Wednesday, November 02, 2016

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! (5)




அரபிக் கல்லூரி மாணவக் கண்மணிகளே!

இதுவரை குர்ஆன் மற்றும் ஹதீஸைப் படித்தறிவதற்கு அடிப்படைத் தேவையான கலைகள் பற்றி அறிந்தோம். சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், பொருள் இலக்கியம், சொல்லணிக் கலை, பேச்சுக் கலை, அணியிலக்கணம், நவீன அரபிமொழி, அவற்றுக்கான கலைச்சொற்கள் பட்டியல் (10) ஆகியவற்றைப் பார்த்திருப்பீர்கள்; பாடங்களைப் பத்திரப்படுத்தியும் இருப்பீர்கள் என்று கருதுகிறேன்.

மாணவ - மாணவிகளுக்காக நடத்தப்படும் இந்த வலைதள வகுப்பு அவர்களை எட்டியதா? படிக்கிறார்களா என்பதை அறிய முடியவில்லை. எனினும், ஆசிரியர்கள், பெரியவர்கள் படித்துவிட்டு வரவேற்று கருத்துகள் எழுதியுள்ளனர்; பலருக்கு ஷேரும் செய்துள்ளனர். குறிப்பாக, கலைச்சொற்கள் பட்டியலுக்கு நல்ல வரவேற்பு. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இனி குர்ஆனிய கலைகளைப் பார்ப்போம்.

குர்ஆனிய கலைகள்

நம்மைப் பொறுத்த வரை குர்ஆனிய கலைகள் என்று ஐந்தைக் கூறலாம். 1. சீராக ஓதுதல், அல்லது இராகமாக ஓதுதல் (தஜ்வீத் – Intonation). ஆரம்பப் பாடசாலையிலேயே (மக்தப்) திருக்குர்ஆனைப் பார்த்து ஓதக் கற்றிருப்பீர்கள். அரபி அட்சரங்கள்,ஒலிக்குறியீடுகள், வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசித்தல், ஒரு வசனத்தின் அரபி வாசகத்தை வேகமாக ஓதுதல் போன்ற பயிற்சிகள் எல்லாம் அங்கே அளிக்கப்பட்டிருக்கும். இது வெறும் ‘ஓதல்’ (திலாவா) மட்டுமே!

‘தஜ்வீத்’ என்பது, அந்த ஓதலை அழுத்தம் திருத்தமாகவும் நீட்டி நெளித்து சீராகவும் இராகத்தோடும் ஓதக் கற்பதே! எழுத்துகளைச் சரியாகவும் சீராகவும் உச்சரித்தல், குறில்-நெடில் அறிந்து குறுக்கியும் நீட்டியும் ஓதுதல், நெடிலில் (மத்து) எத்தனை ஸ்டெப், எந்த இடத்தில் என்பதைக் கவனத்தில் கொண்டு நீட்டியும் குறிலில் எந்த அளவிற்குச் சுருக்க வேண்டும் என்பதை அறிந்து குறுக்கியும் ஓதுதல், மூச்சுவிட வேண்டிய இடத்தில் விட்டு, நிறுத்த வேண்டிய கட்டத்தில் நிறுத்தி, நிறுத்தக் கூடாதஇடத்தில் சேர்த்து ஓதுதல்... என ஓதுதலுக்கான நெறிமுறைகளை அறிந்து ஓதுவதே ‘தஜ்வீத்’ ஆகும்.

மிகவும் கவனம் தேவை

இவற்றில், மிகமிக எச்சரிக்கையோடு அணுகவேண்டியது ஒன்று இருக்கிறதென்றால், அட்சரங்களின் உச்சரிப்புதான். எடுத்துக்காட்டாக, தொண்டைப் பகுதியிலிருந்து ஒலிப்பதே ‘ஹா’ (ح). இன்னொரு எழுத்து சற்று அதிர்வோடு ஒலிப்பது ‘ஹா’ (ه).மற்றொரு எழுத்து சற்றுக் காறலுடன் ஒலிப்பது ‘கா’ (خ). இம்மூன்றில் முதல் எழுத்து (ح) இடம்பெறுகிற சொல்: حَلَقَ (ஹலக). பொருள் (தலைமுடி) வழித்தான். இரண்டாம் எழுத்து (ه) இடம்பெறும் சொல்: هَلَكَ (ஹலக). பொருள்: அழிந்தான்.மூன்றாம் எழுத்து இடம்பெறும் சொல்: خَلَقَ (கலக). பொருள்: படைத்தான்.

இன்னொரு உதாரணம்: ت (தா); د (தால்); ط (தோ). இந்த மூன்று எழுத்துகளும் உச்சரிப்பில் நெருக்கமானவை. உச்சரிப்பு தவறினால், பொருளில் விபரீதம் ஏற்பட்டுவிடும். تِيْن (தீன்-அத்திப்பழம்), دِيْن (தீன்-மார்க்கம்); طِيْن (தீன்-களிமண்).

பொருளில் எவ்வளவு பெரிய வித்தியாசம்! எப்படி வேறுபடுத்துவது? எழுத்தில் சரி! மொழியில் உச்சரிப்பு ஒன்றே வழி. அவ்வாறே, அரபி அச்சரங்களில்

ت - ث - د - ذ - ط / ز - ج / ص - ش - س / ل - ظ - ض / ف - ب / ك - ق / ع - غ
ஆகிய ஏழு அணிகள் நெருக்கமான –சற்றே வேறுபடக்கூடிய- ஒலிகளை எழுப்பும் எழுத்துகளாகும். ஒவ்வொன்றுக்கும் இடையிலான உச்சரிப்பு வித்தியாசம் நாசூக்கானது. முறையாக ‘தஜ்வீது’ கற்று,பயிற்சியும் எடுத்தால்தான் பிசிறின்றி அட்சரங்கள் ஒலிக்கும். கொஞ்சம் தவறினாலும் சருக்கிவிடும்; பொருள் வழுக்கிவிடும்; குற்றம் நெருக்கிவிடும்.

அதுவும் திருக்குர்ஆன் வசனங்கள் எனும்போது, எவ்வளவு பிரயாசித்தமும் எச்சரிக்கை உணர்வும் தேவை என்பதைச் சிறிது சிந்தித்துப்பாருங்கள். நம் தொழுகை மட்டுமல்ல; பின்தொடர்ந்து தொழும் அப்பாவி மக்களின் தொழுகையும் சிறு பிழைகூடஇல்லாமல் நிறைவாக அமைய வேண்டுமா? இல்லையா?

திருக்குர்ஆனில் அல்லாஹ் தன் தூதருக்கு ஆணையிடுவதைப் பாருங்கள்: (நபியே!) குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! (73:4) அதாவது நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! அப்போதுதான் பொருள் விளங்கி, சிந்திக்க முடியும்.

நான்கு நிலைகள்

‘தஜ்வீத்’ கலையில் நான்கு நிலை உச்சரிப்புகளும் ஒலிப்புகளும் உள்ளன. 1. குரல் நாள அதிர்வொலி (இழ்ஹார் – Voice). ஒவ்வொரு எழுத்தையும் அதனதன் பிறப்பிடத்திலிருந்து மூக்கொலிப்பின்றி வெளியிடல். எகா: مِنْ عَمَلٍ (மின் அமல்). இதில் ن எனும் எழுத்துஅதன் இயல்பாக ஒலிக்க வேண்டும்.

2. ஈர் உயிரொலி ஒன்றிய உச்சரிப்பு (இத்ஃகாம் – Synizesis). அசைவற்ற ஒலிக்குறியீடு (சுகூன்) உள்ள ஓர் எழுத்து, அசைவுள்ள ஒலிக்குறியீடு (ஹரகத்) உள்ள ஓர் எழுத்துடன் இணைந்து, ஈரெழுத்துகளும் ஓரெழுத்தாக அழுத்தத்துடன் ஒலிப்பது. எகா: مِنْ رَّبِّهِما (மிர்ரப்பிஹிமா). இதிலுள்ள ‘நூன்’ எனும் எழுத்து, அசைவற்ற ஒலிக்குறியீடு பெற்றது. இதை, அடுத்த எழுத்தான ‘ரா’ (ر) உடன் இணைத்து அழுத்தம் கொடுத்து உச்சரிக்க வேண்டும். நூனும் ‘ரா’வும் சேர்ந்து உச்சரிப்பில் ‘ரா’ எனும் ஒரே எழுத்தாகிவிடும்.

3. உருமாறிய ஒலி (இக்லாப் – Transposition). அசைவற்ற ஒலிக்குறியீடு (சுகூன்) உள்ள ‘நூன்’ (ن) எனும் எழுத்தை ‘மீம்’ (م) எனும் எழுத்தாக உருமாற்றி, ‘பா’ (ب) மற்றும் மூக்கொலிப்புடன் ஒலிப்பது. எகா: அம் பூரிக (أن بُورِك) இதிலுள்ள சுகூன் உள்ள ‘நூன்’ எனும்எழுத்தை ‘மீம்’ எழுத்தாக மாற்றி, அன் பூரிக என்பதை, ‘அம் பூரிக’ என உச்சரிக்க வேண்டும்.

4. கம்மு குரல் ஒலிப்பு (இக்ஃபா – Veiling). முதலிரண்டு வகைகளுக்கும் இடையிலான தன்மையில் அழுத்தக் குறியின்றி ஓர் எழுத்தை மொழியுதல். எகா: மின் குல்லின் (مِنْ كُلٍّ). இதிலுள்ள ‘நூன்’ (ن) எழுத்துக்கும் சரி! அடுத்த எழுத்தான ‘காஃப்’ (ك) எனும்எழுத்துக்கும் சரி! தனித்தனி உச்சரிப்பு உண்டு. எனினும், ‘நூனை’ அழுத்தாமல் உச்சரித்து ‘காஃப்’ உடன் சேர்த்து ஒலிக்க வேண்டும்.

இனிய குரலில் இராகமாக...

திருக்குர்ஆன் வசனங்களை, நாளிதழ் வாசிப்பதைப் போன்று உரைநடையில் வாசிக்காமல், ஓசை நயத்துடன் இராகமிட்டு ஓத வேண்டும். அதையும் இனிய குரலில் ஓதும்போது, செவிகளைக் கவர்ந்திழுத்து, கேட்போரை குர்ஆனுடன் ஒன்றச் செய்யும்அற்புதம் அங்கு நடக்கும். கேட்பவர், பொருள் புரிந்தவராக இருந்து, வசனத்தின் காட்சியைக் கண்ணில் கொண்டுவர முடிந்தவராகவும் இருந்துவிட்டால், அதைப் போன்ற பரவசம் வேறு இருக்க முடியாது. அனுபவித்தால்தான் தெரியும். இமாம், அதற்குள் ஏன் குனிந்துவிட்டார் என எண்ணத் தோன்றும்.

இன்றைக்கெல்லாம் சிறுவர், சிறுமியர், இளைஞர், பெரியவர் எனப் பலரும் பல்வேறு நாடுகளில் இனிய குரலில் ஓதி, மயக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பெருமைப்படும் உண்மை. குரலுக்காக மயங்குபவர்களே அதிகம். அத்துடன் பொருளுக்காகவும சேர்த்து கண்மூடி ரசிப்பவர்கள் சிலரே. இவர்களைப் பொருளின்பால் இழுக்கும் காந்தம் ‘காரி’யின் குரலே!

நபி (ஸல்) அவர்கள் ‘தர்ஜீஉ’ எனும் ஓசை நயத்துடன் ஓதுவார்கள். (புகாரீ – 5047); ஒரே எழுத்தைத் திரும்பத் திரும்ப தொண்டைக்குக் கொண்டுவந்து ஓசை எழுப்பி ஓதுவதே ‘தர்ஜீஉ’ (மீட்டல்) எனப்படுகிறது. எகா: அலிஃப் (ألِف) எனும் எழுத்தை ஆ... ஆ... ஆ... எனஇழுத்து ஓதும்போது ஒரே அட்சரத்தின் ஒலி நீண்டு ஒலிக்கும். இவ்விதம் ஓசை நயத்துடன் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதியுள்ளார்கள். (ஃபத்ஹுல் பாரீ)

நபித்தோழர் அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) நபி (ஸல்) அவர்கள், “அபூமூசா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும்வழங்கப்பட்டுள்ளது என என்னிடம் கூறினார்கள். (புகாரீ – 5048)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் வழக்கம் நீட்டி ஓதுவதுதான். ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதில் பிஸ்மில்லா...ஹ் என நீட்டுவார்கள். அர்ரஹ்மா...ன் என்றும் நீட்டுவார்கள். அர்ரஹீ...ம் என்றும் நீட்டுவார்கள். (இதற்கு மத்துல் கிராஅத் – என்று பெயர்.) (புகாரீ – 5045)

மாணவச் செல்வங்களே!

குர்ஆனை ஆசையோடும் ஆர்வத்தோடும் ஓதிப் பழகுங்கள்! தஜ்வீதுடனும் இனிய குரலுடனும் ஓதுகின்ற இந்த உயர்ந்த கலையை இப்போதே –மத்ரஸாவிலேயே- கற்று, பயிற்சி பெற்று, தரமாக வெளியே வாருங்கள்! அல்லாஹ்விடம் நன்மையும் மக்களிடம் வரவேற்பும் இக்கலைத் திறனுக்கு உண்டு.







(சந்திப்போம்)

No comments:

Post a Comment