Tuesday, June 25, 2013

முஸ்லிம் நாடுகளில் என்ன நடக்கிறது?

கான் பாகவி



2010
ஆம் ஆண்டு மத்தியக்கிழக்கு நாடுகளிலும் வட ஆப்ரிக்கா நாடுகளிலும் மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2010 டிசம்பர் 18ஆம் நாள் எகிப்திலும் துனூசியாவிலும் மக்கள் போராட்டம் வெடித்தது. யமனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது; லிபியாவில் உள்நாட்டுப் போர்; சிரியாவில் எழுச்சி; அல்ஜீரியாவில் பெரிய போராட்டம் வெடித்தது.

அவ்வாறே ஆர்மீனியா, பஹ்ரைன், இராக், ஜோர்டான், மொராக்கோ, அம்மான், துருக்கி ஆகிய நாடுகளிலும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. ஆதர்பீஜான், குவைத், லெபனான், சஊதி, சூடான் போன்ற நாடுகளில் சிறிய அளவிலான மக்கள் போராட்டங்கள் நடந்தன.

இப்போராட்ட எழுச்சியையே -குறிப்பாக எகிப்தில் நடந்த 2011 ஜனவரி 25 புரட்சியை- அரபு வசந்தம்என்று அழைக்கின்றனர். இப்போராட்டங்களுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. அதையடுத்து எகிப்தில் இக்வானுல் முஸ்லிமீன்களின் அரசியல் கட்சியான நீதி மற்றும் வளர்ச்சி’ (அல்அதாலத்து வத்தன்மியா) கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. பொறியாளர் முஹம்மது முர்சீ அதிபரானார்.

துனூசியாவில் அந்நஹ்ழா’ (எழுச்சி) கட்சியும் துருக்கியில் நீதி மற்றும் வளர்ச்சிகட்சியும் ஆட்சிக்கு வந்தன. பாலஸ்தீனத்தின் ஃகஸ்ஸாவில் ஹமாஸ்கட்சியும் மொராக்கோவில் நீதி மற்றும் வளர்ச்சிகட்சியும் ஆட்சியில் அமர்ந்தன.

இந்தப் போராட்டங்களின் எதிரொலியாகவே இராக், சிரியா போன்ற நாடுகளில் இன்றும் பொதுஜன ஆர்ப்பாட்டங்கள் பெரிய அளவில் நடைபெற்றுவருகின்றன. சுருக்கமாகச் சொன்னால், அரபுலகில் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டு, ஆட்சியிலும் நிர்வாகத்திலும் இஸ்லாம் பின்பற்றப்பட வேண்டும் எனற அவா பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்.

எதிர்ப்பலை

நல்லது நடக்கும்போது கெட்டவன் ஷைத்தான் அமைதியாக இருப்பானா? நாம் குறிப்பிட்ட எல்லா நாடுகளிலும் மதச்சார்பின்மை பேசும் இடதுசாரிகள், அல்லது ஈரானிய ஷியாக்கள் அந்த அரசுகளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவருகின்றனர்; முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக விளங்குகின்றனர்.

இந்த எதிர்ப்பு சக்திகளுக்குத் திரைமறைவில் வழக்கம்போல் அமெரிக்காவும் இஸ்ரேலும் தூபம் போட்டுவருகின்றன; எல்லா உதவிகளையும் தாராளமாக வழங்கிவருகின்றன. ஆயுத உதவி, நிதியுதவி, புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், சீர்குலைவுத் திட்டங்கள் என அனைத்துத் துரோகங்களையும் அரங்கேற்றி, அந்நாடுகளைத் துண்டாட காய்களை நகர்த்திவருகின்றன.

எகிப்தில் கிப்தி (Coptic) கிறித்தவர்களின் கட்சி (கிப்திகள் ஃபிர்அவ்னின் பரம்பரை என்பது குறிப்பிடத் தக்கது), மதச்சார்பின்மை பேசும் இடதுசாரி கட்சிகள், தொழிலாளர் கட்சி, இவர்களுடன் இராணுவத்திலுள்ள கறுப்பு ஆடுகள் என எல்லாம் சேர்ந்து ஆட்சிக்கெதிராகக் குழப்பம் விளைவித்துவருகின்றன.

முர்சீ அரசு கொண்டுவரும் அரசியல் சாசன மாற்றம், சீர்திருத்த நடவடிக்கை, இஸ்லாமியக் கலாசார வாழ்க்கைமுறை ஆகிய ஒவ்வொரு முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டு தடுக்கப்பார்க்கின்றன. ஆளும் கட்சியின் ஆதரவாளர்களும் எதிர்ப்போராட்டங்களை நடத்தத் தவறவில்லை.

எத்தியோப்பியாவில் அந்நஹ்ழாஅணை

எதிரிகளின் உச்சகட்ட சதித்திட்டமாக, எகிப்தின் பொருளாதாரம், தானிய உற்பத்தி, விளைச்சல், குடிநீர் ஆகிய உயிர்நாடியில் கைவைக்கத் திட்டமிடப்படுகிறது. நீல்நதியில் எகிப்துக்குரிய நீர் உரிமையைப் பறிக்கும் வகையில், எத்தியோப்பியாவைத் தூண்டிவிட்டு, ‘அந்நஹ்ழாஎனும் அணையைக் கட்டி நீரைத் தடுக்கப்போகிறார்கள்.

நீல் நதியில்தான், நபி மூசா (அலை) அவர்கள் குழந்தையாக இருந்தபோது, அன்னாரின் தாயார் பேழைக்குள் குழந்தையை வைத்து போட்டுவிட்டார்கள். ஃபிர்அவ்னின் துணைவியார் எடுத்து வளர்த்தார்கள். உலகிலேயே மிக நீளமான நதியான நீல், 6,650 கி.மீ. தொலைவுவரை பாய்கிறது; பத்து ஆப்பிரிக்க நாடுகளைக் கடக்கிறது.

நீல் நதியின் பிரதான உற்பத்தித் தலங்கள் என இரண்டைக் குறிப்பிடலாம். 1. எத்தியோப்பியா (அபிசீனியா). 2. சமதளத்தில் உள்ள ஏரிகள். எத்தியோப்பியாவிலிருந்து எகிப்துக்கு வரும் நீல் நதி நீரே 85 விழுக்காடு (71 பில்லியன் சதுர மீட்டர்) ஆகும். ஏரிகளிலிருந்து எகிப்துக்குக் கிடைக்கும் பங்கு 15 விழுக்காடு (13 பில்லியன் ச.மீ.) மட்டுமே.

1957ஆம் ஆண்டு -எகிப்தில் கமால் அப்துந் நாஸிர் அதிபராக இருந்தபோதே- எத்தியோப்பியாவுக்கு அமெரிக்கா திட்டம்போட்டுக் கொடுத்தது; நீல் நதியின் குறுக்கே அணை கட்டினால் பாசனத்திற்கும் மின்சார உற்பத்திக்கும் வழிகாணலாம் என ஆசைவார்த்தை காட்டியது. இந்த அணைகள் மூலம் தெற்கிலிருந்து எகிப்துக்கு வரும் நீரின் அளவைக் கட்டுப்படுத்திவிடலாம் என்பதே எதிரிகளின் திட்டம்.

1964ஆம் ஆண்டிலேயே அணை கட்டுவதற்காக 4 இடங்களைத் தேர்ந்தெடுத்து எத்தியோப்பாவின் இசைவுக்காகக் கொடுத்தது அமெரிக்கா. பல்வேறு பிரச்சினைகளால் திட்டம் தள்ளிப்போனது. இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

அதன்படி, மேற்கு எத்தியோப்பியாவில் நீல் நதியில் 5,250 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நோக்கத்தில் அந்நஹ்ழாஅணை கட்டும் திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த அணை சூடானுடனான எத்தியோப்பியா எல்லையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் கட்டப்படுகிறது. 4.8 பில்லியன் டாலர் செலவு என்று கூறப்பட்டாலும் 2017இல் அணை கட்டி முடிக்கப்படும்போது 8 பில்லியன் டாலரை எட்டலாம். இத்தாலியின் சாலினிநிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.

இந்த அணை எத்தியோப்பியா - எகிப்து இடையே போர் மூள்வதற்குக்கூட காரணமாகலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எகிப்தின் ஜீவாதாரப் பிரச்சினையாக இது இருப்பதால், அந்நாடு நீர்போரைத் தொடுக்க வாய்ப்பு உண்டு எனக் கருதப்படுகிறது.

துருக்கியில்

துருக்கியில் 1940களில் முஸ்தஃபா கமால் அதாதுர்க் அழித்துவிட்டுப்போன இஸ்லாமியப் பாரம்பரிய நடைமுறைகளுக்கு உயிர் கொடுக்க இன்றைய துருக்கி அரசு முயன்றுவருகிறது. படிப்படியாக முழு மதுவிலக்கைக் கொண்டுவரவும் மூடிக்கிடக்கும் பள்ளிவாசல்கள், மதரசாக்கள், இஸ்லாமிய மையங்கள் ஆகியவற்றைத் திறக்கவும் மாணவிகள் புர்கா அணிந்து பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லவும் துருக்கி அதிபர் உர்துகான் முயன்றுவருகிறார்.

இதற்கு அங்குள்ள கம்யூனிஸ, மதச்சார்பற்ற, தேசிய சக்திகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. வெளியிலிருந்தும் இவர்களுக்கு உதவிக்கரம் நீள்கிறது. மேற்கத்திய மற்றும் சியோனிச கரம்தான் அது எனச் சொல்லத் தேவையில்லை.

இராக், சிரியா

இராக்கில் இப்போது ஆட்சியில் இருக்கும் நூரீ மாலிகீ ஒரு ஷியா முஸ்லிம். இவர் சன்னி முஸ்லிம் அறிஞர்களையும் பொதுமக்களையும் கொத்துக் கொத்தாக சிறைப்பிடித்து தூக்கு தண்டனை நிறைவேற்றிவருகிறார். தன்னைக் கொல்வதற்குத் திட்டமிட்டார்கள் என்று குற்றம்சாட்டி கடந்த ஏப்ரலில் 21 சன்னி முஸ்லிம்களைக் கைது செய்த இவர், ஐவரைத் தூக்கிலிட்டார்.


சிரியாவில் பஷ்ஷார் அல்அசத் எனும் சர்வாதிகாரியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சியை அகற்ற வெகுஜன மக்கள் உயிரைக் கொடுத்துப் போராடி வருகின்றனர். இவருக்கு இஸ்ரேல் உதவுகிறது. அடுத்து ஈரான் பன்மடங்காக உதவி செய்துவருகிறது.


போராட்டக் களத்தில் இருப்போர் பெரும்பாலும் சன்னி முஸ்லிம்கள்தான். இவர்களை பஷ்ஷாரின் படைகளும் ஈரானிய ஷியா (ஹிஸ்புல்லாஹ்) படைவீரர்களும் இலட்சக்கணக்கில் கொன்று குவித்துவருகின்றனர். பல லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு புறம் பஹ்ரைன் நாட்டைக் கைப்பற்ற ஷியாக்கள் சண்டை போட்டுவருகிறார்கள். சஊதி, குவைத் போன்ற அரபு நாடுகளிலும் ஷியாக்களின் கை ஓங்கிவருகிறது.

முஸ்லிம் நாடுகள் உஷார்

ஆக, அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய எழுச்சியையும் பாரம்பரிய இஸ்லாமியக் கலாசாரத்தின் மீது பிறந்துள்ள விழுமங்களையும் நசுக்க விரோதிகள் ஒன்றுகூடி சதி செய்துவருகிறார்கள். மேற்கத்திய, சியோனிச வல்லூறுகள் ஒரு பக்கம்; நபிகளாரின் துணைவியரையும் பெரியவர்களான அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரையும் ஏசுவதையே தலையாயக் கொள்கையாகக் கொண்டுள்ள ஷியாக்கள் இன்னொரு பக்கம்.


இவர்களை உலக முஸ்லிம்கள் இனம்கண்டுகொள்ள வேண்டும். முஸ்லிம் மற்றும் அரபு நாடுகள் ஓரணியில் திரளும் நேரம் வந்துவிட்டது. இனியும் சொந்தப் பகையையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும் பாராட்டிக்கொண்டிருந்தால், முஸ்லிம் நாடுகளை அழிப்பதில் எதிரிகள் வெற்றி கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முஸ்லிம் ஆட்சியாளர்கள் அபூபக்கர்களாக உமர்களாக ஸலாஹுத்தீன் அய்யூபிகளாக மாறியாக வேண்டும்; அல்லது மாறுவதற்கான திசையை நோக்கி அடி எடுத்துவைக்க வேண்டும். இல்லையேல், அவர்களை அல்லாஹ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டான்.
________________________

No comments:

Post a Comment