Monday, October 25, 2021

ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி- ஒரு சிறந்த முன்னோடி

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் எனும் இறைமார்க்கம் வேரூன்றி வளர்ந்திருக்கிறது. இதற்கு வரலாற்றுப் பூர்வமான தரவுகள் உண்டு. 
       இக்காலகட்டத்தில், இங்கே தமிழகத்தில் இஸ்லாமிய மேதைகள், சட்ட அறிஞர்கள், மார்க்கத் தீர்ப்புகள் வழங்கும் முஃப்திகள் எனப் பல்துறை அறிஞர்கள் இருந்துள்ளனர்.
        ஆனால், கடந்த 13 நூற்றாண்டுகளாக அரபி மொழியில் தமிழக முஸ்லிம்கள் திருக்குர்ஆனை ஓத மட்டுமே செய்துள்ளனர். அதன் பொருள், கருத்து, விளக்கம் ஆகியவற்றை ஆலிம்கள் வாயிலாக வாய்மொழியாகவே கேட்டு அறிந்து வந்துள்ளனர். தாய்மொழியாம் தமிழ்மொழியில் திருமறையின் மொழிபெயர்ப்பையோ உரைகளையோ வாசிக்கின்ற பெரும்பேறு கிடைக்காமலேயே இருந்துவந்துள்ளது.
           
ஆ.கா. பாகவி
        இந்நிலையில், மார்க்க அறிஞர்களை மதிக்கும் ஒரு வணிகர் குடும்பத்தில் 26.11.1876 (ஹிஜ்ரி 1294) 
ஞாயிற்றுக்கிழமை சேலம் ஆத்தூரில் காதிர் முகைதீன் ஹாஜியார் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு அப்துல் ஹமீது எனப் பெயர் சூட்டினர்.
          குழந்தைப் பருவத்தை தாண்டி பள்ளியில் சேர்ந்து தமிழ் உள்ளிட்ட பாடங்களைக் கற்றார்.பின்னர் தமது இளமைப் பருவத்தில் கிலாஃபத் இயக்க முன்னோடியாகவும், மதுவிலக்குப் பிரசாரகராகவும், கதர் அணியாத திருமணங்களில் கலந்துகொள்ள மறுத்த காந்தியவாதியாகவும் விளங்கினார்.

பாகியாத்தின் பாக்கியம்
         இதற்கிடையில், அண்ணல் அஃலா ஹழ்ரத் ஷம்சுல் உலமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் வேலூர் நகரில் கி.பி. 1884 ( ஹிஜ்ரி 1301)ஆம் ஆண்டு அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் எனும் பெயரில் ஓர் அரபிக் கல்லூரி தொடங்கி நடத்த வந்தார்கள். 
         அங்கு நிஸாமிய்யா பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது. நிறுவனர் அஃலா ஹழ்ரத் அவர்களுடன் மூத்த ஆசிரியப் பெருமக்கள் பயிற்றறுவித்துவந்தனர். மெளலானாக்களான  குலாம் முஹ்யித்தீன், அப்துல் காதிர் பாஷா, முஹம்மது கமாலுத்தீன், அப்துல் ஜப்பார் ஆகியோரும் , வட இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் நூர் முஹம்மது பஞ்சாபி , ஷாஹ் ஸமான் தேவ்பந்தீ , அப்துர் ரஹ்மான் பஞ்சாபி ஆகியோரும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். 
              கி.பி. 1892  ( ஹிஜ்ரி 1314)ஆம் ஆண்டில்-அதாவது 130 ஆண்டுகளுக்கு முன்- முதலாவது பட்டமளிப்பு விழா அங்கு நடந்தது. அதில் தஹ்சீல் ( இளங்கலை) வகுப்பில் தேறிய 17 ஆலிம்களுக்கும் முதவ்வல் (முதுகலை) வகுப்பில்
தேறிய ஃபாஸில்கள் 2 பேருக்கும் தாருல் உலூம் தேவ்பந்தின் தலைமை ஆசிரியர் மெளலானா சையிது அஹ்மத் தஹ்லவீ அவர்கள் பட்டம் வழங்கினார்கள்.

பாகவி ஆனார் மெளலானா
      பாரம்பரியமிக்க இந்த அரபிக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் முதல் அணியில் தமது 17ஆம் வயதில் ஆ.கா. அப்துல் ஹமீது அவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். அங்கு பத்தாண்டுகள் கல்வி பயின்று 1906ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் பட்டமளிப்பு விழாவில் ஆலிம் பட்டம் பெற்றார்கள்.
        அப்படியானால், 1896ஆம் ஆண்டு அன்னார் பாகியாத்தில் சேர்ந்திருக்க வேண்டும். அங்கு மாணவராகச் சேர்ந்த நாள் முதலாய் , திருக்குர்ஆனுக்குத் தமிழில் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வம் மெளலானா அப்துல் ஹமீது அவர்களுக்கு இருந்துவந்துள்ளது.
          ஆலிம் பட்டம் பெற்ற பிறகு வியாபாரம், அரசியல், கிலாஃபத் இயக்கம் என அன்னாரின் பொழுதுகள் கழிந்தன. பின்னர் 1926 பிப்ரவரி 19 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் திருக்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புப் பணியை மெளலானா அப்துல் ஹமீது பாகவி அவர்கள் தொடங்கினார்கள்.

அல்பகரா- அத்தியாயம்
          திருக்குர்ஆனின் 'அல்பகரா' (2) அத்தியாயத்தின் தமிழாக்கம், விரிவுரை ஆகியவற்றை எழுதி முடித்தபின், தமிழகத்தின் தலைசிறந்த ஆலிமகளின் பார்வைக்கு அனுப்பிவைத்து, அவர்கள் கொடுத்த முறையான திருத்தங்களுடன் 19.02.1929 அன்று முதல் பாகம் வெளியிடப்பட்டது.
     பின்னர் பொருளாதார தேக்கநிலை ஏற்படவே, சிரமப்பட்டுக் கொண்டிருந்த மெளலானா அவர்களுக்கு, ஹைதராபாத் நிஜாம் மன்னரின் மாமனார் நவாப் நஸீர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.அதையடுத்து பொருளாதார உதவி கிடைக்கவே, காரைக்காலில் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது.
       இரவு பகலாக பணி தொடர்ந்தது. ஒரு வழியாக 1942 அக்டோபர் 24இல் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு நிறைவடைந்தது.இருந்தாலும், உடனே அச்சிடாமல் , பாகியாத் பேராசிரியர் குழுவின் ஆய்விற்கு உட்படுத்தி 9.11.1943இல் பணி முடிவுற்றது.

இரண்டாம் உலகப் போர்
            எழுபது வயதைக் கடந்துவிட்ட மெளலானா அவர்கள் பலமுறை பயணம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இரண்டாம் உலகப் போர் நடந்த நேரம் அது. பயணம் என்பதே பெரிய கேள்விக்குறியதான நேரம். இதனால் தமது மொழிபெயர்ப்பைப் பாதுகாக்க மெளலானா அப்துல் ஹமீது பாகவி அவர்கள் ஒரு வேலை செய்தார்கள்.
            தமது கையேட்டுப் பிரதிநிதிகள் இரண்டைத் தயார் செய்தார்கள்.ஒரு பிரதியைத் தமது இல்லத்தில் பத்திரமாக வைத்துவிட்டு , மற்றொன்றை பாகியாத் கல்லூரி நூலகத்தில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்தார்கள்.
          இறுதியாக, 1949ஆம்ஆண்டு மே மாதம் முதல் நாள் - ஹிஜ்ரி 1368 ரஜப் பிறை 2 -முழு தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவந்தது. 
             1955 ஜூன் 23ஆம் தேதி மெளலானா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மறைந்தார்கள். அவர்களின் அகவை 79. அந்த மொழிபெயர்ப்பு இன்றுவரை கிடைக்கிறது.பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது. அன்னார் நமக்கெல்லாம் சிறந்த முன்மாதிரி என்பதில் ஐயமில்லை.

( 23.10.2021இல் நடந்த ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் நினைவு நிகழ்ச்சியில் அ.முஹம்மது கான் பாகவி ஆற்றிய உரையின் சுருக்கம்)

No comments:

Post a Comment