Thursday, April 02, 2020

~~~~~~~~~~~~எங்கள் ஆசிரியர் ஆயங்குடி சாலிஹ் ஹள்ரத் அவர்கள் மறைவு~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~
எங்கள் ஆசிரியர் ஆயங்குடி சாலிஹ் ஹள்ரத் அவர்கள் மறைவு
~~~~~~~~~~~~
1960களில் கூத்தாநல்லூர் மன்ப உல் உலா அரபிக் கல்லூரியில் எங்களுக்குத் திறம்பட கல்வி கற்பித்த என் மரியாதைக்கும் பாசத்திற்கும் உரிய ஆசிரியப் பெருமகனார் மெளலானா சாலிஹ் ஹள்ரத் அவர்கள் இன்று 02.04.2020 காலை லால்பேட்டையில் மறைந்தார்கள் எனும் செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமும் துக்கமும் அடைந்தேன்.

அன்னார் பொரவாச்சேரி , நெல்லை பேட்டை ஆகிய கல்லூரிகளில் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்கள். பின்னர் நீண்ட காலம் மலேஷியாவில் இருந்த ஹள்ரத் அவர்கள் மூப்பின் காரணத்தால் லால்பேட்டையில் தம் இல்லத்தில் ஓய்வு எடுத்துவந்தார்கள்.
சாலிஹ் ஹள்ரத் அவர்களிடம் நான் 3 ஆண்டுகள் கல்வி பயின்றுள்ளேன். பாடங்களை எளிமையாகப் புரியவைப்பதேடன் இறையச்சம், நல்லொழுக்கம் ஆகிய போதனைகளையும் செய்வார்கள். தாயுள்ளம் கொண்ட அந்த மகான் என்மீது தந்தை பாசத்தைப் பொழிவார்கள்.

நான் , கம்பம் பீர் முஹம்மது பாகவி, ஜைனுல் ஆபிதீன் உலவி, எம்.சி. ரோடு அப்துல் ஃபத்தாஹ் உலவி போன்றோர் அன்னாரின் மாணவர்கள். 

ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள சில ஆண்டுகள் முன் லால்பேட்டை சென்றிரேந்தபோது சாலிஹ் ஹள்ரத் அவர்கள் இல்லம் சென்று அன்னாரைச் சந்தித்தோம். அச்சந்திப்பு எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

அண்மையில் ரஹ்மத் பப்ளிகேஷன் வெளியிட்ட தஃப்சீர் இப்னு கஸீர் பத்தாம் பாகத்திற்கு எங்கள் அன்பான வேண்டுகோளை ஏற்று அணிந்துரை வழங்கினார்கள்.ஒரு மாணவனின் எழுத்துக்கு, அவன் ஆசிரியர் வழங்கும் மதிப்புரையைவிட உயர்ந்த விருது வேறு இருக்க முடியாது. ஹள்ரத் அவர்களின் இறுதி நாட்கள் என்பதை உணர்ந்து, இப்போது விட்டால் இனி வாய்ப்பு கிடைக்காது என்ற துடிப்பில் தான் அணிந்துரை வற்புறுத்தி வாங்கினோம்.

கிட்டத்தட்ட என் ஆசிரியர்கள் அனைவரும், அல்லது பெரும்பாலோர் என் எழுத்துத் தொண்டை ஊக்கிவித்து மதிப்புரை வழங்கியது நான் செய்த புண்ணியம் என்பேன்.
ஹள்ரத் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள தந்தான் வேண்டும். ஆனால் நாட்டு நிலைமை இடம் கொடுக்காது. அன்னாரின் மறுமை வாழ்வு செழிக்க அல்லாஹ் அருள் புரிவானாக.
اللهم اغفر له و ارحمه وأدخله جنة الفردوس الأعلى يارب العالمين.
என வேண்டி விடைபெறுகிறேன். வஸ்ஸலாம்.
அன்புடன் உங்கள்
கான் பாகவி

No comments:

Post a Comment