Sunday, April 25, 2021

https://youtu.be/kxvfLznUp-8
https://youtu.be/SRT9q_WGD38
https://youtu.be/FwlMGAAKJUA

Monday, April 12, 2021

மொழிபெயர்ப்பு ஒரு தனிக்கலை

*மொழிபெயர்ப்பு  ஒரு  தனிக்கலை*
                                              *ஆர்.ஷண்முகசுந்தரம்*

கிட்டத்தட்ட நூறு நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறேன்.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே சில கவிதைகள் யாத்திருக்கிறேன். உரைநடைக்கவிகளும் எத்தனை எத்தனையோ சமைத்ததுண்டு. ஆனால், அழகான கவிதைகள், நாவல்களில் ஆங்காங்கு வரும் இடங்களில் நான் கைவைக்க அஞ்சுவேன். பாடலின் பொருளைக் கூறித் ‘தக்காரை’க் கொண்டே அப்பணிபுரிதல் என் வழக்கம்.

சொந்த பாஷையில் நன்கு எழுதக்கூடிய ஆற்றல் பெற்றவராக இருந்தால் அவர் செய்கின்ற மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்கும்.

மூல பாஷையில் – எந்தத் துறையிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்கிறாரோ – அத்துறையில் உள்ள புத்தகங்களை அவர் ஏராளமாகப் படித்திருக்க வேண்டும். கவிதைகளை மொழிபெயர்ப்பவர் நிச்சயம் கவிஞராகத்தான் இருக்க வேண்டும்.

விஞ்ஞான நூல்களை, அத்துறையில் ஈடுபாடும் பயிற்சியும் பெற்றவர் செய்தால்தானே சிறப்பாக இருக்கும்? சும்மா ‘மேதை’ ஒன்றையே நம்பிச் செய்கிற காரியம் அன்று இது. தன்னிடமிருக்கும் அபார எழுத்துத் திறன், சக்தி எல்லாக் கட்டங்களிலும் கை கொடுக்காது. 

*(அப்படியிருக்க, முறைப்படி மார்க்கம் கற்காத - அத்துறையில் ஈடுபாடும் பயிற்சியும் பெறாத ஒருவர், மார்க்கம் தொடர்பான ஆங்கிலம், அல்லது உருது மொழியிலிருந்து மொழிபெயர்த்தால் எப்படி அது சிறப்பாக இருக்கும்?)*

ஆக, பரிபூரண ஈடுபாடும் அனுபவமும் இல்லாத எந்தக் காரியமும் அரைவேக்காடாகத்தான் இருக்கும்;

வாசகருக்கு மொழிபெயர்ப்பு என்ற உணர்வே ஏற்படா வண்ணம் மொழிபெயர்ப்பு அமைய வேண்டும். அப்படிப்பட்ட ‘நிறை’வை நிரப்புவது எப்படி? தாய்மொழியில் மொழிபெயர்ப்பளாருக்கு நல்ல ஞானமும், இனிய நடையும், எதையும் சரளமாக எடுத்துக்கூறும் ஆற்றலும் அவசியம் வேண்டும்.

மொழிபெயர்ப்பாளாருக்கு வார்த்தைகள் சில விளங்கவில்லையா? அகராதி இருக்கவே இருக்கிறது. என்னதான் ‘புலமை’ பெற்றிருந்தாலும்.அனுபவமே ஏற்பட்டிருந்தாலும் எவ்வளவோ வார்த்தைகளைப் பார்க்க அகராதியின் துணை அவசியம் தேவை. அதை முதலிலேயே பார்த்துவைத்துக்கொள்ள வேண்டும்.

இருமொழியிலும் ‘புலமை’ இருக்கின்ற காரணத்தால், தமிழில் எழுதிவிட்டால் மட்டும் அது தமிழாகிவிடாது; மொழிபெயர்ப்பும் ஆகிவிடாது.சரியான  உணர்ச்சிகளைக் கொண்டுவந்துவிட்டதாகவும் கூறிக்கொள்ள முடியாது.

இதற்காகத்தான், தாய்மொழியில் மொழிபெயர்ப்பாளருக்குள்ள சக்திதான் மொழிபெயர்ப்பிலும் பிரதிபலிக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது. உயிர்த்துடிப்பும் மூர்ச்சனையும் பெயர்ப்பில் துள்ளிக் குதிக்க வேண்டும்.

மூல நூலாசிரியர் சொல்ல முயன்றது? என்ன அவர் நினைத்தவற்றையெல்லாம் – எழுத்தில் சேமித்து வைத்திருப்பதை – மொழிபெயர்ப்பிலும் கொண்டு வந்துவிட்டோமா என்பதை ஒரு கணம் ஆற அமர பெயர்ப்பாசிரியர் சிந்தித்துப்பார்த்து - திருப்தி அடைந்தால் – அது தெளிவான மொழிபெயர்ப்பாக இருக்கும் என நம்பலாம்.

எக்காரணம் கொண்டும், இஷ்டம்போல் எழுதியோ, கதை விட்டோ, ஒதுக்கியோ, கூட்டிக்குறைத்தோ மூல நூலாசிரியருக்குத் துரோகம் செய்துவிடக் கூடாது மொழிபெயர்ப்பாளர்.

*(மூலநூல் மார்க்கம் சமந்தப்பட்டதாக இருப்பின் மொழிபெயர்ப்பாளர் செய்யும் தவறு, மார்க்கத்திற்கே செய்யும் துரோகமாகிவிடும். எச்சரிக்கை)*

எல்லாத் தொழில்களுக்கும் எல்லாத் துறைகளுக்கும் பெரும்பாலும் பயிற்சி உண்டு . மொழிபெயர்ப்புச் செய்வதெப்படி என்பதற்கும் பயிற்சி அளிக்கிறார்கள். ஆனால் , இவை யாவும், சொல்லிக்கொடுத்த சொல்லும் கட்டிக் கொடித்த கட்டுச்சோறும் எவ்வளவு தூரகத்திற்கு வரும்? என்ற கணக்கில்தான் முடிகின்றன .வாட் பயிற்சி பெறுவோரெல்லாம் மாவீரக்களாகத் திகழ்வதில்லை.

மொழிபெயர்ப்புச் செய்வதே ஒரு தனிக்கலை! மொழிபெயர்ப்புச் செய்வதெப்படி என்பதை எழுதிக்காட்டுவது அதனிலும் நுட்பமானகலை அன்பை எழுதிக்காட்டுவது சிரமமான காரியம். இதயத்தின் மூலம்தான் சிலவற்றை அறிந்துகொள்ள வேண்டும். மணிக்கணக்கில் பேசலாம். பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் நமது நெஞ்சமே நமக்குத் தெளிவாகத் துலங்காமல் இருக்கும்போது , பிறமொழி ஆசிரியரின் மனத்தை எவ்வாறு படம் பிடிப்பது? 

சுருக்கமாகச் சொல்லப்போனால், மூல ஆசிரியரே மொழிபெயர்க்கப்படும் மொழியில் எழுதி இருப்பாரேயானால் . குறிப்பிட்ட ஒரு கருத்தை எம்மாதிரி எழுதி இருப்பாரோ அம்மாதிரிதான் மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.

(‘எழுதுவது எப்படி’ எனும் நூலில் இருந்து – காலச் சுவடு– ஏப்ரல்-2021)

Monday, April 05, 2021

தனிமனித உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை

~~~~~~~~~~~~~~~~~~~
தனிமனித உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை
~~~~~~~~~~~~~~~~~~~
தனிமனித உரிமைகளில் வாழ்வாதாரம் , கல்வி, கலாசாரம், கருத்துச் சுதந்திரம், வழிபாட்டு உரிமை,  பரைப்புரை , எல்லாவற்றுக்கும் மேலாக குடியுரிமை ஆகியன அடங்கும்.

வாழ்வாதாரத்தைப் பொறுத்தவரை, அவரவர் உழைப்பு, உத்வேகம், வாய்ப்புகள் முதலான பக்க துணைகளைப் பொறுத்து தரம் வேறுபடலாம். மக்களை ஆளும் அரசுத் துறைகள் அன்றைய காலச் சூழ்நிலைகளுக்கேற்ப குடிமக்களின் வாழ்வாதாரத்திற்குக் கைகொடுக்க வேண்டும்.

கல்வி,சுகாதாரம்,போக்குவரத்து போன்ற பொதுத் துறைகளில் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது மக்களாட்சியின் தலையாய கடமையாகும்.

இதற்கெல்லாம் அடிகோலுவது எதுவென்றால் , குடியுரிமையும் நடமாடும் உரிமையுமதான். இந்த உரிமைக்கே வேட்டுவைக்கும் அரசியல் கட்சிக்கோ, அதன் கூட்டணிக் கட்சிக்கோ வாக்களிப்பது  தன் தலையில் தானே மண்ணை வாரிப் போடுவது தவிர வேறென்னவாக இருக்க முடியும்? 

அவ்வாறே, மதச் சுதந்திரம் என்பது, அரசியல் சாசனம் பிரிவு-25 வழங்கியுள்ள வலுவான உரிமையாகும். இதில் கைவைத்து, மதத்தின் சட்டங்களை மிருக பலம் கொண்டு மாற்றி,. ஒரு சமூகத்தின் மதக்கோட்பாட்டைச் சீரழிப்பது எந்த வகை ஜனநாயகம்? இந்த  வெறியர்களுக்கோ , இவர்களின் சாரபுக் கட்சிகளுக்கோ வாக்களிப்பது ஒருவர் தம் சமய நம்பிக்கையைப் புதைப்பதற்குச் சமம் அல்லவா? 

தனியாக மாட்டிக்கொண்ட அப்பாவி ஒருவனை, அவன் பெயரைக் கேட்டு சமயத்தைப் புரிந்துகொண்டு, அவன் ஏற்காத நம்பிக்கையை அவன்மீது வலுக்கட்டாயமாகத் திணிப்பதும் மறுத்தால் ஆயுதங்களால் அடித்துத் துவம்சம் செய்வதும் இந்தக் கொடுமைகளை அருகில் இருந்தே கண்டும் மெளனமாக இருக்கும் காவல்துறையைக் கொண்ட அரசு அமைய வாக்களிப்பது முட்டாள்தனம் அல்லவா?

ஒரு மொழிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து மற்ற மொழிகளை அழிக்கவும் , அவர்கள் விரும்பும் மொழிக்காரர்களுக்கே கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வாய்ப்புகள் அளித்து மற்றவர்களை நிர்க்கதியாக்கும் கட்சி மக்களாட்சி தருமா? இக்கட்சிக்கோ அதன் நட்புக் கட்சிக்கோ வாக்களிப்பது நம் அடுத்த தலைமுறையை நடுத்தெருவில் நிறுத்திவிடாதா?

யோசிக்க இனி நேரமில்லை.இப்போதே முடிவெடுங்கள். பாசிச சக்திகளைத் தோற்கடியுங்கள். ஜனநாயக, மனித மாண்புகளை மதிக்கின்ற, வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற, இந்தியர்கள் யாவரையும் ஒன்றாக நடத்துகின்ற, சுருஙகச் சொன்னால் மனிதாபிமானமிக்க கட்சியை, கூட்டணியை ஆதரித்து வாக்களியுங்கள்.

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று சொல்லும் பூத் அதிகாரி பேச்சைக் கேட்டு திரும்பிவிடாதீர்கள். உங்கள் ஐடிகளைக் கையோடு கொண்டு போங்கள். காட்டுங்கள். வாதாடி உங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டிவிட்டு வாருங்கள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அன்புடன் உங்கள்
கான் பாகவி