Tuesday, April 21, 2015

இஸ்லாத்தில் தீவிரவாதமா?



- மௌலவி, . முஹம்மது கான் பாகவி

ஸ்லாம் தீவிரவாத போக்கு கொண்ட மார்க்கம் என்றும் முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் என்றும் உலக ஊடகங்கள் மக்களை நம்பவைத்துள்ளன என்பது கசப்பான உண்மை. இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தன் பெயரிலேயே தாங்கியுள்ள ஒரு சாத்வீக மார்க்கம்; தீவிரவாதமோ அந்தச் சாந்தியை அடியோடு அழிக்கின்ற அநாகரிகமான தத்துவம். இவையிரண்டும் ஒரேகோட்டில் பயணிப்பதைக் கற்பனைகூட செய்ய முடியாது.

இப்படி ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிடலாம். ஆயினும், நாளுக்குநாள் முஸ்லிம்கள் மீதான அவநம்பிக்கை உலக அளவில் வீங்கிக்கொண்டே போவதைப் பார்த்த பின்பும் ஒரு வரி பதிலெல்லாம் எடுபடாது எனும் அளவிற்கு நிலைமை முற்றிவிட்டது. இதற்கேற்றாற்போல், உலகில் நடக்கும் சில சம்பவங்கள் முஸ்லிம்களையே திகைப்புக்குள்ளாக்கிவருகின்றன. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவர்கள் தத்தளிப்பதைக் காண முடிகிறது.

எனவே, தீவிரவாதம் தொடர்பாகச் சற்று ஆழமாக ஆராய்வதும் அதற்கும் நமக்கும் எட்டாதூரம் என்பதைக் காரணகாரியங்களுடன் பகிரங்கப்படுத்துவதும் முஸ்லிம்களின் சமயக் கடமையாக உள்ளது. முஸ்லிம்கள் தம் உயிரினும் மேலாக மதிக்கும் இறைத்தூதரும் அவர்களின் உயிர்மூச்சான இறைமறையும் கிடைப்பதற்கரிய செல்வமாக அவர்கள் நம்பும் மார்க்கமும் கொச்சைப்படுத்தப்படும்போது அவர்கள் எப்படி மௌனியாக வாழ முடியும்? அழுத்தம் திருத்தமாக உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தாக வேண்டும்.

தீவிரவாதமும் பயங்கரவாதமும்

முதலில் தீவிரவாதம் என்றால் என்ன என்பதை அகராதிகளின் சான்றோடு வரையறுத்துக்கொள்வது நல்லது. இல்லையென்றால், ஒரு முஸ்லிம் கையிலுள்ள அலைப்பேசி எதிர்பாராத விதமாக வெடித்துவிட்டால்கூட, ‘பயங்கரவாதம் என்று கதைகட்டிவிடுவார்கள். அதையும் இந்த அப்பாவி உலகம் நம்பிவிடும்.


சட்டப்படியான வழிமுறைகளைப் பின்பற்றாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கேதீவிரவாதம் (Extremism) ஆகும். ‘பயங்கரவாதம் (Terrorism) என்பது, அரசியல் நோக்கத்திற்காக மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் வன்முறையை மேற்கொள்ளும் போக்கு ஆகும். இப்படி ஓர் அகராதி பொருள் கூறுகிறது. இதில் சமயம் கலக்கவில்லை என்பதைக் கவனிக்கத் தவறிவிடாதீர்கள்.

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (Encyclopaedia) தீவிரவாதத்திற்கு (Terrorism) பின்வருமாறு விளக்கம் அளிக்கிறது:

வன்முறையை மிக முறையாகப் பயன்படுத்தி, மக்களிடையே அச்சகரமான சூழலைத் தோற்றுவித்தல்; அதன்மூலம், குறிப்பிட்ட அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வது. இடதுசாரி மற்றும் வலதுசாரி அரசியல் அமைப்புகள், தேசியவாத அல்லது பிரிவினைவாதக் குழுக்கள் போன்றவையாலும் புரட்சியாளர்களாலும் வரலாறு முழுவதிலும் தீவிரவாதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள அரசியல் அமைப்புகளை வீழ்த்தவோ பேதலிக்கச் செய்யவோ தீவிரவாதம் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்பட்டாலும் கிளர்ச்சிகளை அடக்குவதற்காகத் தம் மக்கள்மீது அரசுகளே தீவிரவாதத்தைப் பயன்படுத்தியதும் உண்டு. 1. சில ரோமானியப் பேரரசர்களின் ஆட்சி 2. ஃபிரெஞ்சுப் புரட்சி 3. நாஜி ஜெர்மனி 4. ஸ்டாலின் கீழிருந்த சோவியத் யூனியன் 5. 1970களின் அழுக்குப் போரின்போது இருந்த அர்ஜென்டினா ஆகியன சில எடுத்துக்காட்டுகளாகும்.

இவற்றில் ஃபிரெஞ்சுப் புரட்சியின் ஒரு பகுதியாக (1793, 1794), பிரபுக்கள், மதகுருமார்கள், பதுக்கல்காரர்கள் முதலான எதிரிகளைக் கடுமையாகத் தண்டிப்பதற்காக 1973 செப்டம்பர் 5 அன்று அரசாங்கம் பீதியின் ஆட்சியை (Reign of Terror) உருவாக்கியது. ஜாக்ஸ் ஹெபர்ட்போன்ற இடதுசாரிகள், ஜார்ஜஸ் டேன்டன் போன்ற வலதுசாரிகள் ஒழித்துக்கட்டப்பட்டனர்.

சுமார் 3லட்சம்பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். 17ஆயிரம் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலை 1794 ஜூலை 27வரை நீடித்தது.

இலக்கணம் போதும் என்று கருதுகிறேன். பிரிட்டானிகா என்சைக்லோபீடியாவின் விளக்கத்திலும் மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. தீவிரவாதம் என்பது முழுக்க முழுக்க அரசியலுடன் சம்பந்தப்பட்ட வன்முறை என்றே அறிகிறோம். சொல்லப்போனால், மதக் குருக்களைக்கூட அரசியல் பயங்கரவாதிகள்தான் கழுவேற்றியிருக்கிறார்கள். இந்திய விடுதலைக்காகப் போராடிய இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஆயிரக்கணக்கானோர் பிரிட்டிஷ் பயங்கரவாதிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்டனர் என்பதை மறக்க முடியுமா?

இஸ்லாத்தின் பார்வையில்

இனி, தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் குறித்து இஸ்லாத்தின் பார்வை என்ன என்பதைப் பார்ப்போம். இஸ்லாத்தின் முதலிரு மூலாதாரங்களான திருக்குர்ஆனும் நபிமொழியும் என்ன சொல்கின்றன என்று பார்த்துவிட்டாலே போதும்! இஸ்லாத்தின் நிலைப்பாடு தெரிந்துவிடும்.

பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்; நீங்கள் இறைநம்பிக்கையாளர்கள் என்றால் இதுவே உங்களுக்கு நன்மை ஆகும் (7:56) என ஒரு வசனம் கட்டளையிடுகின்றது. மற்றொரு வசனம்,

பூமியில் குழப்பம் விளைவிக்க முனையாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரை நேசிக்கமாட்டான் (28:77) என்று கூறுகின்றது. மூன்றாவது ஒரு வசனம் இப்படிச் சொல்லும்:

நீங்கள் எல்லை மீறாதீர்கள்! எல்லைமீறுவோரை அல்லாஹ் நேசிப்பதில்லை. (2:190; 5:87)

முதலிரு வசனங்களில்குழப்பம் என்பதைக் குறிக்கஃபஸாத் எனும் சொல் ஆளப்பெற்றுள்ளது. ‘பூமியில் குழப்பம் விளைவித்தல் என்பது விரிவான பொருள் கொண்டதாகும். வன்முறை மூலம் மனித குலக் கூட்டுவாழ்க்கையைச் சீர்குலைப்பது, மக்களின் செல்வங்களைத் தவறான வழியில் பறிப்பது, கொடுமை இழைப்பது, உயிருக்கும் மானமரியாதைக்கும் சேதம் விளைவிப்பது, வசிப்பிடங்களைத் தகர்ப்பது முதலான அட்டூழியங்கள் அனைத்தும்குழப்பம் (ஃபஸாத்) என்ற சொல்லில் அடங்கும். (தஃப்சீர் அல்மனார்)

சுருங்கக்கூறின், இன்று மக்கள் எதையெல்லாம் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்று அழைக்கிறார்களோ அதையே குர்ஆன்குழப்பம் (ஃபஸாத்) அல்லதுஎல்லை மீறல் (உத்வான்) என அழைக்கிறது எனலாம்! அப்படியானால், குர்ஆனில் இவ்வசனங்கள் மட்டுமன்றி, வேறுபல வசனங்களும் தீவிரவாதத்திற்குத் தடை விதிக்கின்றன; தீவிரவாதிகளை அல்லாஹ் நேசிப்பதில்லை எனப் பிரகடனப்படுத்துகிறது என்று சொல்லலாம் அல்லவா?

தீங்கு செய்வோருக்கும் நன்மை செய்யுமாறு இறைவன் பிறப்பித்த கட்டளையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியே கடைப்பிடித்து வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. திருக்குர்ஆனின் கட்டளையைப் பாருங்கள்:

நன்மையும் தீமையும் சமமாகா. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! அப்போது யாருக்கும் உமக்கும் இடையே பகைமை உண்டோ அவர் உற்ற நண்பர்போல் ஆகிவிடுவார். (41:34)

இந்த இறைக்கட்டளைக்கேற்பவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்துகொள்வார்கள் என முந்தைய வேதமானதவ்ராத்தில் (தோரா) முன்னறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது. நபித்தோழர் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அவர் (முஹம்மத் (ஸல்) அவர்கள்), கடின சித்தமுடையவராகவோ முரட்டுத்தனம் உள்ளவராகவோ கடைத்தெருவில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பவராகவோ இருக்கமாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையால் தீர்வு காணமாட்டார்; மாறாக, மன்னித்து விட்டுவிடுவார் எனதவ்ராத் வேதத்தில் இறைவன் குறிப்பிட்டுள்ளான். (புகாரீ)

படுகொலை பயங்கரக் குற்றம்

மனித உயிர் புனிதமானது. அதைத் தகுந்தஅனுமதிக்கப்பட்ட- காரணமின்றி கொலை செய்யலாகாது. ஒருவர் முஸ்லிம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காகப் படுகொலை செய்வதற்கு அனுமதியில்லை. இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது இஸ்லாமிய அரசின் கடமையாகும்.

கொலைக்குப் பகரமாகவோ பூமியில் குழப்பத்தி(னை ஒடுக்குவத)ற்காகவோ தவிர, ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொன்றவரைப் போன்றவர் ஆவார் (5:32) என்று குர்ஆன் தெளிவுபடுத்துகிறது. மற்றொரு வசனம் இவ்வாறு கட்டளையிடுகின்றது:

அல்லாஹ் புனிதப்படுத்திய எந்த உயிரையும் தகுந்த காரணமின்றிக் கொலை செய்யாதீர்கள். இதையே அவன் உங்களுக்கு அறிவுரையாகக் கூறுகின்றான். (இதனால்) நீங்கள் விளக்கமுள்ளவர்களாக ஆகலாம். (6:151)

இஸ்லாமிய நாட்டின் சிறுபான்மையின மக்களின் உயிரைப் பறிப்பதிலுள்ள கடுமையான பாவம் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தபோது கூறியதாவது:

(இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொல்பவன் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டான். அதன் வாடையோ நாற்பதாண்டு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும். (புகாரீ)

தீவிரவாதத்திற்குத் துணைபோகாதீர்!

தீவிரவாதம் எப்போது ஒரு குற்றச் செயலாகிவிட்டதோ, பொருளாலோ உடலாலோ அதற்கு உதவுவதும் குற்றமாகும் என்பதை அறியலாம். குற்றத்திற்குத் துணைபோவதும் குற்றம்தானே!

குழப்பம் விளைவிப்போரின் வழியைப் பின்பற்றிவிடாதீர்! (7:142) என இறைவன் திருக்குர்ஆனில் ஆணையிடுகின்றான். மற்றொரு வசனத்தில்,

இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தோரை, பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்குவோமா? (38:28) என இறைவன் வினவுகின்றான்.

அறப்போர் (ஜிஹாத்) என்ற நம்பிக்கையில் சிலர் படுகுழியில் போய் விழுந்துவிடுகின்றனர். தவறாக வழிகாட்டும் அரசியல் பயங்கரவாதிகள் செய்யும் கவர்ச்சியான பிரசாரத்தில் மயங்கி பாவத்திற்குத் துணைபோய்விடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் உண்மையான அறப்போர் எது? சுயநலப் போர் எது என்பதற்கு அழகான இலக்கணம் கூறியிருப்பதைப் பாருங்கள்:

போர் இரு வகைப்படும் 1. இறைவனின் அன்பை வேண்டி, தலைவருக்குக் கட்டுப்பட்டு, உயர்ந்த செல்வத்தைச் செலவிட்டு, நண்பனுக்கு ஒத்தாசை செய்து, குழப்பத்தைத் தவிர்த்து யார் போர் செய்கிறாரோ அவரது உறக்கமும் விழிப்பும் எல்லாமே நற்கூலி பெறும். 2. பெருமைக்காவும் பெயர்புகழுக்காகவும் போர்புரிந்து, தலைவருக்கு மாற்றம் செய்து, பூமியில் குழப்பம் விளைவிப்பவர் யாரோ அவர் எந்தப் பயனையும் (அல்லாஹ்விடம்) பெற்றுத் திரும்புவதில்லை. (அபூதாவூத்)

தண்டனை

தீவிரவாதம் மோசமான குற்றம் என்றானபின் குற்றத்திற்குத் தண்டனை வேண்டுமல்லவா? தீவிரவாதிகளுக்கும் வன்முறையாளர்களுக்கும் என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பதையும் திருக்குர்ஆன் வரையறுத்துள்ளது:

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எதிராகப் போர் செய்து, பூமியில் குழப்பத்தை உண்டாக்க முனைகின்றவர்களுக்குரிய தண்டனையானது, அவர்கள் கொல்லப்பட வேண்டும். அல்லது சிலுவையில் அறையப்பட வேண்டும். அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்பட வேண்டும். அல்லது அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும். இது, இவ்வுலகில் அவர்களுக்குக் கிடைக்கும் இழிவாகும். மறுமையிலும் அவர்களுக்கு மாபெரும் வேதனை உள்ளது. (5:33)

இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கும்போது பின்வருமாறு கூறினார்கள்:

மௌடீகத்தின் கொடிக்குக் கீழே இனமாச்சரியத்திற்கு அழைப்புவிடுக்கவோ இனமாச்சரியத்திற்காக ஒத்துழைக்கவோ செய்து, அதற்காகக் கொல்லப்படுபவர் அறியாமைக் கால மரணத்தையே சந்திப்பார். (முஸ்லிம்)

பெண்கள், குழந்தைகள் தாக்கப்படல்

உண்மையான அறப்போரே ஆனாலும் குழந்தைகளையோ பெண்களையோ கொலை செய்வதற்குப் போராளிகளுக்கு அனுமதி கிடையாது. அவ்வாறே, யாரையும் தீவைத்துக் கொளுத்தவும் அனுமதி கிடையாது.

நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட ஓர் அறப்போரில் ஒரு பெண்மணி (எதிரணியில்) கொல்லப்பட்டுக் கிடந்தார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் (வன்மையாகக் கண்டித்ததுடன்) பெண்களையோ குழந்தைகளையோ இனிமேல் கொல்லக் கூடாது எனத் தடை செய்தார்கள். (புகாரீ)

அவ்வாறே, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் நெருப்பால் வேதனை செய்யக் கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (புகாரீ)

துவரை, இஸ்லாமிய மூலாதாரங்களிலிருந்து நாம் முன்வைத்த இறைவசனங்களையும் நபிமொழிகளையும் ஒன்றுக்குப் பலமுறை கவனமாகப் படியுங்கள். தீவிரவாதம், பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் அடிப்படையில் ஏதேனும் தொடர்பு உண்டா என்பதை நடுநிலையோடு ஆராய்ந்துபாருங்கள். துளி அளவுகூடச் சம்பந்தம் இல்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். பிறகு எந்த முகாந்திரத்தில்இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற சொல்லாடலை உலக ஊடகங்கள் பயன்படுத்துகின்றன என்ற வியப்பு நிச்சயம் உங்களுக்குத் தோன்றாமல் இராது.

உலகில் எங்கோ சில இடங்களில் நடக்கும் சிற்சில சம்பவங்களுக்கு முஸ்லிம்கள்தான் காரணம் எனப் பொத்தாம் பொதுவாக மேற்கத்திய செய்தி நிறுவனங்கள் சொல்ல, அதையே எல்லாரும் நம்பி பரப்பிவிடுகிறார்கள். யாராவது இச்செய்தி உண்மைதானா என்பதைச் சுயமாக அலசி ஆராய்ந்ததுண்டா? ஆதாரபூர்வமாக நிரூபித்ததுண்டா? சில நேரங்களில் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படும் தாக்குதல்களை மார்க்கத்துடனும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தோடும் முடிச்சுப்போடுவது எப்படி நியாயமாகும்?

ஓர் உண்மை தெரியுமா? இன்று இஸ்லாம் உலக அளவில் வேகமாகப் பரவிவரும் ஒரு மார்க்கம். இதையடுத்து முஸ்லிம்களின் எண்ணிக்கையும் உலக நாடுகளில் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதைச் சகித்துக்கொள்ள முடியாத யூத சியோனிஸ்டுகள், மேற்கத்திய இடதுசாரிகள் ஆகியோர் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாகவே, பயங்கரவாதத் தாக்குதல்களை அவர்களே திட்டமிட்டு நடத்திவிட்டு முஸ்லிம்கள்மீது பழிபோடுகிறார்கள்.
____________________________

1 comment: