Friday, December 06, 2013

சர்வதேசப் பார்வை



‘கத்னா’ பற்றிய ஃபிரான்ஸ் செய்தியும்
நம் மறுப்புக் கட்டுரையும்

ஐரோப்பா கூட்டமைப்பு நாடாளுமன்றம் முஸ்லிம்களும் யூதர்களும் காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் ‘கத்னா’ எனும் ‘சுன்னத்’ நடைமுறைக்குத் தடை விதித்து அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பாவில் முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு ‘கத்னா’ செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்கிறது அத்தீர்மானம்.

தீவிர வலதுசாரிக் கட்சிகள்தான் இத்தீர்மானம் நிறைவேறக் காரணம். தீர்மானத்திற்கு ஃபிரான்ஸ் இஸ்லாமிய மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆய்வே செய்யாமல் கொண்டுவரப்பட்ட தீர்மானமாகும் இது என்று மன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் சகரீ குறிப்பிட்டார்.

“பெண் குழந்தைகளுக்கு ‘கத்னா’ செய்வதால் ஏற்படும் பாதிப்புகளைக் காரணம் காட்டி, ஆண் குழந்தைகளுக்கும் தடை விதிப்பது பொருந்தாத செயலாகும்” என்றும் அவர் சாடினார்.

ஐரோப்பா கூட்டமைப்பு நாடாளுமன்றம், ‘கத்னா’ என்பது ஆண்களைக் கோரப்படுத்தும் செயலாகும். இதனால் ஆண்களின் இயற்கையான உரிமை –அதாவது பாலியல் சுகம்- மறுக்கப்படுகிறது என்று கருதுகிறதாம்!

‘கத்னா’வைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் இச்சட்டத்திற்கு ஆதரவாக 78 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் பதிவாயின. 15 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. “குழந்தைகளின் உடலுக்குச் சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் ‘கத்னா’வைக் குற்றமாக அறிவித்து, தண்டனை வழங்க உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நாடாளுமன்றக் கூட்டம் கேட்டுக்கொண்டது.

ஆனால், “இப்போது இப்பிரச்சினையைக் கிளப்பவேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது? யூத மற்றும் முஸ்லிம் சமூக மக்கள் தொன்றுதொட்டுச் செய்துவரும் ஒரு சமூகப் பழக்கத்தைத் திடீரெனக் குற்றமாக அறிவிப்பது, புதிராக இருக்கிறது” என இஸ்லாமிய மன்ற உறுப்பினர் கவலை தெரிவித்துள்ளார். (பின்வரும் கட்டுரை காண்க:)

சுகாதாரத்திற்கு ஒரு ‘சுன்னத்து’


- மௌலவி, அ.மு. கான் பாகவி

காலம் காலமாகக் கலாசாரங்களில் இருந்துவரும் சில பழக்கங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டிவருகின்றன. அறிவியல் காரணங்களை ஆராய்ந்து இவை உருவாக்கப்படவில்லை. பிற்காலத்தில்தான் இவற்றுக்கு அறிவியல் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றன.

இவற்றுள் ஒன்றுதான் ‘சுன்னத்து’ எனப்படும் விருத்தசேதனம் (Circumcision) எனும் பழக்கம். ஆண் குழந்தை பிறந்தவுடன், அல்லது பிறந்து சிறிது காலம் கழித்து ஆண்குறியின் முன்தோலை அகற்றுவதே ‘சுன்னத்து’ எனப்படுகிறது.

எகிப்தியரிடமும் யூதர்களிடமும் இப்பழக்கம் நீண்டகாலமாக இருந்துவருகிறது. கட்டாயம் கிடையாது என்றாலும் கிறித்தவர்கள் சிலரிடமும் இப்பழக்கம் உண்டு. அமெரிக்காவில் 8 முதல் 61 விழுக்காடு குழந்தைகளுக்கு சுன்னத்து செய்யப்படுகிறது. முஸ்லிம்கள் கட்டாயமாக இதைக் கடைப்பிடித்துவருகின்றனர்.

நாவிதரைக் கொண்டு முன்தோல் அகற்றும் முறை இன்றும் நடைமுறையில் இருந்தாலும் அறுவை சிகிச்சைமூலம் அகற்றப்படுவதே அதிகம். குழந்தைப் பருவத்தில் ‘சுன்னத்து’ செய்வதுதான் எளிதானது; பிறவி உறுப்பில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க வல்லது.

இதிலுள்ள மருத்துவப் பலன்களை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். ஆண்குறி புற்றுநோயை இது தடுக்கும் என்று கூறுகின்ற ஆய்வாளர்கள், சுன்னத்து செய்யாத ஆண்களுக்குச் சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர்.

அமெரிக்க மருத்துவ இதழ்களில் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் ‘சுன்னத்து’ தொடர்பாக வெளிவந்துள்ளன. அமெரிக்காவின் Family Physician இதழில் 1990 மார்ச்சில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது. வாஷிங்டன் இராணுவ மருத்துவமனை குழந்தைகள் பிரிவு தலைவர் பேராசிரியர் Wisewell இக்கட்டுரையை எழுதியிருந்தார். “சுன்னத்துச் செய்யாத குழந்தைகள் சிறுநீர் நோய்த்தொற்றுக்கு அதிகமாக ஆளாகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்விற்கு சுன்னத்து முறை வழிவகுக்கிறது –என 1988இல் கலிபோர்னியா மருத்துவக் கழக உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை தெளிவுபடுத்தியது. சுன்னத்துச் செய்வதால் குழந்தைகளின் பாலுறுப்பு சுகாதாரம் ஆயுள் முழுக்கப் பாதுகாக்கப்படுகிறது; முன்தோலில் நோய்க்கிருமிகள் சேர்வதை இது தடுக்கிறது – என்று இங்கிலாந்தின் பிரபல குழந்தைகள் மருத்துவர் டாக்டர் ஷவீன் கூறினார். ‘The New England Journal of Medicine’ எனும் இதழில் இதனை அவர் 1990ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார்.

பிரிட்டனின் மருத்துவ இதழான B.M.J. (1987) வெளியிட்ட ஆய்வொன்று, “யூதர்களிடமும் முஸ்லிம் நாடுகளிலும் பாலுறுப்பு புற்றுநோய் அரிதாகவே உள்ளது” என்று தெரிவித்தது.

சுன்னத்துச் செய்வதால் பல்வேறு பால்வினை நோய்களிலிருந்து தப்பலாம். ஆஸ்திரேலியாவில் நடந்த புதிய ஆய்வொன்று இதை உறுதி செய்கிறது. பரம்பரை தோல்நோய், கருப்பை நோய், மேகவெட்டை, மேகப்புண் ஆகிய பால்வினை நோய்கள் சுன்னத்துச் செய்யாதவர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன என்கிறது அந்த ஆய்வு. இதிலிருந்து சுன்னத்துச் செய்யாத ஆண்கள் மட்டுமன்றி, அவர்கள் உறவுகொள்ளும் பெண்களும் (கருப்பை நோய்மூலம்) பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிகிறது.


முஸ்லிம்கள்மீதான அமெரிக்காவின் பொய்ப்பிரசாரமும் நம் மறுப்புக் கட்டுரையும்


1980 முதல் இராக், ஆப்கானிஸ்தான், போஸ்னியா முதலான நாடுகளில் 4 மில்லியனுக்கும் (40 லட்சம்) அதிகமான முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளில் பெரும்பாலானவை பன்னாட்டுப் படைகளான நேட்டோவின் அடாவடித் தாக்குதலால் நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத் தக்கது.

இக்கொலைகள் அனைத்தும் நியாயமானவைதான் என மேற்குலக மக்களை நம்பவைத்துமுள்ளனர் என்பதுதான் கொடுமை! இவ்வாறு நம்ப வைப்பதற்கு அமெரிக்கா கையாண்ட மிகப்பெரும் சூழ்ச்சிதான், முஸ்லிம்கள்மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டு. இந்த நாடகத்தை அமெரிக்கா திட்டமிட்டே தொடர்ந்து அரங்கேற்றிவருகிறது.

மத்திய கிழக்கில் வாழும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்றும் உலகில் நடக்கின்ற கொலைகளுக்கு அவர்களே காரணம் என்றும் அமெரிக்கா பிரசாரம் செய்யும்; மேற்குலகை மட்டுமன்றி முழு உலகத்தையே நம்பவைக்கும். பின்னாலேயே பயங்கரவாதிகளை ஒடுக்கப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டு முஸ்லிம் நாடுகளில் புகுந்து குண்டுமழை பொழிந்து படுகொலைகள் செய்யும். இப்படித்தான் 1980 தொடங்கி 40 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதை நாம் சொல்லவில்லை. அமெரிக்காவின் நியூஸ் இணையதளமான NBC அம்பலப்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள்மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டை மேற்குலகு மக்கள், குறிப்பாக அமெரிக்கர்கள் நம்புவதற்குக் காரணம் என்ன என்பதை என்.பி.சி. ஆய்வு செய்தது. ஆய்வு முடிவை அண்மையில் அது வெளியிட்டது.

முஸ்லிம்கள்மீது அமெரிக்கா சுமத்திய பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளே, கடந்த மூன்று தசாப்தங்களாகப் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணம் என என்.பி.சி. இணையதளத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

முஸ்லிம்கள்மீதும் இஸ்லாத்தின் மீதும் மேற்குலகப் பயங்கரவாதிகளும் யூதர்களும் கிளப்பிவிடும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறதா என்பதைப் பின்வரும் எமது கட்டுரை புலப்படுத்தும்!


சமய நல்லிணக்கம்


- மௌலவி, அ.மு. கான் பாகவி

ஒரு முஸ்லிம் ஓரிறைக் கொள்கையில் எல்லாச் சூழ்நிலையிலும் தடுமாற்றமின்றி உறுதியோடும் தளராத பிடிப்போடும் இருக்க வேண்டும். அதில் சமரசத்திற்கு இடமில்லை. அப்போதுதான், தாம் கொண்ட கொள்கையில் அவர் உண்மையாளராக விளங்க முடியும். இது, அவரது சமயக் கோட்பாடு; நம்பிக்கைச் சுதந்திரம்.

அதே நேரத்தில், பிற சமயத்தின் மீதோ சமூகத்தின் மீதோ பகைமை பாராட்டுவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை. பிற மதத்தாருடன் நல்லிணக்கத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றே அது கட்டளையிடுகிறது. இது முஸ்லிம் நாடுகளுக்கும் பொருந்தும்; மற்ற நாடுகளுக்கும் பொருந்தும்.

முதலில், பிற சமயத்தாரின் மத உணர்வுகளைக் காயப்படுத்துவதற்குத் திருக்குர்ஆன் தடை விதிக்கிறது. மத உணர்வைப் புண்படுத்துவது நல்லிணத்தைக் கெடுத்துவிடும் என்பதே காரணம். “உங்கள் மார்க்கம் உங்களுக்கு; என் மார்க்கம் எனக்கு” என்று கூறிவிடுமாறு இறைத்தூதருக்கு இறைவன் ஆணையிடுகின்றான். (அல்குர்ஆன், 109:6)

மற்றொரு வசனத்தில், “உங்களிடையே நீதியோடு நடந்துகொள்ளுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வே எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு. (இனி) எங்களுக்கும் உங்களுக்கும் எந்தத் தர்க்கமும் வேண்டாம்” என்று சொல்லிவிடுமாறு நபிக்கு இறைவன் கட்டளையிடுகின்றான். (42:15)

எல்லாருக்கும் கடவுள் ஒன்றே! பிற மதத்தார் என்பதற்காக அநீதியிழைத்தல் கூடாது. அவரவர் செயல் அவரவருக்கு. நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் சொற்போர் நடத்திக்கொண்டு இருக்க வேண்டாம் –என இவ்வசனம் தெளிவாகவே அறிவிக்கிறது.

பிற சமயத்தார் வழிபடும் தெய்வங்களை வசைபாடக் கூடாது என்கிறது திருக்குர்ஆன். “அல்லாஹ்வையன்றி (வேறு யாரைத் தெய்வங்களாக) அவர்கள் அழைக்கிறார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். (அவ்வாறு ஏசினால்,) அறிவின்றி அவர்களும் எல்லைகடந்து அல்லாஹ்வை ஏசுவார்கள். (6:108)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் யூதர் ஒருவர் மூசா எனப்படும் மோசஸைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். உணர்ச்சிவசப்பட்ட ஒரு முஸ்லிம் யூதரின் கன்னத்தில் அறைந்துவிட்டார். உடனே நபிகளாரிடம் சென்று யூதர் புகார் செய்தார். அந்த முஸ்லிமை அழைத்து விசாரித்த நபிகளார் (அவரைக் கண்டித்ததுடன்), இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள்” எனக் கட்டளையிட்டார்கள். (நூல்: புகாரீ)

அவ்வாறுதான், யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது, மதச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகவும் சமய நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிப்பதாகவும் அமைந்துவிடும். எனவே, கட்டாய மதமாற்றம் கூடாது எனத் திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகிறது. “இந்த மார்க்கத்தில் (இணையும் விஷயத்தில்) எந்த வற்புறுத்தலும் கிடையாது. தவறான வழியிலிருந்து நேரான வழி (இன்னதெனத்) தெளிவாகிவிட்டது” என்கிறது குர்ஆன். (2:256)

மதீனாவில் முஸ்லிம்கள் பலத்தோடு வாழ்ந்த காலகட்டத்தில் அருளப்பெற்ற ஒரு வசனம் என்ன சொல்கிறது பாருங்கள்: மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாத, உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றாதவர்களுக்கு நன்மை செய்வதையும், அவர்களுடன் நீதியோடு நடந்துகொள்வதையும் அல்லாஹ் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (60:8)

இதையெல்லாம்விட, எதிரிகளையும் மன்னிக்க வேண்டும்; முறைதவறி நடந்துகொள்பவரிடமும் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதே நபிகளாரின் நல்வழி ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தார்கள். கடனைத் திருப்பிக் கேட்டு வந்தார் அந்த மனிதர். நபிகளாரைக் கடுமையாகப் பேசி, முறைதவறி நடந்துகொண்டார். தோழர்கள் அவரைத் தாக்க முற்பட்டனர். அப்போது நபிகளார், “அவரை விட்டுவிடுங்கள்; கொடுத்தவக்குப் பேச உரிமை உண்டு” என்றார்கள். (நூல்: புகாரீ)

நபிகளார் எதிரிகளையே மதித்த நிகழ்ச்சியும் உண்டு. ஒரு யூதரின் பிரேதம் எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அமர்ந்திருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனே எழுந்து நின்றார்கள். இதைக் கண்ணுற்ற தோழர்கள், “இது ஒரு யூதரின் பிரேதமாயிற்றே!” என்றனர். அப்போது நபிகளார், “அதுவும் மனித உயிரல்லவா?” என்று திருப்பிக் கேட்டார்கள். (புகாரீ)

முஸ்லிம் நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் கட்டளையாகும். அதை மீறுவோர் இறைவனின் தண்டனைக்கு ஆளாவர்.

“(முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத) ஒப்பந்தப் பிரஜையை யார் கொலை செய்கிறாரோ அவர் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரீ)

கனடாவில் முதலாவது முஸ்லிம் மேயர் மீண்டும் தேர்வு


கனடாவில் நடந்த கல்காரி மாநரகத் தலைவர் தேர்தலில் தற்போதைய தலைவரும் முதலாவது முஸ்லிம் மேயருமான நாஹித் நைன்ஸி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வடஅமெரிக்காவில் உள்ள இந்த மாநகரின் தலைவராக மூன்றாண்டுகளுக்கு முன்பு நாஹித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது மிகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்; ஒருவார காலம் கல்காரி நகரையே மூடிவிட்ட கனமழையின்போது நகரிலேயே தங்கியிருந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டவர்.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பட்டதாரியான நாஹித், மாகினிஸீ அண்ட் கோ நிறுவனத்தின் ஆலோசகராகப் பணியாற்றினார். 1.1 பில்லியன் மக்கள் வாழும் இந்நகரின் பெரும்பகுதி வெள்ளத்தால் மூழ்கிக்கிடந்த நேரத்தில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு தேசிய அளவில் நற்பெயர் பெற்றார்.

மாநகர மேயருக்கான தேர்தலில் 8 பேர் போட்டியிட்டனர். அவர்களில் நைன்ஸி 74 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் மாநில முன்னாள் அமைச்சரும் ஒருவராவார். அறுதிப் பெரும்பான்மை பெற்று வென்றதால் அவர் சுதந்திரமாகச் செயல்படலாம் என ‘கல்காரி ஹயர்லேட்’ ஏடு தெரிவிக்கிறது.

ஒரு முஸ்லிம் இப்படித்தான் இருக்க வேண்டும். பதவி என்பது ஓர் அமானிதம். அமானிதம் காப்பது மார்க்கக் கடமையாகும். கட்டுரையைப் படியுங்கள்!

அமானிதம் காப்போம்

- மௌலவி, கான் பாகவி


‘அமானத்’ என்ற அரபுச் சொல்லே தமிழ் முஸ்லிம்களின் வழக்கில் ‘அமானிதம்’ என்றாயிற்று. கையடைப் பொருள், நம்பகத் தன்மை, நாணயம், பொறுப்பு, அறக்கட்டளை முதலான பொருள்கள் இதற்கு உண்டு. ‘அமானிதப் பணத்தை மோசடி செய்யாதே’ என்றால், ‘நம்பி ஒப்படைக்கப்பட்ட பணத்தைச் சுருட்டாதே’ என்று பொருள். ‘பள்ளிவாசல் பொறுப்பு ஓர் அமானிதம்’ என்று கூறுவதுமுண்டு. சில தமிழ் அகராதிகளில் ’அமானத்து’ என்ற சொல் காணப்படுகிறது.

ஒருவர் உங்களிடம் நம்பி ஒப்படைத்த, கொடுத்துவைத்த பொருளைத் திரும்பிவந்து கேட்கும்போது, அச்சுக்குலையாமல் அப்படியே திருப்பித் தருவதுதான் நாணயம்; நேர்மை. அவர் கொடுத்ததற்குச் சாட்சியோ எழுத்துப்பூர்வமான சான்றோ இல்லாதிருக்கலாம். மலைபோல் உங்களை நம்பியதாலேயே உங்களிடம் வலியவந்து கொடுத்துவிட்டுப் போனார். அவரை ஏமாற்றுவது ஓர் இறைநம்பிக்கையாளரின் செயலாகாது; மாறாக, அது நம்பிக்கைத் துரோகம்; நயவஞ்சகம்.

இதனாலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பொய், வாக்குத் தவறுதல், நம்பியவருக்குத் துரோகம் செய்தல் ஆகிய மூன்றும் நயவஞ்சகனின் குணங்களாகும்” என்று தெரிவித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

“கையடைப் பொருளை, உன்னை நம்பிக் கொடுத்தவரிடமே திரும்ப ஒப்படைத்துவிடு! உனக்குத் துரோகம் செய்தவருக்குக்கூட நீ துரோகம் செய்யாதே!” என்பதும் நபிமொழிதான். (ஜாமிஉத் திர்மிதீ)

நிதி நிறுவனங்களிலும் சீட்டுக் கம்பெனிகளிலும் பணத்தைக் கட்டி ஏமாந்துபோனோர் எத்தனையோ பேர்! வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சொந்த வீட்டுக் கனவில், அல்லது மகளின் திருமணக் கனவில் இருந்த அவர்களில் சிலர் ஏமாற்றப்பட்டதை அறிந்து குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட துயரமும் நாம் கண்ட காட்சிதான்.

நம்பகத் தன்மையும் நாணயமும் இறைநம்பிக்கையின் அடையாளங்கள் எனலாம். நம்பியவனை ஏமாற்றிவிட்டு, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றிருந்தாலும், இறைவன் என்னைத் தண்டித்துவிடுவான் என்ற அச்சம் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான இறையுணர்வு; அதுதான் இறையாற்றலை உண்மையிலேயே புரிந்துகொண்டதன் விளைவு.

வணிகத்திலும் அமானிதம் உண்டு. வணிகர்கள் அதைக் காக்க வேண்டும். கலப்படமில்லாத பொருளையே இவர் தருவார்; சரியான எடைபோட்டே கொடுப்பார்; நியாயமான விலையே வைப்பார் என்று நம்பித்தான் வாடிக்கையாளர் கடைக்கு வருகிறார். அந்த நம்பிக்கைக்கு உலைவைக்கும் வகையில் கடைக்காரர் நடந்துகொண்டு, நுகர்வோரை ஏமாற்றினால் அவரும் ஒரு நம்பிக்கைத் துரோகியே!

“உண்மையே பேசி, பொருளின் குறையை மறைக்காமல் நடந்துகொண்டால் வணிகத்தில் வளம் கிடைக்கும். பொய்பேசி, குறையை மறைத்தால் அந்த வணிகத்தில் ‘பரக்கத்’ (வளர்ச்சி) இருக்காது” என்றார்கள் நபிகளார். (புகாரீ)

“வாய்மையோடும் நம்பகத் தன்மையோடும் நடந்துகொள்ளும் வணிகர், (மறுமையில்) இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள் (ஸித்தீகீன்), உயிர்த் தியாகிகள் (ஷுஹதா) ஆகியோருடன் இருப்பார்” என்றும் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். (ஜாமிஉத் திர்மிதீ)

அவ்வாறே, ஒருவர் ஏற்கும் பதவி, பொறுப்பு, நிர்வாகம், பணி... இவையெல்லாம்கூட, அவரை நம்பி ஒப்படைக்கப்படும் அமானிதங்கள்தான். அந்த அமானிதத்தை அவர் முறையோடு காக்க வேண்டும். அதற்கான ஆற்றல் இல்லையென்றாலோ, இருந்தும் மனமில்லை என்றாலோ அப்பொறுப்பை ஏற்கவே கூடாது. ஏற்றபின் கடமையாற்றாது பொறுப்பை வீணாக்குவதோ தவறாகப் பயன்படுத்துவதோ நம்பிக்கைத் துரோகமாகும்.

ஆனால், எங்கும் இந்தத் துரோகம்தான் இன்று நடக்கிறது. இது கலியுகமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவர் நபிகளாரிடம் வந்து, யுகமுடிவு எப்போது? என்று வினவினார். மக்கள்முன் உரையாற்றிக்கொண்டிருந்த நபிகளார் தமது உரையை முடித்தபின், “நம்பகத்தன்மை (அமானிதம்) பாழ்படுத்தப்பட்டால் யுகமுடிவை நீர் எதிர்பார்க்கலாம்” என்றார்கள். அம்மனிதரோ, “அது பாழ்படுத்தப்படுவது எவ்வாறு?” என்று வினா தொடுத்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தகுதியற்றவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும்போது, நீர் மறுமையை எதிர்பாரும்” என்றார்கள். (புகாரீ)

பொறுப்பில் உள்ளவர்கள், மக்களுக்குப் பதில் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்! படைத்தவனுக்குப் பதில் சொல்ல வேண்டுமே! அவனை ஏமாற்ற முடியாதே! அவன் தண்டிக்க ஆரம்பித்துவிட்டால் யாராலும் காப்பாற்ற முடியாதே! எனவே, அமானிதம் காப்பது அனைவரின் சமய, சமூகக் கடமையாகும்.



பிரிட்டனில் கத்தோலிக்க தேவாலயம் ஏலத்தில்

பிரிட்டனில் ஸ்டோக் ஓன்டிரைன்ட் பகுதியில் தேவாலயம் ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. கத்தோலிக்க கிறித்தவர்களின் தேவாலயமான இதில் வழிபாடு செய்வதற்கு ஆளில்லாத நிலையில் அதன் வாயில் மூடப்பட்டுவிட்டது. அருகில் வேறு தேவாலயங்கள் தோன்றிவிட்டதும் ஒரு காரணம்.

தேவாலயத்தை விலைக்கு வாங்கப்போவது யார் தெரியுமா? பிரிட்டன் முஸ்லிம்கள்தான். ஏலம் கேட்டவர்களிலேயே முஸ்லிம்கள்தான் அதிகத் தொகைக்குக் கேட்டிருக்கிறார்களாம்! அதை வாங்கப்போகிற முஸ்லிம்கள் யார் என்பது இன்னும் இரகசியமாகவே உள்ளதாம்!

(அல்முஜ்தமா)

No comments:

Post a Comment