Monday, April 22, 2013

மியான்மர் முஸ்லிம்களும் நவீன ‘அஸ்ஹாபுல் உக்தூது’களும்


கான் பாகவி


மு
ற்காலத்தில் ஓரிறைக் கொள்கையில் உறுதியோடு வாழ்ந்த சிலர் இருந்தனர். இவர்கள் பாரசீகர்கள் என்பர் சிலர்; இஸ்ரவேலர்கள் என்பர் வேறுசிலர். அல்லாஹ்வை மட்டுமே வழிபட்டுவந்த அந்த மக்களை, சர்வாதிகாரியும் சிலை வணங்கியுமான அரசன் ஒருவன் நிர்ப்பந்தப்படுத்தி, சிலைகளை வழிபட உத்தரவிட்டான்.

ஆனால், அம்மக்கள் மாறவில்லை; கொள்கையைக் கைவிடவில்லை. மிரட்டிப்பார்த்தான். அவர்கள் மசியவில்லை. சித்திரவதை செய்வேன் என்று பயமுறுத்தினான். அவர்கள் கலங்கவில்லை.

இறுதியாக, பெரிய குழி தோன்டி, அதில் நெருப்பை வார்த்து, தீக்குண்டம் (உக்தூத்) தயாரித்தான். அந்த முஸ்லிம்களை ஒவ்வொருவராக தீக்குண்டத்தில் தள்ளிவிட்டான். இன்முகத்தோடு இந்த வேதனையை ஏற்றார்களே தவிர, ஈமான் இழக்கவில்லை. தீ சுடுவதற்கு முன்பே அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றிக்கொண்டான்.

மறுமை தீக்குண்டத்தை (நரகத்தை)விட இம்மை தீக்குண்டம் (உக்தூத்) எவ்வளவோ மேல் என்று அம்மக்கள் தீர்மானித்தனர். ஆனால், கொடுமைக்காரர்களை இறைவன் விட்டுவைப்பானா? குண்டத்தில் இருந்த நெருப்பு மேலே பரவியது. சுற்றி அமர்ந்திருந்த சர்வாதிகாரியையும் அவன் ஆட்களையும் சுட்டெரித்தது!

இந்தக் கொடுமைக்காரர்களைத்தான் தீக்குண்டத்தார்’ (அஸ்ஹாபுல் உக்தூத்) என்கிறார்கள். திருக்குர்ஆன் இவர்களைச் சபிக்கிறது; அந்த முஸ்லிம்கள் செய்த பாவமெல்லாம் ஏக இறையை நம்பியது மட்டும்தான் என்கிறது. (85: 4-8)

நவீன உக்தூதுகள்


இந்தக் கொடுமையான காட்சி நவீன யுகத்திலும் நடக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். மியான்மர் முஸ்லிம்கள் இக்கொடுமையை, பௌத்த காட்டுமிராண்டிகளின் கரங்களால் இன்று அனுபவித்துவருகின்றனர்.

மியான்மரில் நடக்கும் கொடுமைபோன்று நவீன உலகின் வரலாற்றில் எங்கும் கண்டிருக்க முடியாது. அங்கு அரசுக்குத் தெரிந்தே தீக்குண்டம் உருவாக்கப்படுகிறது. அரசு அதிகாரிகளாலேயே தீ மூட்டப்படுகிறது. ஊடகங்கள் கண்ணெதிரிலேயே வீடுகள் எரிக்கப்படுகின்றன. உலகமே பார்த்துக்கொண்டிருக்க முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர். முஸ்லிம் குழந்தைகளும் மாணவர்களும் பள்ளிகளோடு சேர்த்துப் பொசுக்கப்படுகிறார்கள்.

முஸ்லிம் குடும்பங்கள் தம் இருப்பிடங்களிலிருந்து துரத்தப்படுகிறார்கள். அவர்கள் வசித்த நகரங்களும் அரங்குகளும் காலி செய்யப்படுகின்றன. முஸ்லிம்களைத் துடைத்தெறியும் தமது திட்டத்தை பௌத்த பயங்கரவாதிகள் செயல்படுத்திவருகின்றனர். முஸ்லிம்களுக்கு அந்த நிலத்தில் வாழ உரிமையே கிடையாது என்பதுபோல் எல்லாக் கொடுமைகளும் தங்குதடையின்றி அரங்கேறிவருகின்றன.

மியான்மர் முஸ்லிம்கள் தம் சொந்த மண்ணில் கொல்லப்படுவது மட்டுமன்றி, இலட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு விரட்டியடிக்கப்படுகிறார்கள். அவர்களின் குடியுரிமை பறிக்கப்படுகிறது. அவர்களின் தனித்தன்மைகள் தடுக்கப்படுகின்றன. சொந்த மண்ணிலேயே அந்நியர்களைப்போல் நடத்தப்படுகிறார்கள். அந்நாடு அவர்களுக்குரியதன்று; அவர்கள் அந்நாட்டின் பூர்வீகக் குடிகள் அல்லர்; வெளியிலிருந்து வந்து குடியேறிய அந்நியர்கள் என்பதுபோல் நடத்தப்படுகிறார்கள்.

முஸ்லிம்கள் மியான்மரில் வசிக்கவோ அதைச் சொந்தம் கொண்டாடவோ முடியாது. நிலம் வாங்க முடியாது. வீடுகளை உடைமையாக்க முடியாது. மீறினால் தண்டிக்கப்படுவார்கள். உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு பௌத்தனுக்குத் தரப்படும்.

அங்குள்ள பர்மா அரசு, முஸ்லிம்களுக்கு (மட்டும்) குடும்பக் கட்டுப்பாடு சட்டத்தை அமல்படுத்துகிறது. 25 வயதுக்குமுன் முஸ்லிம் பெண் மணமுடிக்கக் கூடாது. ஆண்கள் 30 வயதுக்குமுன் திருமணம் செய்தால் தண்டனை கிடைக்கும்; ஆண்மை இழப்பு மருந்து கொடுக்கப்படும்; பெண்களை மலடியாக்கும் ஊசி போடப்படும்.

குறித்த காலத்திற்குமுன் திருமணத்திற்குத் தடை விதிக்கப்படுவதால் பாலியல் குற்றங்களை அரசே ஊக்குவிக்கிறது; முஸ்லிம்களிடையே விபசாரமும் சீர்குலைவும் ஏற்பட வழிவகுக்கிறது.

சட்டத்தை மீறி திருமணம் செய்வோர் பத்தாண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

முஸ்லிம் கர்ப்பிணிப் பெண் மாதாந்திரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறாள். அதுவும் பெண் மருத்துவர் முன்னிலையில் அல்ல; குழந்தையின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக அல்ல. முஸ்லிம் பெண்ணுக்கு நெருக்கடி கொடுத்து, ஆடையைக் கட்டாயப்படுத்தி அகற்றி, வயிற்றைத் திறந்து ஸ்கேன் எடுத்து வண்ணப் புகைப்படங்களை எடுப்பதற்காக!

குழந்தைகளைக் கணக்கெடுப்பதும் முஸ்லிம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதுமே நோக்கம். கட்டாய பருவகால மருத்துவ சோதனைகளுக்குக் கர்ப்பிணி பெண் பெரிய விலை கொடுக்க வேண்டும். சில வேலைகளில் பாலியல் வன்முறைகளுக்கு அவள் ஆளாகிவருகிறாள். இதை சர்வதேச மன்றங்கள் பல உறுதி செய்துள்ளன.

பள்ளிவாசல்கள் கூடாது

மியான்மரில் முஸ்லிம்கள் சுயமாகத் தொழில் செய்யவோ வணிகம் செய்யவோ அனுமதிக்கப்படுவதில்லை. அடிமைகள்போல் தாழ்ந்த வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மியான்மரில் முஸ்லிம்களுக்கென தனியான பள்ளிவாசல்களோ வழிபாட்டுத் தலங்களோ இருக்கலாகாது. தொன்மையான பள்ளிவாசல் புதுப்பிக்கப்படவோ மராமத்துப் பார்க்கவோ அனுமதி கிடையாது. தனி கப்ரஸ்தான்கள் அமைத்து அடக்கம் செய்வதற்கோ இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கோ தடை உள்ளது. குர்ஆன் ஓதுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மார்க்க மதரசாக்கள் நடத்த முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை. தனியான கல்வி போதனைக்கும் உரிமை கிடையாது. முஸ்லிம் ஆசிரியர்கள் எங்கெல்லாம் பணியாற்றுகிறார்களோ அவர்களை நீக்கிவிட்டு, தீவிரவாத பௌத்த மத ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் கல்வி கற்கவோ வெளிநாட்டு ஆசிரியர்களிடம் கல்வி பயிலவோ முஸ்லிம் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. மியான்மர் பல்கலைக் கழகங்களில் பல்கலைக் கல்வியைத் தொடரும் உரிமையும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தங்களுக்கென நூல்களையோ வெளியீடுகளையோ அச்சிட்டு வெளியிட முடியாது.

பௌத்த குடியேற்றம்


முஸ்லிம் கிராமங்களும் ஊர்களும் பௌத்த குடிகளால் கண்காணிக்கப்படும். இதற்காக முன்மாதிரி கிராமங்களை உருவாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுவருகிறது; முஸ்லிம் தெருக்களின் மையப்பகுதியில் பௌத்தர்களை அரசு குடியேற்றிவருகிறது. அதற்கு வேண்டிய எல்லா சலுகைகளையும் அரசு அளிக்கும்.

இதன்மூலம் முஸ்லிம் குடியிருப்புகளுக்கான தனித்தன்மைகள் அகற்றப்படும். புதிய குடியேற்றப்பகுதிகளில் வேலை செய்து பிழைப்பதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறு வழியில்லாமல் செய்யப்படும். முஸ்லிம்கள் தம் வீடுகளில் உடன்பிறப்புகளையோ உறவினர்களையோ முன் அனுமதி பெறாமல் புதிதாகச் சேர்த்துக்கொள்ளக் கூடாது; புதியவர்கள் இரவில் தங்க அனுமதியே கிடையாது. அவ்வாறு தங்கிவிட்டால், வீட்டு உரிமையாளருக்குத் தண்டனை நிச்சயம். அவர் வீடு இடிக்கப்படலாம்; அவரும் குடும்பத்தாரும் நாட்டைவிட்டுத் துரத்தப்படலாம்.

மியான்மரில் முஸ்லிம்கள் சந்திக்கும் அனைத்து நெருக்கடிகளுக்கும் அரசு நிர்வாகமே பொறுப்பாகும். ஏனெனில், வீடுகளும் வணிக நிறுவனங்களும் எரிக்கப்படுவதும் குடியிருப்பாளர்கள் துரத்தப்படுவதும் குடிமக்கள் கொல்லப்படுவதும் மதமாற்றி பௌத்த மதத்தில் இணைக்க நிர்ப்பந்திக்கப்படுவதும் அரசு ஒத்துழைப்பில்லாமல் நடக்க முடியாது. அதிகாரபூர்வமாகக் காவலர்களே சீருடை அணிந்துகொண்டு இக்கொடுமைகளைச் செய்துவருகிறார்கள் என்பதுதான் உண்மையாகும். இராணுவ முகாம்களிலும் பாலங்கள் கட்டுவதிலும் சுரங்கம் தோண்டுவதிலும் முஸ்லிம்களைக் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவது, அரசின் மேலிட உத்தரவின்றி எப்படி நடைபெறும்?

ஆக, மியான்மரில் முஸ்லிம் ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பள்ளிவாசல்களும் மதரசாக்களும் இடிக்கப்படுகின்றன. மதச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. வீடுகளும் வணிகத் தலங்களும் தீக்கிரையாக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் நாட்டிலிருந்தே துரத்தப்படுகிறார்கள். எல்லா மனித உரிமைகளும் அங்கு முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுகின்றன.

காரணம் சீனா


இனி வேறென்ன நடக்க வேண்டும்? உலக ஏழை நாடுகளின் வரிசையில் ஒன்பதாவது இடத்திலுள்ள ஒரு நாடு, சுமார் நாலரைக் கோடி மக்கள் தொகையையும் ஆறேமுக்கால் லட்சம் சதுர கி.மீ. பரப்பளவையும் கொண்ட ஒரு சிறிய நாட்டிற்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?

அருகிலுள்ள கம்யூனிஸ நாடான சீனா தரும் ஆதரவுதான் இத்தனை அட்டூழியங்களுக்கும் காரணம். ஆயுதங்கள் வழங்கி, பர்மாவின் இனவெறி அரசியலுக்குத் தூபம்போட்டு, முஸ்லிம்களின் படுகொலைக்கு எல்லா உதவிகளையும் செய்துவருவது சீனாதான். இந்த சீனாவுடன் முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளுக்குப் பெரிய அளவில் உறவு இருந்துவருகிறது. இவர்கள் சீனாவுக்கு அழுத்தம் கொடுத்து, மியான்மர் படுகொலையை ஏன் தடுத்து நிறுத்தக் கூடாது?

அவ்வாறே, பர்மாவிலிருந்து பெரிய எண்ணிக்கையில் குடிபெயர்ந்து அகதிகளாகத் தங்களிடம் வரும் மியான்மர் முஸ்லிம்களை வங்காளதேசம் அடித்துத் துரத்துகிறதே! உலக முஸ்லிம் நாடுகள் வங்காளத்திற்கு நெருக்கடியை உருவாக்கி, மியான்மர் முஸ்லிம் அகதிகளை அரவணைக்கச் செய்ய ஏன் முன்வரக் கூடாது?

எல்லாம் பில்டப்தானா?


இராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் மனித உரிமைகள் மீறப்படுவதாகச் சொல்லி மூக்கை நுழைத்த ஐ.நா. சபை, மியான்மருக்கு நேட்டோ படைகளை ஏன் அனுப்பக் கூடாது. இதற்கெல்லாம் உதவாத ஐ.நா. சபை இருந்தென்ன? இல்லாமலிருந்தென்ன?

மனித உரிமைகளைக் காக்க உருவாக்கப்பட்டதே ஐ.நா. சபை என்பது பில்டப்தானா?

அவ்வாறே, புத்த மதம் அகிம்சையைப் போதிக்கிறது என்றும் பௌத்தர்கள் இளகிய மனம் படைத்தவர்கள் என்றும் ஈ, எறும்புக்குக்கூட தீங்கு நினைக்காதவர்கள் என்றும்  சொல்கிறார்களே! எல்லாம் பில்டப்தானா?

1 comment:

  1. Teriya vendiya tagaval . Jazakallah . Ya allah miyanmar makkalai kappatru.aameen

    ReplyDelete