Thursday, November 03, 2016

இந்தியாவில் ‘தலாக்’ சர்ச்சை - உண்மை என்ன?

இந்தியாவில் ‘தலாக்’ சர்ச்சை - உண்மை என்ன?

மணவிலக்கு (தலாக்) என்பது இஸ்லாமிய சமுதாயத்தில் மட்டுமல்ல; நுகர்வு கலாசாரத்திற்குக் கிடைத்த வெற்றியின் விளைவால் எல்லா சமுதாயங்களையும் ஆட்டுவித்துவருகிறது. விழுக்காடு அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம் சமுதாயத்தில் மணமுறிவு குறைவே. ஆனாலும் அந்த விழுக்காடைக்கூட, சமூக ஆர்வலர்களால் வரவேற்கவோ சீரணிக்கவா இயலவில்லை என்பது உண்மையே!

மார்க்க அறிஞர்கள், பள்ளிவாசல் இமாம்கள் மணவிலக்கைக் குறைப்பதற்காக, உள்ளே இருந்துகொண்டு போராடிவருகிறார்கள். அதற்காக மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைமுறையில் இருப்பதைப் போன்று இங்கும் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள் செய்துவருகிறோம். இன்றைய இளைஞர்கள் படித்துமுடித்து, வேலையில் அமர்ந்து, நாலு காசு சம்பாதிக்கத் தொடங்கிய கையோடு மணமேடையில் வந்து அமர்ந்துவிடுகிறார்கள்.

மணவாழ்க்கை என்றால் என்ன? அதை எப்படிக் கையாள வேண்டும்? இல்லறத்தில் பிரச்சினை ஏற்படின் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? கணவன் - மனைவி இருவரின் கடமைகள் என்ன? உரிமைகள் என்ன? குழந்தையை வளர்ப்பது எப்படி? இரு பக்க உறவுகளை எப்படிப் பேணி பராமரிக்க வேண்டும்... என்பதையெல்லாம் அறியாத அப்பாவிகளாகத்தான் மணவாழ்வில் அடியெடுத்துவைக்கிறார்கள். இவர்களுக்குத் திருமணத்திற்கு முன்பே ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவது சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமையல்லவா! அதற்காகவே இந்த கவுன்சிலிங் ஏற்பாடு. இது ஒரு தாமதமான முயற்சி என்பதில் ஐயமில்லை. இன்னும் பரவலாக்கப்படவில்லை என்பதும் உண்மைதான்!

இந்த முயற்சி வெற்றிபெற்றாலே, மணவிலக்கின் வேகத்தைக் கட்டுப்படுத்திவிடலாம். மணவிலக்கு ஒரு சங்கடமான முடிவு என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்தி போன்றதுதான் தலாக். அதை எடுத்த எடுப்பிலேயே ஆள்வது அறியாமை மட்டுமல்ல; கொடுமையும்கூட. இதனாலேயே, இறைவனால் அனுமதிக்கப்பட்டுள்ளதும் அதே நேரத்தில், அவனது கடும் கோபத்திற்கு உரியதும் ‘தலாக்’தான் என்றுரைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: அபூதாவூத்)

கடைசி ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டியதை முதல் தீர்வாக எடுத்துக்கொண்டுவிடுகிறார்கள். கணவன் -தான் ஒரு ஆண் என்ற வீராப்பிலும் மனைவி -தன்னிடம் பட்டமும் வேலைவாய்ப்பும் உள்ளது என்ற மிதப்பிலும் அழகான வாழ்க்கையைக் கிழித்தெறிந்துவிடுகிறார்கள். அவன் ‘தலாக்’ எனும் கத்தரியால் கிழித்தால், அவள் ‘குலா’ எனும் சவரக்கத்தியால் கிழிக்கிறாள். இதைக் கண்டு நொந்துபோன அறிவுஜீவிகள் விழித்துக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

சரி! அந்த ‘தலாக்’கையும் எப்படி பிரயோகிக்க வேண்டும் என்பதும் இன்றைய இளசுகளுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் முன்கோபமும் தன்முனைப்பும் அவர்களை – இல்லற தற்கொலைக்குத் தூண்டிவிடுகின்றன. அந்தக் கொதிப்பில், திருக்குர்ஆனின் வழிகாட்டலோ நபிகளாரின் அறவுரையோ அவர்களின் கண்களுக்குப் படுவதில்லை.

திருக்குர்ஆனின் வழிகாட்டல் (2:229) இதோ: தம்பதியரிடையே பிணக்கு ஏற்பட்டால், பேசித் தீர்க்க வேண்டும். இணங்க மறுப்பவரை வழிக்குக் கொண்டுவர சில வழிகளைக் கையாள வேண்டும். எதிலும் சமரசம் ஏற்படாதபோது, இறுதிக் கட்டமாக ஒருமுறை ‘தலாக்’ சொல்ல வேண்டும். அதற்கும் சில நிபந்தனைகள் உண்டு. ‘தலாக்’ சொன்னபிறகு கணவனின் பராமரிப்பிலேயே மனைவி இருக்க வேண்டும். மூன்று மாதங்கள் கணவனின் வீட்டிலேயே, மறுமணம் செய்துகொள்ளாமல் (‘இத்தா’) காத்திருக்க வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் இருவரும் மனம்மாறி, மணவாழ்க்கையைத் தொடர வாய்ப்பு உண்டு. 3 மாதக் கெடு முடிந்துவிட்டாலும், மண ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொண்டு இல்லறத்தைத் தொடரலாம். அப்படிச் சேர்ந்து, வாழ்ந்துவரும்போது மீண்டும் பிணக்கு ஏற்படின் சமாதானத்திற்கான வழிகளைத் தேட வேண்டும். இணைப்புக்கு வழியே இல்லாத நிலையில், இரண்டாவதாக ஒருமுறை ‘தலாக்’ சொல்ல வேண்டும்.

இதன் பிறகும் மனைவி 3 மாதங்கள் கணவன் வீட்டிலேயே காத்திருப்பாள். இந்நாட்களில் சினம் தணிந்து மனம் மாறக்கூடும். அப்போதும் சேர்ந்து வாழ முடியும். கெடுவே முடிந்துவிட்டாலும் மணஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொண்டு சேர்ந்து வாழ முடியும்.

இங்கே சேர்ந்து வாழ்வதற்கு 6 மாத அவகாசம் கிடைக்கிறது. ஆனால், இக்காலகட்டத்தில் பெண் வீட்டார் மகளை கணவன் வீட்டில் வாழ அனுமதிப்பதில்லை. இது, தம்பதியரிடையே இணக்கம் காண்பதற்கான வாயிலை அடைந்துவிடுகிறது. இதற்குப் பின்பும் சச்சரவு எழுந்தால், மூன்றாவது முறையாக ‘தலாக்’கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, ஒன்றுக்குப் பலமுறை யோசிக்க வேண்டும்; அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், மறுபடியும் இனி சேர்ந்து வாழ வேண்டுமென்றால், கடுமையான பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

மூன்றாவது முறையாக மும்மாதம் மனைவி காத்திருந்து, கணவனிடமிருந்து பிரிந்து, மற்றோர் ஆணை மணந்து, அவனுடன் இல்லறம் நடத்தி, அவ்விருவரிடையே இயல்பாகப் பிரிவினை உண்டாகி, அதற்கான ‘இத்தா’ பருவமும் முடிந்தபின்பே அப்பெண்மணியை முதல் கணவன் மணந்துகொள்ள முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில், ருகானா (ரலி) என்ற நபித்தோழர், தம் மனைவியை ஒரே அவையில் மூன்று முறை ‘தலாக்’ சொல்லிவிட்டார். பின்னர் அதை எண்ணிப் பெரிதும் வருந்தினார். நபிகளாரிடம் வந்து விவரம் சொன்ன அவரிடம், எப்படி தலாக் செய்தீர்? என்று வினவினார்கள். ‘மூன்று முறை’ என்றார். ஒரே இடத்திலா? என்று வினவியதற்கு ‘ஆம்!’ எனப் பதிலளித்தார். அப்படியானால், அது ஒருமுறை சொன்ன ‘தலாக்’தான். விரும்பினால் அவரோடு சேர்ந்து வாழலாம் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (நூல்: அஹ்மத்)

ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் செய்து, உறவை முற்றாக முறித்துக்கொள்ளும் நடைமுறை அப்போது இல்லாத காரணத்தால்தான், ஒருவர் அப்படிச் செய்துவிட்டார் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, கடுமையாகக் கோபமடைந்தார்கள். அத்துடன், “நான் உங்களிடையே இருக்கும்போதே, அவர் இறைமறையுடன் விளையாடுகிறாரா?” எனக் காட்டமாகக் கேட்டார்கள். (நூல்: நஸயீ)

இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில், யாரேனும் மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால், முதுகு வலிக்குமளவுக்குச் சாட்டையால் அடிப்பார்களாம்! (நூல்: சுனன் சயீத் பின் மன்சூர்)

ஆனால், அவர்களது ஆட்சியில் இது தொடர்கதையானபோது –அதாவது மூன்று முறை தலாக் செய்துவிட்டு ஒன்றுதான் எனது எண்ணமாக இருந்தது என ஆண்கள் தொடர்ந்து சொல்லிவந்தபோது- இனிமேல் யாரேனும் அவ்வாறு சொன்னால் மூன்றே நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள். இனி சேர்ந்து வாழ்வது பிரச்சினையாகிவிடும் என்பதால், அவ்வாறு யாரும் செய்யக் கூடாது என எச்சரிக்கும் முகமாகவே இந்த அறிவிப்பை கலீஃபா வெளியிட்டார்கள்.

இதன் அடிப்படையிலேயே, முஸ்லிம் சட்ட அறிஞர்கள் இவ்வாறு கூறுவார்கள்: திருக்குர்ஆனின் அறிவுறுத்தலின்படி, இடைவெளிவிட்டு ஒன்று ஒன்றாக ‘தலாக்’ சொல்வதே சிறந்த, உன்னதமான, நபிவழியின்படி அமைந்த ‘தலாக்’ முறையாகும். ஒரே மூச்சில் மூன்று முறை தலாக் செய்து, எடுத்த எடுப்பிலேயே மணவாழ்வை அழித்துக்கொள்வதும் பெண்கள் வாழ்க்கையில் விளையாடுவதும் பாவகரமான, மிக அருவருப்பான, அனாசாரம் (பித்அத்) ஆகும்.

உணர்ச்சிவசப்பட்டு, தொலைநோக்கு இல்லாமல் இவ்வாறு செய்வதற்கு எதிரான பரப்புரையை, மார்க்க அறிஞர்களும் (உலமா) சமூக மற்றும் பெண்ணுரிமை ஆர்வலர்களும் முனைப்போடு மேற்கொண்டுள்ளனர். விவரம் தெரியாமலும் பொறுப்புணர்வு இல்லாமலும் சிலர் செய்துவிடும் குற்றத்திற்காக, ஒட்டுமொத்த சமூகத்தையும் சமயச் சட்டங்களையும் குறைகூறுவது எப்படி தகும்? அதைவிட, சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று சொல்லி பதற்றத்தை உருவாக்குவதும் சமயச்சார்பற்ற ஒரு நாட்டில், ஒரு வகுப்பார்மீது வேறு குடிமைச் சட்டங்களைத் திணிக்க முனைவதும் எப்படி ஜனநாயகமாகும்?

முஸ்லிம்களின் சமய நம்பிக்கையை, காலங்காலமாக அவர்கள் பின்பற்றிவரும் தனியார் குடிமைச் சட்டங்களை மாற்றவோ திருத்தவோ முயல்வதென்பது, அரசியல் சாசனத்தையே மிதிப்பதற்குச் சமம்!

No comments:

Post a Comment