Saturday, December 22, 2018

சர்வாதிகாரத்தின் உச்ச கட்டம்

+++++++++++++++++++
# சர்வாதிகாரத்தின்
                 உச்ச கட்டம் #
+++++++++++++++++++
ஒரு நிறுவனம் அரும்பாடுபட்டு பெருநிதி செலவிட்டு ஒரு பிராஜக்ட்டை வெற்றிகரமாகத் தயாரித்து ,தன் விசுவாச ஊழியர்களுக்குக் கணினியில் அனுப்பிவைத்துக் கருத்துக் கேட்கிகறது.இது எப்படியோ போட்டி நிறுவனத்திற்குக் கசிய, பிராஜக்ட் உருவாக்கிய நிறுவன ஊழியர்களுக்கு வலைவீசுகிறது.அவர்களோ எதற்கும் மசியாத உண்மை விசுவாசிகள் என்பதை நிரூபிக்கின்றனர்.

இந்நிலையில்தான், நடுவண் அரசின் பத்து விசாரணை அமைப்புகளின் அதிகார வீச்சு போட்டி நிறுவனத்தின் நினைவுக்கு வந்தது.
ஐபி. என்சிபி. இடி. சிபிடிடி .டிஆர்யூ. என்ஐயூ .ரா. முதலான பத்து அரசு அமைப்புகள் எந்த கம்ப்யூட்டரையும் கண்காணிக்கலாம்.ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு ஏழாண்டு சிறையும் அபராதமும் விதிக்கப்படும் என்ற மத்திய அரசின் புதிய சட்டம் போட்டி நிறுவனத்திற்கு வசதியாகப் போய்விட்டது.

இந்த அமைப்புகளின் அதிகாரிகளுக்குத் தரவேண்டியதைத் தந்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் பிராஜக்ட் உருவாக்கிய கம்பெனியின் டேட்டா போட்டி கம்பெனியின் பாக்கெட்டில்.

இது என்ன அநியாயம் ?இது மட்டுமா ? கிளைண்டுகளுக்கு இது தெரிந்தால் இந்திய ஐடி கம்பெனிகளுக்கு யார் பிராஜெக்ட் கொடுப்பார்கள்? அல்லது நம் அதிகாரிகள் அப்படியொல்லாம் செய்யமாட்டார்கள் என்று சொல்வதற்கு அவர்கள் என்ன சொக்கத் தங்கமா?

சுருங்கச் சொன்னால் சர்வாதிகாரத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறது இந்த அரசாங்கம்.
+++++++++++++++++++

Monday, December 03, 2018

# காலச்சுவடு இதழுக்கு கான் பாகவி கடிதம் #

# காலச்சுவடு இதழுக்கு கான் பாகவி கடிதம் #

*வாசகர் கடிதம்*

‘அரசு – ரிசர்வ் வங்கி மோதல்கள்’ எனும் மொழிபெயர்ப்புத் தலையங்கம் கண்டேன்.

தன்னாட்சி அதிகாரம் படைத்த ரிசர்வ் வங்கியின் உள்விவகாரங்களில் மத்திய அரசு தன் எல்லையை மீறி தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம்! ஆர்.பி.ஐ. சட்டம் 1934இன் 7ஆம் பிரிவின்படி மத்திய அரசுக்குச் சகல உரிமைகளும் உண்டு என்ற வாதம் இன்னொரு பக்கம்! இரு அதிகார மையங்களும் உள்ளுக்குள்ளே ஒன்றையொன்று அனுசரித்தே முடிவெடுக்கின்றன என்ற தகவல் மற்றொரு பக்கம்!

இவற்றில் எது எதார்த்தம் என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து அறியும் நிலையில் சாமானிய இந்தியக் குடிமகன் இல்லை. அவன் முன்னுள்ள கேள்வியே வேறு. வங்கியல்லாத (தனியார்) நிதிநிறுவனங்களுக்குக் கடன் கொடுத்தது, மோசமான நிதிநிலைமையில் இருக்கும் மூன்று பொதுத்துறை வங்கிகளுக்கு பி.சி.ஏ. விதியை விட்டுக்கொடுத்தது. ஆர்.பி.ஐ.யின் மொத்த இருப்பையும் உபரியையும் அரசுக்கு மாற்றுவதற்கான அசாதார நடிவடிக்கை ஆகியனமூலம், நாட்டின் ஒட்டுமொத்த நிதிநிலைமைக்குப் பாதிப்பா, இல்லையா? பாதிப்புதான் என்றால், அதற்கு யார் பொறுப்பு? பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ள அந்தப் பொறுப்புதாரி நோக்கிச் சட்டத்தின் கரங்கள் நீண்டனவா?

இதுதான், கடைசி இந்திய வாக்காளனின் கவலையெல்லாம்! மொத்த வாராக்கடன்களில் முக்கால் பங்கை விழுங்கிய பெரிய வர்த்தக கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு, திரும்பிவராத இவ்வளவு பெரிய தொகையை அளிக்க ஊக்குவித்த அதிகார மையம் அடைந்த அணுகூலங்கள் என்ன? இந்த அபத்தமான முடிவை, யாரைக் கேட்டுப் பொதுத்துறை வங்கிகள் எடுத்தன? இத்தனை கோடி வாராப் பணத்திற்கு ‘மஞ்சள் நோட்டீஸ்’ ஒன்றுதான் விடையா? ஐந்தும் பத்தும் வாங்கிவிட்டுக் கடனைத் திருப்பித் தராத அப்பாவி விவசாயிமீது பாயும் சட்டம், இந்த அறக்குற்றவாளிகள்மேல் வீரியத்தோடு பாயாதது ஏன்?

இதற்கு முன்னர் ஒரு தடவை (2014-16) ரிசர்வ் வங்கி தன் வருமானம் முழுவதையும் ‘உபரி’ என்று சொல்லி அரசுக்குத் திருப்பிவிட்டது; அதுவும் அரசு கொடுத்த நெருக்கடியின்பேரில். இதைக் காட்டிலும் 63 விழுக்காடு கூடுதலான உபரியைக் கைப்பற்ற 2018 நிதியாண்டில் அரசு ஒரு கொள்கையைப் பயன்படுத்தியது என்றால், இது எதில்போய் முடியும் என்ற அச்சம் ஏற்படுகிறதா, இல்லையா? வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத பெரிய கார்ப்போரேட் நிறுவனங்களிடம் முக்கிய அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதைப் பார்க்கும்போது, தேசத்தின் பொருளாதாரம் அவர்களிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டதோ என்ற ஐயத்தை இது தருகிறதா, இல்லையா?
+++++++++++++++++++

Thursday, November 08, 2018

செய்தித்தாள்களின் இடத்தை வேறு எதனாலும் நிரப்ப முடியாது'எனும் செய்தி படித்தேன்.எனக்கு வயது 65.கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தினசரி வாசிப்பவன். 

வெளியூர் செல்லும்போது வாசிக்க முடியாது போனால் ஊர் திரும்பியவுடன் விட்டதைப் படித்துவிடுவேன்.காலையில் ஒரு கையில் தேநீரும் மறுகையில் பேப்பருமாக இருக்கும் ரகம்.

தினசரிக்கு விடுமுறை என்றால் அன்றைய நாள் முழுக்க எதையோ தொலைத்துவிட்ட பரிதவிப்பு ஏற்படும்.விடுமுறை என்பதை மறந்துவிட்டு செய்தித்தாள் போடப்படும் இடத்தைப் பார்த்து ஏமாந்து திரும்பிய நாட்கள் பல.

தகவல்களை முழுமையாக அறியவும் கூடுதல் அறிவுக்காகத் தலையங்கம், கட்டுரைகள் வாசிக்கவும் செய்திகளின் உண்மைத் தன்மையை எடைபோடவும் மிகையில்லாதவகையில் தகவல்களை அறியவும் தினசரிகளைப் போல் நல்ல வழிகாட்டி வேறு இருக்க முடியாது.

எல்லாவற்றையும்விட வாசிப்பில் இருக்கும் சுவை அலாதியானது.நின்று நிதானித்து வாசித்து விஷயத்தை உள்வாங்கி மனதில் பதிய வைப்பது போல் கற்றலுக்கான சிறந்த வழி வேறென்ன இருக்க முடியும்?

- அ. முஹம்மது கான் பாகவி

இராயப்பேட்டை, சென்னை

Tuesday, November 06, 2018

ஒரு மொழிபெயர்ப்பாளரின் சவால்கள

*ஒரு மொழிபெயர்ப்பாளரின் சவால்கள்*

- அக்களூர் இரவி (Akkalur Ravi)

மொழியாக்கத்தில் உள்ள முதலும் பெரியதுமான சவால், ஒரு மொழியிலுள்ள ஒரு படைப்பைத் திருப்திகரமான முறையில் இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்வது.

சுனில் கில்நானியின் Idea of India புத்தகத்தை மொழிபெயர்த்தபிறகு முழுவதுமாக ஒருமுறை படித்துப் பார்த்தேன். முந்தைய நூல்களோடு ஒப்பிடும்போது இதை நன்றாகச் செய்திருப்பதாகவே தோன்றியது என்றாலும், இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்னும் தவிப்பும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.  முழு நேரத்தையும் மொழிபெயர்ப்புக்காக அர்ப்பணிப்பவர்களே திணறும்போது, ஆர்வத்தால் நேரம் ஒதுக்கி செய்பவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

அந்த வகையில், ஒரு மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ளவேண்டிய மிக முக்கியமான சவால், மொழிநடை. ஒரு மொழிபெயர்ப்பாளன், மூல ஆசிரியனைச் சார்ந்து, அவன் பார்வையிலேயே அந்த மொழியாக்கத்தைச் செய்ய வேண்டுமா; அல்லது அந்த நூலை விலை கொடுத்து வாங்கி படிக்கப்போகும் வாசகன் சலிப்படையாமல் படிக்கும் (புரிந்து கொள்ளும்) வகையில்,  எளிமையாக அம்மொழியாக்கம் இருக்க வேண்டுமா?

மூல ஆசிரியனின் மொழிநடையில், அவன் பார்வையில் ஒரு படைப்பு அமைவதுதான் சிறப்பு என்றாலும், வாசகனைக் கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும் மொழிபெயர்ப்பு தேக்கமடைந்துவிடும் என்பதே யதார்த்தம். ஒரு நூல் அதிகம் விற்பனையானால்தான் அந்நூலின் பதிப்பாளர் ஊக்கம் அடைவார்.  நன்றாக விற்பனையாகவேண்டுமானால், எளிமையான நடையில் ஒரு மொழிபெயர்ப்பு அமைவது முக்கியம்.

படிப்போர்க்குச் சலிப்பேற்படுத்தாத, எளிமையான மொழிபெயர்ப்புக்கு, அதிகமான கால அவகாசம் தேவைப்படும். இந்தக் காலஅவகாசம் எப்போதும் கிடைப்பதில்லை. மிக விரைவாக முடித்துக்கொடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் உள்ளாவதுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், முழுமையாகவும் திருப்திகரமாகவும் அந்த மொழிபெயர்ப்பு அமைவது அரிது.

பெரும்பாலும் ஆங்கில மூல நூல்களில், கலவை வாக்கியங்கள் மிக அதிகம் இருக்கும். ஒரு பத்தி முழுவதுமே ஒரே வாக்கியம் நிறைந்திருக்கும். ஒரு பாணியாகவே எழுத்தாளர்கள் பலர் இம்முறையைப் பின்பற்றுகின்றனர். மிகச்சிறந்த எழுத்துகளாக இவையே கருதப்படுகின்றன. அவ்வளவு ஏன், தமிழிலேயே, ‘இலக்கிய நயத்தோடும்’ ‘சித்தாந்த அடிப்படையிலும்’ எழுதப்படும் கட்டுரைகளை ஒருமுறைக்கு இருமுறை படித்தால்தான் விளங்குகிறது. இப்படிப்பட்ட நூல்களை மொழிபெயர்க்கும்போது மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பில் ஆழ்ந்த அனுபவமும், விரிவான வாசிப்பனுபவமும் கைகூடியிருந்தால்தான், இப்படிப்பட்ட கடினமான சொற்றொடர்களை மொழிபெயர்க்கமுடியும்.  நீண்ட வாக்கியங்களை நீண்டதாகவே மொழிபெயர்க்கவேண்டும் என்றில்லை. ஆனால், சொற்றொடர்களை உடைத்து எழுதும்போது, மூல ஆசிரியன் வெளிப்படுத்த விரும்பும் கருத்து மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கற்பனை படைப்பாக இருந்தாலும் சரி, கற்பனை சாராத படைப்பாக இருந்தாலும் சரி.  மூல ஆசிரியரின் பார்வையில், அவரது முதன்மை  நோக்கம் சிதைவுறாத வகையிலும் மொழியாக்கம் செய்ய வேண்டும்.  படைப்பாளிக்கும் மொழிபெயர்ப்பாளனுக்கும் இருக்கும் இந்த  இடைவெளி சரியாக நிரப்பப்பட வேண்டும். எழுத்தாளன் அந்த நூலை எந்தத் தருணத்தில் எழுதினான்? அவனது நோக்கம் என்ன? படைப்பு, அரசியல் சார்ந்ததா அல்லது சமூகம் சார்ந்ததா? அவனது நோக்கத்தைத் திசை திருப்பாமல் மொழிபெயர்க்கமுடியுமா? உதாரணத்துக்கு, மூல நூலாசிரியர் ஒரு வலதுசாரியாகவும், மொழிபெயர்ப்பாளர் இடதுசாரியாகவும் இருக்கும் பட்ச்ததில், மொழிபெயர்ப்பாளர், சிந்தனை சிதைவின்றி மொழிப்பெயர்க்கமுடியுமா?

மூல ஆசிரியர் உருவகமாகப் பயன்படுத்தும் சொற்களை, பிரதேச அடிப்படையிலான சிறப்புச் சொற்களை, பிரத்தியேகமான உருவகங்களை, மூல ஆசியரின் வாழ்க்கைச் சூழலை, சமூகச் சூழலை, அரசியல் சூழலை, படைப்பின் பின்னனியை நம்மால் உணரமுடிகிறதா? இந்தப் புரிதல் மிகவும் அத்தியாவசியமானது. அப்படி ஒரு படைப்பை மொழிபெயர்க்கும்போது, பல சொற்கள், சொற்றொடர்கள் மொழிபெயர்ப்பாளருக்குப் புதியவையாக இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில், ஒரு மொழிபெயர்ப்பாளர் விரிவான தேடலில் ஈடுபடவேண்டியது அவசியம். இணையத்தின் மூலமாகவோ புத்தகங்களின் மூலமாகவோ அப்படிப்பட்ட தேடலை அவர் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

சில இடங்களில், ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தனிச்சொலைத் தமிழில் கொண்டுவருவது கடினமாக இருக்கலாம். ஆகவே விரித்து எழுதவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  ஆங்கிலத்தில் 100 பக்க அளவு கொண்ட ஒரு படைப்பைத் தமிழ்படுத்தும்போது, 150 பக்கங்களுக்கு நீண்டுவிடுவது இதனால்தான்.  முடிந்தவரை குறைவான பக்கங்களில், எளிமையாக செய்யப்படும் மொழிபெயர்ப்புகளே வெற்றி பெறுகின்றன.

எவ்வளவுதான் கவனமாக செய்தாலும், இத்துறையில் அனுபவம் உள்ளவர்களைக் கலந்தாலோசித்து கொண்டாலும்,  சில இடங்களில் கவனச் சிதைவினால் தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. இந்த இடத்தில், காபி எடிட்டிங் செய்வோரின் பணி முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு எழுத்தாளர் தனக்குப் பிடித்தமான தளத்தில் மட்டுமே இயங்குகிறார். பிடித்தமான விஷயத்தை மட்டுமே எழுதுகிறார். அரசியல், பொருளாதாரம்,  கதை, கவிதை, கட்டுரை, நாவல் என்று தனக்கான ஒரு தளத்தைத் தேர்ந்தடுத்து அதில் மட்டும் கவனம் செலுத்துவது ஒரு படைப்பாளிக்குச் சாத்தியமாகிறது. ஆனால், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அப்படிப்பட்ட நிலை அமைவதில்லை.  சுய முன்னேற்றம், சுயசரிதை, பொருளாதாரம், அரசியல், இலக்கியம் என்று பல துறைகள் சார்ந்த நூல்களை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, ஒரு மொழிபெயர்ப்பாளர் தொடர்ந்து தன் திறமையையும் தகுதியையும் வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.  ஒவ்வொரு மொழிபெயர்ப்பும், அறிவையும் அனுபவத்தையும் விரிவடையச் செய்யும் பாடமாகவே அமைகிறது.  ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒவ்வொரு பிரதியையும் புதிதாக எடுத்துக்கொள்கிறார். ஒவ்வொன்றில் இருந்தும் பாடங்கள் படித்துக்கொள்கிறார். ஒவ்வொன்றிலும் இருந்து அனுபவம் பெற்றுக்கொள்கிறார்.

எனவே, ஒரு படைப்பாளரைவிடவும் ஒரு மொழிபெயர்ப்பாளர் அதிக சவால்களைச் சந்திக்க நேர்கிறது. மூல ஆசிரியரின் இடத்தில் தன்னைப் பொறுத்திக்கொண்டு, மூல நூலின் சிறப்பை மீண்டும் உருவாக்குவது சாமானியமான செயல் அல்ல. கூடுவிட்டு கூடு பாய்வதைப் போன்ற அற்புதம் அது.

Courtesy: http://www.tamilpaper.net

அருமையான மெய்யான கட்டுரை.ஆங்கிலம் எனும் இடத்தில் அரபி என்று பாவித்துக்கொண்டால் எங்கள் கஷ்டம் புரியும்.அதிலும் குர்ஆன்,ஹதீஸ் எனும்போது இன்னும் கடினமான சிரத்தை தேவை.இந்நிலையில் அவசரப்படுத்துவதும் வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுகிறது என அவதூறு கற்பிப்பதும் எந்த வகையில் நியாயம்?

Tuesday, October 30, 2018

வாசகர் கடிதம்


வாசகர் கடிதம்

‘ஆமேன்’ எனும் தலையங்கம் கண்டேன். தலையங்கத்தின் கடைசிப் பத்தியில், “அது மீண்டும் கழுமரத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது” எனும் வரியைப் படித்து முடிக்கும்போது, நம்மையும் அறியாமலேயே நாவு ‘ஆமேன்’ என மொழிகிறது. சந்தைப் பொருளாதாரத்தின் செல்வாக்கும் நுகர்வுக் கலாசாரத்தின் செல்வாக்கும் திருச்சபைகளில் மட்டுமன்றி, அனைத்துத் தலைமைப் பீடங்களிலும் நிலவுகிறது என்பதே எதார்த்தமாகும். ஆன்மாவுக்கு ஆனந்தமளிப்பதல்ல; சரீரத்திற்குச் சுகமளிப்பதே தேவை என்ற மனப்போக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருக்கிறது என்பதுதான் நடைமுறையாக உள்ளது.

பொதுவாகச் சமயத் தலைவர்கள், வழிகாட்டிகள், போதகர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுவோர் இன்றைக்கு மணிக்கணக்கில் ஆக்ரோஷமாகவும் ஆங்காரத்தோடும் நீண்ட சொற்பொழிவாற்றுகிறார்கள்; மக்கள் மதிமயங்கும் அளவுக்குத் தகவல்களைக் கொட்டித் தீர்க்கிறார்கள்; சமயக் கேட்பாடுகளுக்குப் புதுப்புது வியாக்கியானங்கள் சொல்லி அசத்துகிறார்கள். ஏற்ற இறக்கத்துடன் அவர்கள் ஆற்றும் உரைகளைக் கேட்டு, அப்பாவி மக்களும் ஆஹா, ஓஹோ என வானளாவப் பாராட்டுகிறார்கள்; பெரிய இடத்தில் வைத்துப் போற்றுகிறார்கள்.

ஆனால், பைபிளோ, பகவத் கீதையோ, குர்ஆனோ கூறும் அப்பழுக்கில்லாத தூய தனிமனித வாழ்க்கை நெறி, அப்போதகர்களில் பலரிடம் மருந்துக்குக்கூட இருக்கிறதா என்பது கேள்விக்குறியே! தங்கள் திறமைக்குக் கிடைக்கும் பெயரையும் புகழையும் தவறாகப் பயன்படுத்தி பொருளாதார, பாலியல் குற்றங்களில் துணிச்சலோடு ஈடுபடுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ‘வன்கலவி அல்ல; ஆன்மிகச் சங்கமம்’ என்று ஃபிராங்கோ முல்லைக்கல் சர்வசாதாரணமாகச் சொன்னது இந்த வகை துணிச்சல்தான்.

பொதுமக்களும் பக்த கோடிகளும் –இந்தப் பெரிய மனிதர்களெல்லாம் ஆண்டவனின் அணுக்கம் பெற்றவர்கள் என- வெளித்தோற்றத்தை நம்பி, பொன்னையும் பெண்ணையும் அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். சூட்சுமம் அறியாத அப்பாவி மக்கள், இந்தப் பெரியவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கி, அழிவை உணர்ந்து தெளியும்போது, எல்லாம் கைமீறிப் போயிருக்கும். பொன்னையும் இழந்து, விலைமதிப்பற்ற பெண்மையையும் பறிகொடுத்துவிட்டு அங்கலாய்ப்பதில் புண்ணியம் என்ன?

திறமையும் நேர்மையும் ஒன்றல்ல; வல்லோர் எல்லாம் நல்லோர் அல்லர். மக்கள் இதைப் புரிந்துகொள்ளும்போதுதான், இந்த விபத்துகளிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும். திறமை பாராட்டுக்குரியது; வரவேற்கத் தக்கது. ஆனால், வணங்கத் தக்கதல்ல. எகிப்தை ஆண்ட மா மன்னன் இரண்டாம் ரம்சேஸ் (ஃபாரோ) பற்றி வேதங்கள் பேசும். மாபெரும் ஆளுமை கொண்ட பேரரசன். ஆனால், வேதங்கள் அவனைச் சபிக்கின்றன. இஸ்ரவேலர்களை அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தினான்; இறைத்தூதர் மோசேயைக் கொல்லத் திட்டமிட்டான். இறுதியாக, அவனும் அவன் படைபட்டாளங்களும் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிந்துபோயினர். பிந்தைய தலைமுறையினருக்குப் பாடமாக அமையட்டும் என்பதற்காக அவனது உடல் பாடமிடப்பட்டு, எகிப்து மியூசியத்தில் இன்றும் காட்சிப்படுத்தப்படுகிறது.

ஆளுமை வேறு; நேர்மை வேறு. ஆற்றல் வேறு; சான்றாண்மை வேறு. எண்ணத்தில் தூய்மை, செயலில் வாய்மை வந்துவிட்டால், அதுவே உண்மையான தகைமை ஆகும்.

3.10.2018                                                          அ. முஹம்மது கான் பாகவி

சென்னை-14.

Sunday, October 14, 2018

# 'மீ டூ' ஹேஷ்டேக் #

# 'மீ டூ' ஹேஷ்டேக் #
***********************.                                        அ.மு.கான் பாகவி                                                    

₹ பாலியல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு,தண்டனை வழங்கி, குற்றங்களைக் களைவதற்கு வழிவகை செய்யும் ஆக்கபூர்வமான குற்றவியல் சட்டங்கள் அநேகமான நாடுகளில் இல்லை.இருவரின் சம்மதுத்துடன் நடக்கும் பாலியல் அத்துமீறல் குற்றமாகவே கருதப்படுவதில்லை.பலவந்தமாக நடக்கும் பாலியல் உறவுகள் மட்டுமே குற்றம் என்கிறது பல நாடுகளின் சட்டம்.

பாலியல் பலுத்காரத்திற்கு வழங்கப்படும் தண்டனையாவது அர்த்தமுள்ளதாக இருக்கிறதா என்றால்,அதுவும் இல்லை.இக்குற்றத்தைப் புரியும் ஆண்கள் வெகுசுலபமாகத் தப்பித்துக்கொள்வதும் பெண்கள் மெளனமாகி ,மானத்திற்குப் பயந்து ஊமையாகிவிடுவதும் பழக்கமாகி விட்டன.

பாலியல் பலாத்காரத்தைவிடப் பாலியல் சீண்டல்கள் தான் தினசரி அசிங்கமாகிவிட்டது.இந்த அசிங்கத்தைத் தடுக்க யாரும் முன்வருவதில்லை என்பதைவிட , இதுவெல்லாம் சகஜம் எனும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனரோ என எண்ணத் தோன்றுகிறது.பாதிப்புக்குள்ளான பெண்களோ வெளியே சொல்ல முடியாமலும் குற்றவாளியைத் தண்டிக்க இயலாமலும் உள்ளுக்குள்ளேயே புகைந்து புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள் .

இந்நிலையில்தான்,2006ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஆப்பிரிக்கா பெண்போராளி 'தரனா பர்க்' என்பார் ஹேஷ்டேக் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதற்கு ' மீ டூ ' ( Mee too) என்று பெயர்.'நானும்தான் ' அல்லது 'நானும்கூட ' என்று பொருள்.பாலியல் தொல்லைகளுக்கு ஆளான பெண்கள் , தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளியே கொண்டுவருவதற்கு ஒரு தளமாக இது உருவெடுத்தது.இது சரியான முறைதானா என்பதில் விவாதம் இருக்கலாம்.

இந்தியாவில் சட்டம் படிக்கும் மாணவி 'ரயா சர்க்கார் ' என்பவர் டூ மீ பட்டியலை சென்ற ஆண்டு வெளியிட்டார்.ட்விட்டரிலீ பதிவான மீ டூ வைரலாகப் பரவிவருகிறது.வெளியே சொல்ல முடியாமல் குமுறிக் கொண்டிருந்த பெண்கள் பலர், தாங்கள் அனுபவித்த கசப்பான அனுபவங்களை இதில் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.

பெரும்பாலும் வேலைக்குச் செல்லும் பெண்களே இத்தகைய துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.அலுவல் கூட்டங்களில் பெண்களை முறைதவறித் தொடுவது, லிஃப்ட்டில் செல்லும்போது அத்துமீறுவது, பணியிடங்களில் பின்னால் வந்து உள்ளாடையை இழுப்பது , பாட்டு கற்றுக்கொள்ளப் போகும் சிறுமிகளின் நெஞ்சுப் பகுதியைத் தொடுதது போன்ற சில்மிஷங்களில் ஆண்கள் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.

ஆண்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு.பெண்களோ மனரீதியாகப் பாதிக்கப்பட்டுத் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.உண்மையில் ஆண்களைப் பீடித்திருக்கும் ஒருவகை மனநோய் இது.ஒரே ஒரு நிமிடம் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் தன் மனைவி,மகள், சகோதரியை வைத்துச் சிந்தித்தால் அந்த வக்கிரப் புத்திக்காரர்களுக்கு உறைக்குமோ என்னவோ !

ஆனாலும் யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால், இத்தகைய தொல்லைகளுக்கு இடாமிராதுதானே !ஆணோ பெண்ணோ யாரானாலும் முதலில் பார்வையைக் கட்டுப்படுத்த வேண்டும்.அடுத்து நாவுக்குக் கடிவாளமிட வேண்டும்.பேச வேண்டிய கட்டாயம் நேரும்போது வேண்டியதை மட்டும் சுரேக்கமாகப் பேசி விலகிவிட வேண்டும்.

தொடுதல் அல்லது உரசல் மோசமான ஆரம்பம்.கீழே விழுந்தவரைக் காப்பாற்றப் போகும்போது கூட தேவைக்கு அதிகமான ஸ்பரிசம் நாசத்தையே விளைவிக்கும்.எல்லாவற்றையும்விட ,அயல் ஆண் -பெண் தனிமையில் சந்திப்பதை இயன்ற வரைத் தவிர்க்க வேண்டும்.தவிர்க்க முடியாத கட்டத்தில்கூட ,ஆரோக்கியமான இடைவெளியில் நின்றே சந்திக்க வேண்டும்.அப்போதும்கூட இருவரும் அடக்கத்தோடும் நாகரிகத்தோடும்தான் நடந்துகொள்ள வேண்டும்.

வேலைக்காகத் திருமணத்தைத் தள்ளிப்போடுவது ,பிள்ளைப் பேற்றினை ஒதுக்கிவைப்பது ,பெற்ற குழந்தையை ஆயாவிடம் ,அல்லது ஹோமிடம் தள்ளிவிட்டுப் பணிக்குச் செல்வது , குழந்தைப் படிப்பிலும் வளர்ப்பிலும் அலட்சியமாக நடந்துகொள்வது... என  அடுக்கடுக்கான ஈடு செய்ய முடியாத  வாழ்வியல் இழப்புகளை ஏற்றுக்கொண்டு குடும்பத் தலைவி பணிக்குச் செல்ல வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வோண்டிய அவசியத்தை இந்த மீ டூ ஏற்படுத்திவிட்டது எனலாம்.

அரசும் நீதிமன்றங்களும் இந்தப் பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இனியும் முன்வராவிட்டால் , அடுத்த தலைமேறையின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.ஊடகங்கள் இத்தகைய பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை புகைப்படத்துடன் வெளியிட்டு அம்பலப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

ஆக,ஆண்களும் பெண்களும் ஒட்டுமொத்த சமூகமும் வாழையடி வாழையாக வரும் தனிமனித ஒழுக்கங்களையும் சுயக்கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிப்பது ஒன்றே இந்தப் பிரச்சினைக்கான ஒரே தீர்வாக இருக்க முடியும்.

அ.மு.கான் பாகவி/சென்னை

Friday, September 14, 2018

# نموذج ثالث من المقالات العربية #
+++++++++++++++++++
$ خطبة الرسول صلى الله عليه وسلم في حجة الوداع $
( عن مجلة  'المجلة العربية ')
**************************

© في موقف تاريخي خالد ، وفي مشهد مهيب رائع، وفي يوم من أيام الله،وفي ساحة عرفات ،وفي حجة الوداع ركب رسول الله صلى الله عليه وسلم ناقته القصواء، وهتف في الجموع الخاشعة التي تحيط به،يبلغ الناس وحي الله جل جلاله،ويلقي إليهم دستور الحياة.

حرص المصطفى صلى الله عليه وسلم على أن يوصيهم وصيته الجامعة ،فلعله لا يلقاهم بعد عامه هذا،ولعله لا يقف بينهم بعد موقفه هذا، وكان الذين استمعوا لهذه الخطبة العظيمة الجامعة نحو مائة ألف مسلم.تجمعوا على شكل مؤتمر موسع، ليسمعوا من قائدهم ومعلمهم محمد بن عبد الله عليه الصلاة والسلام.

وكان النبي العظيم صلى الله عليه وسلم حريصا على أن تصل كلماته إلى كل سمع،وتمس كل قلب،فكان يستعين برجل من صحابته هو ربيعة بن أمية بن خلف،فكان يصرخ في الناس بقول رسول الله صلى الله عليه وسلم حتى تذاع الخطبة في أرجاء الوادى الفسيح..

ولقد جمعت هذه الخطبة العظيمة أصول الدين وقواعد البر ومنهج السلوك، ونظمت علاقة الإنسان بالله تبارك وتعالى،ونفسه، والمجتمع الذي يعيش فيه، إنها أعلنت حقوق الإنسان قبل أن تعرف دساتير الارض ما هي حقوق الإنسان؟ إنها رسمت الطريق واوضحت المعالم وبينت حدود الله عز وجل.

قال رسول الله صلى الله عليه وسلم في أثناء تلك الخطبة:

أيها الناس! إن ربكم واحد وإن اباكم واحد كلكم لأدم ،وأدم من تراب... إن أكرمكم عند الله أتقاكم. وليس لعربي على عجمي فضل إلا بالتقوى... ألا هل بلغت اللهم فاشهد.

قالوا :نعم! قال: فليبلغ الشاهد الغائب.
( إن شاءالله)