொங்கும்) கருமுட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம்முடைய இறைவன் மிகவும் கண்ணியமிக்கவன். அவன்தான் எழுதுகோலால் கற்றுக்கொடுத்தான். மனிதனுக்கு –அவன் அறியாதவற்றைக் கற்றுக்கொடுத்தான். (96: 1-5)

தொகுக்கப்பெற்ற வரிசையில் இது 96ஆம் அத்தியாயமாக இருந்தாலும் அருளப்பெற்றதில் இதுவே முதலாம் அத்தியாயம். அதிலும் 19 வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயத்தில் இந்த ஐந்து வசனங்கள் மட்டுமே முதலாவதாக அருளப்பெற்றன.

இங்கு இறைவன் தன் திருத்தூதருக்கு இட்ட முதல் கட்டளையே ‘ஓதுவீராக!’ (இக்ரஃ) என்பதுதான் என அறிகிறோம். முதல் வசனத்தில் குறிப்பிட்ட இந்த ஆணையை மூன்றாம் வசனத்தில் மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டு அழுத்தம் தருகின்றான் இறைவன். இது, மனிதனின் வாழ்க்கையில் வாசிப்பிற்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தவில்லையா?

‘படைத்த உம்முடைய இறைவனின் பெயரால்’ என்று குறிப்பிடும்போது ‘ரப்பு’ எனும் சொல்லே ஆளப்படுகிறது. ‘படைத்துப் பரிபாலிப்பவன்’ என்பதே இதன் பொருளாகும். வளர்ப்பு அல்லது பராமரிப்பு என்பது வாசிப்பைக் கொண்டே தொடங்க வேண்டும் என்பதை இது குறிப்பதாக இருக்கலாம்.

பேனாவால் மனிதனுக்குக் கற்பித்ததாக இறைவன் இங்கு குறிப்பிடுவதும் கவனிக்கத் தக்கது. பேனாவால் எழுதுவதே வாசிக்கத்தானே! மனிதன் அறியாதவற்றை அவனுக்குத் தான் கற்றுக்கொடுத்ததாக இறைவன் சொல்வதும் கவனிக்க வேண்டியது. கற்றலும் கற்பித்தலும் வாசிப்பாலேயே நடப்பவை என்பது தெரிந்ததே!

ஆக, அறிவின் திறவுகோல் வாசிப்பே! வாசிப்பின் மூலமே அறிவை அடைய முடியும். அறிவு இருந்தால்தான் மனிதனாக வாழ முடியும். வாசிப்பைக் கொண்டே கற்க இயலும்; கற்பிக்கவும் இயலும். கற்றால்தான் அறிவு வளரும். அறிவு வளரவளரத்தான் உயர்வு, கண்ணியம், வாழ்வாதாரம் –எல்லாம் வசப்படும்.

அது மட்டுமா? படைத்தவனை அறிந்து, அவன் ஆற்றல்களைப் புரிந்து, அவனைக் கெஞ்சவும் அஞ்சவும் வழியுண்டாகும். அறிவும் புத்திசுவாதீனமும் இருந்தால்தான் வழிபாடுகளைக்கூட முறையாக நிறைவேற்ற இயலும்.

ஏன் வாசிக்க வேண்டும்?

பள்ளி, கல்லூரியில்தான் படிக்கிறோமே! பிறகென்ன வாசிப்பு? இப்படி சிலர் எண்ணக்கூடும். அங்கு கற்பது துறைசார்ந்த நூல்கள். அவை ஆராய்ச்சிக்கும் தொழிலுக்கும் உதவலாம். பொதுவான அறிவு வளர்ச்சிக்கும் அனுபவ அறிவுக்கும் வேறு புத்தகங்களை வாசித்தே ஆக வேண்டும்!

பள்ளிப் படிப்பு ஏட்டுப் படிப்பு; பணம் பண்ண துணை நிற்கும். நாம் சொல்வது பண்பாட்டுப் படிப்பு. மனிதனாக வாழ வழிகாட்டும்! அது தொழில்; இது வாழ்க்கை.

அவ்வாறே, அனுபவங்கள் அழிந்துபோகாமல் காக்கப்பட, பதிவுகளே பயன்படும். பதிவுக்குப் புத்தகமே சரியான கருவி. கடந்த காலத்தை அறியுவும் நிகழ்காலத்தை உணரவும் புத்தகமே வழியாகும். பதினைந்து நூற்றாண்டுகள் ஆகிவிட்ட பின்பும் திருக்குர்ஆன் ஓர் அச்சரம்கூட மாறாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டுவருகிறது என்றால், அதற்குப் புத்தக வடிவமே காரணம்!

வேதங்கள், உலக இலக்கியங்கள், வரலாறுகள், சமூகக் கலாசாரங்கள், ஆய்வுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள்... என எல்லாம் அவை தோன்றிய காலம்தொட்டு இன்றுவரை மக்களை அடைந்துள்ளதற்குக் காரணம் பதிவுகள்தான்.

சொல்லப்போனால், புத்தகமே உண்மையான செல்வம்; செலவாகாத சொத்து. இதனாலேயே நேரு இப்படிச் சொன்னார்: புத்தகம் வாங்குவதற்காக நான் செய்கின்ற செலவுகளைப் பார்த்து யாரும் என்னை ‘ஊதாரி’ என்று விமர்சித்தாலும் அதற்காக நான் வருந்தப்போவதில்லை; அதைப் பொருட்படுத்தப்போவதில்லை.

சாதாரண அண்ணாதுறை, அறிஞர் அண்ணவாக மாறியது, வாழ்நாளில் பெரும்பகுதியை நூலகத்தில் கழித்ததால்தான். நூல்கள் இல்லாத வீடு உயிரற்ற சடலம் –என்பது எகிப்திய பழமொழி. நூலகம்தான் மூளைக்கான மருத்துவமனை.

ஒரு சமூகத்தின் கலாசாரத்தை அழிக்க விரும்பினால், வாசிப்பை நிறுத்திவிட்டாலே போதும்; நூல்களைக்கூட எரிக்க வேண்டியதில்லை.

வாசிப்புதான் சமூகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிரஞ்சீவி; அறிவின் வளர்ச்சி; பார்வையற்றவனின் பார்வை; அறிஞர்கள் மற்றும் மேன்மக்களுடனான தொடர்பு; நட்பு. பலவற்றையும் படித்தால் பண்டிதராகலாம் –என்பர்.

குறிப்பாக, ‘தாஈ’கள் (பரப்புரை செய்வோர்) அதிகம் வாசிக்க வேண்டும். புதுமையைத் தேட வேண்டும். இத்துறையில் நீண்ட அனுபவமும் முதிர்ச்சியும் உள்ளவர்களின் நூல்களை ஆழமாக வாசிக்க வேண்டும்.

வாசிப்பின் பயன்கள்

நூல்களை வாசிப்பதால் எத்தனையோ நன்மைகள் உண்டு. பார்வைக்கேற்ப பலன்களும் அமையும்; நோக்கத்திற்கேற்ப நன்மைகள் கிடைக்கும்.

1. தகவல் அறிவு. வாசிக்கும் நூல் உங்களுக்குப் புதியது என்றால், நீங்கள் இதுவரை அறிந்திராத புதிய கருத்துகளை அறிந்துகொள்ளலாம். முன்பே தெரிந்த தகவலாக இருப்பின், அதை உறுதி செய்துகொள்ளலாம். இரண்டுமே பயன்கள்தான்.

அடுத்து படிக்கும் தகவல், அல்லது கருத்து நல்லதாக இருப்பின் உங்களுக்கு அது உதவும். நினைவு வங்கியில் சேமித்துக்கொள்ளலாம். இருப்பு (Amount) கூடும். தவறாக இருப்பின், அதைத் தவிர்க்க உதவும். இப்படியும் ஒரு கருத்து உண்டு என அறிந்து, அதிலிருந்து விலகிவிடலாம்.

இத்தகைய என் அடியார்களுக்கு (நபியே!) நற்செய்தி கூறுக! அவர்கள் சொல்லைச் செவியுற்று, அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நல்வழி காட்டினான். அவர்களே அறிவாளிகள். (39:18)

அதாவது எல்லா வகையான சொற்களையும் கேட்பார்கள். ஆனால், நல்லதை மட்டுமே பின்பற்றுவார்கள். இவ்வாறே சில விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர். அப்போதுதான் அறிவிலும் பார்வையிலும் விசாலம் ஏற்படும்; பரந்தசிந்தனை பிறக்கும்.

2. மொழி அறிவு. எந்த மொழி நூலை வாசித்தாலும் அந்த மொழியைப் பற்றிய அறிவும் தெளிவும் வாசிப்பவருக்குக் கிடைக்கும். அந்த மொழியிலுள்ள புதிய சொற்கள், சொல்லாடல், மரபுத்தொடர், உரைநடை போன்ற ஞானம் கிடைப்பது எளிதான நன்மையன்று; பெரிய பயனாகும்.

3. எழுத்துப் புலமை. நல்ல நடையும் பிழையற்ற எழுத்தும் உள்ள நூலாக இருந்தால், எழுத்துக் கலையைக் கற்க வாசகனுக்கு அது உதவும். எழுத்தாற்றல் என்பது மாபெரும் செல்வம். அது படிக்கப் படிக்க, எழுத எழுதத்தான் கைவந்த கலையாக மாறும். எழுத்து ஒரு சுகமான அனுபவம். அது கைவரப்பெற்றவர், நான்கு சுவர்களுக்கு இடையே தனிமையில் அமர்ந்து எழுதினாலும் ஆயிரமாயிரம் உள்ளங்களோடு உரையாடுகிறார்.

4. இலக்கண இலக்கியப் புலமை. ஒரு மொழியின் வளமே அதன் இலக்கண கனமும் இலக்கிய அடர்த்தியும்தான். வாசிப்பால் இவற்றை அடைய முடியும். செம்மொழிக்கான முதல் தகுதியே, அம்மொழியின் இலக்கண வரையறைகளும் இலக்கியப் பதிவுகளும் என்பதை மறந்துவிடலாகாது.

திருக்குர்ஆன் அரபு இலக்கியத்தின சிகரமாகத் திகழ்வதும் இலக்கண வரைவுகளுக்கு முன்னோடியாக விளங்குவதும் அதன் அற்புதத் தன்மைக்கு (இஃஜாஸ்) முக்கிய அம்சங்களாகும். எனவேதான்,

“நம் அடியாருக்கு நாம் அருளிய (இவ்வேதத்)தில் நீங்கள் ஐயம் கொண்டவர்களாக இருந்தால், இதைப் போன்றதோர் அத்தியாயத்தையேனும் நீங்கள் உண்மையாளர்களாயின் கொண்டுவாருங்கள் (பார்ப்போம்)” (2:23)

என்று குர்ஆனால் சவால் விடுக்க முடிந்தது. குர்ஆனில் நிறைந்துள்ள இலக்கிய எடுத்துக்காட்டுகளை விவரிக்கத் தனி நூலே வேண்டும். சில வசனங்களின் எண்களை மட்டும் தருகிறேன்; முயன்றுபாருங்கள்: 9:61; 18:77; 50:30.

5. பட்டறிவு. நல்ல எழுத்தாளன் தன் அனுபவங்களையும் உணர்வுகளையும் தனது எழுத்தில் வெளியிடுவான். எழுத்துதான் உணர்வுகளுக்கு வடிகால். எழுத்தாளனின் அகவைக்கும் தகுதிக்கும் தக்கவாறு அனுபவங்களும் கனமாக இருக்கும். ஒருவரின் அனுபவம் அடுத்தவருக்குப் பாடம். பல நேரங்களில் ஏட்டறிவு வாழ்க்கைக்கு வழிகாட்டத் தவறிவிடும். ஆனால், பட்டறிவு நிச்சயமாகக் கை கொடுக்கும்.

ஒரு அனுபவத்தைப் பெற அனுபவசாலி தன் ஆயுளில் எத்தனை வருடங்களைச் செலவழித்திருப்பான்! எத்தனை முட்கள் அவனைக் குத்திக் காயப்படுத்தியிருக்கும்! எத்தனை சுகங்களை இழந்திருப்பான்! யார் யாருடைய வசைவுகளுக்கெல்லாம் ஆளாகியிருப்பான்! அவன் அனுபவங்களை எழுதும்போது இந்தப் புண்கள் ஏதுமின்றி வாசகன் ஒரு நொடியில் அறிந்துகொள்ள முடிகிறேதே! எழுத்து எத்துணை பெரும் ஆயுதம்!

இதனால்தான், சுயசரிதை என்பது இலக்கியத்தின் ஓர் அங்கமாகவே வளர்ச்சி கண்டுள்ளது. பெரிய மனிதர்களின் தன் வரலாறு அனுபவமில்லாத சிறியவர்களுக்கு உண்மையிலேயே ஓர் ஒளிவிளக்கு! இதனாலேயே, “தத்துவ அறிஞரிடம் (யோசனை) கேட்காதே! அனுபவசாலியிடம் கேள்!” என்பார்கள்.

6. நல்ல துணை. தனிமையில் இருக்கும்போது புத்தகம் உங்களுக்கு ஒரு சிறந்த துணையாக இருக்கும். பயனுள்ள வகையில் பொழுதும் போகும். வீணான அரட்டை, புறம் பேசுதல், பிறர் குறை ஆராயுதல், கண்டதையும் சிந்தித்து மன அழுத்தத்தை விலைக்கு வாங்கிக்கொள்ளல் போன்ற தீமைகளிலிருந்து புத்தகம் உங்களைக் காக்கும்.

ஆறறிவு நண்பன் இல்லாத குறையை புத்தகம் போக்கிவிடும். நண்பன்கூட நல்லவனாக இருந்தால்தான் ஆயிற்று! நூலோ அப்படியல்ல. மிக அரிதாகவே அற்பத்தனமான நூல்கள் வெளிவருகின்றன.

வாசிப்பின் முறைகள்

வாசிப்பே நம் சுவாசிப்பை அர்த்தம் பொதிந்ததாக ஆக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதேநேரத்தில், அதற்கும் சில ஒழுங்குமுறைகள் உண்டு. அவற்றைக் கவனத்தில் கொள்ளும்போதுதான் வாசிப்பால் நாம் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியும்.

1. நூல் தேர்வு. பலரும் இலக்கியம் மட்டுமே வாசிப்புக்கு ஏற்றது என எண்ணுகின்றனர். இது ஒரு தவறான கருத்து. பல்துறை நூல்களை வாசிக்கும்போதுதான் ஒருவரது வாசிப்பு வளமாகும். பயனுள்ள, காலத்துக்கேற்ற நல்ல நூல்களைத் தேர்ந்தெடுப்பது வாசகனின் முதற்கடமையாகும்.

சிறுகதையாகவோ நாவலாகவோகூட இருக்கலாம். ஆனால், அதன் உள்ளடக்கமும் நடையும் தரமானவையாக இருப்பின், அதுவும் பயன்தான். சமய நூல்களைப் பொறுத்தவரை, சரியான நம்பத் தகுந்த ஆதாரபூர்வமான செய்திகள் அடங்கிய நூல்களையே தேர்வு செய்ய வேண்டும்.

நபித்தோழர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவார்கள்: உரைகளில் உயர்வானது இறைவேதமே! நடத்தைகளில் நயமானது முஹம்மது (ஸல்) அவர்களின் நடத்தையே! (புகாரீ – 7277)

2. நோக்கம். நம்முடைய எந்தவொரு செயலுக்கும் ஒரு நோக்கமும் குறிக்கோலும் இருக்க வேண்டும். குறிக்கோலோ இலட்சியமோ இல்லாத வாழ்வு வாழ்வு அல்ல; தாழ்வு. புத்தகத்தின் பொருள், அதன் மொழிநடை ஆகிய இரண்டுமே தரமான வாசகனின் நோக்கமாக இருக்க வேண்டும். நல்ல செய்திகளைத் தாமும் அறிந்து, பிறருக்கும் தெரிவிப்பது இலட்சியமாக இருக்க வேண்டும். அத்துடன் படித்த நல்ல கருத்துகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உறுதியும் இருக்க வேண்டும்.

அதுவெல்லாம் இல்லாமல் தகவல்களை மண்டையில் மட்டும் ஏற்றிக்கொண்டால் போதாது. சுவடிகளைச் சுமக்கும் கால்நடைகளுக்கு, அவற்றின் அருமை எப்படிப் புரியும்?

‘தவ்ராத்’ வேதத்தை ஏற்க மனமே இல்லாமல் நிர்ப்பந்தத்தின் பேரில் ஏற்ற இஸ்ரவேலர்கள், ஏற்ற பின்னரும் அதன்படி செயல்படவில்லை. இவர்கள் கையில் அப்புனித நூல் இருந்தாலென்ன? கழுதைமீது ஏற்றி வைக்கப்பட்டால் என்ன? இரண்டும் ஒன்றுதானே!

‘தவ்ராத்’ ஏற்றிவைக்கப்பட்டு, பின்னர் அதை (மனமார) ஏற்காதவர்களின் எடுத்துக்காட்டு, ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றதாகும். (அல்குர்ஆன், 62:5)

3. கவனம். ஒரு பொருளை வெளியிட நூலாசிரியர் எந்த இடத்தில் எந்தச் சொற்களை எவ்வாறு கையாள்கிறார் என்பதில் வாசகனுக்குக் கவனம் இருக்க வேண்டும். வாசகனைக் குழப்பமடையச் செய்யாமல், சொல்லாக்கமும் வாக்கிய அமைப்பும் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை உன்னிப்பாகக் கவனித்தல் வேண்டும்.

தமிழைப் பொறுத்தவரை வார்த்தைகளிடையே இருக்க வேண்டிய இடைவெளி (ஸ்பேஸ்)கூடப் பார்க்கப்பட வேண்டும். இல்லையேல் பொருள் சிதைவும் கருத்துப் பிழையும் உருவாகிவிட வாய்ப்பு உண்டு.

எடுத்துக்காட்டு: புத்தகத்தைப் படித்துக்கொண்டு சென்றபோது புத்தகம் கைநழுவியது. இதையே புத்தகத்தைப் படித்து கொண்டுசென்றபோது புத்தகம் கைநழுவியது. படிக்கும்போது புத்தகம் கையிலிருந்து கீழே விழுந்தது என்கிறது முந்தியது. படித்துவிட்டு எடுத்துச் சென்றபோது புத்தகம் கீழே விழுந்தது என்கிறது பிந்தியது.

ஏன்? ‘எடுத்துக்காட்டை’யே எடுத்க்காட்டாகக் கூறலாம். ‘எடுத்துக்காட்டு’ என்பதற்கு உதாரணம் என்று பொருள். ‘எடுத்துக் காட்டு’ என்பதற்கு ‘(துணியை) தூக்கிக் காட்டு’ என்று பொருள். முந்தியது பெயர்ச்சொல்; பிந்தியது வினைச்சொல்! தேவையா இந்த விபரீதம்?

4. அடிக்கோடிடல். புதுமையான தகவல்கள், ஆழமான கருத்துகள், அவசியமான செய்திகள் என்று தெரிந்தவுடன் பென்சிலால் அடிக்கோடிட்டு அடையாளப்படுத்த வேண்டும். அல்லது டைரியில் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். நாளைக்கு உதவும்!

சில வேளைகளில் இப்படியும் நடந்துவிடுவதுண்டு. சொன்னவரைவிடக் கேட்டவர் ஒரு தகவலை நன்கு காப்பவராகிவிடலாம்; எழுத்தாளரைவிட வாசகன் ஒரு கருத்தை அதிகம் பரப்புகின்றவராகிவிடலாம்!

‘விடைபெறும் ஹஜ்’ஜின்போது நபி (ஸல்) அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையில் குறிப்பிட்டார்கள்:

இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு (என் உரையை) எட்டச்செய்யட்டும்! அவ்வாறு எட்டச்செய்பவரைவிட, அவரிடம் கேட்பவர் இச்செய்தியை நன்கு நினைவில் கொள்பவராக இருந்துவிடலாம்!

அவ்வாறுதான் நடந்தது. நினைவாற்றல் குறைந்த ஒருவர், தம்மைவிட அதிக நினைவாற்றல் உள்ளவரிடம் இச்செய்தியைக் கொண்டுசேர்த்தார். (புகாரீ – 7078)

5. நல்ல உவமைகள், பழமொழிகள், மரபுத்தொடர்கள் கிடைத்தால் உடனே குறித்துக்கொள்ள வேண்டும். நல்ல பொருள் கொண்ட கவிதை வரிகளையும் குறித்து வைக்கலாம். பின்னால் என்றாவது பயன்படும்.

6. பயணங்கள், காத்திருப்புகள், தனிமை, ஓய்வு ஆகிய நேரங்களில் அவசியமாகப் புத்தகம் ஒன்றைக் கையில் வைத்திருங்கள்! பயனுள்ள வகையில் நேரமும் கழியும்; மனஉளைச்சலும் இராது.

7. ஒரு நூலைப் படித்து முடித்தவுடன் டைரியில் அதன் விவரத்தை எழுதி, தலைப்பு வாரியாகப் பட்டியலிட்டு வைத்துக்கொண்டால், தேவைப்பட்டும்போது சிரமம் இல்லாமல் நூலை எடுத்துப் பயன்படுத்த வசதியாய் இருக்கும்.

8. மேலோட்டமாக எதையும் படிக்கக் கூடாது. அதற்குப் படிக்காமலே இருந்துவிடலாம். நாவு மட்டுமே வாசிக்க, மனம் எங்கோ திரிந்தால் படிப்பதில் என்ன பயன்? ஆழமாக, கருத்துகளை உள்வாங்கி, ஒரு நிமிடமேனும் அசைபோட்டுப் பார்த்து வாசிக்க வேண்டும்.

நூல் வாசிப்புக்கும் உரை கேட்பதற்கும் உள்ள வித்தியாசமே இதுதான். உரையில், யோசிக்க நேரம் கிடைக்காது. வாசிப்பில், அது கிடைக்கும். அப்படியிருக்க, வரிகளில் கண்விழிகளை மட்டும் ஓடவிடுவதில் என்ன புண்ணியம்?

நூலாசிரியர் முன்வைக்கும் பொருள், மார்க்க அடிப்படையில் சரியா, தவறா என்பதையும் வாசகன் தீர்மானிக்க வேண்டியது அவசியம். புரியாத இடங்களில் ஒன்றுக்குப் பல தடவை வாசிக்கலாம்! விளங்காதபோது தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்!

ஆக, பயனுள்ள வாசிப்பு என்பது, வாசிக்கும்போது மனத்தை தென்றல் வருட வேண்டும்; ஆனந்தம் பிறக்க வேண்டும். மனம் அங்கே இருக்க வேண்டும்! ஆர்வம் கொப்பளிக்க வேண்டும்! இதமான சூழல் நிலவ வேண்டும்!

யாருக்கு உள்ளம் உள்ளதோ, அல்லது (மனம் கொடுத்து) கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் பாடம் உண்டு. (அல்குர்ஆன், 50:37)

9. இணையதளம், வலைத்தளம் போன்ற நவீன ஊடகங்களில் பதிவேற்றப்படும் சிறந்த கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றையும் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்!

சில பரிந்துரைகள்

1. புத்தக வாசிப்பின் அவசியத்தை எல்லா இடங்களிலும் உணர்த்த வேண்டும். வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் இதற்கான விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற வேண்டும்!

வாசிப்பே நம் சுவாசிப்பு; பேசாத நல்ல நண்பன் புத்தகம்; புத்தகம் செலவாகாத செல்வம்; வாசிப்பு அறிவின் திறவுகோல் –போன்ற வாசகங்களை ஒட்டிவைக்கலாம்!

2. வீடு, பள்ளிவாசல், அலுவலகம் ஆகிய இடங்களில் நூலகம் உருவாக்கலாம்!

3. பெரிய நூலகங்களுக்குச் செல்லும் பழக்கத்தை மேற்கொள்ளலாம்!

4. நாள்தோறும் அரைமணி நேரமாவது வாசிக்க நேரம் ஒதுக்கலாம்!

5. நாம் வாசிப்பதோடு மற்றவர்களையும் வாசிக்கத் தூண்டலாம்!



(12.01.2014 அன்று சென்னை ரஹ்மத் பதிப்பக
ஆய்வரங்கத்தில் ஆற்றிய ஆய்வுரையின் எழுத்து வடிவம்)

Friday, January 10, 2014

இஸ்லாம் வகுத்த அரசியல் இலக்கணம்


அஃப்ஸலுல் உலமா, மௌலவி,
அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி
(முன்னாள் பேராசிரியர், ஜாமிஆ அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத்,
வேலூர்)

முதலில் ‘அரசியல்’ என்றால் என்ன என ஆய்வோம். ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்தான் அரசு இயல் (Politics) எனப்படுகிறது.

அரசின் அமைப்பு, குடிமக்களின் உரிமை, அரசின் கடமை, அதிகாரம் முதலியவற்றை வரையறுக்கும் அடிப்படை சட்டமே (Constitution) அரசியல் சாசனம், அல்லது அரசியல் சட்டம் எனப்படுகிறது.

மனிதர்கள் ஒரு பத்துப்பேர் சேர்ந்து வாழ ஆரம்பித்த நாளிலேயே அரசியலுக்கும் வாழ்வு வந்துவிட்டது என்பதுதான் எதார்த்தம். பதின்மரில் ஒருவர் மூத்தவர் (தலைவர்); அவரது வழிகாட்டலின் பேரில் செயல்பட இருவர், அல்லது மூவர் (அமைச்சர்கள்). சிறார்கள் அந்த இடத்தில் வாழ்ந்து வளர வேண்டியவர்கள் (குடிமக்கள்).

ஆயினும், ‘தத்துவம்’ (Philosopy), அல்லது ‘கோட்பாடு’ (Theory) என்ற தகுதி அடிப்படையில் பார்த்தால், மனிதன் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகே அரசியல் எனும் தத்துவம் உருப்பெற்றது.

அரசு மற்றும் அதோடு தொடர்புடைய கோட்பாடுகளான அரசியல் கடமை, அரசியல் சட்டம், சமூக நீதி, அரசியல் அமைப்பு போன்றவற்றை ஆராயும் துறையாக அரசியல் தத்துவம் பரிணமித்தது, மிகவும் பின்னால்தான். கிரேக்க தத்துவ அறிஞர் பிளேட்டோ (கி.மு. 428-347) எழுதிய ரிபப்ளிக் (குடியரசு) எனும் நூலும், அவருடைய மாணவரும் கிரேக்கத் தத்துவ அறிஞருமான அரிஸ்டாட்டில் (384-322) எழுதிய ‘பாலிடிக்ஸ்’ (அரசியல்) எனும் நூலும்தான் அரசியல் தத்துவத்தில் எழுதப்பட்ட ஆரம்ப வழிகாட்டிகள் என்பர்.

இதே அரசியல், ‘அறிவியல்’ எனும் அந்தஸ்தை அடைந்தது 19ஆம் நூற்றாண்டில்தான் என்கிறார்கள். பலவிதமான சமூக அறிவியல் பிரிவுகள் உருவாகத் தொடங்கிய 19ஆம் நூற்றாண்டுவரை, ‘அரசியல் அறிவியல்’ எனும் நவீனத்துறை உருவாகியிருக்கவில்லை. அரசியல் கட்சிகள் நவீன வடிவத்தில் 19ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தோன்றினவாம்!

உண்மையில் அரசியலும் அரசியல் சாசனமும் 6ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாக நடைமுறையும்படுத்தப்பட்டு, உலகின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்த பெருமை இஸ்லாமிய அரசியலுக்கு உண்டு. அதை இறைவனின் ஆணையின்பேரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கி, அன்றைய நவீன அரசாட்சி முறையை உலகுக்கு எடுத்திக்காட்டினார்கள்.

இதனாலேயே, நவீன வரலாற்று ஆய்வாளர் மைக்கேல் H. ஹார்ட் தமது ‘THE 100’ (நூறுபேர்) எனும் நூலில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு முதலிடம் அளித்தார். அதற்கு அவர் சொன்ன அறிவுபூர்வமான காரணம் கவனத்திற்குரியது.

ஹார்ட் சொன்னார்: நூறு உலகத் தலைவர்களில் முதலாமவர் முஹம்மத். ஏனெனில், சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒருசேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் அவர் ஒருவரே. அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றின் தலைவர்; பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவர்.

சமயமும் அரசியலும்

சமயத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்றே பலரும் கருதுகின்றனர். இக்கருத்து முதன்முதலில் ஐரோப்பியக் கிறித்தவ நாடுகளில்தான் தோன்றியது. அங்கே கிறித்தவ திருச்சபைகள் மக்களின் எல்லா நடவடிக்கைகளிலும் ஆதிக்கம் செலுத்திவந்தன; போப்புகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப அதிகாரம் செலுத்திவந்தனர்; தாங்கள் விரும்பக்கூடியவர்களுக்கு மட்டும் பாவமன்னிப்புப் பத்திரம் வழங்கிவந்தனர்.

திருச்சபைகளின் எல்லைமீறிய போக்கைக் கண்டு வெகுண்டெழுந்த முற்போக்குவாதிகள் சிலர், போப்புகளுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கினர். பணத்துக்குச் சொர்க்கத்தையே விலைபேசும் பாதிரிமார்களின் போக்கால் மதத்தின் மீதே வெறுப்பு கொண்ட அவர்கள், அரசியலுக்கும் மதத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை எனப் பிரகடப்படுத்தினர்.

இவ்வாதத்திற்கு ஆதாரமாக, ‘‘சீசருக்கு வழங்க வேண்டியதை சீசருக்கும் கர்த்தருக்கு வழங்க வேண்டியதைக் கர்த்தருக்கும் வழங்கிவிடுங்கள்’’ என்ற பைபிளின் கருத்தை மேற்கோள் காட்டிப் பரப்புரை செய்தனர்; சீசருக்கும் (அரசருக்கும்) கர்த்தருக்கும் (கடவுளுக்கும்) பிரிவினையை உருவாக்கிய அவர்கள் மதத்திலிருந்து அரசியலை வெளியேற்றிவிட்டனர்.

இஸ்லாத்தில் இப்பிரிவினைக்கு இடமே இல்லை. ஏனெனில், எவராலும் பணத்திற்குப் பதிலாகச் சொர்க்கத்தை விற்க முடியாது. ஓரிறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் பாவிகளின் பாவத்தை மன்னிக்க இயலாது. இதில் இஸ்லாம் மிகவும் தெளிவாக இருக்கிறது.

எனவே, கிறித்தவ மதத்தில் ஏற்பட்டுவிட்ட இழுபறி நிலை இஸ்லாத்தில் கிடையாது. ஆதலால், அரசியலும் மார்க்கத்தின் பிரிக்க முடியாத ஓர் அங்கம்தான்; அரசியல் மார்க்கத்தின் வழிகாட்டலின் பேரிலேயே அமைய வேண்டிய ஒரு துறைதான் எனும் தத்துவத்தை முதலில் புரிந்துகொள்வது நல்லது.

இஸ்லாமும் அரசியலும்

இஸ்லாத்தைப் பொறுத்தவரை, அது மற்றத் துறைகளுக்கு வழிகாட்டியிருப்பதைப் போன்றே, இம்மை வாழ்வின் அச்சாணியாக விளங்கும் அரசியல் துறைக்கும் நல்வழி காட்டியுள்ளது. அரசியல் அதிகாரத்தின் அவசியத்தை உணர்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அந்த அதிகார சக்தியைத் தமக்கு வழங்குமாறு இறையிடம் பிரார்த்தித்தும் உள்ளார்கள்.

மக்கா இறைமறுப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்குத் திட்டமிட்டபோது, மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து சென்றுவிடுமாறு இறைவன் ஆணையிட்டான். அப்போது இந்த வேண்டுதலைச் செய்யுமாறு அவன் தன் பிரியமான தூதருக்கு ஆணையிட்டான்:

‘‘என் இறைவா! என்னைத் திருப்தியான முறையில் நுழையச்செய்வாயாக! என்னைத் திருப்தியான முறையில் வெளியேறச்செய்வாயாக! உன்னிடமிருந்து எனக்கு உதவும் ஒரு சக்தியை வழங்கிடுவாயாக! (17:80)

திருமறை விரிவுரையாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தமது ஓரிறை அழைப்புப் பணியில் ஆட்சியதிகாரத்தின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாது என்பதை அறிந்திருந்தார்கள். எனவே, இறைமார்க்கத்தை நிலைநாட்டுவதற்குத் துணைபுரியும் ஒரு சக்தியை -அதாவது ஆட்சி அதிகாரத்தைத்- தமக்கு வழங்குமாறு இறையிடம் வேண்டினார்கள்.

ஆட்சியதிகாரம் என்பது, இறைவனின் அருட்கொடையாகும். அது இல்லை என்றால், மனிதர்களில் சிலர் வேறுசிலரைத் தாக்கி அழிப்பார்கள்; வலிமை மிக்கவன் பலவீனமானவனை விழுங்கிவிடுவான்.

கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், குர்ஆன் மூலம் தடுக்காத பல காரியங்களை, அதிகாரத்தின் மூலம் தடுக்கின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர்)

ஆட்சியதிகாரம் என்பது, இத்துணை பெரும் வீரியம் மிக்கது என்பதாலேயே அல்லாஹ் தன் திருமறையில் நல்லடியார்களுக்குச் சில வாக்குறுதிகளை வழங்குகின்றான்.

‘‘உங்களில் இறைநம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்தோருக்கு அல்லாஹ் (சில) வாக்குறுதிகளை அளித்துள்ளான்; அவர்களுக்கு முன்பு இருந்தவர்களை இப்பூமியில் அதிகாரம் உள்ளவர்களாய் அவன் ஆக்கியதைப் போன்று, இவர்களையும் அதிகாரம் உள்ளவர்களாய் நிச்சயமாக ஆக்குவான். அவர்களுக்காகத் தான் உவந்துகொண்ட அவர்களின் மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக அவன் நிலை நிறுத்துவான்; அவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்திற்குப் பின்னர் அமைதியை மாற்றாக அவர்களுக்கு அவன் நிச்சயமாக வழங்குவான். (24:55)

கவனிக்க வேண்டிய வாக்குறுதிகள். நாம் செய்ய வேண்டியது இரண்டு. ஒன்று, அல்லாஹ்வின் மீது அசையாத நம்பிக்கை கொள்ள வேண்டும். இரண்டு, நல்லறங்கள் புரிய வேண்டும். தீமைகளைக் கைவிடுவதும் ஒரு நல்லறம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

இதற்குப் பிரதியாக அல்லாஹ் நமக்கு அளிப்பது முப்பெரும் பரிசுகளாகும். 1. நல்லாட்சி புரியும் வாய்ப்பு. 2. அல்லாஹ்வுக்குப் பிரியமான இந்த மார்க்கத்தில் நிலைத்திருப்பது. 3. அச்சத்திற்குப் பின் அமைதி. மூன்றும் முக்கியமானவை; உயிர்நாடியானவை. அல்லாஹ் இவ்வாக்குறுதிகளை நிறைவேற்றவும் செய்தான்.

வரலாற்றுச் சான்றுகள்

முற்காலத்தில், இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் பெரும் ஆட்சியாளராக விளங்கினார்கள். அவர்களின் புதல்வர் நபி சுலைமான் (அலை) அவர்கள் பேரரசை நிறுவி ஆண்டார்கள். யூஷஉ பின் நூன் (அலை) அவர்களின் தலைமையில் அமாலிக்கர்களை இஸ்ரவேலர்கள் வென்றனர். நபி யூசுஃப் (அலை) அவர்கள், தம் சகோதரர்களின் துரோகத்திற்குப் பின்பு எகிப்தின் ஆட்சியில் அமர்ந்தார்கள்.

இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும்போதே மக்கா, கைபர், பஹ்ரைன் உள்ளிட்ட அரபு தீபகற்பம் முஸ்லிம்களின் கைக்கு வந்துவிட்டது. பலர் காப்புவரி செலுத்தினர். கிழக்கு ரோமானியப் பேரரசர் ஹிரக்ளீயஸ், எகிப்து ஆட்சித் தலைவர் முகவ்கிஸ், அபிசீனிய மன்னர் நஜாஷீ (நீகஸ்) ஆகியோர் நபியவர்களை மதித்து அன்பளிப்புகளை அனுப்பிவைத்தனர்.

நபிகளாரின் மறைவுக்குப் பிறகு கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பாரசீகத்தின் சில பகுதிகள், ஷாமின் (சிரியா) டமாஸ்கஸ், புஸ்ரா ஆகிய நகரங்கள் வெற்றிகொள்ளப்பட்டன.

கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எகிப்து, பாரசீகம், கிழக்க ரோம் (பைஸாந்தியா) ஆகியவை வீழ்ந்தன. பாரசீகப் பேரரசன் குஸ்ரூ (கிஸ்ரா), கிழக்கு ரோமானியப் பேரரசன் சீசர் (கைஸர்) ஆகியோர் அதிகாரத்தை இழந்தனர்.

கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் இஸ்லாமியப் பேரரசு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லைவரை விரிவடைந்தது. மேற்கு நாடுகள் அதன் கோடிவரை வெற்றிகொள்ளப்பட்டன. தெற்கு ஸ்பெயினில் உள்ள அண்டலூசியா (உந்துலுஸ்), சைப்ரஸ் (கப்ரஸ்) ஆகியவை அவற்றில் அடங்கும்.

மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டியுள்ள லிபியாவின் சிரநேயிக்கா (கைரவான்), செப்டர் (தாவூடா) ஆகிய நகரங்களும் கிழக்கில் சீனா எல்லைவரையும் முஸ்லிம்கள் கரத்தில் வந்தன. இராக்கின் பல நகரங்களும் ஈரானின் குராசான், அஹ்வாஸ் ஆகிய நகரங்களும் வெற்றிகொள்ளப்பட்டன. துருக்கியரின் ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்தது. (தஃப்சீர் இப்னு கஸீர்)

இவ்வாறு முஸ்லிம்களின் வெற்றி தொடர்ந்தது. இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இஸ்லாம் கால் பதிக்காத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அது அவனியெங்கும் பரவிவிட்டது. உலக மக்கட்தொகை 690 கோடியாக இருந்த 2010ஆம் ஆண்டில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 161 கோடியாக (23.4%) இருந்தது. இதுவே 2030இல் 219கோடியாக (26.4%) உயரும் என PEW எனும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. அப்போது உலக மக்கட்தொகை 830 கோடியாக இருக்கலாம்.

இஸ்லாமிய ஆட்சிமுறை

இன்றைய உலகில் இரண்டு வகையான ஆட்சிமுறைகளே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன. 1. முடியாட்சி (Monarchy). அரசர் அல்லது அரசியால் நடத்தப்படும் ஆட்சி. பிளவுபடாத இறையாண்மை, அல்லது ஒரு நாட்டின் நிரந்தரமான தலைமைப் பொறுப்பை ஏற்ற தனிமனிதரின் ஆட்சி.

இது இப்போது பரம்பரை வழியில் ஆட்சியுரிமை கொண்ட அரசுகளைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. அரசர்களின் தெய்வீக உரிமையாக ஆட்சி கருதப்பட்டது.

2. மக்களாட்சி, அல்லது ஜனநாயகம் (Democracy). வாக்களிக்கும் உரிமை பெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்று நடத்தும் ஆட்சிமுறை; உயர்ந்த அதிகாரம் மக்களிடம் குவிந்திருக்கும் அரசாங்க வடிவம்.

பொது வாக்களிப்பு, பதவிக்கான போட்டி, பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை இது வலியுறுத்துகிறது.

1. இஸ்லாத்தில், நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஆட்சித் தலைவருக்கு (கலீஃபா) மக்களிடமிருந்தே (உம்மா) அதிகாரம் வழங்கப்படும்; அவர் தம் பணிகளை மக்களின் திருப்தியுடனேயே மேற்கொள்ள வேண்டும். இதுவே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள்; உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள்; அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்; உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள்; அவர்கள் உங்களைச் சபிப்பார்கள். (முஸ்லிம்)

தனிமனிதன் தனிமனிதனையோ, மக்கள் மக்களையோ, ஆட்சியாளர்கள் குடிமக்களையோ எந்த வகையிலும் சுரண்டுவதற்கும் தவறாகப் பயன்படுத்துவற்கும் இஸ்லாத்தில் அனுமதி கிடையாது.

2. ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் வேறுபடலாம் என்பதால், இஸ்லாம் தேர்வு முறையைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

இஸ்லாத்தின் தொடக்கக் காலத்தில், ஆட்சியின் (கிலாஃபத்) தலைநகரில் உள்ள அறிவுஜீவிகள் (அஹ்லுஷ் ஷூரா) அளிக்கும் யோசனையின் பேரில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தலைநகர் மக்கள் வந்து அவருக்கு வாக்கு (பைஅத்) அளித்தனர்.

அதையடுத்து இதர நகரவாசிகள் தங்கள் வாக்குகளை அளித்தனர். எப்படியானாலும் ஆலோசனையாளர்களின் கருத்தைக் கேட்டே ஆட்சித் தலைமைக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. அடுத்து இஸ்லாமிய ஆட்சியின் சாசனம் திருக்குர்ஆனாகவே இருக்கும். அதுதான இறைமொழி; மாற்றம், திருத்தம், கூடுதல், குறைவு ஆகிய எந்த மாறுதலுக்கும் உட்படாத நிலையான சாசனம்.

4. இஸ்லாமிய ஆட்சி, ஆலோசனை (ஷூரா) அடிப்படையில் அமைய வேண்டும். 5. அது கிலாஃபத்தாகவும் (அரசியல்) இமாமத்தாகவும் (ஆன்மிகம்) இருக்க வேண்டும். சர்வாதிகார ஆட்சியாகவோ குடும்ப மன்னராட்சியாகவோ கட்டுப்பாடற்ற குடியாட்சியாகவோ அது இருக்காது.

ஆட்சித் தலைவருக்கான இலக்கணம்

1. ஆட்சித் தலைவர் பருவமடைந்த இறைநம்பிக்கையாளராக இருக்க வேண்டும். கல்வி அறிவு, ஆட்சித் தகுதி, நிர்வாகத் திறமை, நேர்மை, உடல் ஆரோக்கியம் முதலான அம்சங்கள் உள்ளவராகவும் அவர் இருக்க வேண்டும்.

2. நீதியும் நேர்மையும் ஆட்சியாளரின் முதல்தரமான குணங்களில் அடங்கும்.

திருக்குர்ஆனில் இறைவன் ஆணையிடுகின்றான்:

உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களை, அவற்றுக்கு உரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் மக்களிடையே நீங்கள் தீர்ப்பு வழங்கும்போது நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். உங்களுக்கு அல்லாஹ் கூறும் இந்த அறிவுரை மிகவும் நல்லதாகும். (4:58)

பதவியும் நம்பி ஒப்படைக்கப்படும் ஒன்றுதான்; தீர்ப்புக்கு வேண்டிய நீதி ஆட்சிக்கும் பொருந்தும். ஒருவரோ ஒரு கூட்டமோ பிடிக்கவில்லை என்பதற்காக நீதி தவறிவிடக் கூடாது. இதனாலேயே மற்றொரு வசனத்தில்,

‘‘ஒரு சமுதாயத்தார்மீது (உங்களுக்கு)ள்ள பகை (அவர்களுக்கு) நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம். (எல்லாரிடமும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிகவும் உகந்ததாகும்’’ (5:8) என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

3. சாமானியரும் நெருங்கும் தூரத்தில் ஆட்சியாளர் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தேவையும் வறுமையும் இல்லாமையும் உள்ளவர்கள் அணுக முடியாதவாறு தமது வாயிற்கதவை ஓர் ஆட்சியாளர் அடைத்துக்கொள்வாராயின், அவருடைய தேவையின்போதும் இல்லாமையின்போதும் வறுமையின்போதும் (தன்னை) அணுக முடியாதவாறு அல்லாஹ் வானத்தின் வாயில்களை அடைக்காமல் இருக்கமாட்டான். (ஷாமிஉத் திர்மிதீ)

4. பகட்டும் படோடாபமும் ஆட்சிக்கு ஆபத்து. பதவி வரும்போதுதான் பணிவு வர வேண்டும்; எளிமை மிளிர வேண்டும். ஆட்சிக்கு மட்டும் அவர் தலைவர் அல்லர்; பண்பாட்டிற்கும் மனித நாகரிகத்திற்கும் தலைவராக, முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

5. தவறு சுட்டிக்காட்டப்படும்போது, குறைகள் விமர்சிக்கப்படும்போது, அது உண்மைதானா என்பதை ஆட்சியாளர் பரிசீலிக்க வேண்டும்; உண்மை என்றால், மனப்பூர்வமாக அதை ஏற்று தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்; குற்றம் சொல்வோரிடம் பகைமை பாராட்டக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அநீதியிழைக்கும் அரசனிடம் உண்மை உரைப்பதுதான் சிறந்த அறப்போராகும். (நஸயீ, முஸ்னது அஹ்மத்)

அநீதியிழைக்கப்பட்ட ஒருவன், அதை உரக்கச் சொல்ல உரிமையுண்டு. அந்த அப்பாவி தன் உரிமையைப் பயன்படுத்தும்போது, குரல்வளையை நெறிப்பது சர்வாதிகாரமாகும்.

திருக்குர்ஆன் கூறுகிறது: அநீதியிழைக்கப்பட்டவர் தவிர வேறு யாரும் தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பமாட்டான். (4:148)

6. சட்டத்திற்குமுன் அனைவரையும் சமமாக நடத்துவது ஆட்சியாளரின் முக்கியப் பொறுப்பாகும். தெரிந்தவனுக்கு ஒரு நீதி; தெரியாதவனுக்கு ஒரு நீதி இருக்கலாகாது. எளியவனுக்கு முன்னால் விரைப்பாக நிற்கும் சட்டம், வலியவனின் கண்சாடைக்கே வளைந்து சாஷ்டாங்கமாக விழக்கூடாது.

‘‘நீங்கள் பேசினால் நியாயமே பேசுங்கள்; உறவினராக இருந்தாலும் சரி’’ (6:152) என்று அல்லாஹ் அறிவுறுத்துகின்றான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்கள்தம் தோழர்களும் ஆட்சிப் பொறுப்பு வகித்தபோது இந்த இறையாணையைச் சிறப்பாகச் செயல்படுத்தினார்கள். இதற்கு வரலாற்றில் நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

‘‘என் அருமை மகள் ஃபாத்திமாவே திருடினாலும் அவரது கரத்தையும் நான் துண்டிப்பேன்’’ என்ற நபிமொழி பிரபலமானது. (புகாரீ)

கடமையில் கண்ணும் கருத்தும்

7. ஆட்சியாளர் தம் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும். அதற்கு இயலாதவர், அல்லது மனமில்லாதவர் ஆட்சிக் கட்டிலில் அமரவே கூடாது. மக்கள் நலனைப் புறக்கணிக்கும் ஆட்சியாளன் மாபெரும் பாவி ஆவான்.

‘‘ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்’’ என்பது நபிமொழியாகும். (புகாரீ)

பொறுப்பை நிறைவேற்றத் தவறிய ஆட்சியாளனுக்கே இந்தக் கதி என்றால், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சொந்த வளத்தைப் பெருக்கிக்கொள்ளும் ஊழல்வாதிகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

நபி (ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையைப் பாருங்கள்:

முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகின்றான். (புகாரீ)

8. எல்லாவற்றையும்விட, ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் பதவி ஆசை பிடித்தவராக இருக்கலாகாது.

நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அப்துர் ரஹ்மான்! ஆட்சிப் பொறுப்பை கேட்டுப்பெறாதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் அது உங்களுக்கு அளிக்கப்பட்டால், அது தொடர்பாக உங்களுக்கு (இறை) உதவி கிடைக்கும்’’ என்று சொன்னார்கள். (முஸ்லிம்)

9. இந்த இலக்கணங்களும் உயர் பண்புகளும் ஆட்சியாளர்களிடம் அமைய வேண்டுமென்றால், அவர்களிடம் ‘இறையச்சம்’ (தக்வா), மறுமை நம்பிக்கை, நபிவழி (சுன்னத்) வாழ்க்கை ஆகியவை இருக்க வேண்டும். அத்தகைய ஆட்சியாளர்களுக்கு இறைவனிடம் உயர் தகுதியும் பெரிய பதவியும் நிச்சயமாகக் கிடைக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்மையான ஆட்சியாளர்கள், அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளி மேடைகளில் இருப்பார்கள். அவர்கள் தமது நிர்வாகத்திலும் குடும்பத்திலும் தாம் பொறுப்பேற்றுக்கொண்டவற்றிலும் நியாயமாக நடந்துகொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்). (முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்துள்ளார்கள்:

இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமப்படுத்தினால், அவரை நீயும் சிரமப்படுத்துவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்துகொள்வாயாக! (முஸ்லிம்)

குடிமக்களின் பொறுப்பு

இஸ்லாம் வகுத்த அரசியல் இலக்கணத்தில், நல்ல குடிமக்களுக்கான இலக்கணமும் அடங்கும். 1. ஆரம்பமாக, அவர்கள் நல்ல ஆட்சியாளர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். 2. அடுத்து நன்மைகளில் மட்டுமே ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்பட வேண்டும்; பாவத்தில் கட்டுப்படக் கூடாது.

3. சட்டத்தை -இஸ்லாமிய அரசியல் சாசனத்தை- முஸ்லிம் குடிமக்கள் மதித்து நடக்க வேண்டும். 4. பொது அமைதி, சட்ட ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது.

5. நாட்டின் வளர்ச்சிக்கும் பொது நன்மைக்கும் உறுதுணையாகச் செயல்பட வேண்டும்.

(நன்றி: பாக்கியாத் 150ஆம் ஆண்டு மலர்)