Sunday, June 23, 2013

‘அல்அக்ஸா’ பள்ளிவாசலைத் தகர்க்க சதி

கான் பாகவி

மூன்று புனிதப் பள்ளிவாசல்களில் மூன்றாவதான அல்மஸ்ஜிதுல் அக்ஸாபள்ளிவாசல், இன்று சியோனிஸ்டுகளின் கரங்களில் சிக்கித் தவிக்கிறது. பைத்துல் மக்திஸில் உள்ள இப்பள்ளிவாசலுக்குத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இஸ்ராஎனும் இரவுப் பயணத்தை மேற்கொண்டார்கள்.

உலக முஸ்லிம்களுக்கு, திருமக்காவில் உள்ள புனித கஅபா முதலாவது புனிதப் பள்ளிவாசலாகும். அடுத்தது ஆறாம் நூற்றாண்டில் மதீனாவில் நபிகளார் எழுப்பிய மஸ்ஜிதுந் நபவீபள்ளிவாசலாகும். மூன்றாவதுதான் ஜெருசலேமில் இருக்கும் அல்அக்ஸாபள்ளிவாசலாகும். இப்பள்ளிவாசலை இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் புணரமைத்தார்கள்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல்என்ற தேள் கொடுக்கை அமெரிக்கா உருவாக்கியதிலிருந்து இந்தப் பள்ளிவாசலுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் பெரும் துயரம்தான். பயங்கரவாத யூதர்களான சியோனிஸ்டுகளின் அசிங்கமானதொரு போரை அக்ஸா பள்ளிவாசல் எதிர்நோக்கியுள்ளது. இப்போரில் யூதர்களின் அனைத்துப் பிரிவினர்களும் பங்கெடுத்துள்ளனர்.

அண்மையில் உள்ளூர் யூதர்கள் சுமார் நூறுபேர், இஸ்ரேல் காவல்துறை பாதுகாப்புடன் அக்ஸாமீது தாக்குதல் தொடுத்தனர். அத்துடன் அங்குள்ள முஸ்லிம்களிடம் எல்லைமீறி நடந்துகொண்டனர். அவர்களையும் உலக முஸ்லிம்களின் உயிரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அருவருப்பாக ஏசினர்.

இன்னொரு பக்கம், மஸ்ஜிதின் அஸ்திவாரத்தில் பள்ளங்கள் தோண்டும் வேலையும் தொடர்கிறது. சியோனிஸ்டுகளின் திட்டப்படி நடக்கும் சதிவேலையாகும் இது. பள்ளிவாசலின் தூண்களும் கட்டடமும் இயல்பாக இடிந்துவிழுந்துவிட்டன என்று உலகை நம்பவைப்பதற்காக அஸ்திவாரத்தை இரகசியமாக அரிக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புனித அக்ஸா பள்ளிவாசல், பாறைகள் நிறைந்த மலைக்குன்றின் மீது கட்டப்பட்டிருப்பது அவர்களுக்குப் பெரிய தடையாக அமைந்துள்ளது. அவ்வாறு மட்டும் இல்லாதிருந்தால், அவர்கள் தோண்டியுள்ள ஏராளமான குழிகளுக்குப் பின்பும் பள்ளிவாசல் உறுதியாக நின்றிருக்காது.

இன்னொரு திட்டமும் அந்தக் கயவர்களிடம் உள்ளது. அக்ஸா பள்ளிவாசலை முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் என இரண்டாகப் பிரிப்பதே அத்திட்டம். மிஅராஜ் இரவில் நம் நபி (ஸல்) அவர்கள் நுழைந்த தலைவாயிலை (பாபுந் நபி), பள்ளிவாசலுக்குள் யூதர்கள் நுழைவதற்கான நுழைவாயிலாக அமைப்பதும் அவர்களின் திட்டங்களில் ஒன்றாகும்.

தலைமை காஜி



பாலஸ்தீனத்தின் தலைமை காஜியும் ஷரீஅத் தீர்ப்பகத்தின் உயர்மன்ற முன்னாள் தலைவருமான டாக்டர், தைசீர் தமீமீ அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார் என்கிறது அல்முஜ்தமா வார ஏடு.

அக்ஸா பள்ளிவாசலின் அஸ்திவாரத்தில் உள்ள பாறைகளைத் தகர்க்க சியோனிஸ்டுகள் ரசாயானத் தூள்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த வேதியல் பொருள் பாறைகளைத் தூளாக்கி, மண் போன்று கரைத்துவிடுமாம்! யூதப் பத்திரிகையில் வெளிவந்த தகவல்தான் இது. மஸ்ஜிதின் அஸ்திவாரத்திற்குக் கீழே தோண்டப்படும் குழிகளைப் பார்க்க முஸ்லிம்களுக்கு அனுமதி கிடையாது.

நடக்கும் கொடுமைகளைக் கண்டறிய உண்மையறியும் குழுக்களை அனுப்பிவைக்குமாறு யுனெஸ்கோ அமைப்பிற்கு நாங்களும் பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், மஸ்ஜிதின் அஸ்திவாரத்தின்கீழ் சுரங்க வழி திறக்கப்பட்டிருப்பதும் மஸ்ஜிதின் சுவர், வளாகம் ஆகியவற்றில் விரிசல் தோன்றியிருப்பதும் கண்கூடாகும் என்கிறார் காஜி தமீமீ.

சோனிக் பேரியர்


அக்ஸாவில், ஒலிவிசை எதிர் அழுத்தம் (Sonic Barrier) ஏற்படுத்துவதற்கும் சியோனிஸ்டுகள் முயன்றுவருகின்றன ராம்! அண்மையில் தீவிரவாத யூதக் குழுக்கள் லாவ்ராக்கெட்களைத் திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அக்ஸா பள்ளிவாசலைத் தகர்க்க அவற்றை அவர்கள் பயன்படுத்தும் ஆபத்து உண்டு.


வெடி சப்தத்தை உருவாக்கும் அளவுக்குப் பயங்கரமான ஒலி விசையுடன் விமானங்களை மஸ்ஜித்மேல் பறக்கவிடும் திட்டமும் அவர்களிடம் உள்ளது. இதன்மூலம் நிலஅதிர்வு போன்ற இயற்கையான பாதிப்புகள் உருவாகி, கட்டடத்தைச் சேதப்படுத்துகின்ற வாய்ப்பு உண்டு. இது இயல்பாக நடந்தது என்று காட்டிவிடலாம். இதுவெல்லாம் புனித அக்ஸா பள்ளிவாசலை இடித்துவிட்டு, அங்கு யூதக் கோயிலை எழுப்பும் திட்டத்தின் ஆரம்ப சதிவேலைகளாகும்.


நபி (ஸல்) அவர்கள் நுழைந்த நபிகளார் தலைவாயிலை (பாபுந் நபி) யூதமயப்படுத்துவதற்கு எல்லா முயற்சிகளும் நடக்கின்றன. 1967இல் ஜெருசலேமை ஆக்கிரமித்த நாளிலேயே பாபுந் நபியின் சாவியை யூதர்கள் கைப்பற்றிவிட்டனர்; அவ்வாயிலை முஸ்லிம்கள் பயன்படுத்துவதற்குத் தடையும் விதித்துவிட்டனர். அந்த வாயிலுக்குச் செல்லும் வழியை 2006இல் தகர்த்துவிட்ட இஸ்ரேல் அரசாங்கம், இப்போது புதிய வழித்தடம் ஒன்றை உருவாக்க முயன்றுவருகின்றது. அவ்வழியாக இஸ்ரேல் படைகள் அதிக எண்ணிக்கையில் செல்லவும் இடிப்பு வேலையை எளிதாக முடிக்கவும் இது உதவும்.

புராக் சுவர்


அக்ஸா பள்ளிவாசலின் மேற்குச் சுவர் புராக்சுவர் என அழைக்கப்படுகிறது. நபிகளார் தமது விண்ணுலகப் பயணத்தின்போது இச்சுவரில் உள்ள ஒரு வளையத்தில்தான் தமது புராக்வாகனத்தைக் கட்டிப்போட்டார்கள். 1929இல் பாலஸ்தீனர்கள் நடத்திய புராக்புரட்சியை அடுத்து யூதர்கள் இச்சுவரில் ஏறி சியோனிஸக் கொடியை ஏற்றினர்; தவ்ராத் பாடல்களைப் பாடினர்.

பாலஸ்தீனர்களின் கடுமையான எதிர்ப்பையடுத்து 1931ஆம் ஆண்டு உண்மையறியும் சர்வதேச குழு ஒன்று அங்கு சென்றது. நூற்றுக்கும் அதிகமான மக்களை நேரில் சந்தித்து தகவல் திரட்டியது. இறுதியாக இக்குழு வெளியிட்ட அறிக்கை என்ன தெரியுமா?

ஜெருசலேமில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசலும் அல்கலீல்நகரில் உள்ள ஹரம் இப்ராஹீமும் இஸ்லாமியப் புனிதத் தலங்களாகும். யூதர்களுக்கு இவற்றில் எந்த உரிமையும் கிடையாது. மனிதாபிமான அடிப்படையில் புராக் சுவருக்கு எதிரில் உள்ள நடைமேடையில் -அதுவும் சுவரிலிருந்து 7 மீட்டர் தூரத்தில்- வேண்டுமானால் யூதர்கள் நிற்கலாம். ஹரம் இப்ராஹீமின் சுவருக்கு வெளியே நிற்கலாம் -என்று அறிவித்தது அக்குழு.

யூதரின் சாட்சியம்

அங்கு யூதக் கோயில் இருந்ததற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணரும் யூதருமான மயீர் பின் தவ்ஃப் அறிவித்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், அஸ்திவாரத்தைத் தோண்டி பள்ளமாக்கும் வேலை தொடரவே செய்கிறது.

உண்மையில் யூதர்கள் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லா அடையாங்களுமே இஸ்லாமிய ஆட்சிக் காலத்தை, குறிப்பாக அய்யூபிகளின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவையாகும். இருந்தாலும் பைத்துல் மக்தசில் உள்ள எல்லா இஸ்லாமிய மற்றும் அரபிய அடையாளங்களை யூதமயமாக மாற்றுவோம் என்று யூதர்கள் கொக்கரிக்கின்றனர்.

பாலஸ்தீனர்களைப் பிரித்தாள்வதிலும் யூத சக்திகள் வெற்றிகண்டுள்ளன. ஃபத்ஹ் மற்றும் ஹமாஸ் கட்சிகளிடையே பிரிவினையை உண்டாக்கிவிட்டனர். அரபு நாடுகளுக்கிடையேயும் இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியிலும் பிளவை உருவாக்கிவிட்டனர்.

உலக முஸ்லிம்கள் என்றுதான் விழிக்கப்போகிறார்களோ!
______________________

No comments:

Post a Comment